Quotes from சிலுவைராஜ் சரித்திரம்

காரைக்காலிலிருந்து வீடு வந்து சேர்ந்த சிலுவைக்கு அவனுடைய அம்மையின் வசவுகளும், தகப்பனின் எச்சரிக்கைகளும் பரிசுகளாகக் கிடைத்துக் கொண்டிருந்தன. தனிமைப்பட்டுப்போய் வீட்டுக்குள்ளேயே கொஞ்ச நாள்களாக முடங்கிக்கிடந்தாள். அவனிடம் இருந்த என்சிபிஹெச் சோவியத் நூல்களும், எம்.ஏ. படிச்சபோது வாங்கி வச்ச புஸ்தகங்களும், வத்ராப் நூலகத்தில் டோக்கனில் வாங்கிய ரெண்டு புஸ்தகங்களும் இருந்ததால் பைத்தியம் பிடிக்காமலிருந்தது. கார்ல்மார்க்சின் மூலதனம், அவரும் பிரடெரிக் ஏங்கல்சும் சேர்ந்து எழுதிய நூல்கள், கார்க்கியின் சுயசரிதைகள், சிறுகதைகள், செகாவ் கதைகள், கோகோல், துர்க்கனேவ், தாஸ்தாவ்ஸ்கி நாவல்கள் சில வாங்கியிருந்தான். நாலு மாசம் காரைக்காலில் வேலை பார்த்த பணத்தில்தான் வாங்கினான். புஸ்தகங்களைத் தவிர பேச்சுத்துணைக்கு யாருமில்லை. அவனும் அம்மையும் அந்த ஒரே வீட்டுக்குள் நடமாடினாலும் அந்நியர்களாத்தான் இருந்தார்கள். சிலுவை கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களோட சேந்துகிட்டு வத்ராப்ல திரிகிறதாகவும், அம்மையத் திட்டுகிறதாகவும் அவனப் பற்றி அந்தத் தெருவிலிருந்த முகம் தெரியாத உளவாளிகள் தகப்பனுக்குத் தொடர்ந்து கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தியதால், இந்தியக் குடியரசைக் காப்பாற்றுவதாக நம்பிய அவர் சிலுவைக்கு மாசாமாசம் அனுப்பி வந்த முப்பது ரூபாயை நிறுத்தியதோடு, சீக்கிரம் வேலை தேடிப் போகாவிட்டால், தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்று எச்சரித்துக் கடிதம் போட்டார்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
பிலோமினாவைச் சிலுவைக்குப் பிடிக்காமல் போனதுக்கு காரணம், சிலுவையை பிலோமினாவுக்குப் பிடிக்காமல் போனதுதான். அவளுக்கு அவனைப் பிடிக்காமல் போனதற்கு அவன் பிறந்த சாதி ஒரு காரணம்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
தூரத்தில் நாயுங் கையுமா ஜீவரத்தினத்தப் பாத்ததுமே, 'தி மேன் வித் எ டாக்'ன்னு குருசாமி டெய்லர் தமது எஸ்எஸ்எல்சி இங்கிலீஷ் ஞானத்தை எடுத்துவிடுவார். அந்த நாயைப் பாத்தா சிலுவைக்கி, ஆண்டன் செக்காவ் எழுதிய 'பச்சோந்தி' கதைதான் ஞாபகத்துக்கு வரும்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
சிலுவையின் மனசில் மீண்டும் மீண்டும் அந்தச் சம்பவம் வந்து ஆத்திரமூட்டிக்கொண்டிருந்தது. அவன் அப்பிடித் தன்னை மறந்து கத்தியபோது அவனுக்குள் சமாதியாகியிருந்த அவனுடைய நூற்றாண்டுக்கால மூதாதையர்களின் ஆவிகள் கதறிக்கொண்டே அவன் வாய்வழியாக வெளியேறியிருப்பார்களா? அந்த ஆவிகள் அந்த குமாஸ்தாவை அவனுடைய கனவில் வந்து நடுங்க வைதிருப்பார்களா?
