Quotes from சிலுவைராஜ் சரித்திரம்
எஸ்எஸ்எல்சி படிக்கிறபோது அனுபவிச்ச ஒரே கிளாஸ் ஹிந்தி கிளாஸ்தான். அப்ப ஆயிரத்தி தொளாயிரத்தி அறுபத்தஞ்சாம் வருசம். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த வருசம். இனிமெ ஹிந்திப் பாடத்துல பாஸ் பண்ணனும்னு கட்டாயமில்லன்னு ரூல் கொண்டு வந்தாங்க. ஆனா ஹிந்திப்பாடம் இருந்துச்சு. பரீச்சையும் நடந்துச்சு. பாவம் அந்த ஹிந்தி பண்டிட், அவர் தலை வழுக்கையா உச்சியில சின்னதா ஒரு நரைச்ச குடுமியோட மினுங்கும். அத வச்சிக்கிட்டுப் பையங்க பூகோள பாடத்துல படிச்ச 'பாலைவனப் பசுஞ் சோலை'ன்னு அவருக்குப் பட்டப்பேரு வச்சாங்க. அவரு எப்பவும் 'ஜிஹாங் ஜி ஹாங்'னு புஸ்தகத்த விரிச்சு வாசிப்பாரு. பசங்களும் கூடவே 'ஜிஹாங் ஜிஹாங்'னு சொல்லிச் சொல்லி அவர வெறியேத்துவாங்க. வெராண்டாவுல அவர் போனார்னா எங்கிட்டிருந்தாச்சும் ஒரு பய 'ஜிஹாங்னு' கத்தாம விடமாட்டாம். கொடையத் தூக்கிப் பத்திரங்காட்டுவாரு. அந்தப் பத்திரத்தக் கண்டு பயப்படுறதுக்கு ஒரு பெயலும் நிக்கமாட்டாம். எஸ்எஸ்எல்சி ஹிந்திப் பரீச்சையில சிலுவை ரொம்ப பிரயாசைப்பட்டுக் கேள்வித்தாளையே விடையாக எழுதி வாங்கிய மொத்த மார்க்கு நூத்துக்கு சைபர்!
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அவரிடம் வழக்கமாக அடிவாங்குகிறவங்க அந்த பீட்டரும் நொண்டி ஜார்ஜீம்தான். ஜார்ஜைக் கூப்பிடுவார். அவனும் ஏதோ ஒரு புனிதமான காரியத்த நிறைவேத்தப் போறவங் கெணக்கா நொண்டி நொண்டிப் போவான். போனான் வந்தான்னு இருக்கும். ஜி.பி. அவன அடிப்பதற்கு யாதொரு பிரயாசையும் பட வேண்டியதிருக்காது. நல்லபடியா ஒத்துழைப்பான். அதைத் தன்னோட கடமைகள்ல ஒண்ணாக நெனச்சுக்கிருவாம் போல! ஆனா பீட்டர் பெய லேசுப்பட்டவங் கெடையாது. அவனத் தண்டிச்சு முடிக்கிறதுக்குள்ள ஜி.பி. சாமியாருக்கு வேர்த்துக் கொட்டியிரும். அவன் பேர் வாசிக்கக் கேட்டதும் ஏதோ முதல் பரிசு வாங்க மேடைக்குப் போறவங் கெணக்கா மிகுந்த உற்சாகத்தோடு கைகளை உதறிவிட்டுக்கொண்டே போவான். அவன் வந்து நிக்கிற தோரணையைக் கண்டதுமே ஜி.பி.யின் முகம் சிவந்து போகும். 'நீட்டடா கையை'ன்னு ஜி.பி. சத்தம் போடுவார். கேடயத்தை வாங்கப் போறவம் மாதிரி பீட்டர் ஜி.பி.க்கு பக்கமா ஒரு கையை நீட்டுவான். ஜி.பி. சாமியார் சராசரி ஒயரத்துக்கும் கீழேயிருந்ததால் தம்முடைய முகத்துக்கு நேராக நீட்டப்பட்ட கையை ஓங்கி அடிக்க சாத்தியப்படாமல் கொஞ்ச நேரம் தவித்துப் போவார். 'கையைக் கீழே நீட்டடா'ன்னு உத்தரவிட்டு அடிக்க வசதியாக அவனுடைய கையைக் கீழே இறக்கச் சொல்வார். ஓங்கி ஒரு அடி குடுப்பார். 