Quotes from இராஜராஜேச்சரம்
ஸ்ரீ ராஜராஜீஸ்வரமுடையார்க்கு நாங்குடுத்தனவும், அக்கன் குடுத்தனவும், நம் பெண்டுகள் குடுத்தனவும், மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீ விமானத்தில் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிஞ்சருளக் கல்லில் வெட்டின
— 'இராஜராஜேச்சரம்'
இங்குள்ள கல்வெட்டுக்களில் தொடக்கக் கல்வெட்டாகத் திகழ்வது கருவறையின் வடபுற அதிஷ்டானத்துப் பட்டிகையில் உள்ளதாகும். சண்டிகேசர் கோயிலுக்கு எதிராகத் தொடங்கும் இந்நீண்ட கல்வெட்டு மாமன்னன் இராசராசனின் ஆணையை விவரித்த பின்பே செய்தியைத் தொடங்குகின்றது. மாமன்னனைப் புகழும் வடமொழிச் சுலோகம் சாற்றி, மெய்க்கீர்த்தி பாடி, ஸ்ரீ ராஜராஜ தேவரின் 26ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1011) இருபதாம் நாளில் தஞ்சாவூர் இருமடிச் சோழன் எனும் அரண்மனையின் கிழக்குப் பகுதியிலுள்ள திருமஞ்சன சாலையான தனது அபிஷேக மண்டபத்தில் இருக்கும்போது, பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் தான் கட்டுவித்த கற்கோயிலான ஸ்ரீ ராஜராஜீஸ்வரத்தில் கோயில் கொண்டுள்ள இறைவனுக்கு, தான், தன் உடன்பிறந்த குந்தவை, தனது தேவியர் ஆகிய இவர்கள் அறக்கொடையாகக் கொடுத்தவற்றோடு, மற்றும் யார் யாரெல்லாம் கொடுக்கிறார்களோ அனைத்தையும் ஒன்றாகப் பட்டியலிட்டுக் கல்லில் வெட்டுமாறு ஆணையிட்டதை விவரிக்கின்றது.... ....தஞ்சாவூர் எனும் ஊர் எங்கிருந்தது என்பது மிகத்தெளிவாக இங்குக் காட்டப்பெற்றுள்ளது. "பாண்டிய குலாசனி வறநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர்" என்று கூறுவதால் பாண்டிய குலாசனி என்ற பெயரில் அமைந்த வளநாடாகிய பெரும்பகுதியில் தஞ்சாவூர்க் கூற்றம் என்னும் சிறுபகுதியில் இவ்வூர் அமைந்திருந்தது என்பதை அறிகிறோம். 'நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீஸ்வரமுடையார்க்கு' என்பதால் இது இராசராசன் புதிதாக கட்டிய கற்கோயில் என்பதும், இதன் பெயர் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் என்பதும் அறியப்படுகின்றன. அடுத்து இங்குக் கல்வெட்டில் பொறிக்கப்பெறும் செய்தி கூறப்பட்டுள்ளது. "ஸ்ரீ ராஜராஜீஸ்வரமுடையார்க்கு நாங்குடுத்தனவும், அக்கன் குடுத்தனவும், நம் பெண்டுகள் குடுத்தனவும், மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீ விபானத்தில் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிஞ்சருளக் கல்லில் வெட்டின" என்பது கல்வெட்டு வாசகம். இராசராசன் தன் பெயரோடு, மூத்த சகோதரி ஆகிய குந்தவையார், தன் தேவியர்கள், தன் நாட்டு மக்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு, இறைவன் முன்பு ஆளுபவனும், ஆளப்பெறுவனும் ஒரே நிலைதான் என்ற உயர்ந்த மனநிலையைக் காட்டியுள்ளான்.
— 'இராஜராஜேச்சரம்'
தில்லையம்பதியில் மறைந்திருந்த திருமுறைகளை மீட்டவன் என உமாபதி சிவாச்சாரியாரால் புகழப்பெறும் மாமன்னன் இராசராசன் தான் எடுத்த இத்திருக்கோயிலில் தேவாரம் பாடும் பணிக்காக 50 பேரை நியமனம் செய்தான். இந்த ஐம்பது பேரின் இயற்பெயரும், தீட்சை நாமமும் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளன.
— 'இராஜராஜேச்சரம்'
சோழ மண்டலம் முழுவதிலும் இருந்து இங்க வந்து பணிபுரிந்த ஆடல் மகளிர்க்கு ஆளுக்கு ஒரு வேலி வீதம் 400 வேலி நிலம் அளிக்கப்பெற்றது. வேலி ஒன்றுக்கு 100 கலம் நெல்லை இவர்கள் பெற்றார்கள்.
