Quotes from இராஜராஜேச்சரம்

சரபோஜி மன்னர் கட்டுவித்த விநாயகப் பெருமான் ஆலயத்திற்குப் பின்புறம், திருமாளிகைப்பத்தியில் 108 சிறிய சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளன. இவற்றைச் சரபோஜி மன்னர் வீரசிங்கம்பேட்டை எனும் ஊரிலிருந்து எடுத்து வந்து, இங்குப் பிரதிஷ்டை செய்து, கி.பி. 1801 மார்ச் 18ஆம் நாளில் கும்பாபிஷேகம் செய்தார் என்று ஒரு மோடி ஆவணம் கூறுகிறது. இந்தச் சிவலிங்கங்கள் கி.பி.750இல் இரண்டாம் நந்திவர்மன், கண்டியூருக்குப் பக்கத்திலிருந்த நந்திபுரத்தில் எடுப்பித்த ஆயிரத்தளியில் இருந்தவையாகும். பின்னாளில் அந்நகரம் அழியவே கோயிலும் அழிந்தது. இவ்வாறு அழிவு பெற்ற ஆயிரத்தளியிலிருந்து கொண்டுவரப் பெற்றவையே இவை. இந்த 108 சிவலிங்கங்ளுக்கு பூஜை செய்யச் சரபோஜி மன்னர் நிலைத்த அறக்கொடை ஒன்றையும் உருவாக்கினார் என்பதைச் சரசுவதி மகாலிலுள்ள மோடி ஆவணங்கள் கூறுகின்றன. இவை தவிர, திருச்சுற்று மாளிகையில் 241 லிங்கங்களையும், ஒரு அம்மனையும் சரபோஜி மன்னர் பிரதிட்டை செய்தார் என்பதை இவ்வாலயத்துக் கல்வெட்டு கூறுகின்றது.
'இராஜராஜேச்சரம்'
திருச்சுற்று மாளிகைப் பத்தியில் தென்மேற்கில் நிருதி ஆலயத்திற்குப் பக்கத்தில் உள்ள ஆலயமே மாமன்னன் இராசராசனால் எடுக்கப்பெற்ற பரிவார ஆலயத்துக் கணபதிப் பிள்ளையார் ஆலயமாகும். இவ்வாலயத்திற்கு முன்புறம் பிரகாரத்தில் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பெற்றதே தற்போதுள்ள விநாயகர் ஆலயமாகும். இவ்வாலயத்து வாயிற்படிக்கட்டில் உள்ள மராட்டி மொழிக் கல்வெட்டில் சரபோஜி மகாராஜா சாலிவாகன சகாப்தம் 1723இல் துர்மதி ஆண்டு வைகாசி மாதம் 3ஆம் தேதி சுக்லபட்சம் துவிதியை வியாழக்கிழமை ரோகிணி நன்னாளில் புதிதாகக் கட்டி முடித்தார் என்று கூறப்பெற்றுள்ளது. இது 1801ஆம் ஆண்டு நிகழ்ந்ததாககும். முற்றிலும் மராட்டியர் காலக் கோயில் கலைப்பணியில் அமைந்த இதன் கருவறையில் மிகப்பெரிய கணபதிப் பெருமானின் திருவுருவம் உள்ளது. இவ்விநாயகர் கோயிலில் காணப்பெறும் கல்வெட்டுக்கள் அனைத்தும் இரண்டாம் சரபோஜி மன்னர் வெட்டுவித்தவையேயாகும்.
