Quotes from இராஜராஜேச்சரம்

தஞ்சை நாயக்கராக திகழ்ந்த செவ்வப்ப நாயக்கர் காலத்தில் தஞ்சைப் பெருங்கோயிலில் பலகட்டுமானங்கள் நிகழ்ந்துள்ளன. செவ்வப்ப நாயக்கரின் மனைவி மூர்த்தி அம்மாள் பெயரால் மூர்த்தி அம்மாள் மண்டபம் என்னும் மண்டபமும், அவர்தம் உடன்பிறந்தவரான மல்லப்ப நாயக்கர் பெயரால் மல்லப்ப நாயக்கர் மண்டபம் என்ற மண்டபமும் எடுக்கப் பெற்றன. இம்மல்லப்ப நாயக்கர் மண்டபத்தை ஒட்டி எடுக்கப்பெற்ற ஆலயமே சுப்ரமணியர் திருக்கோயிலாகும். சுப்ரமணியர் ஆலயத்து முகமண்டபத்தில் "ரவுத்திரி வரு பங்கூனி மீ 16 அதிர வீசி ஆச்சாரி, வீரய்ய நாயக்கர் ஸதா சேர்வை" என்ற கல்வெட்டு காணப்பெறுகின்றது. இதில் குறிப்பிடப்படும் ரவுத்திரி ஆண்டுக்குறிப்பு, எழுத்தமைதி, கட்டட அமைதி ஆகியவற்றை வைத்து நோக்கும்போது இக்கட்டடம் கி.பி. 1560ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் எழுப்பப்பெற்றது என்பதிய இயலுகிறது. இது செவ்வப்ப நாயக்கரின் ஆட்சிக்காலமாகும். இத்திருக்கோயிலின் முதற்தளத்தில் காணப்பெறும் சுதை உருவங்களில் செவ்வப்ப நாயக்கரின் உருவமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். வீரப்ப நாயக்கர் என்பவர் மேற்பார்வையில் அதிரவீசி ஆச்சாரி என்பவரே இக்கோயிலை எடுத்த சிற்பி என்பது மேற்குறித்த கல்வெட்டால் அறியலாம். சுப்பரமணியர் ஆலயத்திற்கு முன்பு உள்ள மல்லப்ப நாயக்கர் மண்டபம் 32 தூண்களால் எடுக்கப்பெற்றதாகும். நான்கு மூலைகளிலும் ட வடிவ சுவர்களோடும், முகமண்டபத்தோடும் திகழும் இம்மண்டபத்தின் பக்கவாட்டில் தூண்களுக்கு இடையே காணப்பெறும் வெளியை மராட்டியர் காலத்தில் செங்கற்கள் கொண்டு அடைத்துவிட்டனர். மேலும் சரபோஜி மன்னர் சுப்பிரமணியர் ஆலயத்தையும், இம்மண்டபத்தையும் படிக்கட்டுக்களால் இணைத்துள்ளதோடு மேற்கூரையினைச் செப்பம் செய்தார். இதனால் சுப்பிரமணியர் ஆலயத்தோடு இணைந்த மண்டபமாகவே இது விளங்குகிறது.
'இராஜராஜேச்சரம்'
மொத்தம் 216 அடி உயரமுடைய இந்த விமானத்தின் கட்டுமானம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கான ஆவணச் சான்றுகள் இதுகாறும் கிடைக்கவில்லை. சாரப்பள்ளம் என்னும் ஊரிலிருந்து மண்ணால் சாரம் அமைத்து பிரமந்திர கல்லை ஏற்றினர் என்ற செவிவழிச் செய்தி கடந்த நூறு ஆண்டுகாகத் தொடர்ந்து வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் கிடையா. மாறாக எகிப்து நாட்டு பிரமிட் கட்டடக் கலையில் பயன்படுத்தப்பெற்றது போன்ற சுருள் சாய்வு தளம் என்ற அமைப்பை பயன்படுத்தியிருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு. ஸ்ரீவிமானத்துக் கட்டுமானம் உயர உயர அதே உயரத்தில் விமானத்தைச் சுற்றி மண்மேடு அமைத்து பெரிய கற்களை சுருள் சாய்வு தளத்தின் மூலமாக மேலே எடுத்துச் செல்ல இயலும். கட்டடம் பூர்த்தியான பிறகு சாய்வு தளத்தையும் அகற்றுதல் எளிது. தஞ்சையில் இக்கோயிலுக்குத் தென்புறம் ஏறத்தாழ ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு நீண்ட மண்மேடு உள்ளது. இது சிவாஜி நகர், செல்வம் நகர், பண்டிதர் தோட்டம் வழியாக ரெட்டிப்பாளையம் சாலைவரை நீண்டிருந்தது. அண்மையில் இம்மேட்டின் சில இடங்களில் மண்ணை அகற்றியுள்ளனர். இம்மண்மேடு சுருள் சாய்வுதளம் அமைப்பதற்குப் பயன்படுத்திய மண்கொண்டு அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதமுடிகிறது.