— 'இராஜராஜேச்சரம்'
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் தேவார மூவர்க்கு இவ்வாலயத்தில் செப்புப் பிரதிமங்கள் எடுக்கப்பெற்று நாள் வழிபாடுகளும், விழாக்களும் செம்மையுற நிகழ்த்தப்பெற்றன என்பதை இராஜராஜனின் கல்வெட்டுக்கள் கூறி நிற்கின்றன. மூவர் தேவாரப் பாடல்களை நாளும் இவ்வாலயத்தில் இறைவன் முன்பு விண்ணப்பம் செய்வதற்காக நாற்பத்தெட்டு திருப்பதிகம் விண்ணப்பம் செய்வார்களையும், உடுக்கை வாசிப்பான் ஒருவனையும், கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனையும் இப்பேரரசனே நியமித்ததை ஒரு கல்வெட்டு எடுத்துக் கூறுகின்றது. அவ்வாறு நியமனம் பெற்றவர்களை பிடாரர் என்று அக்கல்வெட்டு கூறுவதோடு அவர்கள் சிவதீட்சை பெற்று தீட்சா நாமும் உடையவர்கள் என்பதையும் பட்டியலிடுகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிவாலயத்தில் ஐம்பது இசைக் கலைஞர்கள் தேவாரப் பதிகங்களை இசைக் கருவியோடு பாடி நாளும் பணி செய்தார்கள் என்பதை அறியும்போது பண்ணிசை எவ்வளவு உயர்வாகப் போற்றப்பெற்றது என்பதும், அது ஒரு இசைக் கல்லூரியாகவே திகழ்ந்தது என்பதும் அறிகிறோம்.
— 'இராஜராஜேச்சரம்'
எண்ணற்ற பொன்னணிகள், பொற்பாத்திரங்கள், பொன் திருமேனிகள், வெள்ளிப் பாத்திரங்கள், வெள்ளித் திருமேனிகள், செப்புத் திருமேனிகள் என்று வழங்கிய இராசராசன் சோழ மண்டலத்திலிருந்தும், பிற மண்டலத்திலிருந்தும் பல ஊர்களை இக்கோயிலுக்கு அளித்தான். ஊர்நத்தம் திருக்கோயில்கள், குளங்கள், நிலத்தை ஊடறுத்துப் போன வாயக்கால்கள், பறைச்சேரி, கம்மாளச்சேரி, சுடுகாடு உள்ளிட்ட வரியிடப்பெறாத (இறையிலி) நிலங்களும், வரி இவ்வளவு என நிர்ணயிக்கப்பட்ட நிலத்திலிருந்து (இறை கட்டிய காணிக்கடன்) வரியாக ஆண்டுதோறும் அளக்கப்படவேண்டிய நெல்லும், அந்நெல்லை அளக்க அரசுத் துறையில் இருந்த இராசசேகரி எனும் மரக்காலுக்குச் சமமாகப் பெரியகோயிலில் இருந்த ஆடவல்லான் எனும் மரக்காலால் அளக்கப்பெற வேண்டும் என்பதும், அளக்கப்பட வேண்டிய நெல் இவ்வளவு, பொற்காசு இவ்வளவு எனப் பகுத்தளிக்கும் வகையும், உரிய நடைமுறைகளும் விவரமாகக் கல்வெட்டுக்களில் கூறப்படுகின்றன. இராஜராஜீச்சரத்துக்குரிய ஊர்களின் பட்டியலை மூன்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஒரூரின் மொத்த நிலப்பரப்பு, வரியில்லாத நிலங்களின் பரப்பு, இக்கோயிலுக்குத் தேவதானமாகத் தரப்பெற்ற நிலப்பரப்பு, அதற்கு நிச்சயிக்கப்பட்டதும், கோயிலுக்கு செலுத்தப்பட வேண்டியதுமான நெல் மற்றும் பொன் எவ்வளவு என்ற விவரம் ஆகியவற்றை இக்கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
— 'இராஜராஜேச்சரம்'
இங்குள்ள கல்வெட்டுக்களில் தொடக்கக் கல்வெட்டாகத் திகழ்வது கருவறையின் வடபுற அதிஷ்டானத்துப் பட்டிகையில் உள்ளதாகும். சண்டிகேசர் கோயிலுக்கு எதிராகத் தொடங்கும் இந்நீண்ட கல்வெட்டு மாமன்னன் இராசராசனின் ஆணையை விவரித்த பின்பே செய்தியைத் தொடங்குகின்றது. மாமன்னனைப் புகழும் வடமொழிச் சுலோகம் சாற்றி, மெய்க்கீர்த்தி பாடி, ஸ்ரீ ராஜராஜ தேவரின் 26ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1011) இருபதாம் நாளில் தஞ்சாவூர் இருமடிச் சோழன் எனும் அரண்மனையின் கிழக்குப் பகுதியிலுள்ள திருமஞ்சன சாலையான தனது அபிஷேக மண்டபத்தில் இருக்கும்போது, பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் தான் கட்டுவித்த கற்கோயிலான ஸ்ரீ ராஜராஜீஸ்வரத்தில் கோயில் கொண்டுள்ள இறைவனுக்கு, தான், தன் உடன்பிறந்த குந்தவை, தனது தேவியர் ஆகிய இவர்கள் அறக்கொடையாகக் கொடுத்தவற்றோடு, மற்றும் யார் யாரெல்லாம் கொடுக்கிறார்களோ அனைத்தையும் ஒன்றாகப் பட்டியலிட்டுக் கல்லில் வெட்டுமாறு ஆணையிட்டதை விவரிக்கின்றது.