'இராஜராஜேச்சரம்'
இடப மண்டபத்தைக் கட்டியபோது இதை மகாமண்டபத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்றுள்ளன. ஆனால் அது முடிக்கப் பெறாமல் தொடக்கப்பணிகளோடு நின்றுவிட்டன. இவ்விரண்டு மண்டபங்களுக்கிடையே தூண்கள் நிறுத்த அடித்தளமிட்டுள்ளனர். துவஜஸ்தம்பம் அருகே ஒரு தூண் மட்டும் நிறுத்தப்பெற்றுள்ளது. அதில் முடிந்த கொண்டை, கூப்பிய கரங்களோடு திகழும் ஒரு நாயக்க மன்னரின் சிலை உள்ளது. இது இரகுநாத நாயக்கர் அல்லது அச்சுதப்ப நாயக்கரது சிலையாக இருத்தல் கூடும். நந்தி மண்டபத்திலுள்ள சிலைகளுள் ஒன்றினை விசயராகவ நாயக்கரது உருவமாகவும், மற்றொன்றை இரகுநாதர் அல்லது இராம்பத்ர நாயக்கரது உருவமாகவும் கொள்ளலாம். இடபமும், இடபமண்டபமும் யார் காலத்தில் எடுக்கப்பெற்றிருக்கலாம் என்பதனை இங்குக் காணப்பெறும் சில சான்றுகளின் அடிப்படையில் ஊகிக்கலாம். பெரிய கோயிலில் செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்ட கல்வெட்டு ஒன்றுள்ளது. இவர்கள் காலத்தில்தான் இராச கோபுரத் திருப்பணி நிகழ்ந்துள்ளது என்பதனைக் கோபுரத்திலுள்ள செவ்வப்ப நாயக்கரின் உருவச்சிலையாலும் மற்ற சுதையுருவங்களாலும் அறியலாம். அப்போது இந்தப் பெரிய காளை உருவம் இடம் பெற்றிருக்கலாம். இவ்வளவு பெரிய நத்தியை நாயக்கர்களால் வைக்க இயலுமா? என்ற கேள்வி எழலாம். மன்னார்குடி இராசகோபாலசுவாமி கோயில் வாசலில் சுமார் 70 அடி உயரமுடைய கருட ஸ்தம்பம் எனும் கற்றூணை நாட்டிய அச்சுதப்ப நாயக்கருக்கு இந்தக் காளை உருவை வைப்பது கடினமன்று. இவர் காலத்தில் ரிஷபத்தைப் பீடமொன்றில் பிரதிட்டை செய்திருக்க வேண்டும். மண்டபம் பிறகு கட்டப்பெற்றிருக்கலாம். அடுத்து, பெரிய கோயில் தொடர்பான நாயக்கர் கால ஆவணம் கருவறை ஓவியத்தொகுப்பிலுள்ள வாசகங்களாகும். சோழர்கால ஓவியங்களின் மேல் சுண்ணாம்பு பூசி, சிவகதைகள் வண்ணக் காட்சிகளாகத் தீட்டப்பெற்றுள்ளன. அதில் ஒரு காட்சியின் கீழ் நாயக்க மரபு கூறி விசயராகவ நாயக்கர் காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பெற்றதாகத் தெலுங்கில் கூறப்பெற்றுள்ளது. இச்சான்றினால் விசயராகவர் காலத்தில் இக்கோயிலினைப் புதுப்பித்து, புதிதாக வண்ணம் தீட்டியுள்ளனர் என்பது நன்கு விளங்கும். செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், இராம்பத்ர நாயக்கர், விசயராகவ நாயக்கர் என்று அக்குறிப்பில் கூறப்பெற்றிருப்பதால் இரகுநாத நாயக்கரின் இரு புதல்வர்களான இராம்பத்திரரும், விசயராகவரும் இணைந்தே இக்கோயிலைப் புதுப்பித்திருக்க வேண்டும். இங்குச் சிலைகளாக உள்ள உருவங்கள் ஒத்த வயதுடையவர்களாகக் காணப்படுவதால் இக் கருத்தே வலுபெறுகின்றது.
