Quotes from இராஜராஜேச்சரம்
சிறிய தந்தையான மதுராந்தக உத்தமசோழர் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அப்போது அருண்மொழி இளவரசராகத் திகழ்ந்தான். கி.பி. 985இல் மதுராந்தக உத்தமசோழர் மறைந்த பிறகு சோழப் பேரரசனாக மணிமுடி சூடினான். முடிசூட்டு விழாவின் போது "இராஜராஜன்" என்ற சிறப்புப் பெயரைச் சூடிக்கொண்டான்.
— 'இராஜராஜேச்சரம்'
பன்னிரு திருமுறை ஆசிரியர்களுள் ஒருவரான கருவூர்த்தேவர் இங்குள்ள பெரியகோயிலை 'இராசராசேச்சுரம்' என்றே குறிப்பிட்டுள்ளார்.
— 'இராஜராஜேச்சரம்'
ஏறத்தாழ கி.பி. 850இல் விஜயாலய சோழன் முத்தரைய மன்னன் ஒருவனை வென்று, தஞ்சையைக் கைப்பற்றி, சோழ நாட்டின் தலைநகரமாக ஆக்கினான். அப்போது நிசும்பசூதனி என்ற தேவி கோயில் ஒன்றினையும் தோற்றுவித்தான். ...நிசும்பசூதனிக்காக விஜயாலய சோழன் எடுத்த திருமேனி தற்போது தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள வடபத்ரகாளிகோயில் என்னும் திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் திகழ்கின்றது.
— 'இராஜராஜேச்சரம்'
சோழர் காலத்திற்குப் பிறகு கி.பி. 1218இல் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் படையெடுப்பால் தஞ்சை நகரம் முழுமையாக அழிந்தது. சோழன் அரண்மனை தரைமட்டமாக இடிக்கப்பெற்றது. பின்னர் கி.பி. 1311இல் டெல்லியிலிருந்து வந்த மாலிக்காபூரின் பெருஞ்சூறையாடலால் எஞ்சியிருந்த கோயில்களும் சிதைந்தழிந்தன. தஞ்சைப் பெரியகோயிலும் இத்தாக்குதலுக்கு இலக்காகியது.
— 'இராஜராஜேச்சரம்'
ஏறத்தாழ கி.பி. 850இல் விஜயாலய சோழன் முத்தரைய மன்னன் ஒருவனை வென்று, தஞ்சையைக் கைப்பற்றி, சோழ நாட்டின் தலைநகரமாக ஆக்கினான். விஜயாலய சோழனில் தொடங்கி ஆதித்தன், பராந்தகன், கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், மதுராந்தக உத்தமசோழன், இராஜராஜன், இராஜேந்திரன் (இவனது ஆட்சியின் முதல் 10 ஆண்டுகள்) ஆகிய பெருமன்னர்கள் காலம்வரை 176 ஆண்டுகள் தஞ்சை சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கிற்று. அப்போது இப்பேரரசு வடக்கே துங்கபத்திரை ஆறு, வடகிழக்கே ஒரிஸ்சா மாநிலத்துக் கலிங்கம், கிழக்கே வங்கக்கடல், தெற்கே ஈழம், மேற்கே அரபிக்கடலில் உள்ள பன்னீராயிரம் என்னும் லட்சத்தீவு, மாலத்தீவு வரை விரிந்து பரவி இருந்தது. இவ்வளவு பரந்த ஒரு நிலப்பரப்பின் தலைநகரமாகத் தஞ்சை விளங்கியது என்பதும் இவ்வூரின் தனிச் சிறப்புகளில் ஒன்றாகும்.
— 'இராஜராஜேச்சரம்'
தஞ்சாவூர் பற்றிய மிகத் தொன்மையான குறிப்புகள் திருச்சிராப்பள்ளி மலையுச்சியில் காணப்பெறும் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவின் (கி.பி. 555 - 590) கல்வெட்டிலும், திருநாவுக்கரசர் பாடிய திருவீழிமிழலை திருத்தாண்டகத்திலும் உள்ளன. ...செந்தலை என்னும் ஊரில் உள்ள கல்வெட்டுப் பாடல்களில் "தஞ்சைச் செம்புல நாடு" பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. பாண்டியன் மாறஞ்சடையனின் ஆடுதுறைக் கல்வெட்டு (கி.பி. 711) "தஞ்சை நாடு" பற்றிக் குறிப்பிடுகிறது.
— 'இராஜராஜேச்சரம்'
தண்+செய் என்பதே தஞ்சையாயிற்று. குளிர்ந்த நிலப்பரப்பு என்பதே இதன் பொருள். காவிரி நதியின் புதுப்புனலால் வளம் பெற்ற ஊர் என்பதால் (தண்+செய்+ஊர்) தஞ்சாவூராயிற்று.
— 'இராஜராஜேச்சரம்'