Quotes from இராஜராஜேச்சரம்
1886ஆம் ஆண்டில் சென்னை அரசாங்கம் ஹீல்ஷ் என்ற ஜெர்மன் அறிஞரைக் கல்வெட்டாய்வாளராக நியமித்தது. இவர் பெரியகோயில் கல்வெட்டுக்களைப் படி எடுத்துப் படித்து இதனைக் கட்டியவன் மாமன்னன் இராசராசனே என முதன் முதலாகக் கூறினார்.
— 'இராஜராஜேச்சரம்'
சாந்தார அறையின் வடபுறச்சுவரில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ஓவியக்காட்சி சிவபெருமான் திரிபுர அசுரர்களுடன் போர் புரியும் காட்சியேயாகும். ...பரமன் தம் ஆற்றல் முழுதும் வெளிப்பட புருவங்களை நெறித்து, கண்களை விரித்து கோபக்கனல் தெரிக்க அவுணர்களை நோக்குகின்றார். அப்போதே அட்டகாசம் என்னும் சிரிப்பு அவர்தம் உதடுகளில் வெளிப்படுகின்றது. திரிபுரங்கள் வெந்து சாம்பலானதால் பயந்த முப்புர அசுரர் தலைகளில் இலிங்கங்களைச் சுமந்தவாறு அண்ணலிடம் அடைக்கலம் வேண்டி முன்வருகின்றனர். உயிரோட்டமுடைய இவ்வோவியக் காட்சிக்கு ஈடாக தமிழகத்தில் பிறிதோர் ஓவியப் படைப்பைக் காட்ட இயலாது. அண்ணலின் காட்சிக்கு முன்பு நின்றவாறு அவர்தம் முக வட்டத்தின் கீழ்பாதியை நாம் தூர இருந்தே கைகளால் மறையுமாறு காண்போமாகின், அம்முகத்தில் கடுஞ்சினத்தினையும், கனல் தெரிக்கும் விழிகளின் பார்வையினையும் நாம் காணலாம். அதே இடத்தில் நின்றவாறு நாம் கண்ட முகவட்டத்தின் மேல் பாதியை மறைத்தவாறு கீழ்வட்டத்தைப் பார்ப்போமாயின் திரிபுரங்களையே எரித்த அந்த அட்டஹாசம் என்னும் சிரிப்பினைக் காணலாம். ஒரே முகத்தில் கோபத்தின் உச்சத்தையும், சிரிப்பையும் காட்டியுள்ள சோழனின் ஓவியப்படைப்பு ஒப்பரியதாகும். திரிபுராந்தகர் ஓவியக் காட்சிக்கு எதிர்புற சுவரில் இருந்த கயிலை மலையைப் பெயர்க்கும் இராவணனின் ஓவியப்படைப்பு காலவெள்ளத்தில் மறைந்துவிட்டது. இருப்பினும் இராவணின் அலறும் முகம் மட்டும் தெளிவாகக் காட்சியளிக்கின்றது.