'இராஜராஜேச்சரம்'
பிருகன் நாயகி எனத் தற்காலத்தில் வழங்கப்பெறும் உலகம் முழுவதும் உடைய நாச்சியார் கோயிலின் மேற்குப்புற அதிஷ்டானத்தில் பிற்காலத்திய கல்வெட்டு ஒன்றுள்ளது. அக்கல்வெட்டால் ராஜராஜேஸ்வரம் 'பெரிய உடைய நாயனார் கோயில்' என்று நாயக்கர்கள் காலத்தில் அழைக்கப்பெற்றதை அறிகிறோம். இங்கு மல்லப்ப நாயக்கர், மூர்த்தி அம்மன் பெயர்களில் இரண்டு மண்டபங்களைப் புலியூர் எனும் ஊரைச் சார்ந்தவர்கள் தங்கள் கொடையாக, கருங்கற்கொண்டு கட்டுவித்ததோடு, அவர்களே திருக்கோயில் ஊழியமும் புரியலாயினர். இதற்கெனப் பிரசாதக் கட்டளை ஒன்றும் வைக்கப்பெற்றது. இந்த இரு மண்டபங்களோடு நந்தி மண்டபத்தையும் சேர்த்துத் தஞ்சை பெரிய உடைய நாயனார் கோயிலில் காணப்படும் மண்டபங்கள் மூன்றாகும்.
'இராஜராஜேச்சரம்'
இராஜராஜேஸ்வரத்தின் மூலவர் திருக்கோயிலின் மகாமண்டபத்தின் முகப்பான முகமண்டபத்தின் வலதுபுறம் துவாரபாலகர் சிற்பத்திற்கு அருகில் ஒரு சிறு கல்வெட்டுப் பொறிப்பு உள்ளது. அதில் "பிரமிச்சி நாயக்கர் மண்டபம் அதிக்கம் ஆக கட்டிவித்த பச்சையா நாயக்கர் சதாசேவை" என்று எழுதப்பெற்றுள்ளது. இதனால் மகாமண்டபம், முகமண்டபம் இரண்டையும் பிரமிச்சி நாயக்கர் மண்டபம் என்ற பெயரால் பச்சையா நாயக்கர் என்பவர் கட்டுவித்தார் என்று அறிகிறோம். இப்பிரமிச்சி நாயக்கர் கி.பி. 1541இல் அச்சுத்தேவராயரின் கீழ் ஊட்டத்தூர் (லால்குடி வட்டம்) பகுதியில் அதிகாரியாகப் பணியாற்றியவர் என ஊட்டத்தூர் கல்வெட்டால் (ARE 524/1912) அறிகிறோம். எனவே இம்மண்டபம் கி.பி. 16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பெற்றது என்பதைத் தெளிவாக அறியலாம். இத்திருப்பணி கி.பி. 1535இல் தஞ்சை நாயக்க மன்னராகப் பொறுப்பேற்ற செவ்வப்ப நாயக்கர் காலத்தில் நிகழ்ந்தது என்பதையும் இங்கு ஊகித்து அறியலாம். இடிபாடுற்றுக் கிடந்த இந்த மகாமண்டபத்தின் முற்பகுதியும், உள்ளே இருக்கும் குறுக்குச்சுவரும், முதற்பகுதியில் காணப்படும் தூண்களும் விசயநகரக் கலைப்பாணியிலேயே காணப்பெறுவதால் இவையனைத்தும் பச்சையா நாயக்கரின் பணிகளே என்பது நன்கு விளங்கும். இம் முகமண்டபக் கொடுங்கைகளும், அம்மன் கோயில் முகமண்டபக் கொடுங்கைகளும் சிற்பங்களும் ஒத்த தன்மை வாய்ந்தவையாகத் திகழ்வதால் ஒரே காலகட்டத்தில் இப்பெரும்பணி நிகழ்ந்திருக்க வேண்டும்.
