Quotes from இராஜராஜேச்சரம்
மாமன்னன்ன இராஜராஜசோழ தேவரின் ஆட்சிகாலத்துக்கு முன்பு எடுக்கப்பெற்ற தமிழகத்துச் சிவாலயங்களில் தனித்த அம்மன் ஆலயம் (திருக்காம கோட்டம்) எடுக்கப்பெற்று அதில் உமாபரமேஸ்வரிக்குக் கல்லாலான திருமேனி அமைக்கும் வழக்கம் இல்லை. சிவ ஆலயங்களில் செப்புத் திருமேனியாக அம்மன் திருவுருவத்தை வடித்துப் போற்றியுள்ளனர். தஞ்சை இராஜராஜேச்சரத்தில்தான் திருச்சுற்று மாளிகையில் தனித்த உமாபரமேஸ்வரி ஆலயம் இராஜராஜனால் எடுக்கப்பெற்று வழிபடப்பெற்றது. ...தற்போது இக்கல்வெட்டு உள்ள இடத்திலுள்ள பரிவாராலயத்தில் தேவியின் திருமேனி ஏதும் இல்லை. ஆனால் இவ்வாலயத்திற்கு எதிரே திருச்சுற்றில் (பிரகாரத்தில்) தனித்த அம்மன் கோயில் உள்ளது. இது கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஒருவனால் எடுக்கப்பெற்றதாகும். அதில் இடம்பெற்றுள்ள தேவியின் திருவுருவம் முன்பு திருச்சுற்று மாளிகையில் இருந்த தேவியின் வடிவமேயாகும். தேவி நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களோடு திகழ்கிறாள். மேலிரு கரங்களில் அக்கமாலையும் தாமரை மலரும் திகழ முன்னிரு கரங்கள் அபயம் மற்றும் வரதம் ஆகிய முத்திரைகளுடன் விளங்குகின்றன. பாண்டிய கல்வெட்டில் புவனம் மூன்றுடை நாச்சியார் என்ற திருநாமத்தால் குறிக்கப்பெறுகின்றாள்.
— 'இராஜராஜேச்சரம்'
தஞ்சைக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கென தனித்த செப்புத் திருமேனித் தொகுதி ஒன்று வடபுற திருச்சுற்றில் தெற்கு நோக்கியவாறு இருந்துள்ளது. அச்சிற்பத் தொகுதியின் அமைப்புமுறை பற்றி இராஜராஜனின் கல்லெழுத்துச் சாசனம் குறிப்பிடுகிறது. இச்செப்புத் திருமேனித் தொகுப்பில் தட்சிணாமூர்த்தி, பர்வசிகரங்களுடன் கூடிய சிறுமலை, இருகின்னரர்கள், இரு கின்னரிகள், முசலகன் ஒருவன், நான்கு ரிஷிகள், பாம்பு ஒன்று, இரு கர்ண பிராவிருத்தர்கள், ஒரு புலி, ஒன்பது பெரிய கிளைகள், நாற்பத்திரண்டு சிறு கிளைகளுடன் தனியாகச் செய்து இணைக்கப்பெற்ற ஆலமரம் ஒன்று, அதில் மாட்டப்பெற்ற விபூதிப்பை ஒன்று, கைப்பிடியுடன் கூடிய மயிர்பீலியால் செய்யப்பெற்ற கைத்தழை ஒன்று ஆகியவை இருந்தன. இத்தகைய ஆலமர்ச் செல்வர் செப்புத் திருமேனி வேறு எந்த ஆலயத்திலும் இருந்ததாக அறியமுடியவில்லை. இவ்வாறு இராஜராஜனால் இத்திருக்கோயிலுக்கென அளிக்கப்பெற்ற தட்சிணாமூர்த்தி செப்புத் திருமேனித் தொகுதி பிற்காலத்தில் மாற்றாரால் கொள்ளை அடிக்கப்பெற்று மறைந்தது என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.
— 'இராஜராஜேச்சரம்'
கங்கையைத் தன் விரிசடையுள் கரந்தான் எனபதற்காக ஊடல் கொண்ட உமாதேவி சிவனாரிடமிருந்து விலகியே இருந்தாள். இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்தபோது கயிலயங்கிரி அசைந்து குலுக்கியது. நடுக்கமுற்ற உமாதேவி அண்ணலைத் தழுவினாள். அவள் ஊடல் தவிர்ந்தது. மகிழ்வுற்ற ஈசன் உமையை ஒரு கரத்தால் ஆரத்தழுவியவாறு மலரொன்றெடுத்து உமைக்குப் பிரசாதமாக அருளினான். உமாதேவியை தன் இடக்கரத்தால் ஆலிங்கனம் செய்தவாறு, வலக்கரத்தால் பிரசாதம் நல்கும் திருக்கோலமாகிய கௌரிபிரசாத மூர்த்தியின் (ஆலிங்கன மூர்த்தி) திருவடிவம் ஸ்ரீவிமானத்து வடபுற கோஷ்டமொன்றில் இடம்பெற்றுள்ளது.
