Quotes from இராஜராஜேச்சரம்
இத்திருக்கோயிலை எடுப்பித்த மாமன்னன் இராஜராஜன் மற்றும் அவன் தேவி லோகமாதேவி ஆகியோர்க்கு ஸ்ரீகார்யம் அலுவலராக இருந்த பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் என்பார் பிரதிமங்கள் எடுத்ததை இவ்வாலயத்துக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுச் சாசனம், மாமன்னன் இராஜராஜன் மற்றும் அவன் பட்டமகிஷி லோகமாதேவி ஆகியோர் உயிருடன் திகழ்ந்த போதே அவன் அலுவலன் ஒருவனால் இத்திருக்கோயிலில் திருவுருவச் சிலைகள் செம்பில் எடுக்கப்பெற்றதை விவரிப்பதோடு, அவை வழிபாட்டுக்குரியவை அல்ல என்பதை எடுத்துக்காட்ட அவ்விருவரும் சந்திரசேகர தேவரை வழிபடுவதாக காட்சிப்படுத்தப் பெற்றதையும் எடுத்துரைக்கின்றது. தஞ்சைக் கோயிலில் இருந்த இவ்விரு பிரதிமங்களும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை இத்திருக்கோயிலில் இருந்துள்ளன. பின்னர் இவை சிலரால் கடத்தப்பெற்று விற்பனையாகி தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள சாராபாய் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.
— 'இராஜராஜேச்சரம்'
இராஜராஜேச்சரத்து தென்புறச்சுவரில் உள்ள கல்வெட்டொன்றில் இராஜராஜனின் தமக்கையார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார் எடுத்த பிரதிமங்கள் பற்றிய குறிப்பொன்று காணப்பெறுகின்றது. இக்கல்வெட்டு வாயிலாக குந்தவையார் தம் தந்தை இரண்டாம் பராந்தகனான சுந்தரசோழருக்கும் தன் தாயார் வானவன் மாதேவியார்க்கும் செப்புத் திருமேனிகள் எடுத்தமைபற்றி அறியமுடிகிறது. சுந்தரசோழரைக் கல்வெட்டுக்கள் பொன் மாளிகை துஞ்சினதேவர் எனக் குறிப்பிடுகின்றன. அவர் நந்திபுரத்து அரண்மனையில் திகழ்ந்த பொன் மாளிகையில் துஞ்சினவராவார். குந்தவையார் இவ்வாலயத்தில் எடுப்பித்து வழிபட்ட தம் தாய் தந்தையார் உருவத் திருமேனிகளுக்கு நாள் வழிபாட்டின்போது அமுதுபடிகளும், அணிவிக்க அணிகலன்களும் அளித்ததை இக்கல்வெட்டு விவரிக்கின்றது. எனவே மாமன்னன் இராஜராஜன், அவன் தமக்கை குந்தவை ஆகியோரால் அவர்தம் பெற்றோர் உருவச்சிலைகள் வழிபடப் பெற்றன என்பதறியலாம். இவ்வுருவச் சிலைகள் இவ்வாலயத்திலிருந்து பிற்காலத்தில் மறைந்துவிட்டன.
— 'இராஜராஜேச்சரம்'
திருச்சுற்று மாளிகையின் கிழக்குப் பத்தியில் ஈசானதேவர் ஆலயத்திற்கு சற்று தெற்கில் தற்போது ஆறு நாகங்களின் சிற்பங்கள் உள்ளன. கோயில் எடுக்கப் பெற்ற காலை இங்கு அட்டநாகங்களைப் பிரதிட்டை செய்துள்ளனர். ஆனால் பின்னர் கலையறிவற்றோர் இவ்வாலயத்துச் சிற்பங்களை உடைத்து அழித்தபோது இரண்டு நாகங்களை முற்றிலும் அழித்துவிட்டனர். ஆலுக்கன் (கௌரன்), வாசுகி, ஸ்வேதன், தக்ஷகன், மகாபத்மம், சங்கம், காளியன், குளிகன் என்னும் நாகங்கள் இங்கு வழிபடுதெய்வங்களாக திகழ்ந்திருந்தன. ஒவ்வொரு நாகதெய்வமும் சுமார் ஐந்தரை அடி உயரமுடையவையாய் இடுப்புக்குக் கீழே பாம்புடலும், இடுப்புக்கு மேலே மனித வடிவமும், தலைக்குப் பின்புறம் ஐந்தலை அரவின் படம் விரிந்த நிலையிலும் உள்ளவாறு காணப் பெறுகின்றன. தமிழகத்தில் வேறு எந்த ஆலயத்திலும் இவ்வளவு பெரிய அளவில் அட்டநாக உருவங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
— 'இராஜராஜேச்சரம்'
ஜி.யு. போப், காடுவெட்டிச் சோழன் என்பான் இக்கோயிலை கட்டினான் என எழுதுகிறார்.