'இராஜராஜேச்சரம்'
தற்போது தஞ்சைப் பெரிய கோயிலின் நந்தி மண்டபத்திற்கு வடபுறம் காணப்பெறும் அம்மன் கோயிலில் கருவறையின் மேற்குப் புறச்சுவரில் கல்வெட்டு ஒன்றுள்ளது. அக்கல்வெட்டின் எழுத்தமைதி கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர். இதனடிப்படையில் இக்கல்வெட்டு பாண்டிய மன்னன் ஒருவனது கல்வெட்டு என்று கருதமுடிகிறது. மன்னனது பெயர் குறிக்கப் பெறாமல் அவனது ஆணையாக மட்டும் இச்சாசனம் இருப்பினும், இவனே தற்போதுள்ள அந்த அம்மன் ஆலயத்தை எடுப்பித்தவன் என்பதையும் அறிய முடிகிறது. தஞ்சைப் பெரிய கோயிலை 'ஸ்ரீ இராஜராஜீஸ்வரம்' என்றே இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அம்மனது திருநாமத்தை 'உலகு முழுதும் உடைய நாச்சியார்' என்று கூறுகிறது. இவ்வாறு எடுக்கப்பெற்ற இந்தக் கோயிலின் பூசைகளுக்காக அருமொழித்தேவ வளநாட்டில் மேற்கூறாகத் திகழும் விடையபுரத்துக் கொட்டகர்க்குடி எனும் ஊரில் பதினொரு வேலி நிலம் அளித்ததையும் விவரிக்கின்றது. தஞ்சைப் பெருங்கோயிலுக்குப் பாண்டிய மன்னன் ஒருவன் அளித்த கொடையே இந்த அம்மன் ஆலயமாகும். இராசராசன் திருச்சுற்று மாளிகையில் 'பரிவாரத்து உமா பட்டராகி' எனும் பெயரில் அமைந்த அம்மன் கோயிலுக்கு முன்புறமாக 14ஆம் நூற்றாண்டில் இக்கோயில் எழுந்துள்ளது. இது எழுப்பப்படுவதற்கு முன்பாகவே பெரிய கோயிலின் திருச்சுற்று மாளிகையும் மகாமண்டபமும் சூறையாடலுக்கு உட்பட்டு அழிவுபட்டிருக்கும் எனக் கருதமுடிகிறது. கருவறையில் 7 அடிக்கும் மேற்பட்ட உயரமுள்ள நின்றகோல அம்மன் திருவுருவம் மிகுந்த எழிலோடு படைக்கப்பெற்றுள்ளது. உலகு முழுதும் உடைய நாச்சியார் என்ற திருநாமத்தோடு பாண்டிய மன்னன் ஒருவனால் பிரதிட்டை செய்யப்பெற்ற இத்திருமேனியைப் பிற்காலத்தில் தமிழில் பெரியநாயகி என்றும் வடமொழியில் ப்ருஹந்நாயகி என்றும் அழைக்கலாயினர்.
'இராஜராஜேச்சரம்'
கிரீவத்தோடு சிகரம் அமைந்துள்ள 8.7மீ சதுரத் தளம் ஒரே கல்லால் ஆனது அன்று. இது பிரமரந்திரக் கல்லும் அன்று. இது 80 டன் எடையுடையது என்பதும், அழகி என்ற கிழவி கொடுத்தது என்ற கதையும் கற்பனைகளே. ஸ்தூபி வரை மேலே சென்று, எல்லாப் பகுதிகளையும் ஆராய்ந்து அளந்தபோது இக்கட்டுமானம் முழுவதும் பல துண்டுக் கற்களால் ஆனது என்பது உறுதியாகத் தெரிந்தது.... ....கிரீவப் பகுதியில் வடமேற்கு மூலையில் 1.53மீ உயரத்தில் நிற்கும் பூதகணம் ஒன்று மிகச்சிறப்பாக வடிக்கப்பெற்றுக் காணப்பெறுகின்றது. இப் பூதம் சிகரத்தைத் தாங்கி நிற்பது போன்று இருப்பினும், சிரத்திலிருந்து ஒரு துளை இடப்பெற்று அது பூதத்தின் உடல் வரை அமைந்துள்ளது. இத் துவாரத்தில் முன்னாளில் மரக்கழியைச் சொருகி ரிஷபக்கொடியை பறக்க விட்டுள்ளனர். வடநாட்டுக் கோயில்களில் கலசத்திற்கு அருகே கொடி பறப்பது போன்று இங்கும் செய்துள்ளனர்.