— 'இராஜராஜேச்சரம்'
சிவபெருமான் தன் உடலின் இடப்பாகத்தில் உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு திகழ்பவன் என்பதால் அர்த்தநாரீஸ்வரன் என்றும் உமையொரு பங்கன் என்றும் அழைக்கப்பெறுகிறான். உமை உருவத்தை வெளிக்காட்டா நிலையில் கூட தன் இடச்செவியில் பத்ரகுண்டலம் அணிந்து தோடுடைய செவியனாகவே காணப்பெறுவான். தஞ்சைப் பெருங்கோயிலில் ஸ்ரீவிமனத்துக் கோஷடம் ஒன்றில் காணப்பெறும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சிறப்புடையதாகும். இதனை ஒத்த செப்புத் திருமேனி ஒன்றும் இவ்வாலயத்தில் வழிபாட்டில் திகழ்ந்ததை இங்குள்ள கல்வெட்டுச் சாசனம் எடுத்துரைக்கின்றது. கோஷ்ட சிற்பம்: பின்னே இடபம் நிற்க அதன்மீது ஒய்யாரமாக சாய்ந்தவாறு இம்மூர்த்தி தேவியோடு காணப்பெறுகின்றார். ஆண்பாகத்து பின்கரத்தில் நீண்ட திரிசூலம் திகழ, முன்கரம் இடபத்தின் தலைமீது இருத்தியநிலையில் உள்ளது. பெண்பாகத்தில் ஒரு கரம் மட்டுமே மலரொன்றினை ஏந்திய நிலையில் திகழ்கின்றது. கோஷ்டத்தின் பக்கவாட்டில் உமைபாகத்திற்கு அருகே சேடிப்பெண் ஒருத்தி சாமரம் வீசியவாறு நிற்கிறாள். அண்ணல் பாகத்திற்கு அருகே அடியார் ஒருவர் கையுயர்த்திப் போற்றி நிற்கின்றார். உலோகத் திருமேனி: மாமன்னன் இராஜராஜனின் சேனாபதி ஸ்ரீகிருஷணன் இராமனான மும்முடிச் சோழ பிரம்மமாராயன் என்பவர் இத்திருக்கோயிலுக்கென அர்த்தநாரீஸ்வரர் செப்புத்திருமேனி ஒன்றினை செய்தளித்ததோடு அதற்குரிய அணிகலன்களையும் அளித்தார் என்பதை மேலைத் திருச்சுற்று மாளிகையில் உள்ள தூண் கல்வெட்டொன்று எடுத்துக் கூறுகின்றது. இங்கு நாம் கோஷ்டத்தில் காணும் திருவடிவத்தினை ஒத்தே இத்திருமேனி இருந்துள்ளது என்பதறிகிறோம். மேலும் இது செப்புத்திருமேனி என்பதால் உமாபாகத்தை வேறுபடுத்திக்காட்ட அப்பாகத்தின் மீது மட்டும் செம்பின்மேல் பித்தளை பூசப்பெற்றது என்பதறிகிறோம். இது ஓர் அரிய படைப்பாகத் திகழ்ந்திருந்துள்ளது. பின்னாளில் நிகழ்ந்த பகைப்புலத்தார் கொள்ளையில் இத்திருமேனியையும் நாம் இழந்துவிட்டோம்.