'இராஜராஜேச்சரம்'
கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபத்துடன் இரண்டுதள விமானத்துடன் எழுப்பப்பெற்றதே பாண்டியர்கால அம்மன் ஆலயமாகும். பாண்டியர் எடுத்த அவ்வாலயத்தின் முகமண்டபம் பின்னாளில் விஜயநகர அரசு காலத்தில் புதிதாக எடுக்கப்பெற்று இணைக்கப்பெற்றதாகும்.பழைய மகா மண்டபத்தினை எட்டுத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. அதன் பக்கவாட்டில் பிற்காலத்தில் ஒர் அறை இணைக்கப்பெற்றுள்ளது. விஜயநகர அரசுகாலத்தில் எடுக்கப்பெற்ற முகமண்டபத்தினை 38 தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஆங்காங்கே பக்கச்சுவர்களும் எடுக்கப்பெற்றுள்ளன. முகமண்டபத்துக் கொடுங்கை நீண்ட வளைவு பெற்று அழகுடன் திகழ்கின்றது. முகமண்டபத்து முன்னிரு வரிசைத் தூண்களில் சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.
'இராஜராஜேச்சரம்'
நீண்ட மகாமண்டபம் முன்னாளில் ஒரே பகுதியாகத் திகழ்ந்ததை பின்னாளில் (நாயக்கர் ஆட்சிகாலத்தில்) நடுவே ஒரு குறுக்குச் சுவர் அமைத்து இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். மேற்குப்புற பகுதியில் 36 தூண்கள் உள்ளன. இவை சோழர்காலத் தூண்களாகும். கிழக்குப் பகுதியில் இருபுறமும் மேடை அமைப்புச் செய்து நடுவே வழிசெய்துள்ளனர். இருபுற மேடைப்பகுதிகளிலும் 77 தூண்கள் உள்ளன. நடுப்பகுதியில் மகாமண்டபத்துக் கூரை தற்போது ஒரு தளத்துடன் மட்டுமே விளங்குகின்றது. பண்டு இம்மண்டபம் மேலே இரண்டு தளங்களுடன் திகழ்ந்தது என்பதை எஞ்சியுள்ள கட்டுமானப் பகுதிகளால் உறுதிசெய்ய முடிகின்றது. அர்த்தமண்டபத்திற்கு மேல் இரு தளங்கள் உள்ளதை இன்றும் காணலாம்.
'இராஜராஜேச்சரம்'
மகாமண்டபத்துக் கூரை தற்போது ஒரு தளத்துடன் மட்டுமே விளங்குகின்றது. பண்டு இம்மண்டபம் மேலே இரண்டு தளங்களுடன் திகழ்ந்தது என்பதை எஞ்சியுள்ள கட்டுமானப் பகுதிகளால் உறுதிசெய்ய முடிகின்றது. அர்த்தமண்டபத்திற்கு மேல் இரு தளங்கள் உள்ளதை இன்றும் காணலாம்.