'இராஜராஜேச்சரம்'
...அம்மனுக்கென்று தனித்த திருக்காமக் கோட்டம் ஒன்றும் இருந்துள்ளது. வடக்குத் திருச்சுற்று மாளிகையில் உள்ள ஓர் ஆலயத்தின் முன்பு காணப்பெறும் கல்வெட்டொன்று, "திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி" என்று கூறுவதால் இதனை அறிகிறோம். பல்லவர், சோழ கோயில்களை ஆராய்ந்தால் இந்தத் தஞ்சை உமாபரமேஸ்வரி ஆலயம் கட்டப்படும்வரை வேறு சிவாலயங்கள் எதிலுமே தனித்த அம்மன் கோயில் பரிவார ஆலயமாக அமைக்கப்பெறாததை அறியலாம். இராசராசனுக்குப் பின்பு வந்த மன்னர்கள் சிவாலயங்களில் தனித்த அம்மன் கோயிலாகத் திருக்காமக் கோட்டம் எடுக்கும் மரபை பின்பற்றினர். எனவே தமிழகக் கோயிற்கலை வரலாற்றில், தஞ்சை பெரிய கோயிலின் திருச்சுற்று மாளிகையில் இராசராசனால் எடுக்கப்பெற்ற பரிவார ஆலயமான உமா பரமேஸ்வரி ஆலயமே தனியாக அம்மன் கோயிலை உருவாக்கும் மரபின் முதற் கோயில் எனக் கூறலாம்.
'இராஜராஜேச்சரம்'
திருமதிலோடு இணைந்த திருச்சுற்று மாளிகை நாற்புறமும் சூழ்ந்து நிற்க, நடுவே கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் இராஜராஜேஸ்வரம் எனும் பெருங்கோயில் திகழ, வடபுறம் ஸ்ரீ விமானத்திற்கருகே சண்டீசர் திருக்கோயில் எழில் செய்ய அமைந்ததே தஞ்சைக் கோயிலின் பண்டைய அமைப்பாகும். இவை தவிர வேறு கோயில்கள் எதுவும் பிரகாரத்தில் எழுப்பப்பெறவில்லை. இராசராசன் தன் சேனாபதி கிருஷ்ணன் இராமன் எனும் மும்முடிச் சோழப் பிரம்மாராயனுக்கு ஆணையிட்டுத் திருச்சுற்று மாளிகையைக் கட்டுவித்தான் என்பதை இம் மாளிகையின் மூன்றிடங்களில் காணப்பெறும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மூன்றும் ஒரே சாசனத்தின் படிகளாகும். இத்திருச்சுற்று மாளிகை இரண்டு தளங்களோடு எடுப்பிக்கப்பெற்று இருக்க வேண்டும். ஆனால் தற்போது ஒரு தளக் கூரையோடு காணப்பெறுகின்றது. இரண்டு தளங்களோடு எடுப்பிக்கப்பெற்று, பின்னாளில் மேல்தளம் அழிந்ததா அல்லது பணிமுடிக்கப் பெறாமலேயே நின்றதா என்று அறுதியிட்டுக் கூறப் போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் கட்டுமானக் கூறுகளை ஆராயும்போது இரண்டு தளங்களோடு எடுப்பிக்கப்பெற்று, பின்னாளில் அழிந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. மதிலில் முதல் தளத்திற்கு மேலாக இரண்டாம் தளத்தின் கூரைப் பகுதிக்குரிய தடமும், சில இடங்களில் சுவர்கள் அப்படியே நிற்பதும்; மதிற்சுவரின் வெளிப்புறம் இரண்டாம் தளக்கூரையின் மழைநீர் வெளியேற அமைக்கப்பெற்ற குழல் போன்ற தூம்புகள் அப்படியே இருப்பதும் இக்கருத்திற்கு வலுவூட்டுகின்றன.
