Quotes from சிலுவைராஜ் சரித்திரம்
சிலுவை தமிழ் டியூட்டராகச் சேருவதற்கு முந்திய வருசம் தமிழ் லெக்சரராகச் சேர்ந்திருந்த சார்லஸ், அவன் எம்.ஏ. சேர்ந்தபோது அங்கே இல்லை. அவர் ஒரு கம்யூனிஸ்ட்காரர்னு சேவியர்ஸ் மேனேஜ்மெண்ட் அபிப்பிராயப்பட்டதால் சார்லஸ் வேலை இழந்தார். அந்த பிரின்சிபால் பாதர் சிரிச்சுக்கிட்டே அவரை வெளியே அனுப்பிவிட்டாராம். சார்லஸ்கூடவே பிரண்டாகயிருந்த இன்னொரு தமிழ் ஸார், தம்முடைய வேலையை நிரந்தரப்படுத்துவதற்காக, இப்பிடி சார்லஸ் ஒரு கம்யூனிஸ்டுன்னு மேலிடத்தில் வத்தி வச்சதாகப் பின்னால் சார்லஸ் சொன்னார். வாழ்விருத்தலுக்கான போராட்டத்தில, தகுதி வாய்ந்தவை தாக்கு பிடிக்கும், அதுதான் இயற்கையின் தேர்வு என்று டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியின் விதிகளைச் சிலுவை நினைத்துக் கொண்டான். ஒரு செல் பிராணியிலிருந்து ஆறறிவு படைத்த மனிதப் பிராணிவரை இது நிஜம். இந்த விதிகளின் வீச்சத்தை மூடிமறைப்பதற்குத்தான் அறம், நீதி, ஒழுக்கம், முதலான செண்டுகளை அடித்துக்கொள்கிறார்களோ?
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
இந்தச் சமூகத்தில் சாதி மதம் மயிருன்னு இல்லேன்னா எவ்வளவு நல்லாயிருக்கும்? எப்பவோ மேல்ஜாதி கீழ்ச்சாதின்னு பிரிச்சாங்க. அப்ப அது அவசியமாயிருந்திருக்கலாம். ஆனா இப்ப அப்படியா? சிலுவையைப் பாத்தா கீழ்ச்சாதின்னு சொல்ல முடியுமா? படிப்பில் அவங்கூட போட்டிப் போட்டு ஜெயிக்க முடியுமா? ஆளு நல்லா இல்லியா? நாகரிகம் பண்பாடுன்னு சொல்றாங்களே அதெல்லாம் அவங்கிட்ட இல்லியா?
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
தமிழ்நட்டில் அப்போது கருணாநிதியின் ஆட்சி ரொம்ப 'அன்பாப்புலரா' ஆகிக்கொண்டிருந்தது. அவருடைய ஆடம்பரம் மக்கள் கண்களை உறுத்தியது. கரண்டு பஞ்சம் தலைவிரிச்சாடிய அந்தச் சமயத்தில அவரை வரவேற்க ஒரு மைல் தூரத்துக்கு ரோட்ல ரெண்டு ஓரங்களிலும் தொடர் டியூப்லைட்டுகள் என்ன? அலங்கார வாயில்கள் என்ன? தோரணங்கள் என்ன? பந்தல் அலங்காரங்கள் என்ன? மின்சார ஒளி வெள்ளத்தில் கருணாநிதியின் தலையில் மலர்கீரிடம் ஜொலித்தது, அவரப் பாத்தா ஒரு மனுசன் மாதிரி தெரியல. பழைய காலத்து சோழ ராஜாக்களின் வாரிசு மாதிரி இருந்தது. தலையில மலர்க்கிரீடம் கையில் செங்கோல். அவர விதவிதமான போஸ்கள்ல காட்டுறதுக்குனே தமிழ்நாடு செய்திப்படம்னு ஒண்ணப் புதுசாத் தொடங்குனாங்க. எல்லா தியேட்டர்கள்லயும் படம் முடிஞ்சதும் ஜனகணமண பாட்டு போடுற மாதிரி, படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால முக்காமணிநேரம் செய்திப்படம் போட்டாகணும்னு சட்டம் போட்டாங்க. அதப் போடாட்டா தியேட்டர் லைசைன்ஸப் பறிச்சிருவாங்களாம். செய்திப் படத்துல கருணாநிதிதான் கதாநாயகன். படம் பாத்துப் பொழுது போக்க வந்த சனங்களுக்கு அவர் மூஞ்சிய அரைமணி நேரமாப் பாக்கணும்கிற தண்டனை! செய்திப்படம் போட்டதும் தியேட்டர