'இராஜராஜேச்சரம்'
திருச்சுற்று மாளிகையில் இராஜராஜன் வாயிலான திருக்கோபுரத்தின் வாயிலுக்குத் தென்புறம் நாகராஜர் கோயிலில் தொடங்கி, வடபுறம் உள்ள இந்திரன் ஆலயம் வரை முப்பத்தாறு பரிவாராலயங்கள் காணப்பெற்றாலும் இவற்றில் தென்கிழக்கு மூலையில் உள்ள அக்நிதேவர் ஆலயம், தெற்கில் உள்ள இயமன் ஆலயம், தென்மேற்கு மூலையில் உள்ள நிருதி ஆலயம், மேற்கில் உள்ள வருணன் ஆலயம், வடமேற்கில் உள்ள வாயுதேவர் ஆலயம், வடக்கில் உள்ள சோமன் ஆலயம், வடகிழக்கில் உள்ள ஈசானன் ஆலயம் ஆகிய ஏழு ஆலயங்களுக்கு மட்டுமே ஸ்ரீவிமானங்கள் உள்ளன. இவ்வாலயங்களில் முறையே அக்நி, வருணன், வாயு, ஈசானன் ஆகிய எண்திசைத் தேவர்களில் நால்வர் உருவங்களும், நாகராஜா, பரிவாராலயத்து கணபதி என இருவர் உருவங்களும், அட்ட நாகங்களில் 6 நாகங்களின் உருவங்களும் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன. மற்ற ஆலயங்களில் இருந்த தெய்வத் திருமேனிகள் முழுதுமாக அகற்றப்பெற்றும், உடைக்கப்பட்டும் அழிந்தன. சப்த மாதர்களில் வராகி உருவமும், சேத்ரபாலர் உருவமும் சற்று சிதிலமடைந்த நிலையில் இடம்பெயர்ந்து முறையே புதிதாக எடுக்கப்பெற்ற வராகி கோயிலிலும், இராஜராஜேச்சரத்து முகமண்டபத்திலும் வழிபாட்டில் உள்ளன. எண்திசை நாயகர்களின் ஸ்ரீவிமானங்களின் மேற்தளத்தில் இந்திரனின் உருவமும், மற்ற ஆலயங்களில் முறையே அந்தந்தத் தெய்வங்களுக்கு உரிய வாகனங்களான ஆடு, எருமை, நரன், மகரம், மான், சிம்மம், இடபம் ஆகியவை நான்கு மூலைகளிலும் சிற்பங்களாக அலங்கரிக்கின்றன. திருச்சுற்று மாளிகையின் 368 தூண்கள் எந்தவித அலங்கார வேலைப்பாடுகளும் இன்றி சதுரத்தூண்களாகவே உள்ளன. பரிவார ஆலய முகப்புச் சுவர்களில் சில இடங்களில் பலகணிகள் உள்ளன.
'இராஜராஜேச்சரம்'
இராஜராஜன் இக்கோயிலை எடுப்பித்த காலத்தில் உட்பிரகாரத்தில் சண்டீசர் கோயிலைத் தவிர வேறு எந்த ஆலயமும் இல்லாததால் பிரகாரத்தை வலம் வருபவர்கள் வெய்யிலிலும், மழையிலும் பாதிப்பின்றி திருச்சுற்று மாளிகையிலேயே நடந்துவர இயலும். தற்போது அக்நி தேவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கோயிலின் சமையற்கூடமும், கலைக்கூடம் இயங்கும் மண்டபமும் நாயக்கர் மற்றும் மராட்டியர்காலக் கட்டுமானங்களாகும்.
'இராஜராஜேச்சரம்'
இராஜராஜேச்சரத்து ஸ்ரீ விமானத்தின் வடபுறம் காணப்பெறும் தொப்பி அணிந்த மேல்நாட்டவர் உருவம் ரகுநாத நாயக்கர் காலத்தில் சுதையால் அமைக்கப்பெற்றதாக இருத்தல் கூடும்.