— 'இராஜராஜேச்சரம்'
ஓவிய ஆர்வலர்களுக்கும், வரலாற்று அறிஞர்களுக்கும் ஒரு முடிவு காண இயலாதவாறு சர்ச்சைக்குரிய ஓவியமாய்த் திகழ்வது இராசராசனும் கருவூர்த்தேவரும் எனக் கூறப்படும் ஓவியமாகும். சாந்தார அறையின் வடபுறம் உள்ள இக்காட்சித் தொகுப்பில் நால்வர் உருவங்கள் உள்ளன. மூவர்த் தாடியுடனும் ஒருவர் தாடியின்றியும் உள்ளனர். நால்வரும் சடாமுடியுடன் திகழ்கின்றனர். மூவருடைய தாடியும் மீசையும் வெண்மையாக நரைத்து முதுமையைப் பறைசாற்றுகின்றன. ஒருவரது முகம் மீசை கூட இல்லாமல் இளமையாய் உள்ளது. நீள்செவிகள், எளிமையான கழுத்தணிகள், வலது தோளிலிருந்து இடப்புறம் குறுக்காக இறங்கும் வெண்துகிலான உத்தரியம் ஆகியன காட்டப்பட்டுள்ளன. இது பூணூல் அல்ல, யோகபட்டம் என்னும் மேல் வேஷ்டியே என்பது உறுதி. இவர்களின் கை விரல்கள் யோகநிலை காட்டும் சின்முத்திரை போன்று ஒரு மலரைப் பிடித்துள்ளன. மற்றொரு கரத்தில் ஜலகெண்டி ஏந்தியுள்ளனர். இந்த நால்வரில் இருவரை மட்டும் கருத்திற் கொண்டு இராசராசனாகவும், கருவூர்த்தேவராகவும் கொள்வது அவ்வளவு பொருத்தமாக இல்லை. அனைத்துச் சிற்ப நூல்களும் மன்னர்களின் உருவங்களைக் காட்டும்போது ஜடாமகுடம் காட்டுதல் கூடாது என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றன. இங்கோ மிகப்பெரிய ஜடாமகுடம் தெளிவாகக் காட்டப்பெற்றுள்ளது. வேறு எங்கும் ஓவியத்திலோ சிற்பத்திலோ மன்னர்களுக்கு ஜடாமகுடம் காட்டப்பெற்றதாக இதுவரை ஒரு சான்று கூட கிடைக்கவில்லை. இது ஒன்றே இவ்வோயியம் இராசராசன் அல்லன் என்பதற்குப் போதுமான சான்றாகும். அடுத்து, தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராசனோடு தொடர்புடைய ஆயிரக்கணக்கானவர்களின் பெயர்களைக் காண்கிறோம். இவற்றில் கருவூரார் பெயர் ஏன் குறிக்கப்பெறவில்லை என்பது பொருள் பொதிந்த வினாவாகும். அத்துடன் இராசராசனது ராஜகுருவாகத் திகழ்ந்தவர் சர்வசிவ பண்டிதரே என்பதனைத் தஞ்சைக் கோயில் கல்வெட்டுக்கள் தெளிவாகக் கூறுகின்றன. இக்காரணங்களால் ஓவியத்தில் காணப்படும் முதல் இருவரையும் இராசராசனாகவும் கருவூர்த்தேவராகவும் கொள்ளுவது பொருத்தம் ஆகாது. மூர்த்தி தியானம் எனும் நூல் சநகாதி முனிவர்கள் பற்றிக் கூறுகின்றது. ஸநகர், ஸநந்தனர், ஸநாதனர், ஸநத்குமாரர் என்ற நால்வருக்கும் தியான சுலோகங்கள் கூறும் போது ஸநகர் பாலரூபத்தை உடையவர் என்றும், மற்ற மூவரும் தாடி மீசைகளுடன் வயோதிகராய்த் திகழ்வர் என்றும் கூறுகிறது. இந்த அடிப்படையில் நோக்கும் போது இங்குக் காணப்பெறும் முதியவர் மூவரும் முறையே ஸநந்தனர், ஸநாதனர், ஸநத்குமாரர் என்பதும் இளமையாக விளங்குபவர் ஸநகர் என்பதும் நன்கு விளங்கும். எனவே முதலில் உள்ள இருவரை இராசராசன், கருவூர்த்தேவர் என்று கூறுவதைவிட, ஸநகாதி நால்வர் எனக் கொள்வதே சமய மரபிற்குப் பொருத்தமாகும்.
