Quotes from இராஜராஜேச்சரம்
கி.பி.1801ஆம் ஆண்டில் இரண்டாம் சரபோஜி மன்னர் திருச்சுற்றின் (பிரகாரத்தின்) தென்மேற்குப் பகுதியில் புதிதாக ஒரு ஆலயத்தைக் கட்டுவித்து கணபதியார் திருமேனியை பிரதிட்டை செய்தார் என்பதை அவ்வாலயத்து அதிட்டானத்தில் வெட்டப் பெற்றுள்ள கல்வெட்டு சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. இவ்விநாயகர் திருவுருவமும் மிகப்பெரியதாகும். லளிதாசனக் கோலத்தில் தாமரைப் பீடத்தின்மேல் அமர்ந்துள்ள இவர் மேலிரு கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தரித்துள்ளார். முன்வலக்கரத்தில் தந்தமும், இடக்கரத்தில் மோதகமும் உள்ளன. தலையில் கரண்ட மகுடம் எழில் செய்கின்றது. நல்ல கருப்பு வண்ணக் கல்லால் அமைக்கப்பெற்ற திருவடிவம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
— 'இராஜராஜேச்சரம்'
இரண்டாம் சரபோஜி மன்னரின் அவைக்களப் புலவராய் திகழ்ந்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய தஞ்சைப் பெருவுடையார் உலா என்னும் நூலில் அருளுதவும் கீர்த்தி அருமொழி வேழத்தின் இருமலர்ப் பொற்றாள் இறைஞ்சிக் குருதிமார் செஞ்சடையார் எங்கள் சிவனார் பெருவுடையார் தஞ்சை யுலாச் சொல்வேன் தக. என்ற காப்புச் செய்யுளினை பாடியுள்ளார். ஒளி பொருந்திய பிறைச்சந்திரனைத் தம் சடைமுடியில் அணிந்துள்ளவர் எங்கள் சிவபெருமான் ஸ்ரீபிரகதீசுவர பெருமான். அவர் தஞ்சை மாநகரில் வலம்வரும் சிறப்பினை, வழிபடுபவர்க்குப் புகழினைக் கொடுக்கும் கருணையுடைய அருமொழி விநாயகரின் அழகிய மலர் போன்ற இரண்டு திருவடிகளையும் பணிந்து வணங்கி அவர் அருளால் இயம்புவேன் என்பது இப்பாடலின் பொருளாகும். மாமன்னன் இராஜராஜசோழனின் இயற்பெயர் அருண்மொழிவர்மன் என்பதாகும். இப்பேரரசனின் கல்வெட்டுக்களில் பெரும்பாலும் இப்பெயர் அருமொழி என்றே குறிக்கப்பெற்றுள்ளது. அவன் பெயரால் அழைகப்பெற்ற இவ்விநாயகர் திருமேனி தற்போது ஸ்ரீராஜராஜேச்சரத்து முகமண்டபத்தின் வலப்புறம் உள்ளது. மிகப்பெரிய திருமேனி. மேலிரு கரங்களில் பாசம் அங்குசம் ஆகியவற்றைத் தாங்கி லளிதாசனத்தில் அமர்ந்துள்ள இப்பெருமான் முன்னிரு கரங்களில் தந்தமும், மோதகமும் ஏந்தியுள்ளார். அழகிய திருமேனியாக அருமொழி விநாயகர் காட்சி நல்குகின்றார்.
— 'இராஜராஜேச்சரம்'
மாமன்னன் இராஜராஜனால் இவ்வாயத்திற்கென வகுக்கப்பெற்ற கணபதியார் ஆலயத்தினுள் திகழும் திருமேனியே பரிவாராலயத்து கணபதியார் திருவுருவமாகும். இவ்வாலயம் திருச்சுற்று மாளிகையின் வடமேற்கில் உள்ள நிருதியின் ஆலயத்தை அடுத்து திகழ்கின்றது. ...இவ்வாலயத்தில் பொறிக்கப்பெற்றுள்ள இராஜராஜசோழனின் கல்வெட்டுச் சாசனம் ஒன்றில் பரிவாராலயத்துப் பிள்ளையார் கணபதியார் என்று குறிப்பு காணப்பெறுகிறது. ...தாமரை பீடத்தில் நான்கு திருக்கரங்களுடன் லளிதாசனத்தில் அமர்ந்தாராக இத்திருமேனி விளங்குகின்றது. பாசமும் அங்குசமும் ஏந்திய பின்னிரு கரங்களை கலையறிவற்றோர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். முன்வலக்கரத்தில் தந்தமும், இடக்கரத்தில் மோதகமும் உள்ளன. திருமுகம் துதிக்கையுடன் பொலிவோடு காணப்பெறுகின்றது.