'இராஜராஜேச்சரம்'
மாமன்னன் இராஜராஜனின் கல்வெட்டுக்கள் எவ்வாறு கேரளாந்தகன் திருவாயில், இராஜராஜன் திருவாயில் என இரண்டு கோபுரங்களை குறிப்பிடுகின்றனவோ அதுபோலவே அப்பேரரசனின் மற்றொரு கல்வெட்டு இவ்வாலயத்தில் திகழ்ந்த அணுக்கன் திருவாயில் என்ற வாயிலொன்றினைக் குறிப்பிடுகின்றது. இவ்வாயில் திருமதிலின் வடமேற்குப் பகுதியில் வடபுறத் திருவாயிலாக விளங்குகின்றது. இவ்வாயில் பற்றியும், மேலும் திருச்சுற்று மாளிகையின் மேற்கு மற்றும் தெற்கு மதில்களில் உள்ள மற்ற மூன்று வாயில்கள் பற்றியும் இதுவரை கட்டடக் கலை வல்லுநர்களால் ஆராயப்பெற்று எந்த ஒரு கருத்தும் வெளியிடப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அணுக்கன் திருவாயிலும் மற்ற மூன்று வாயில்களும் இராஜராஜன் திருவாயில் போன்று தமிழகப் பாணிக் கோபுரங்களாக அமையாமல், சேரநாட்டுக் கோபுரப் பாணியில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளோடு திகழ்ந்திருக்க வேண்டும் என்பதைக் கட்டுமான அமைதியால் உணரமுடிகிறது. இந்த நான்கு வாயில்களில் அணுக்கன் திருவாயிலே மிகுந்த எழிலோடு படைக்கப்பெறிருக்க வேண்டும் என்பதை அங்கு காணப்பெறும் எச்சங்களால் உணரமுடிகிறது. மரத்தால் செய்யப்பெற்றது போன்ற நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் வாயில்நிலை கல்லால் அமைந்துள்ளது. அருகே சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்து விளக்குகள், பூரணகலசம் ஆகிய சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. நிலைக்காலுக்கு மேலாக மதிற்சுவரில் இரண்டு வரிசையாகச் சாரத்துவாரங்களும், அவற்றிற்குக் கீழாகச் சிம்ம வேலைப்பாடுகளுடன் தண்டியங்களும் கல்லிலேயே செதுக்கப்பெற்றுக் காணப்பெறுகின்றன. இவற்றில் மரச் சட்டங்களைச் செருகி மரப்பலகைகளாலும், செம்பு, தங்கம் போன்ற தகடுகளாலும் போர்த்திக் கோபுர முகப்பை உருவாக்கி இருந்திருக்க வேண்டும். இவ்வகை அமைப்புக் கோபுரங்கள் இராஜராஜன் காலத்தில் திகழ்ந்தன என்பதை அப்பேரரசன் தீட்டியுள்ள தஞ்சைப் பெருங்கோயிலின் ப்ரஸ்கோ ஓவியங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. தில்லைக் கோபுரங்கள் அனைத்தும் அவ்வகைக் கோபுரங்களாகத் தான் இருந்தன என்பதை இராஜராஜன் தன் மனைவியருடன் தில்லைக்கோயிலில் வழிபடும் காட்சியிலும், சுந்தரர் திருவஞ்சைக் களத்தில் பதிகம் பாடும் காட்சியிலும் காணமுடிகின்றது. இராஜராஜசோழனின் அரண்மனை இவ்வாயிலுக்கு அருகே திகழும் சீனிவாசபுரம் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்பது தொல்லியல் ஆய்வுகளால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மாமன்னன் இறைவனை வழிபட வரும் திருவாயில் இது என்பதால்தான் இவ்வாயில் பேரழகோடு மங்கலம் பொலிகின்ற திருவாயிலாக அமைந்துள்ளது. இவ்வாயில் வழியாகப் புகுந்து கருவறைக்குச் செல்லும் வடபுற வாயிலில் அட்டமங்கலச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. செம்பு மற்றும் தங்கத் தகடுகள் போர்த்தப்பெற்றிருந்த இவ்வாயிலின் முகப்புப் பகுதி பிற்காலக் கொள்ளையடிப்புகளின் போது சிதைந்திருக்க வேண்டும். இவ்வாயில் முக்கியத்துவம் பெற்ற வாயில் என்பதால் மாமன்னன் இராஜராஜன் மெய்க்காவலர்கள் பலரை அங்கு நியமித்திருந்தான் என்பதை அவனது சாசனம் ஒன்று எடுத்துக் கூறுகின்றது. அணுக்கன் திருவாயில் போன்றே மற்ற மூன்று வாயில்களும் சேரநாட்டு கோபுரப்பாணியில் தான் திகழ்ந்திருக்க வேண்டும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் மரச்சட்டம் செருகுவதற்கேற்ற சாரத்துவாரங்களும், தண்டியங்களும் அவ்வாயில்களின் மேற்புறம் உள்ளன.
'இராஜராஜேச்சரம்'
இந்திய அரசு 1954ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக 1000 ரூபாய் நோட்டில் தஞ்சைப் பெரிய கோயிலின் உருவத்தை அச்சிட்டு வெளியிட்டது. அக்கரன்சி நோட்டுக்கள் கொல்கத்தா, தில்லி, மும்பை, கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வெளியிடப் பெற்றன.
'இராஜராஜேச்சரம்'