'இனிமேல் பேசுவாயாடா பேசுவாயாடா'ன்னு தமிழைத் திருத்தமாக மலையாள உச்சரிப்பில் உச்சரித்தபடியே தொடர்ந்து நாலைந்து அடி அடிப்பார். பீட்டர் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டு எந்தவிதச் சலனமும் காட்டாமல் நிப்பான். அவரும் அந்தக் கையை மூங்கில் பிரம்பால் முடிந்த மட்டும் இம்சை பண்ணிப் பார்ப்பார். பெறகு, 'அந்தக் கையை நீட்டடா'ன்னு சொல்லி அடிப்பார். பீட்டர் அசருவதாக இல்லை. அந்த ரெண்டு பேரில் யார் யாருக்குச் சவால் விடுகிறார்கள் என்பது குழம்பிவிடும். பீட்டரைத் தண்டிப்பதே ஜி.பி. சாமியாருக்கு ஒரு தண்டனையாக இருந்திருக்க வேண்டும். ஜி.பி. சாமியாரால் தமது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியுமா? அவனும் கையை மாத்தி மாத்தி உயர உயர நீட்ட நீட்ட ஜி.பி. தம்மை மறந்த ஆவேசத்தில் குதிச்சுக் குதிச்சு அடிப்பார். அவர் முகமெல்லாம் வேர்த்துவிடும். முகம் ரத்தச் சிவப்பாக மாறும். தம்முடைய அடிகளால் பீட்டரை ஒண்ணுஞ் செய்யமுடியாது என்ற ஞானம் ஜ.பி. சாமியாருக்கு ஏற்பட்டதும் விதமுறையை மீறி அவனுடைய முதுகு, கால், குண்டி என்று அவருக்கு எட்டுகிற இடங்களிலெல்லாம் கன்னாபின்னான்னு அடிப்பார். 'போயடா போ போ'ன்னு ஜி.பி. சலித்துப் போய்ச் சொன்னதும் ரெண்டு கைகளையும் சூடு பறக்கத் தேச்சுப் பூப்பூன்னு ஊதிக்கிட்டே ஒரு சாம்பியனைப் போல பீட்டர் அவனிடத்துக்கு வந்து ஒக்காருவான். சில்லுச் சில்லாப்போன அந்தப் பெரம்பத் தொங்கப் போட்டுக்கிட்டு ஜி.பி. நிக்கிறதப் பாத்தா இப்ப நடந்து முடிஞ்ச பந்தயத்துல அவர்தாம் தோத்துப் போனதா தெரியும். இந்த ஒரு காரியத்துக்காகவே பீட்டரைச் சிலுவைக்கி ரொம்பப் பிடிச்சுப்போச்சு.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
திரிங்கால் சீனியர் பேசிக் ஸ்கூல்ல ஓடிப்பிடிச்சு வெளையாண்ட அந்தச் சிறுமி செபஸ்தியம்மா பின்னால சிஸ்டரா போவான்னு சிலுவ கொஞ்சங்கூட நெனச்சதில்ல. அவன் காலேஜ்ல படிச்சிட்டு லீவுல வந்தபோது கோயில்ல வச்சு சிஸ்டர் செபஸ்தியம்மாளைச் சந்திக்க நேர்ந்தது. கோயிலுக்கு இவம் போகும்போது எதிர்க்க அவள் வந்து கொண்டிருந்தாள். பாவாட சட்ட போட்டு 'ஏடி சிலுவ ராணி'ன்னு மல்லுக்கு நிண்ண அந்தச் சிறுமி எங்கே? இப்போது உயரமாக வளர்ந்த ஒரு மௌனம் வாலிபப் பெண்ணாக வந்துகொண்டிருந்தது. நம்பமுடியவில்லை.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அந்த வட்டக் கெணத்த ஒரு தடவை நீஞ்சி சுத்தி வர்றதுக்குள்ள மூச்சு வாங்கும். பாதிக்கெணறு தாண்டுறதுக்குள்ளியே பெயகளுக்குச் சோந்துபோகும். மேலயிருந்து பாத்தா தேங்காத் தண்ணி மாதிரி பளிச்சுனு இருக்கும். தரையில கெடக்கிற சாமான்கூடத் தெரியும். கெணத்துக்குள்ள நடுசென்டர் தரையிலயிருந்து ஊத்து பிச்சுக்கிட்டு ஊத்தும். அங்கின முங்கிப் போயி இந்தத் தண்ணியத் தொட்டுப் பாத்தா சூடாயிருக்கும். கெணத்துல எம்புட்டு தண்ணிய எறச்சாலும் வத்தவே வத்தாது.