— 'இராஜராஜேச்சரம்'
சிவபெருமானுக்கு உரிய ஆயுதங்கள் பத்து என ஆகமங்கள் உரைக்கின்றன. அவை முறையே வஜ்ரம், சக்தி, தண்டம், கொடி, சூலம், அங்குசம், கதை, பாசம், கத்தி, சக்கரம் என்பவையாகும். தஞ்சைப் பெரியகோயிலின் ஸ்ரீவிமானத்துக்கு மகாமண்டப வாயிலைத் தவிர்த்து மேலும் ஐந்துவாயில்கள் உள்ளன. அர்த்த மண்டபத்திற்கு தெற்கு, வடக்கு திசைகளில் இரண்டு வாயில்களும், சாந்தார அறைக்கு தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளில் மூன்று வாயில்களும் உள்ளன. இந்த ஐந்து வாயில்களையும் பெரிய அளவில் உள்ள பத்து வாயிற் காவலர்களின் சிறபங்கள் காத்து நிற்கின்றன. இப்பத்து காவலர் சிற்பங்களும் நான்கு கரங்கள் உடையவைகளாய் நந்தி மகாகாளன் சிற்பங்களை ஒத்தே திகழ்கின்றன. இவர்கள் முறையே வஜ்ரதேவர், பாசதேவர், சக்திதேவர், தண்டதேவர், துவஜதேவர், சூலதேவர், அங்குசதேவர், கதைதேவர், கட்கதேவர், சக்கரதேவர் ஆவர். அவர்தம் கரங்களில் அவரவர்க்கு உரிய ஆயுதங்கள் இடம்பெறல் வேண்டும். இங்கு சக்திதேவர், கதைதேவர், சூலதேவர், கடகதேவர், துவஜதேவர் ஆகிய ஐந்து ஆயுதபுருடர்கள் சிற்பங்கள் மட்டுமே கை கால்கள் சிதைக்கப்பெறாமல் முறையே சந்தாரத்தின் தெற்கு, மேற்கு, வடக்கு வாயில்களில் உள்ளன. அர்த்த மண்டபத்து இருவாயில்களில் உள்ள நான்கு தேவர்களும், சாந்தாரத்தின் தெற்கு வாயிலில் உள்ள ஒரு தேவரும் கலையறிவற்றோரால் சிதைக்கப்பெற்று, பிற்காலத்தில் சுதையால் சீர் செய்துள்ளனர். அவ்வாறு புனரமைப்பு செய்யுங்கால் அவர்களுக்கு அத்தேவர்கள் ஆயுத புருடர்கள் என அறியாமல், துவார பாலகர் அமைப்பிலேயே செய்துள்ளனர். இதனால் ஐந்து தேவர்களின் திருவுருவங்களை இந்த இந்த ஆயுத புருடர்கள் எனக் குறிப்பிட இயலவில்லை.
— 'இராஜராஜேச்சரம்'
திருச்சுற்று மாளிகையில் எண்திசை தேவர்களுக்கு எனத் தனித்தனி ஆலயங்கள் விளங்குகின்றன. இந்திரன் ஆலயம் மட்டும் இராஜராஜன் திருவாயில் என்னும் திருக்கோபுரத்தோடு இணைந்து காணப்பெறுகின்றன. இவ்வாயலயத்துக் கருவறையில் திகழ்ந்த இந்திரன் திருமேனியைப் பகைவர்கள் முற்றிலுமாக அழித்துவிட்டனர். இருப்பினும் இவ்வாலயத்து மேல்நிலையில் உள்ளே திகழ்ந்ததை ஒத்த இந்திரன் திருவுருவம் ஒன்று காணப்பெறுகின்றது. சுகாசனராக அமர்ந்துள்ள இந்திரன் தன் கரத்தில் வஜ்ஜிராயுதத்தை ஏந்தியுள்ளார். திருச்சுற்று மாளிகையின் தென்கிழக்கில் அமைந்துள்ள தனித்த ஆலயத்தில் அக்நிதேவரின் அமர்ந்த கோலத்திருவுருவம் சிதைக்கப்பெற்ற நிலையில் காணப்பெறுகின்றது. யோகப்பட்டத்துடன் திகழும் யோகாசனத்தில் அமர்ந்தவராக ஒருகரத்தில் அக்கமாலையும் மறுகரத்தில் அமுதகலசமும் ஏந்தியுள்ளார். நீண்ட தாடியும் தீச்சுவாலையாக எரியும் திருமுடியும் திகழ பொலிவுடைய செம்மாந்த திருமேனியாக இவர் உருவம் உள்ளது. பின்புறம் நீள்வட்டத் திருவாசி ஒளிச்சுடர்களுடன் உள்ளது. யோகபட்டத்துடன் வலக்காலையும் அக்கமாலை ஏந்திய வலக்கரத்தையும், திருவாசியின் உச்சிப்பகுதியையும் கலையறிவற்றோர் உடைத்து அகற்றியுள்ளனர். திருச்சுற்றின் தென் திசையில் உள்ள இயமதர்மராஜரின் ஆலயத்திலும், வடமேற்கில் உள்ள நிருதியின் ஆலயத்திலும் இருந்த திருமேனிகளை முற்றிலுமாக பகைவர்கள் அழித்துவிட்டனர். மேற்குத் திருச்சுற்று