Quotes from இராஜராஜேச்சரம்
ஸ்ரீராஜராஜன் திருவாசலுக்கு வடக்கு ஈசானமூர்த்தி ஆலயத்தளவுஞ் செல்ல கல்லில் வெட்டின....." எனத் தொடரும் கல்வெட்டொன்று இரண்டாம் கோபுரத்தை 'ஸ்ரீராஜராஜன் திருவாசல்' என்று குறிப்பிடுகின்றது. கேரளாந்தகன் திருவாசலைவிடச் சற்று உயரம் குறைந்து மூன்று தளங்களுடன் இக்கோபுரம் கருங்கற் கட்டுமானமாய் அமைந்துள்ளது. வாசலுக்கு வெளியே இருபுறமும் 18' உயரமுடைய இரண்டு பிரம்மாண்டமான துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தின் உட்புறம் வாசலுக்குத் தென்பகுதியில் நாகராஜர் கோயிலும், வடபுறம் இந்திரன் ஆலயமும் கோபுரக் கட்டுமானத்தோடு பிதுக்கம் பெற்று அமைந்துள்ளன... ...இந்தக் கோபுரத்தில்தான் உலகிலேயே மிகப் பெரிய துவாரபாலகர் சிற்பங்கள் மிகுந்த எழிலோடு இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
— 'இராஜராஜேச்சரம்'
கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்ததாகக் காட்சியளிப்பது 'இராசராசன் திருவாயிலாகும்'. இவ்விரு கோபுரங்களுக்கும் இடையே தற்போது நடைபாதை மட்டுமே உள்ளது. ஆனால் இப்பகுதியில் இராசராசன் காலத்தில் முதலாவதாகப் பலிபீடமும், அடுத்து ரிஷபக் கொட்டிலும் இருந்திருக்க வேண்டும். இந்தக் கோயிலின் அமைப்பிலேயே பின்வந்த சோழ மன்னர்கள் எடுத்த தாராசுரம் இராஜராஜேஸ்வரம் (ஐராவதீஸ்வர் திருக்கோயில்) திருபுவனம் திரிபுவனவீரேச்சரம் (கம்பகரேஸ்வரர் திருக்கோயில்) தஞ்சைக் கோயில் எடுக்க முன்மாதிரியாகத் திகழ்ந்த காஞ்சி கயிலாசநாதர் கோயில் ஆகியவற்றை ஒப்பிட்டு நோக்கும்போது மேலே குறிப்பிட்ட இரு கோபுரங்களுக்கும் இடையேதான் இடபமும் பலிபீடமும் இருந்திருக்க வேண்டும் எனக் கொள்ள வேண்டியுள்ளது. தற்போதுள்ள பெரிய இடபம் (காளை உருவம்) சோழர் காலத்து அன்று. விசயநகரப் பேரரசின் காலத்தில் எடுக்கப்பெற்றது. காளை உருவம் இருக்கும் மண்டபத்தில் நாயக்க மன்னர்களின் உருவங்களே உள்ளன. இவை யாவும் பிற்காலச் சேர்க்கையாகும். அப்படியாயின் இவ்விரு கோபுரங்களுக்கும் இடையே இருந்த சோழர்கால இடபம் எங்கே என்ற கேள்வி எழும். அது தற்போது கோயிலினுள் தெற்குத் திருச்சுற்று மாளிகையில் வராகி அம்மன் கோயிலருகே வடக்கு நோக்கியவண்ணம் உள்ளது. பிற்காலத்தில் புதிய இடபமும் இடப மண்டபமாகிய ரிஷபக் கொட்டிலும் உருவானதால் பழைய இடபம் இங்கு இடம்பெறலாயிற்று.
— 'இராஜராஜேச்சரம்'
இராஜராஜீச்சரத்தின் பிரதான நுழைவாயிலாகத் திகழும் திருக்கோபுரம் கேரளாந்தகன் திருவாயிலாகும். ஐந்து நிலைகளுடன் கம்பீரமாகத் திகழும் இந்தத் திருக்கோபுரத்திற்குத் தனிச்சிறப்புகள் பல உண்டு. இராசராசன் காலம் வரை கோயில்களில் உயரமான கோபுரங்கள் எடுக்கும் மரபு இல்லை. பல்லவ, பாண்டிய, முற்காலச் சோழர்கள் உயரங் குறைந்த கோபுரங்களையே எடுத்தனர். தமிழகத்தில் எழுந்த உயரமான முதற்கோபுரம் தஞ்சைக் கேரளாந்தகன் திருக்கோபுரமேயாகும். இதன் பின்னர்தான் பிற்காலச் சோழர்களும், விசயநகர மன்னர்களும், நாயக்கர்களும் இக்கலையை வளர்த்து ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை கோயில்களில் காணப்படுவன போன்ற மிக உயர்ந்த கோபுரங்களைத் தந்தனர்.
— 'இராஜராஜேச்சரம்'
இராசராசன் எடுத்த இராஜராஜீச்சரம் பீடம் முதல் சிகரம் வரை முழுவதுமாகக் கருங்கற்களே கொண்டு கட்டப்பட்டது. தற்போது கோயிலைச் சுற்றிக் காணப்பெறும் அகழி, கோட்டை மதில்கள், கொத்தளங்கள் ஆகியவை நாயக்க மன்னர்களின் காலத்தில் தோற்றுவிக்கப் பெற்றவையாகும்.