— 'இராஜராஜேச்சரம்'
தஞ்சைப் பெரியகோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தியத் தொல்லியல் துறையினர் சென்ற நூற்றாண்டின் இறுதியில் இக்கல்வெட்டுக்களைப் படி எடுக்கத் தொடங்கினர். அவ்வப்போது அவை ஆண்டறிக்கைகளாக வெளிவந்தன. 1879ஆம் ஆண்டு வரை படி எடுக்கப்பெற்ற கல்வெட்டுக்களைத் தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி இரண்டில் முதல் பாகத்தில் முதல் இருபத்து மூன்று கல்வெட்டுக்களாகவும், இரண்டாம் பாகத்தில் 24 முதல் 62 வரை உள்ள கல்வெட்டுக்களாகவும், மூன்றாம் பாகத்தில் 63 முதல் 71 வரை உள்ள கல்வெட்டுக்களாகவும், நான்காம் பாகத்தில் 78 முதல் 97 வரை உள்ள கல்வெட்டுக்களாகவும் ஆகமொத்தம் 89 கல்வெட்டுக்களின் மூலபாடம் அச்சிடப்பெற்று வெளிவந்துள்ளன. முதன் மூன்று பகுதிகளை அறிஞர் ஹீல்ஷ் அவர்களும், நான்காம் பகுதியினை ராவ்பகதூர் வி. வெங்கையா அவர்களும் பதிப்பித்துள்ளனர். இவை தவிர அண்மையில் பல துண்டுக் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும்போது இராசராசன் காலம் முதல் மராட்டியர் காலம் முடிய இக்கோயில் பல்வேறு மன்னர்களால் எவ்வாறு ஆக்கம் பெற்றது, கோயில் நிர்வாகம் எவ்வாறு நிகழ்ந்தது, மக்கட் சமுதாயத்திற்கு இக்கோயில் எவ்வாறு துணை நின்றது என்பன போன்ற பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது. தென்னிந்திய கல்வெட்டுக்கள் தொகுதி இரண்டில் பதிப்பிக்கப்பெற்ற 89 கல்வெட்டுக்களில் இராசராசன் காலத்துக் கல்வெட்டுக்களாக 64உம், இவன் மகன் இராசேந்திரன் காலத்ததாக 18உம் உள்ளன. இவற்றுள் இருபத்தைந்து சாசனங்கள் மாமன்னன் இராசராசன் இக்கோயிலில் செய்த அறப்பணிகளை விளக்குவனவாகும். இராசராசன் திருவாயிலில் உள்ள 'சுனங்காமுலை உடை உமை பங்கற்கு' எனத் தொடங்கும் செய்யுளோடு இரு தமிழ்ப் பாடல்களும், ஒரு வடமொழிப் பாடலும் அடங்கிய இராசராசனின் சாசனம் ஒன்றும், மகா மண்டபத்தின் உட்புறக் குறுக்குச்சுவரில் உள்ள 'ஸ்ரீ தந்தி' என்ற குறிப்புடைய தந்திவர்ம பல்லவனின் துண்டுக் கல்வெட்டொன்றும், பிற சோழர்காலத் துண்டுக் கல்வெட்டுகள் ஏழும் டாக்டர் இரா. நாகசாமி அவர்களோடு இந்நூலாசிரியரும் இணைந்து கண்டுபிடித்த புதிய கல்வெட்டுக்களாகும்.
— 'இராஜராஜேச்சரம்'
திருச்சுற்றின் தென்மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ள கணபதியார் ஆலயம் கி.பி. 1801இல் இரண்டாம் சரபோஜி மன்னரால் எடுக்கப்பெற்றதாகும்.
— 'இராஜராஜேச்சரம்'
இந்திய அரசு 1954ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக 1000 ரூபாய் நோட்டில் தஞ்சைப் பெரிய கோயிலின் உருவத்தை அச்சிட்டு வெளியிட்டது. அக்கரன்சி நோட்டுக்கள் கொல்கத்தா, தில்லி, மும்பை, கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வெளியிடப் பெற்றன.
— 'இராஜராஜேச்சரம்'