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அருவி ஓரத்துல ஒரு பெரிய மரத்துக் கீழ ஒரு கல்லுல மஞ்சத் துணி கட்டியிருக்கும். மரக் கெளைகள்ல சின்னச் சின்ன தொட்டிகளும் கட்டில்களும் கயித்துல கட்டித் தொங்கவிட்டிருப்பாங்க. அதுதான் பேச்சியம்மன் கோவில்னு சொல்லுவாங்க. பேச்சி ஒரு காலத்துல துடியான பொண்ணாத் திரிஞ்சாளாம். யாருக்கும் பயப்படமாட்டாளாம். ஆம்பளைககூடச் சரிக்கிச்சரி நிப்பாளாம். ஒரு சமயம் ஆம்பளைகளால கூட ஏற முடியாத ஒசரத்துல உச்சி மரக் கிளையில இருந்த பெரிய தேன்கூட்ட எடுத்துகிட்டு வர்றதா பேச்சி சவால் விட்டாளாம். கயத்த இடுப்புல கட்டிக்கிட்டுச் சரசரன்னு அந்த மரத்துல ஏறி உச்சிக்குப் போய்ட்டாளாம். தேன் கூட்ட எடுத்துக்கிட்டு எறங்கி வரும்போது இவா நம்மள செயிச்சுப் போடுவா. அப்றம் ஊர்ல தல காட்ட முடியாதுன்னு ஆம்பளக புடுச்சிருந்த கயத்த அறுத்துட்டாங்களாம். உச்சியிலிருந்து விழுந்த பேச்சி அங்கினியே உயிரவிட்டாளாம். அவளத்தாம் பேச்சியம்மன்னு சனங்க கும்புட்டு வாராங்க.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
நல்ல திடகாத்திரமான எளவட்டங்கள மோகினிப் பிசாசு பிடிச்சு ஒடம்ப உருக்கிவிடுமாம். அப்பிடின்னா மோகினிப் பிசாசுகளால தனக்கு ஒரு ஆபத்தும் இல்லன்னு சிலுவை சந்தோசப்படுவான்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
வத்ராப் ராமகிருஷ்ணா தியேட்டர்ல பர்ஸ்ட் ஷோ முடிஞ்சி கூட்டத்தோடு கூட்டமா வயல் வரப்பு வழியாக நடந்து புதுப்பட்டிக்கு வரும்போது சிலுவைக்குப் பயம் கெடையாது. அனுப்பாங்குளம் கரையேறியதும் அந்த மஞ்சணத்தி மரத்துக்கிட்ட வர்ரபோது கெதக்னு இருக்கும். அந்த மரத்துலதான் நாண்டுக்கிட்டு யாரோ செத்துப் போனதாகச் சொல்வாங்க. அந்த பெயலோட ஆவி அங்குனக்குள்ள பேயா அலையுதாம். கரை வழியாக ஒருத்தர் பின் ஒருத்தராகத்தான் போக முடியும். ஒத்தையடிப்பாதை. அதுல முன்னால போறதுக்கும் பயம், கடேசியில போறதுக்கும் பயம். எல்லாப் பெயகளும் நடுவுல போறதுக்குத்தாம் ஆசப்படுவாங்க. பேசிக்கிட்டே போனா அம்புட்டுப் பயம் தெரியாது. இல்லாட்டி யாராச்சும் பாட்டுப்படிப்பாங்க. அந்த நெருஞ்சிமணியார் கோவில் ஆலமரத்த நெருங்கும் போதும் பயம்தான். மரத்தடியில சின்னதாக கோவில். அதுல ஒடஞ்சுபோன நெருஞ்சிமணியார் செல இருக்கும். கம்மா நெறைஞ்சா சாமி முங்கிரும். மத்த காலங்கள்ள அநாதையாகக் கெடக்கும். இப்பிடிப் பாதையோரத்துல உள்ள மரங்களுக்குக் கீழே உள்ள செலைகள் சாமிகளா, இல்ல பேய்களான்னு சிலுவைக்கு எப்போதும் சந்தேகம்தான். இந்தச் சாமிகள்ளாம் ரொம்ப வெளமெடுத்ததுகளாம். ஒரே அறையில் ஆளச் சாச்சிருமாம். இதெல்லாந் தெரிஞ்சிருந்தும் வேல்சாமிநாடார் தம்பி நெருஞ்சிமணியார் சாமி சிலைமேல தைரியமா ஒண்ணுக்கிருந்து வச்சாராம். இதுகளுக்கெல்லாம் அவரு பயப்படவே மாட்டாராம். கருப்புச் சட்ட கட்சிக்காரங்களே இப்பிடித்தானாம்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