— 'இராஜராஜேச்சரம்'
இராசராசன் தனது தலைநகரில் புதிதாக எழுப்பிய இக்கற்றளிக்குக் கொல்லிமலையிலிருந்தும், நர்மதையாற்றங்கரையிலிருந்தும் கற்களைக் கொணர்ந்தான் எனக் கூறுவர். இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. தஞ்சைக்குக் தென்மேற்கே புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் பகுதியில் இருந்த குன்றுகளின் கருங்கற்களையே இங்கு பயன்படுத்தி இருக்கவேண்டும். இதற்கு மூன்று காரணங்கள் உண்டு. தஞ்சாவூருக்குத் தெற்கு, தென்மேற்குத் திசைகள் தவிர மற்றத் திசைகள் அனைத்தும் ஆறுகளாலும் வாய்க்கால்களாலும் சூழப்பட்டுள்ளன. எனவே அத்திசைகளின் வழியே கனமான பெரிய கற்பாறைகளைக் கொணர்தல் கடினமானதாகும். தஞ்சையைவிடச் சற்று உயரமான தென்மேற்குத் திசைப்பகுதியே போக்குவரத்துக்கு ஏற்ற நில அமைப்புடையது. மேலும் தஞ்சைக்கு மிக அருகாமையில் கற்பாறைகள் கிடைக்கும் இடமும் இப்பகுதியேயாகும். தஞ்சைப் பெரியகோயில் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பெற்ற கருங்கற் பாறைகள், எவ்வகையைச் சேர்ந்தனவோ அதே வகைப் பாறைகள் உள்ள நிலப்பகுதி புதுக்கோட்டை மாவட்டத்துக் குண்ணாண்டார் கோயில் பகுதியாகும். சோழர் காலத்தில் கோயில்களுக்குக் கற்கள் எங்கிருந்து கொணரப் பெற்றன என்பதற்கு ஒரு சான்று கிடைத்துள்ளது. தஞ்சைக்கு அருகே உள்ள உடையார் கோயில் (அம்மாபேட்டை சாலையில் உள்ளது) சிவாலயத்திற்கு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் (18ஆம் ஆட்சியாண்டு கி.பி. 1196) கல் எங்கிருந்து கொணரப்பெற்றது என்பதனை, "நொடியூர் பட்டணத்து கிள்ளியூர் மலையிலிருந்தும் சிலைகொண்டு வந்து...." என்ற கல்வெட்டுக் குறிப்பால் அறியலாம். நொடியூர் எனும் ஊர்ப் புதுக்கோட்டை மாவட்டத்தில் குன்னாண்டார் கோயில் பகுதியில் உள்ளதாகும். அனைத்தையும் தொகுத்து நோக்கும்போது தஞ்சைப் பெரியகோயிலுக்கும் நொடியூர்ப் பட்டணத்துக் கிள்ளியூர் மலைப் பகுதியிலிருந்தே கற்கள் வந்திருக்கலாம் எனக் கொள்ளமுடிகிறது. கற்களே இல்லாத ஓரிடத்திற்கு, பல்லாயிரக்கணக்கான டன்கள் எடையுடைய கற்களை, ஏறத்தாழ 75 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கொணர்ந்து கட்டியுள்ளனர்.
— 'இராஜராஜேச்சரம்'
தன் தூதனைச் சிறையிலிட்ட சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனைத் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள காந்தளூர் எனும் இடத்தில் வெற்றி கண்டதோடு அவனது கடற்படையைப் கைப்பற்றியதும் இராஜராஜனின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும். இவ்வெற்றியைக் குறிப்பிடும் வண்ணம் "கேரளாந்தகன்" (கேரள மன்னனுக்கு இயமன் போன்றவன்) என்ற சிறப்புப் பட்டம் சூடி மகிழ்ந்தான்.
— 'இராஜராஜேச்சரம்'
தஞ்சைப் பெரியகோயிலை உருவாக்கிய கட்டடக் கலைஞனின் பெயர் வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் என்பதாகும். மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன், இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்ற இரண்டு தச்சர்களும் குஞ்சரமல்லனின் பெரும் பணிக்குத் துணை நின்றவர்களாவர்.
— 'இராஜராஜேச்சரம்'
கி.பி. 985இல் முடிசூடிய இம்மன்னன் 1012இல் இராஜேந்திர சோழனுக்கு முடிசூட்டிவிட்டு 1014இல் மறைந்தான்.
— 'இராஜராஜேச்சரம்'
இராஜராஜனின் பட்டத்தரசி லோகமாதேவியைத் தவிர சோழமாதேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன்மாதேவி, அபிமான வல்லி, இலாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வில்லவன்மாதேவி, வானவன்மாதேவி என்ற 10 தேவியர்களும் அம்மன்னவனுக்கு மனைவியராகத் திகழ்ந்தனர்.
— 'இராஜராஜேச்சரம்'
இராஜராஜனுக்குப் பல மனைவியர் இருந்தனர். இவர்களில் தந்திசக்தி விடங்கி எனும் லோகமாதேவியே பட்டத்தரசியாக விளங்கியவர். மாமன்னனுக்கு வானவன் மாதேவியின் மூலம் பிறந்த ஒரே மகன் மதுராந்தகன் எனும் இராஜேந்திர சோழனாவான். இவனுக்கு இரண்டு தங்கையர்கள் இருந்தனர். மூத்தவள் மாதேவ அடிகள், இளையவள் குந்தவை. இராஜராஜன் தன் பாட்டி செம்பியன் மாதேவியார் நினைவாக ஒரு பெண்ணுக்கு மாதேவ அடிகள் என்றும், சகோதரி குந்தவைப் பிராட்டியார் நினைவாக மற்றொரு பெண்ணுக்குக் குந்தவை என்றும் பெயரிட்டதோடு சிறிய தந்தை மதுராந்தக உத்தம சோழர் நினைவாக மகனுக்கு மதுராந்தகன் என்றும் பெயரிட்டு மகிழ்ந்தான்.
— 'இராஜராஜேச்சரம்'