— 'இராஜராஜேச்சரம்'
இத்திருக்கோயிலின் ஸ்ரீவிமானத்து மேற்குத் திசையமைந்த கோஷ்டங்கள் ஒன்றில் இலிங்கபுராணத் தேவரின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. வட்டத்தூண் வடிவில் இலிங்கபாணம் விளங்க அதன் நடுவண் அமைந்த நீள்வட்ட வெட்டுப்பகுதியினுள் முழங்கால்வரை மட்டுமே தெரியும்வண்ணம் பின்கரங்களில் மான் மழு ஆகியவற்றை ஏந்தியவராக சிவபெருமான் காணப்பெறுகின்றார். வலமுன் கரம் அபயம் காட்ட இடக்கரம் தொடை மீது இருத்தப்பெற்றுள்ளது. நெடுந்தூணின் மேற்பகுதியில் நான்முகன் மேல்நோக்கி மிதந்தவாறு செல்லும் உருவமும், கீழே பன்றி முகத்துடன் கூடிய மாலவன் (வராகர்) மண்டியிட்டவண்ணம் தன் இரு கரங்களால் பூமியை அகழ்ந்தவாறு செல்லும் உருவமும் உள்ளன. இலிங்கபாணத்தின் வெட்டுப்பகுதியின் விளிம்பில் எரிசுடர்கள் காணப் பெறுகின்றன. இந்த இலிங்கபுராணதேவர் இடம்பெற்றுள்ள மாடத்தின் (கோஷ்டத்தின்) இருமருங்கும் நான்முகனும், மாலவனும் கைகூப்பித் தொழுது நிற்கின்றனர். செப்புத் திருமேனி: மாமன்னன் இராஜராஜனின் தேவியாராகிய அபிமானவல்லியார் இத்திருக்கோயிலில் "இலிங்கபுராணதேவர்" என்ற செப்புத் திருமேனி ஒன்றினை எடுத்ததோடு அதற்கென அணிகலன்களையும் அளித்த செய்தி இவ்வாலயத்து கல்வெட்டுச் சாசனமொன்றில் விவரிக்கப்பெற்றுள்ளது. பொதுவாக சிவாலயங்களில் கருவறையின் மேற்குப்புற சுவரின் நடுவண் அமைந்துள்ள கோஷ்ட மாடத்தில் கல்லில் வடிக்கப்பெற்ற லிங்கபுராணத்தேவர் திருமேனி இடம் பெற்றிருக்கும். ஆனால் தஞ்சை கோயிலிலோ கல்லில் அமைந்த லிங்கோத்பவரைத் தவிர செம்பிலும் திருமேனி எடுக்கப்பெற்று, அணிகலன்கள் சூட்டப்பெற்று நித்ய வழிபாடு நிகழ்ந்த செய்தியை அறிய முடிகிறது. கோமுகத்துடன் கூடிய தாமரை வடிவ பீடத்தின் மேல் திகழ்ந்த இந்த இலிங்கபுராணத் தேவர் திருமேனி தற்போது இவ்வாலயத்தில் இடம் பெற்றிருக்கவில்லை. பிறபுலத்தவர் கொள்ளையில் அழிந்துவிட்டது.
— 'இராஜராஜேச்சரம்'
இத்திருக்கோயிலின் மேற்குத் திருச்சுற்று மாளிகைப் பத்தியில் பரிவாராலயத்து கணபதியார் ஆலயத்திற்கு அடுத்து மற்றோர் ஆலயம் உள்ளது. இது ஆடவல்ல பரமனாருக்கென எடுக்கப்பெற்றதாகும். இவ்வாலயத்து முன்சுவரில் இங்கு இடம் பெற்றிருந்த ஆடவல்லான் திருமேனி குறித்த கல்வெட்டுச் சாசனம் ஒன்று இடம்பெற்றுள்ளது....திருமேனிகளின் அளவீடுகள் மற்றும் அமைப்பு பற்றி இக்கல்வெட்டு தெளிவுற விவரிக்கின்றது. காலின் கீழ் முயலகன், நான்கு திருக்கரங்கள், ஒன்பது ஜடைகள், பூமாலை ஏழு ஆகியவற்றோடு கனமாக ஆடவல்லான் திருமேனி பிரபையோடு இருந்ததும், இதுபோன்றே உமாதேவியின் திருமேனியும் கனமாகத் திகழ்ந்தது என்பதறிகிறோம்.
— 'இராஜராஜேச்சரம்'
மாமன்னன் இராஜராஜன் இத்திருக்கோயிலுக்குச் செய்தளித்த சண்டேச்வர பிரசாததேவர் செப்புத்திருமேனி பற்றி இராஜராஜன் திருவாயிலின் வலப்புறம் கிழக்குத் திருச்சுற்றில் உள்ள தூண் கல்வெட்டு விரிவாகக் கூறுகின்றது. இன்று அச்செப்புத் திருமேனி அக்கோயிலில் இடம்பெறாமல் மறைந்துவிட்ட போதிலும் அதன் அமைப்புப்பற்றி இக்கல்வெட்டு தெளிவாகவுரைக்கிறது.