சிலுவைக்கும் சரி அவனுடைய தெருக்காரர்களுக்கும் சரி, பேய் பிசாசு என்றால் ரொம்பப் பயம். ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்ததால் மத்தவர்களைவிட அவர்கள் பேய்களுக்கு அதிகமாகப் பயப்படுவதற்குக் காரணங்கள் உண்டு. அவர்களிடம் பாரம்பரியமாக இருந்து வந்த பேய்களோடு புதிதாக இப்போது கிறிஸ்தவ சாத்தான்களும் சேர்ந்துகொண்டன. ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தில் பங்குச்சாமியார் உபதேசித்த பிறகு இந்துக் கடவுள்களும்கூடப் பேய்களாக நினைக்கப்படலாயின. பொழுது மசங்கியதும் ஒத்த செத்தையாகப் போகவர பயம்தான்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
குச்சி ஐஸ்ஸை சூப்பும்போது புதுச்சட்டையில் வடியாமல் ஜாக்கிரதையாகப் பாத்துக்கொள்ள வேண்டியிருந்ததால் ஐஸ் இனிக்கவில்லை.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அந்த வருசம் காட்டாண்டி பேரனுக்கு என்ன வந்துச்சுனு தெரியல. கூட்டத்துல அவம் மட்டும் ரொம்ப வித்தியாசமாகத் திரிஞ்சாம். தலயில குளுகுளுன்னு தேச்ச தேங்காய் எண்ண மூஞ்சி செவுளெல்லாம் வடிஞ்சி ஆள் கரேர்னு தெரிஞ்சாம். டியூப் லைட் வெளிச்சத்துல அந்த மூஞ்சி 'பளிச்'னு மின்னுச்சு. அவன் தீவிரமான எம்ஜிஆர் ரசிகன் என்பதால் அவரைப்போல வெள்ளை பேண்டும் சட்டையும் போட்டு இடுப்புல கருப்பு பெல்ட் கட்டிக் கூலிங்கிளாசோடு வந்தான். ரெண்டு கைகளையும் மறக்காமல் பேண்ட் பாக்கெட்டுக்குள் செருகியிருந்தான். இம்புட்டுத் தூரம் டிரஸ் பண்ணிய பெயலுக்குச் செருப்புப் போட்டுக்கிடணும்னு தோணல. எங்கடா பேண்டு தச்சுன்னு கேட்டா சேம்ஸ்சு நாடார்கிட்டன்னு பெருமையாச் சொன்னான். அவருக்கு டவுசர் தச்சுத்தான் பழக்கம். டவுசரைக் கீழ வரைக்கும் நீட்டிவிட்டால் போச்சு என்ற நினைப்பில் பேண்ட் தச்சிருப்பாராக்கும்! பகல்லதாம் கூலிங்கிளாஸ் போடுவாங்கன்னா இவம் ராத்திரிக்காணு போட்டுக்கிட்டுத் திரியிறது சிரிப்பா இருந்துச்சு, எங்க வாங்கியிருப்பாம்? செக்கடி பஜார் கடைகள்ல அது கெடையாது. சீல்தூர்லதாம் வாங்கியிருக்கணும். இதுக்காக மெனக்கிட்டு சீல்தூர் வரைக்கும் பஸ் பிடிச்சுப் போயிருக்காம் பாரு! அடிக்கடி பீடி பத்தவச்சுப் புகைய இழுத்து இழுத்து சிகரெட் ஊதுற மாதிரி ஊதினான். அவனப் பாத்த பெயக மட்டுமில்ல ஊர்ப்பெரியவங்ககூடச் சிரிச்சாங்க. அவனுக்கு இதப் பத்தியெல்லாம் கவலை கெடையாது. எம்ஜிஆர்னு பெயலுக்கு நெனப்பு! இங்க பார்ரா நம்ம காட்டாண்டிபேரம் பேண்டு போட்டிருக்காம் என்று பெரிசுகள் ரெட்டை அர்த்தத்தில் லந்து பண்ணினார்கள். ஒரு மாசமா கூலி வேலைக்கிப் போயி ஒரு சல்லிக்காசுகூட வீட்டுக்குத் தராம இப்பிடிக் கிறுக்குப்பிடிச்சு அலைவதாகப் பேசிக்கொண்டார்கள். சிலுவைக்கு அவனைப் பார்ப்பதே பெரிய பொழுதுபோக்காக இருந்தது.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'