விட்டுப் பாதிபேரு வெளிய வந்திருவாங்க. டீ, காபி, சிகரெட்டு நல்லா விற்பனையாகும். அந்தச் சமயத்திலதாம் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் எடையில் ஒரு மௌனயுத்தம் நடந்துகொண்டுருந்தது. எம்ஜிஆருக்கும் முதல் அமைச்சரா வரணும்னு ஆசை. அத எப்படிப் பச்சையா வெளியில சொல்ல முடியும்? சந்தர்ப்பம் பாத்துக்கிட்டிருந்தாரு. அதுக்கு ஏத்த மாதிரிதாம் கருணாநிதி சுய விளம்பரத்துல சுறுசுறுப்பா இருந்தார். எம்ஜிஆருக்குப் போட்டியா சினிமாவுல ஒருத்தரக்கொண்டு வந்தா அவரோட மார்க்கெட்ட அடிச்சிரலாம்னு கணக்குப் போட்டு, கருணாநிதி தம்முடைய மனைவிமார்களில் ஒருவருக்குப் பிறந்த பையனை சினிமா ஸ்டார் ஆக்கினார். அந்தப் பையனுக்கு ரசிகர் மன்றங்களை மடமடன்னு உண்டாக்கினார். எம்ஜிஆர் எதை வேணும்னாலும் சகிப்பார். இத அவரால சகிக்க முடியுமா? பத்திரிகைகளுக்கு நல்ல தீனிதான். நல்ல விற்பனை.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
செமஸ்டர் லீவு முடிஞ்சு 1972, ஜனவரியில் ரெண்டாவது செமஸ்டர் தொடங்கியது. அப்போது தேசத்தில் எப்பவும்போல நெருக்கடியான விசயங்கள் நடந்துகொண்டிருந்தன. எப்பவும் தேசத்துக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த பாகிஸ்தானின் கிழக்கு ரெக்கையை ரொம்பத் துணிச்சலோடு இந்திராகாந்தி அம்மையார் வெட்டிச் சாய்ச்சாங்க. அந்தக் கிழக்கு பாகிஸ்தான் பெயர் மாறி, முஜிபுர் ரஹ்மான் தலைமையில் பங்களாதேசம்னு ஒரு புதுதேசமே உருவாகிறதுக்கு அன்னை இந்திராவின் ராஜதந்திர நடவடிக்கைதான் காரணம் என்று நாடே பாராட்டியது. கிழக்கு பாகிஸ்தானுக்குள்ளே வீர நடைபோட்ட இந்திய ராணுவத்தில் சிலுவையின் தகப்பனாரும் இருந்தது அவனுக்கு ரொம்பப் பெருமையாகயிருந்தது. டிசம்பர் லீவுக்கு அவர் வந்திருந்தபோது, கிழக்கு பாகிஸ்தானில் இந்திய ராணுவம் சூறையாடியதில் அவருடைய ரேங்குக்குத் தக்கபடி கிடைத்த பொருள்களைக் கொண்டு வந்திருந்தார்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
தேங்க்ஸ்னு அவன் சொல்றதுக்குள்ள அந்த பெரிய ஜடை சிம்பிள் பெண்டுலம் மாதிரி ஆட ஆட ஓடினாள்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
மொத மொதல்ல நக்ஸல் பாரிங்கிற பெயரக் கேட்டதும் அது வடநாட்டச் சேர்ந்த ஒரு ஆளோட பேர்னு தான் சிலுவை நினைச்சான். அப்புறந்தாஞ் தெரிஞ்சது அது ஊர்ப்பேர்னு. அங்கதாம் மாவோயிஸ்டுகளின் முதல் ஆயுதப் போராட்டம் வெடிச்சதாம்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அது ஏனென்று தெரியவில்லை. உலகத்தில் கணக்கு வாத்திமாரெல்லாம் ரொம்பக் கோபக்காரர்களாகவும், எளிதில் சினப்பட்டுப் பையன்களை அடித்துத் துவைப்பவர்களாகவும் இருந்தார்கள்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
