Quotes from சிலுவைராஜ் சரித்திரம்

உடன் படிக்கிற மாணவனைத் தண்டிக்க அவளுக்கு வாய்த்த மிக மலிவான ஆயுதம் அவனது சாதியாகத்தான் இருந்தது. பெயல்கள் இப்பிடிச் சாதிப்பேரைச் சொல்லித் திட்டினால் மல்லுக்காட்டிப் புழுதியில் உருளலாம். மணிமேகலையை என்ன செய்வது? யாரிடம் புகார் சொல்வது? சொன்னால் யார் மதித்துக் கேட்கிறார்கள்?
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
ஆனால் இந்த பிலோமினா, தன்னை மூஞ்சிக்கு நேராக அவனது சாதிப்பேரைக் குறிப்பிட்டு மிக இழிவாகத் திட்டியதைப் பற்றிச் சொன்னால் யாரும் அதை பொருட்படுத்த மாட்டார்கள் என்பது மட்டும் சிலுவைக்கு நன்றாகத் தெரியும். ராக்கம்மா பாட்டி ஒரு படிமேல் போய், 'நம்மசாதி அதுதானடா சிலுவ. இதுக்குப் போயி குதிக்கிறியே' என்று நியாயம் பேசுவாள்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அவனை எப்போதும் சிலுவ சிலுவ என்று மூச்சுக்கு முந்நூறு தடவை அவர்கள் கூப்பிடும்போது சிலுவைக்குக் கூச்சமாக இருக்கும். 'ஏ எடுவட்ட பெயலே' என்று அம்மை கூப்பிடக் கேட்டுப் பழகிப்போன சிலுவைக்குப் புதுமையாக இருக்கும். இந்த மல்லிகா அக்காமேல் சிலுவைக்கு மரியாதையும் பிரியமும் ஏற்பட்டுவிட்டது.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
இப்பிடிச் சிலுவைராஜ் வாழ்க்கையில் கணக்குப்பாடம் மட்டும் சுட்டுப் போட்டாலும் வராது என்று அவனுக்கு முடிவாகிவிட்டது. மற்றப் பாடங்களில் பயல் கெட்டிதான். தமிழில் டிக்டேசன் போட்டால் ஆளுக்கு முந்தி எழுதிக் கவிழ்த்துவிடுவான். அதிகம் தப்பு இருக்காது. கட்டவாத்தியார்கூட அவனது டிக்டேசன் எழுதும் திறமையைக் கண்டு, 'ஏலே ராக்கம்மா பேரா' என்று அவர் பாணியில் பாராட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளலாம்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'