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
படிவத்தைக் கவனமாக வாசித்துக்கொண்டிருந்த அலுவலரைப் பார்த்தான். ஆள் நல்ல கறுப்பு. இன்னும் கலியாணமாகாத ஆள் மாதிரி தெரிந்தது. கை நிறையச் சம்பாதிக்கிற இளைஞனுக்கேயுரிய களை அவர் முகத்தில் தெரிந்தது. சாதி என்ற இடத்துக்கு வந்ததும், ஆள் ரொம்ப சீரியஸாகிவிட்டார். நின்றுகொண்டிருந்த சிலுவையை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார். அவனுடைய எம்.ஏ. செர்டிபிகேட், மார்க் லிஸ்ட் எல்லாம் பார்த்தார். ஒண்ணும் பேசல. நிதானமாகக் காலை ஆட்டிக்கொண்டே, 'சாதிங்கிற எடத்துல என்ன சாதீன்னு எழுதலையே' என்று கேட்டார். மொதல்ல அவர் அப்பிடி யார்கிட்டக் கேட்கிறார்னு சிலுவைக்கித் தெரியல. 'எக்ஸ்கியூஸ்மி ஸார். என்ன கேட்டீங்க?' என்று சிலுவை கேட்டான். மிகவும் அடக்கமாகவே கேட்டான். அலுவலகத்தில் இப்பிடித்தான் பேச வேண்டும் என்று ஏற்கனவே ஒத்திகை பாத்தவன் போலப் பேசினான். 'ம்... என்ன சாதின்னு கேட்டேன்' என்று அவர் தேவைக்கும் அதிகமான சப்தத்தோடு புருவங்களைச் சுருக்கியபடி கேட்டார். சிலுவைக்கி, இதுகூடவா இவருக்குத் தெரியவில்லைன்னு சிரிப்பா இருந்தது. 'அதுதான் பக்கத்துல எஸ்.ஸின்னு எழுதியிருக்கேனே ஸார். பாருங்க' என்று விரலைக்கூட நீட்டிக் காண்பித்தான். அவருக்குச் சட்டென்று எரிச்சல் வந்துவிட்டது. 'அது எனக்குத் தெரியாதா? எஸ்.ஸின்னு மொட்டையாப் போட்டாப் போதுமா? என்ன சாதீன்னு குறிப்பிட்டு எழுதணும். என்ன சாதி?' என்று நிஷ்டூரமாகச் சத்தம் போட்டுக் கேட்டார். சிலுவைக்குச் சர்வாங்கமும் ரௌத்திரம் பொங்கியது. அந்த அலுவலர் தன்னிடம் இவ்வளவு ஆங்காரத்தோடு என்ன விபரத்தைக் கேட்கிறார் என்பது சட்டென்று புரிந்தது. 'பறையன்' என்று அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தமாகக் கத்தினான். அவன் போட்ட அந்தச் சத்தத்தில் ஒரு நிமிசம் ஆபீஸ் கட்டடமே அதிர்ந்து சுவரில் விரிசல்கூட விழுந்திருக்கலாம். அந்த அலுவலர் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் அப்பிடியே ஒரு நிமிசம் ஒக்காந்துவிட்டார். அதுக்குப் பெறகு பேச்சில்லை. அவரே அந்தப் பெயரை ஆங்கிலீசில் எழுதி அவனுடைய செர்டிபிகேட்டுகளுக்குப் பின்னால் ஸ்டாம்பு குத்தி, பதிந்ததற்கான அட்டையை மேசைமேல் போட்டார்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
அப்போது சிலுவைக்கு நாத்திகம், சோவியத்யூனியன் சோசலிசம், கம்யூனிசம் பற்றிய உறுதியான கருத்தியல் சார்ப்புகள் தோன்றிவிட்டன. என்.சி.பி.ஹெச் ஸ்டாலில் சில சோவியத் புஸ்தகங்களை வாங்கிப் படிக்கிற அளவுக்கு அதில் ஈடுபாடுகொண்டிருந்தான். மதவாதிகளுக்கு, கடவுள்மீது உள்ள நம்பிக்கையைப் போல சிலுவைக்கும் பொதுவுடைமை, நாத்திகம் மீது நம்பிக்கை வந்துவிட்டது. கடவுள் உண்டு என்று அடித்துப் பேசுவதற்கு நம்பிக்கை எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம்பிக்கை, கம்யூனிசம், நாத்திகம் உண்மை என்று பேசுவதற்கு அவசியம். ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் அறிவைவிட நம்பிக்கைதான் ஆதாரம் என்பது அப்போது சிலுவையின் ஓர்மையில் படவில்லை. அவற்றையெல்லாம் கடந்துவந்த பிறகு பிற்காலத்தில்தன் தெரிந்தது. காலங் கடந்துதான் விசயம் புரிகிறது!