— 'இராஜராஜேச்சரம்'
மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க இருகரமும் கூப்பியவராய் நம்பியாரூரர் மன்றாடியின் முன்னே செய்வதறியாது திகைத்து நிற்கின்றார். அமர்ந்துள்ள சபையோர் சிலர் ஆவணக்களரியின் ஓலைச்சுவடிகளை கையில் அணைத்த வண்ணம் அமர்ந்துள்ளனர். பின்வரிசையில் நிற்கும் ஒருவர் நீண்ட ஆணை ஓலை ஒன்றினைத் தன் இரு கரங்களாலும் பற்றி வாசித்து, அதில் காணும் எழுத்து வரிகளைக் கண்டு வியந்து கண்களை அகல விரிக்கின்றார். வாசிப்பினைக் கேட்ட மற்ற மறையவர்கள் அதிர்ந்தும் வியந்தும் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். சுருளினை விரித்து வாசித்த ஓலையில் என்ன எழுதப் பெற்றிருந்தது என்பதை நமக்கெல்லாம் காட்ட விழைந்த இராஜராஜனின் ஓவியன் அந்த ஓலையின் ஒருபகுதியில் காணப்பெறும் எழுத்து வரியினை நம் பார்வையில் படும் வண்ணம் ஆவணத்தின் கரணத்தான் திருப்பிப் பிடித்துள்ளவாறு அந்த ஓவியக் காட்சியினைப் படைத்துள்ளான். அதில் காணப்பெறும் நுண் எழுத்துக்களை நாம் முயன்று படிப்போமாயின் அதில் "இப்படி அறிவன் இதற்கிவை என் எழுத்து" என்ற சொற்றொடர் காணப்பெறும்.
— 'இராஜராஜேச்சரம்'
மூன்றாம் ஓவியக் காட்சி திருவெண்ணெய் நல்லூர் சபையைக் காட்டுவதாகும். இங்கு சபை நல்ல கட்டுமான அமைப்புடைய மண்டபமாக விளங்குகின்றது. இதன் கூரை விளிம்பான கொடுங்கை என்னும் கபோதகம் நுண்ணிய வேலைப்பாடுடைய கூடுகளுடன் திகழ்கின்றது. வெண்ணெய் நல்லூர் சபையோர் இம்மண்டபத்தில் அமர்ந்தவாறும், நின்றவாறும் நிறைந்து காணப்பெறுகின்றனர். நடுவண் வழக்காடுகின்ற முதியவர் தள்ளுநடை நடந்தவாறு ஒருகையில் குடையையும் மறுகரத்தில் ஆவண ஓலையையும் ஏந்தியவாறு ஆவேசத்துடன் காணப்பெறுகின்றார். இவருடைய தோற்றமே பழைய மன்றாடி என்பதைக் காட்டி நிற்கின்றது. இவ்வோவியம் தீட்டப்பெற்று ஏறத்தாழ நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து இக்கிழவரின் கோல நிலையைச் சொல்லோவியமாக வடித்த சேக்கிழார் பெருமனார், "கண்ணிடை கரந்தகதிர் வெண்படம் எனச் சூழ் புண்ணிய நுதல்புனித நீறு பொலிவெய்தத் தண்மதி முதிர்ந்து கதிர் சாய்வதென மீதே வெண்ணரை முடித்தது விழுந்திடை சலங்க காதிலணி கண்டிகை வடிந்தகுழை தாழச் சோதிமணி மார்பின்அசை நூலினொடு தோளின் மீதுபுனை உத்தரிய வெண்துகில் நுடங்க ஆதபம் மறைகுடை அணிக்கரம் விளங்க பண்டசேரி கோவண உடைப்பழமை கூரக் கொண்டதொர் சழங்கலுடை ஆர்ந்தழகு கொள்ள வெண்துகிலுடன் குசைமுடிந்து விடுவேணுத் தண்டொருகை கொண்டு கழல் தள்ளுநடைகொள்ள" எனக் காட்டுவது தஞ்சையில் உள்ள இவ்வோவியக் காட்சியை எத்தனை முறை அவர் (சேக்கிழார் பெருமானார்) கண்டு ரசித்துச் சொக்கியிருப்பார் எனபதையே நமக்கு உணர்த்துகின்றது.