மாளிகையின் மையத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் வருணதேவரின் திருவுருவம் உள்ளது. பெரிய தாமரை பீடத்தில் ஒருகாலைத் தொங்கவிட்டு ஒருகாலை மடக்கிய நிலையில் அமர்ந்தவராக இவர் திருமேனி காணப்பெறுகின்றது. வலக்கரத்தில் பாசம் ஏந்திய இவர் இடக்கரத்தை வரத முத்திரையுடன் காட்டியுள்ளார். திருமகுடத்தின் மேற்பகுதியை உடைத்துள்ளனர். திருச்சுற்றின் வடமேற்குத் திசையில் உள்ள சிற்றாலயத்தினுள் வாயுதேவரின் திருமேனி சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பெறுகின்றது. திருச்சுற்று மாளிகையின் வடகிழக்கு மூலையில் அமைந்த ஆலயத்தினுள் ஈசான தேவரின் திருவுருவம் காணப்பெறுகின்றது. பத்ம்பீடத்தின் மேல் சுகாசனராக அமர்ந்துள்ள இம்மூர்த்தியின் இருகரங்களும் உடைக்கப் பெற்றுக் காணப்பெறுகின்றன. தலையில் எழில்மிகு மகுடத்தினை இவர் தரித்துள்ளார்.
— 'இராஜராஜேச்சரம்'
இத்திருக்கோயிலின் மேலைத் திருச்சுற்று மாளிகைப்பத்தியில் வருணன் ஆலயத்திற்கு சற்று வடக்காக முருகப்பெருமானுக்குரிய ஆலயம் உள்ளது. ஆனால் தற்போது கருவறையில் கந்தப்பெருமானின் திருமேனி காணப்பெறவில்லை. இத்திருக்கோயில் பகைவர்களால் கொள்ளையிடப்பெற்று தாக்குதலுக்கு உள்ளானபோது மூலவர் திருமேனி முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதுபோன்றே இத்திருக்கோயிலுக்கென மாமன்னன் இராஜராஜசோழன் வடித்துத்தந்த சுப்பிரமணியப் பெருமான் செப்புத்திருமேனியும் மறைந்துவிட்டது. இருப்பினும் அத்திருமேனி பற்றி கூறும் கல்வெட்டொன்று உள்ளது. இக்கல்வெட்டு கூறும் முருகப்பெருமான் திருவடிவம் எவ்வாறு திகழ்ந்திருக்க வேண்டும் என்பதனை கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலில் இராஜேந்திரசோழன் வடித்தளித்த கந்தப் பெருமான் திருமேனி கொண்டு அறியலாம். சோழர் காலத்து இத்திருக்கோயிலின் கந்தகோட்டம் கி.பி.14ஆம் நூற்றாண்டில் தாக்குதலுக்கு உட்பட்ட பிறகு 15ஆம் நூற்றாண்டில் இத்திருக்கோயிலுக்கு வருகைபுரிந்த அருணகிரிநாதர் அந்த கந்தகோட்டத்து முருகப்பெருமான் காணப்பெறாதது கண்டு இராஜகோபுரத்து (இராஜராஜன் திருவாயில்) தாங்குதளமான உபபீடத்தில் உள்ள கந்தவேளின் திருவடிவத்தினை வணங்கி ஒரு பாடலைப் பாடியருளினார். இப்பாடலில் ராஜகோபுரத்தமர்ந்த பெருமானாக கந்தவேளைக் குறிப்பிடும் அருணகிரியார் அப்பெருமானைக் குறத்தி துஞ்சுமணிமார்பன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
— 'இராஜராஜேச்சரம்'
அர்த்தமண்டபத்து தென்புற வாயிலை ஒட்டித்திகழும் கிழக்கு நோக்கிய கோஷ்டத்தில் சூரியனுடைய திருமேனி உள்ளது. தலைக்குப் பின் நீள்வட்ட ஒளிவட்டம் திகழ நின்ற கோலத்தில் சூரியதேவன் காணப்பெறுகின்றார். கலையறிவற்றோர் தாமரை ஏந்திய இருகரங்களையும் உடைத்து விட்டதால் இத்திருமேனி கைகளை இழந்து காணப்பெறுகின்றன. அர்த்த மண்டபத்து வடபுற வாயிலை ஒட்டித் திகழும் கிழக்கு நோக்கிய கோஷ்டத்தில் சந்திரனுடைய திருமேனி காணப்பெறுகின்றது. தலைக்குப்பின் ஒளிவட்டம் திகழ இருகரம் உடையவராய் நின்ற கோலத்தில் காணப்பெறுகின்றார். சூரியனுடைய திருமேனி போன்றே இங்கும் இருகைகள் உடைக்கப்பட்டுக் காணப்பெறுகின்றது.