'இராஜராஜேச்சரம்'
இக்கோயிலின் பதஅமைப்பு இரண்டாங் கோபுரமான இராசராசன் திருவாயிலும் அதனுடன் இணைந்து திகழும் புறமதிளும் அடங்கிய பகுதிக்குள்ளே அடங்குவதாகும். புறமதிளில் இராசராசன் திருவாயிலைத் தவிரத் தென்திசையில் இரண்டு வாயில்களும் மேற்குத் திசையில் ஒன்றும் வடதிசையில் ஒன்றும் ஆக நான்கு திருவாயில்கள் உள்ளன. இவற்றுள் மிகச் சிறப்புடைய திருவாயில் வடபுறம் உள்ள 'அணுக்கன் திருவாயில்' ஆகும். இப்பெயரும் இராசராசனுடைய கல்வெட்டிலேயே குறிக்கப் பெற்றுள்ளது. அணுக்கன் வாயிலில் கோபுர அமைப்பு கிடையாது. மரத்தால் செய்யப்பெற்ற நிலைக்கால்கள் போன்று நுண்ணிய வேலைப்பாடுகளோடும், சங்கநிதி, பதுமநிதி, விளக்கு, பூரணகும்பம், சாமரம் ஏந்திய பெண்கள் முதலிய மங்கலச் சிற்பங்களோடும் இவ்வாயில் திகழ்கிறது. வாயிலுக்கு மேலாகச் சாரத் துவாரங்களும், தண்டியங்கள் எனும் வெளியில் பிதுக்கம் பெற்றுத் திகழும் சிம்ம வேலைப்பாடமைந்த கற்களும் உள்ளன. இவற்றினுடன் இணைத்ததாக மரத்தால் செய்யப்பெற்ற அழகிய கூரை அமைப்பு மேலே அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். இது சேரநாட்டுக் கோயில்களின் பாணியில் இருந்திருக்கலாம். மரக்கூரையின் மேல் செம்பு அல்லது பொன் ஓடுகள் வேயப்பெற்றிருக்கலாம். காலம் இவற்றைச் சிதைத்துவிட்டது. இருப்பினும் இவ்வாயிலின் கொள்ளை அழகை வார்த்தைகளால் வடிப்பது கடினம். இராசராசன் தன் அரண்மனையிலிருந்து நாளும் இராஜராஜேச்சரமுடைய பரசாமியை வழிபட வரும் வாயிலாக இதுதான் திகழ்ந்திருக்க வேண்டும். அதனால்தான் இதனைப் பெருமங்கலப் பெருவாயிலாகப் படைத்துள்ளனர். இன்றும் திருவனந்தபுரத்திலுள்ள அனந்தபத்மநாபசாமியை வழிபட வரும் கேரள மன்னர் பெரிய கோபுர வாயில் வழியாக வராமல், மன்னர்க்குரிய சிறப்பு வாயில் வழியாக வரும் மரபு தொடர்ந்து வருகின்றது. அணுக்கன் திருவாயிலே நாளும் மாமன்னன் நுழைந்த திருவாயில் என்று கூறுவதற்கு வலுவூட்டும் சான்றாக நிற்பது இதற்கடுத்த உள்வாயிலில் காணப்படும் அட்டமங்கலச் சிற்பங்களே. கருவறையை அடைய நுழையும் வடபுறத்து அர்த்தமண்டபத்துத் திருவாயிலின் நிலைக்காலில் மட்டுமே அட்டமங்கலச் சிற்பங்கள் பொறிக்கப்பெற்றுள்ளன. எனவே கோயிலினுள் திகழும் கருவறை வாயில்களுள் வடக்கு வாயிலே பெருமங்கலத் திருவாயில் எனும் பொலிவோடு காணப்பெறுகின்றது.
'இராஜராஜேச்சரம்'