— 'இராஜராஜேச்சரம்'
மாமன்னன் இராஜராஜனால் இவ்வாயத்திற்கென வகுக்கப்பெற்ற கணபதியார் ஆலயத்தினுள் திகழும் திருமேனியே பரிவாராலயத்து கணபதியார் திருவுருவமாகும். ...இவ்வாலயத்தில் பொறிக்கப்பெற்றுள்ள இராஜராஜசோழனின் கல்வெட்டுச் சாசனம் ஒன்றில் பரிவாராலயத்துப் பிள்ளையார் கணபதியார் என்று குறிப்பு காணப்பெறுகிறது. ...தாமரை பீடத்தில் நான்கு திருக்கரங்களுடன் லளிதாசனத்தில் அமர்ந்தாராக இத்திருமேனி விளங்குகின்றது. பாசமும் அங்குசமும் ஏந்திய பின்னிரு கரங்களை கலையறிவற்றோர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். முன்வலக்கரத்தில் தந்தமும், இடக்கரத்தில் மோதகமும் உள்ளன. திருமுகம் துதிக்கையுடன் பொலிவோடு காணப்பெறுகின்றது.
— 'இராஜராஜேச்சரம்'
இத்திருக்கோயிலில் சோழர், விஜயநகரர், நாயக்கர், மராட்டியர் எனப் பல்வேறு அரசமரபினர் காலத்தில் கல்லில் வடிக்கப்பெற்ற கணபதிப் பிள்ளையார் திருமேனிகள் உள்ளன. இவை கலை அம்சத்தால் அந்தந்த காலத்திற்குரிய தனித்தன்மைகளைப் பெற்று விளங்குகின்றன.
— 'இராஜராஜேச்சரம்'
இப்பிரமாண்டமான லிங்கம் கருவறை கட்டப்படுவதற்கு முன்பாகவே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் இப்பிரமாண்ட லிங்கத்தை சிறிய கருவறை வாயிலுக்குள் கொண்டுசெல்வது என்பது இயலாததாகும். அதுமட்டுமன்று, குடமுழுக்கு முன்னதாகவே இந்த பிரமாண்ட லிங்கம் பூசை செய்யப்பட்டும் வந்துள்ளது. மகுடாகம முறையில் இப்பூசனை முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன.
— 'இராஜராஜேச்சரம்'
ஒரு கோயிலை எடுப்பிக்கும் கர்த்தா, அக்கோயில் இறைவனை வழிபட்டு திரும்பும் அடியார்களை வணங்கும் கோலத்தில் தன் உருவச்சிலையை கோபுரவாயிலில் வைப்பது பண்டைய மரபாகும். அதனால்தான் பெரும்பாலான கோபுரங்களில் மன்னர்களின் வணங்கும் கோல உருவச் சிலைகளைக் காணமுடிகிறது. அந்நெறி அடிப்படையில் தஞ்சை இராஜராஜேச்சரமுடையாரை வணங்கி அர்த்தமண்டபத் தென்புற வாயில் வழியே வெளிவரும் அடியார்களை எப்போதுமே வணங்கும் கோலத்தில் இராஜராஜன் மற்றும் அவன் மைந்தன் இராஜேந்திரன் ஆகிய இருவருடைய உருவச் சிற்பங்களும் விஷ்ணு அநுக்கிரக மூர்த்தி அருகிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் அம்மூர்த்தியையும் வணங்குகின்றனர். அடியார்களையும் வணங்குகின்றனர்.
— 'இராஜராஜேச்சரம்'
மாமன்னன் இராஜராஜன் ஸ்ரீவிமானத்தின் மேல் பொற்றகடுகளை வேய்ந்து அதனைப் பொன்மலையாகவே மாற்றி இருந்தான் என்பது கல்வெட்டுக்களால் அறியும் செய்தியாகும்.
— 'இராஜராஜேச்சரம்'
இத்திருக்கோயிலில் காணப்பெறும் இராஜராஜசோழனின் கல்வெட்டுச் சாசனமொன்றில் அப்பேரரசன் இக்கோயிலுக்கென அளித்த பஞ்சதேகமூர்த்தி என்ற செப்புத் திருமேனி பற்றி குறிப்பிடுகிறது. தென்புறத் திருச்சுற்றின் தூண் ஒன்றில் தற்போது இக்கல்வெட்டு காணப்பெற்றாலும், அவன் அளித்த அந்த பஞ்சதேகமூர்த்தி என்ற அத்திருமேனியினை நாம் இழந்துவிட்டோம்.