— 'இராஜராஜேச்சரம்'
மாமன்னன் இராஜராஜனின் தேவி பஞ்சவன் மாதேவியார் இவ்வாலயத்திற்கென கணபதியார் செப்புத்திருமேனி ஒன்றினை அளித்தார் என்பதை வடபுற திருச்சுற்று மாளிகைப் பத்தியில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆனால் பஞ்சவன் மாதேவியாரால் இவ்வாலயத்திற்கு அளிக்கப்பெற்ற கணபதியார் திருமேனி தற்போது இவ்வாலயத்தில் இடம் பெற்றிருக்கவில்லை. இத்தேவியார் போன்றே ஸ்ரீராஜராஜதேவரின் பெருந்தரத்து அலுவலருள் ஒருவனான கிழான் வேளான் ஆதித்தனான பராந்தகப் பல்லவரையன் என்பான் ஒரு கணபதித் திருமேனியை இவ்வாலயத்திற்கு அளித்துள்ளான் என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இத்திருமேனியும் இவ்வாலயத்திலிருந்து பின்னாளில் மறைந்துவிட்டது.
— 'இராஜராஜேச்சரம்'
இவ்வாலயத்தில் முன்னர் வழிபாட்டில் திகழ்ந்து, பகைவரின் கொள்ளையடிப்புக் காலங்களில் சிதைக்கப்பெற்ற மிகப்பெரிய விநாயகர் திருமேனி தற்போது தென்புறத் திருச்சுற்றில் உள்ள கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பெற்றுத் திகழ்கின்றது. திருக்கரங்களையும், துதிக்கைகளையும் உடைத்து அகற்றியுள்ளனர். மாலிக்காபூரின் படைஎடுப்பு, அல்லது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியினர் கோயிலில் முகாமிட்டிருந்த காலக்கட்டங்களில் இத்திருமேனி சிதைக்கப்பட்டிருக்க வேண்டும்.
— 'இராஜராஜேச்சரம்'
திருச்சுற்றில் வடமேற்கு மூலையில் விசயநகரப் பேரரசுக் காலத்தில் எடுக்கப்பெற்ற சுப்பிரமணியர் ஆலயம் உள்ளது.... கருவறையில் முருகப்பெருமான் ஆறுமுகங்களோடு சுகாசனராக மயில்மீது அமர்ந்த வண்ணம் காட்சி நல்குகிறார். பெருமனார், மயில், திருவாசி ஆகிய அனைத்தும் ஒரே கல்லால் ஆனவையாகும். இருபுறமும் வள்ளியும், தேவசேனையும் நின்ற வண்ணம் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்திலுள்ள துவாரபாலருக்கு வலதுபுறத்தில், "ரவுத்திரி வருஷம் பங்குனி மாதம் 16 அதிரவீசி ஆச்சாரி விரரய்ய நாயக்கர் ஸதாசெர்வை" என்ற 16ஆம் நூற்றாண்டின் எழுத்தமைதியில் கல்வெட்டொன்று காணப்பெறுகின்றது. இதிலுள்ள நாட்குறிப்பு 1561ஆம் ஆண்டு மார்சு 12ஆம் நாளாக இருக்கலாம். இக்கல்வெட்டால் இக் கோயிலை கட்டுவித்த சிற்ப ஆசாரியின் பெயர் அதிரவீசி ஆசாரி என்றும், திருப்பணி மேற்பார்வை செய்தவர் வீரய்ய நாயக்கர் என்பவர் என்றும் ஊகிக்க முடிகிறது. இம்முருகன் கோயில் இராசராசன் அமைத்த திருச்சுற்று மாளிகையின் பரிவார ஆலயத்து முருகன் கோயில் இருந்த இடத்திற்கு நேர் எதிரே அமைக்கப் பெற்றதாகும். பழைய கோயில் தாக்குதலுக்கு உட்பட்டபோது அழிந்ததால் இக்கோயிலைப் புதியதாகக் கட்டியுள்ளனர். இது செவ்வப்ப நாயக்கரால் எடுக்கப்பெற்றிருக்கலாம். தஞ்சை நாயக்க மன்னர்களுள் செவ்வப்ப நாயக்கர் மட்டுமே சைவராக வாழ்ந்தவர். இவரது கோயிற்பணிகள் அனைத்தும் சிவாலயங்களுக்கே அமைந்தன... கல்வெட்டின் எழுத்தமைதி, சிற்பங்களின் தன்மை, கட்டுமான நுட்பங்கள், மற்ற கூறுகள் அனைத்தையும் தொகுத்து நோக்கும்போது இவ்வாலயம் செவ்வப்ப நாயக்கரால் எழுப்பப்பெற்றிருக்கலாம் என்றே கருதலாம். மேலும் விசயநகரத்திலுள்ள இராமர் கோயிலும் இந்த அமைப்பிலேயே உள்ளதையும், அதனைத் தமிழ்ச் சிற்பிகளே படைத்துள்ளனர் என்பதையும், அதன் காலத்தையும் நோக்கும் போது இந்த முருகன் கோயிலைச் செவ்வப்ப நாயக்கரின் படைப்பாகவே கருதவேண்டியுள்ளது.
— 'இராஜராஜேச்சரம்'