காதலியின் பெயரைச் சிலுவை கண்டுபிடித்தது ரொம்ப தமாஷானது. ஒருநாள் அவள் துணி தொவைக்கும்போது ஒரு பொடியன் அவள பாத்து 'அக்கா அக்கா'ன்னு சொன்னதைக் கவனித்துவிட்டான். அந்தப் பொடியனை ஒரு வழியாக நண்பனாக்கி ரூமுக்கு அழைத்து வந்தான். மிட்டாயெல்லாம் வாங்கிக்கொடுத்தான். அவங்கிட்டப் பேச்சுக் கொடுத்துப் பாத்த பெறகுதான் அவா பேரு தங்கம்னு தெரிஞ்சது. ஏ அப்பா! எம்புட்டு அழகான பெயர்! இந்தப் பெயர்வச்சவங்க வாய்க்கு சக்கரதாம் போடணும். அந்தத் தங்கத்துக்கு ஒரு தங்கச்சியும் இருந்தா. அவா இக்னேஸியஸ் கான்வெண்ட்ல படிச்சுக்கிட்டிருக்காங்கிற விபரத்த அவா போட்டிருந்த பச்சை வெள்ளை யூனிபார்மை வச்சுக் கண்டுபிடிச்சான். அவாகிட்ட ஒருநா தங்கம், சிலுவையக் காட்டி ரகசியமா என்னமோ சொல்லிச் சிரிச்சா. சிலுவ அதப் பாத்திட்டாம். அந்தச் சிறுமி ஒருநா ஸ்கூலுக்குப் போகும்போது சிலுவ அவாகூடப் பேசினான். அவாகூடப் பேச அவனுக்கு பயமா இல்ல. அவளும், சிலுவ யார்னு தெரிஞ்சதால முன்னப் பின்ன பழகின ஆள்கிட்டப் பேசுற மாதிரி ரோட்ல பேசுனா. 'தங்கம் டைப் ரைட்டிங்கெல்லாம் முடிச்சாச்சா? பாக்கவே முடியல'ன்னு பொம்பளப்புள்ள மாதிரி வெக்கப்பட்டுச் சிலுவ சொன்னான். அதக் கேட்டதும் அந்தப் பிள்ளைக்கு ஒரே சிரிப்பு. எதுக்கு இப்பிடிச் சிரிக்கிறா? சிலுவைக்கி வெளங்கல. சிரிச்சு ஓஞ்சதும், 'ஸார் எம் பேருதாம் தங்கம். எங்கக்கா பேரு ராஜம். எங்க பெரீம்மா மகா'ன்னு சொன்னா. சொல்லிட்டு வேற சிரிச்சா. சிலுவைக்கு ரொம்பச் சங்கடமாப் போச்சு. 'தங்கம் தங்கம்'னு இத்தன நாளா மனசுக்குள்ளயும், தனியாயிருக்கும்போது வாய்விட்டும் ஜெபித்த அந்தப் பெயர் கடேசியில் காதலியோட தங்கச்சி பெயர்னு தெரிஞ்சாப் பெறகு...? சே! இந்த உலகத்தில் காதலியின் பெயரைத் தவறாகத் தெரிந்துகொண்டு அதன் மகத்துவத்தைப் பற்றி மனசுக்குள்ளேயே ஆலாபனை செய்த ஒரே காதலன் தானாகத்தான் இருக்கும் என்று புலம்பித் தீர்த்தான். கவிதைகூட எழுதிவிட்டான். தங்கம் என்ற பெயரை அவனால் விடமுடியவில்லை. அவனைப் பொறுத்தவரை அவள்தான் தங்கம், அவா தங்கச்சி பெயர்தான் ராஜம். இத மாத்த முடியாது!
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
பேப்பர் திருத்துகிற அந்த போரடிச்ச வேலை இப்போ கெடையாது. அதனால அவள நெனச்சு நெனச்சு கவிதை எழுதத் தொடங்கினான். உள்ளங்கை இடையாலே உள்ளத்தை உனதாக்கிக் கள்ளமில் நெஞ்சம்போல் கனிவாகச் செல்கின்றாய் சிலுவை கவிதை என்று நினைத்துக்கொண்டு எழுதிய முதல் வரிகள் இவைதாம்!
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அவள் மென்மையாக நடந்து வரும் போதெல்லாம் அந்த ஆராதனா படப் பாட்டுக்களை அவன் மனசு சத்தம் போட்டுப் பாடும். 'கும் கும்னாரே ஹேஹே பம்பர தில் ரஹி ஹை கலி கலி கலி கலீ கலி கலீ' 'கோரா கா கஜ்தாயே மன்னு மேரா லிக்கி லியா நாம் இஸ்மே தேரா' சிலுவைராஜ் எஸ்எஸ்எல்சியில் ஹிந்தி பாடத்தில் சைபர் மார்க் வாங்கிப் பாஸ் பண்ணியதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'