— 'இராஜராஜேச்சரம்'
இப்பெருங்கோயிலில் கருவறை இரு சுற்றுச்சுவர்களால் ஆனதையும் அதன் இடையே சாந்தாரம் எனும் சுற்றுக்கூடம் உள்ளதையும் முன்னரே கண்டோம். இரண்டு தளங்களிலும் இக்கூடங்கள் உண்டு. கீழ்த்தளத்தில் உள்ள சுற்றுக்கூடத்தில் கருங்கற்சுவரின் மேல் சுண்ணாம்புக் காரை பூசப்பெற்று அதன் மேல் ஓவியங்களை இராசராசனது ஓவியர்கள் தீட்டியுள்ளனர். பின்னர் இவற்றின் மீதே விசயராகவ நாயக்கர் காலத்தில் மீண்டும் சுண்ணாம்பு பூசப்பெற்று ஓவியங்களைத் தீட்டி உள்ளனர். இதனால் சோழர்கால ஓவியங்கள் முழுவதும் நாயக்கர்கால ஓவியங்களால் மறைக்கப்பெற்றன. சென்ற நூற்றாண்டில் நாயக்கர் ஓவியங்களில் காரை பெயர்ந்த இடங்களில் சோழர் ஓவியங்கள் வெளிப்படுவதை பேராசிரியர் கோவிந்தசாமி என்பவர் கண்டு உலகுக்கு அறிவித்தார். பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையினர் வேதியியல் நிபுணர்களைக் கொண்டு நாயக்கர் ஓவியங்கள் பலவற்றை அகற்றிப் பழைய ஓவியங்களை வெளிக்கொணர்ந்தனர். இப்பணி தொடர்ந்து நிகழ்கிறது. இச்சுற்றுக்கூடத்தில் மூன்றில் ஒருபங்கு ஓவியங்களே இதுவரை வெளிவந்துள்ளன.
— 'இராஜராஜேச்சரம்'
முதலாம் இராசராசன் மிக்ச்சிறந்த கலாரசிகன் என்பதை அவன் படைத்த இப்பெருங்கோயிலால் அறிகிறோம். அவனது கலைப்பித்து ஓவியக் கலையிலும் இருந்தது என்பதனை ஒரு கல்வெட்டு்ச் சான்றால் தெளிவாக அறிய முடிகிறது. உக்கல் எனும் ஊரில் காணப்பெறும் அவனது கல்வெட்டில் "ஸ்ரீராஜராஜதேவர் தஞ்சாவூர்ப் பெரியசெண்டு வாயில் சித்திரக்கூடத்து தெற்கில் கல்லூரியில் எழுந்தருளியிருந்து...." என்று கூறப்பெற்றுள்ளது. இதனால் இம் மன்னனின் அரண்மனை வாயிலை ஒட்டிச் சித்திரக்கூடம் ஒன்று இருந்ததை அறிகிறோம். அரண்மனை ஓவியக் கூடத்தில் சித்திரங்களைக் கண்டுகளித்த இம் மன்னவன் பெருங் கோயிலையும் சித்திரக் கோயிலாகவே படைக்கச் செய்தான். அவன் காலத்தில் அடியிலிருந்து முடிவரை இங்கே ஓவியங்களாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்றோ இப்பெருங்கோயிலில் ஒரு கூடத்தில் மட்டுமே அக்காலத்து ஓவியங்களில் சில காணப்பெறுகின்றன. இரண்டாம் தளத்து சுற்று அறையில் இருந்த ஓவியக்காட்சிகள் தெளிவின்றி அழிந்துவிட்டன. இப்பெருங்கோயிலில் கருவறை இரு சுற்றுச்சுவர்களால் ஆனதையும் அதன் இடையே சாந்தாரம் எனும் சுற்றுக்கூடம் உள்ளதையும் முன்னரே கண்டோம். இரண்டு தளங்களிலும் இக்கூடங்கள் உண்டு. கீழ்த்தளத்தில் உள்ள சுற்றுக்கூடத்தில் கருங்கற்சுவரின் மேல் சுண்ணாம்புக் காரை பூசப்பெற்று அதன் மேல் ஓவியங்களை இராசராசனது ஓவியர்கள் தீட்டியுள்ளனர். பின்னர் இவற்றின் மீதே விசயராகவ நாயக்கர் காலத்தில் மீண்டும் சுண்ணாம்பு பூசப்பெற்று ஓவியங்களைத் தீட்டி உள்ளனர். இதனால் சோழர்கால ஓவியங்கள் முழுவதும் நாயக்கர்கால ஓவியங்களால் மறைக்கப்பெற்றன. சென்ற நூற்றாண்டில் நாயக்கர் ஓவியங்களில் காரை பெயர்ந்த இடங்களில் சோழர் ஓவியங்கள் வெளிப்படுவதை பேராசிரியர் கோவிந்தசாமி என்பவர் கண்டு உலகுக்கு அறிவித்தார். பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையினர் வேதியியல் நிபுணர்களைக் கொண்டு நாயக்கர் ஓவியங்கள் பலவற்றை அகற்றிப் பழைய ஓவியங்களை வெளிக்கொணர்ந்தனர். இப்பணி தொடர்ந்து நிகழ்கிறது. இச்சுற்றுக்கூடத்தில் மூன்றில் ஒருபங்கு ஓவியங்களே இதுவரை வெளிவந்துள்ளன. தென்புறவாயில் வழியாக உள்ளே செல்வோமாயின் உருத்திரனின் மிகப்பெரிய சிற்பத்தைக் காணலாம். இதற்கு வலப்புறத்தில் உள்ள சுவர்ப்பகுதி முழுவதும் தரையிலிருந்து கூரைவரை சோழர்கால ஓவியங்கள் உள்ளன. இங்கிருந்து மேற்கிலும் வடக்கிலும் தொடர்ந்து ஓவியங்கள் பல வண்ணங்களில் தீட்டப்பெற்றுள்ளன.