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
தாமிரபரணி ஆத்துல ஓடும்போது தண்ணிக்குள்ள லூர்துசாமி விழுந்துட்டானாம். நீச்சலடிக்கத் தெரியாததால செத்துப் போய்ட்டானாம்.போலீஸ் சொன்ன இந்தக் கதையை யாரும் நம்பல. புதை சேத்துல தடுக்கி விழுந்த அந்தப் பையனப் போட்டு நாலு போலீஸ்காரங்க பூட்ஸ் காலால மிதிச்சு மிதிச்சே கொன்னு போட்டதாக நேர்ல பாத்த பசங்க அழுதுகிட்டே சொன்னாங்க. அரசின் மிருக பலத்தின் ஒரு துளியை மாணவர்கள் அன்று ருசித்தார்கள். கலைஞரின் போலீஸ் அராஜக ஆட்சிக்குக் கேடு காலம் வந்துவிட்டதாக எல்லாரும் சொன்னாங்க. கருணாநிதியின் வீழ்ச்சியும், எம்.ஜி.ஆரின் எழுச்சியும் அன்று அந்த தாமிரபரணி ஆற்றில் தீர்மானிக்கப்பட்டுவிட்டதாகப் பத்திரிகைகள் எழுதின. தமிழை அலங்காரமாக மேடைகளில் முழங்கி வந்த ஓர் அரசு இவ்வளவு மட்டமான கொடுங்கோலரசாக இருக்க முடியும் என்பது தெளிவாகியது. சிலுவைக்கு அன்றோடு திமுக பேரிலிருந்த கொஞ்ச நஞ்ச அனுதாபமும் அடியோடு கலைந்தது. அவனைப்போல ஏராளமான இளைஞர்கள் வெளியேறினார்கள்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
எம்ஜிஆர் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். கருணாநிதியோடு மோதி தனிக்கட்சி ஆரம்பிக்கும் சமயம் வந்துவிட்டதாக அவருக்கு நிச்சயமானதும், கருணைகொண்ட கலைஞரிடம் நிதி நிலைமை பற்றிக் கணக்குக் கேட்டார். கருணாநிதிக்கு அப்போ தன்ன யாராலும் அசைக்க முடியாதுன்னு அசாத்தியமான நம்பிக்கை. அசெம்பிளியில் உள்ள அவர் கட்சி எம்.எல்.ஏக்கள் எல்லோரும் ஏகமனதாக அவரைத்தான் ஆதரிச்சாங்க. எம்ஜிஆர்தான் கட்சிய ஒடச்சாருங்கிற பட்ட பெயர் வரணும்னு கருணாநிதி காத்துக்கிட்டிருந்தார். அப்பிடியே நடந்தது. ரெண்டு திராவிடக் கட்சித் தலைவர்களும் பத்திரிகைகள்ல ஒருத்தரை ஒருத்தர் தாக்கி அறிக்கைவிட்டாங்க. மறைந்த அண்ணா அவர்கள் எம்ஜிஆரைத் தமது 'இதயக்கனி'ன்னு சொன்னதா எம்ஜிஆர் அறிக்கைவிட, அந்தக் கனியில் வண்டு தொளைச்சதால் அண்ணா தூக்கிப் போட்டுட்டாருன்னு கலைஞர் வக்கணையா பதில்கூற, வண்டு துளைத்த கனிதான் ரொம்பத் தித்திப்பாயிருக்கும்னு வாத்தியார் பதில் அறிக்கைவிட்டார். ஒரே தமாஷா போச்சு. எம்ஜிஆருக்கு அந்தக் காலத்தில் தாம் குடுத்த 'புரட்சி நடிகர்'ங்கிற பட்டத்தை அவர் இன்னும் வச்சுக்கிரலாமான்னு கலைஞர் சொல்லிக் காட்ட, அது தேவையில்லை, 'மக்கள் திலகம்' என்ற பட்டமே போதும்னு எம்ஜிஆர் அறிக்கைவிட்டார். எம்ஜிஆர் புரட்சி நடிகர் இல்லை, 'புரட்டு நடிகர்'னு கலைஞர் சொல் விளையாட்டு விளையாட, ஆமா புரட்டு நடிகர்தான். அநியாயத்தை அக்கிரமத்தைப் புரட்டும் நடிகர்னு இவர் அதே விளையாட்டு விளையாடினார். சினாமாவுல எம்ஜிஆர் - நம்பியார் மாதிரி, அரசியல்ல, ரெண்டு பேரும் வார்த்தைச் சண்டை போட்டாங்க. பத்திரிகைகளுக்கு நல்ல விற்பனை!
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
வாழ்விருத்தலுக்கான போராட்டத்தில், தகுதி வாய்ந்தவை தாக்கு பிடிக்கும், அதுதான் இயற்கையின் தேர்வு என்று டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியின் விதிகளைச் சிலுவை நினைத்துக் கொண்டான். ஒரு செல் பிராணியிலிருந்து ஆறறிவு படைத்த மனிதப் பிராணிவரை இது நிஜம். இந்த விதிகளின் வீச்சத்தை மூடிமறைப்பதற்குத்தான் அறம், நீதி, ஒழுக்கம், முதலான செண்டுகளை அடித்துக்கொள்கிறார்களோ?
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'
ரவி தண்ணி போட்டாம்னா தாஸ்தாவ்ஸ்கி பற்றித்தான் பேசுவான்.
ராஜ் கௌதமன் (Raj Gauthaman) — 'சிலுவைராஜ் சரித்திரம்'