— 'இராஜராஜேச்சரம்'
திருச்சுற்று மாளிகையும், அதிலிருந்த பரிவார ஆலயங்களும், உள்ளிருந்த தெய்வத் திருவுருவங்களும், பலவகையான அழிவுகளுக்கு உட்பட்டு மறைந்தது போன்றே ஸ்ரீவிமானத்தோடு இணைந்து திகழும் மகாமண்டபமும் பேரழிவுக்கு உட்பட்டுப் பலவாறாக அழிந்து சிதைந்துள்ளது. பெருமண்டபம் இடிந்து சீரழிந்து கிடந்தமையால்தான் பிரமிச்ச நாயக்கர் போன்றவர்கள் பின்னாளில் இடிந்துபோய்ப் பாழாய்க் கிடந்த பிற கோயில்களின் கற்களை வெளியிலிருந்து கொணர்ந்து இம்மண்டபத்தைப் புதுப்பித்துள்ளனர். இவ்வாறு புதுப்பிக்கப்பெற்ற மகாமண்டபத்துக் குறுக்குச்சுவரில் தந்திவர்ம பல்லவன், பராந்தகன், சுந்தரசோழன், குந்தவை போன்றவர்களின் கல்வெட்டுத் துண்டுகள் காணப்பெறுகின்றன. மேலும் பல்லவர் காலச் சிம்மத்தூண் ஒன்றும் இங்குப் பின்னாளில் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் போது இத்திருக்கோயில் மிகக் கடுமையான தாக்குதலுக்கும்,கொள்ளையடிப்புகளுக்கும் இலக்காகி எல்லாவற்றையும் இழந்து நிற்பது நன்கு புலனாகும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. கி.பி.1218ஆம் ஆண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சை நகரை அழித்த போது இது நிகழ்ந்திருக்கச் சற்றும் வாய்ப்பில்லை. ஏனெனில் சோழர்களாயினும், பாண்டியர்களாயினும் போரிட்டு நகரங்களை அழிக்கும் போது, அந்தத் தலைநகர்களின் கருவூலங்களிலிருந்து கைப்பற்றும் அத்தனைப் பொருள்களையும் அங்கே உள்ள ஆலயங்களுக்கே தான் கொடுத்துள்ளனர். குலோத்துங்க சோழன் மதுரையை அழித்தபோது ஆலவாய்ப் பெருமானுக்கே அத்தனையும் கொடுத்தான். அதுபோன்றே சோழநாட்டைக் கைப்பற்றிய சுந்தரபாண்டியன் தில்லை அம்பலவாணன் திருவடிகளிலேயே அத்தனைச் செல்வங்களையும் கொட்டினான். பாண்டியரால் இந்த அழிவு நேரிடவில்லை எனில் தஞ்சைக் கோயில் எப்போது தாக்குதலுக்கு உட்பட்டிருக்கும்? இவ்வழிவு கி.பி.1311இல் நிகழ்ந்த மாலிக்காபூரின் படை எடுப்பால்தான் ஏற்பட்டிருக்கும் என்பதற்குப் பல சாத்தியக்கூறுகள் உள்ளன. தஞ்சையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டியூரில் 15 நாட்கள் தங்கி, இலட்சக்கணக்கான முகமதியப் படையினர் நந்திபுர நகரத்தை அழித்துக் கொள்ளையிட்டதோடு சுற்றுப்புற நகரங்களையும் ஊர்களையும் பேரழிவிற்குள்ளாக்கியதை அமீர்குஸ்ருவின் பர்சியமொழிக் குறிப்புகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. அப்போதுதான் இக்கோயிலின் பெரும்பகுதி அழிந்திருக்க வேண்டும். இராஜராஜேச்சரத்தின் மகாமண்டபம் இடிபாடுற்றுக் கிடந்ததை 15ஆம் நூற்றாண்டில் பிரமிச்சி நாயக்கர் என்பவர் திருப்பணி செய்தார் என்பதை இக்கோயிலில் உள்ள கல்வெட்டொன்று கூறி நிற்கின்றது. அப்போது மகாமண்டபத்தின் நடுவே ஒரு குறுக்குச் சுவர் எழுப்பப்பெற்று, முதற்பகுதி முழுவதும் நாயக்கர்காலத் தூண்களால் மீண்டும் எடுக்கப்பெற்று, ஒருதளத்தோடு திருப்பணி நிறைவு செய்யப்பெற்றுள்ளது. இந்தக் குறுக்குச்சுவர் பல்லவ தந்திவர்மன் காலத்துத் 'தஞ்சாவூர்ப் பிரம்மகுட்டம்' எனும் கோயிலிலிருந்து எடுத்துவரப் பெற்ற கற்களால் கட்டப்பெற்றது. இதனால் 15ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இப்பெருங்கோயில் பேரழிவைத் தாங்கியுள்ளது என்பதை அறிகிறோம்.
— 'இராஜராஜேச்சரம்'