— 'இராஜராஜேச்சரம்'
அட்டமங்கல வாயில் எனப்பெறும் அர்த்தமண்டபத்து வடபுற வாயிலின் வெளிப்புறம் தரை தளத்தை ஒட்டி மேற்கு நோக்கியவாறு திகழும் கோஷ்டத்தில் பீடத்தின் மேல் பத்மாசனமாக அமர்ந்து ஒருகையில் ஏட்டுச் சுவடியும், மறுகையில் அக்கமாலையும் ஏந்திய நிலையில் சரஸ்வதி தேவி காணப்பெறுகின்றாள். தலைக்கு மேலாக தழைத்த மரமும், வெண் கொற்றக்குடையும், போற்றும் விண்ணவர் இருவர் உருவங்களும் உள்ளன. தேவியின் இரு மருங்கும் இருபெண்கள் நின்றுகொண்டு சாமரம் வீசுகின்றனர். கோஷ்டத்தின் பக்கச் சுவர்களில் இருமருங்கும் முனிபுங்கவர்கள் அன்னையைப் போற்றி அமர்ந்துள்ளனர். பேரழகுப் பதுமையாகத் திகழும் இத்தேவியின் வலக்கரத்தை கலையறிவற்றோர் சிதைத்துள்ளனர்.
— 'இராஜராஜேச்சரம்'
மாமன்னன் இராஜராஜதேவரும் அவர்தம் குடும்பத்தாரும் சேக்ஷ்த்ரபாலதேவர் வழிபாட்டில் மிகுந்த ஈடுபாட்டுடன் திகழ்ந்தனர் என்பதை திருவலஞ்சுழிக் கல்வெட்டுக்கள் எடுத்துக்கூறுகின்றன. தஞ்சைப் பெரிய கோயிலில் மேற்குத் திருச்சுற்று மாளிகையில் உள்ள இராஜேந்திர சோழதேவர் காலத்துக் கல்வெட்டொன்றில் அக்கோயிலின் ஸ்ரீ காரியமாக விளங்கிய ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்தவேளான் என்பவர் எழுந்தருளுவித்த சேக்ஷ்த்ரபாலதேவர் திருமேனி பற்றி விவரிக்கப் பெற்றுள்ளது. தஞ்சைக்கோயிலில் திருச்சுற்று மாளிகையில் சேக்ஷ்த்ரபாலருக்கென எடுத்த கல்லாலான திருமேனியோடு பரிவாராலயம் ஒன்று இருந்தது. பின்னாளில் நாயக்க மன்னர்கள் அத்திருமேனியை இராஜராஜேச்சரத்து முகமண்டபத்தில் பிரதிட்டை செய்துள்ளனர். தீச்சுடர்களுடன் ஜடாபாரம் திகழ ஆடையற்றவராக நின்ற கோலத்தில் எட்டுத்திருக்கரங்களோடு சேக்ஷ்த்ரபாலர் காணப்பெறுகின்றார். சூலம், வாள், தண்டம், டமருகம் ஆகியவை வலப்பக்கத்து திருக்கரங்களில் திகழ, இடப்பக்கம் வில், பாசம், மணி ஆகியவை விளங்க ஒரு கரம் உடைக்கப்பெற்றுக் காணப்பெறுகின்றது.
— 'இராஜராஜேச்சரம்'