— 'இராஜராஜேச்சரம்'
அம்மன் ஆலயம், மூலவர் கருவறை மற்றும் திருச்சுற்று மாளிகை ஆகிய இடங்களில் சுவாமிக்குச் செய்யப்பெறும் அபிடேகங்களுக்கான திருமஞ்சனநீர் வைக்கப்பெறும் கல்தொட்டிகள் உள்ளன. இவை பிரம்மாண்டமான அமைப்புடையவையாகும். இதில் வைக்கப்பெறும் நீரில் பெருஞ் செண்பக மொட்டு, இலாமிச்சம் வேர், ஏலவரிசி போன்ற பொருள்கள் இடப்பெறும் என்பதை இராஜராஜனின் கல்வெட்டுச் சாசனமொன்று எடுத்துரைக்கின்றது.
— 'இராஜராஜேச்சரம்'
இவ்வாலயத்து அம்மன் திருக்கோயில் பாண்டிய மன்னன் ஒருவனால் எடுக்கப்பெற்றதாகும். அம்மன் ஆலயத்து முன் மண்டப சுவரிலும், பின்னாளில் புதுப்பிக்கப்பெற்ற ராஜராஜேச்சரத்து முன்மண்டபத்தின் குறுக்குச் சுவரிலும் இரண்டு சிறிய உருவச் சிலைகள் இடம்பெற்றுள்ளன. தாடி மீசையுடன் இறைவனை வணங்கும் கோலத்தில் உள்ள இவ்வுருவச் சிற்பங்கள் பாண்டிய மன்னர் இருவரின் உருவச் சிற்பங்கள் என்பதில் ஐயமில்லை.
— 'இராஜராஜேச்சரம்'
தற்போது தஞ்சைக்கோயிலில் இராஜராஜன் எனக் குறிப்பிடப்பெறும் செப்புப் பிரதிமம் ஒன்று உள்ளது. இப்பிரதிமமே சதயவிழா போன்ற நாட்களில் இராஜராஜனாகக் கருதப்பெற்று வீதி உலாவுக்கு எடுத்துச்செல்லப் பெறுகின்றது. இப்பிரதிமம் மிகவும் பிற்காலத்திய (மராட்டியர் காலத்தில்) படைப்பாகும். இப்பிரதிமத்தின் பீடத்தில் "பெரிய கோயில் ராசராசெந்திர சொழராச" என்ற பொறிப்பு காணப்பெறுகின்றது. இப்பொறிப்பின் அடிப்படையில் இப்பிரதிமம் 19 அல்லது 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எடுக்கப்பெற்றதாக இருத்தல் கூடும். ஒருக்கால் இராஜராஜனின் பிரதிமம் கோயிலிலிருந்து அகற்றப் பெற்றபோது இது செய்யப் பெற்றிருக்கலாம் எனக் கருத வாய்ப்புள்ளது.
— 'இராஜராஜேச்சரம்'