Quotes from இராஜராஜேச்சரம்
தஞ்சாவூரில் உள்ள அரண்மனை ஏறத்தாழ 1550 காலகட்டத்தில் தஞ்சை நாயக்க அரசர் செவ்வப்ப நாயக்கரால் தோற்றுவிக்கப் பெற்றதாகும். இவ்வரண்மனையில் சரஸ்வதி பண்டார் என்ற நூலகம் நாயக்க அரசர்களால் தோற்றுவிக்கப் பெற்று பின்புவந்த மராட்டிய அரசர்களால் விரிவுபடுத்தப்பெற்றது. இந்நூலகத்தில் ஏட்டுச் சுவடிகளாகவும், காகிதச் சுவடிகளாகவும் உள்ள ஆவணங்களில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. மேலும் மராட்டியர்கால அரண்மனை ஆவணங்கள் அனைத்தும் மோடி என்ற மராட்டிய லிபியில் எழுதப்பெற்று இங்கு பாதுகாக்கப்பெறுகின்றன. இங்குள்ள ஆவணங்களில் சுமார் 5 விழுக்காடு ஆவணங்கள் மட்டுமே மொழிபெயர்க்கப்பெற்றுள்ளன. அவ்வாவணங்களிலும் தஞ்சைப் பெரிய கோயில் பற்றிய செய்திகள் பதிவு பெற்றுள்ளன.
— 'இராஜராஜேச்சரம்'
இக்கல்வெட்டில் கூறப்பெற்றுள்ள தகவல்களை நோக்கும்போது மாமன்னன் இராஜராஜசோழன் காலத்தில் ஆண்டுப் பெரிய திருவிழா கொடியேற்று நாளோடு தொடங்கும் என்பதும், அப்பெருவிழாவில் மூன்று நாட்களுக்கு ஆடவல்லான் திருமேனி வீதி உலாவுக்காக எழுந்தருளச் செய்யப்பெறும் என்பதும் அறிய முடிகிறது. மேலும் விழாக்களை அறிவிக்கக் கடிகையர் எனப்பெறும் கலைஞர்கள் திருப்பறையறைவு செய்வர் என்பதும் அறிகிறோம். மூன்றாம் கல்வெட்டு இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நிகழ்ந்த முப்பத்தி நான்கு நாட்களுக்குரிய திருவிழாக்கள் பற்றியும், அவ்விழாக்களுக்குச் செய்ய வேண்டியவை பற்றியும் விரிவாகக் கூறுகின்றது.
— 'இராஜராஜேச்சரம்'
புகழ் நிலைபெற்ற இந்தத் தஞ்சை ராஜராஜீச்சரம் என்னும் பெருங் கோயில் ஆயிரம் ஆண்டுகளாக எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகளைக் கண்டுகொண்டிருக்கும் பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நின்றுகொண்டு இருக்கிறது. இத்திருக்கோயில் இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளைக் காணப்போகிறது. இப்பெருங்கோயிலைச் சமயம் சார்ந்த ஒரு வழிபடுமிடம் என்பதைவிடத் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமையை உலகுக்கு என்றென்றும் எடுத்துக் கூறிக் கொண்டிருக்கவல்ல ஒரு வரலாற்றுப் பெருநூல் என்றும், தென்னகத்தின் கோயிற்கலைக் களஞ்சியம் என்றும் கூறத் தடையேதுமில்லை.
— 'இராஜராஜேச்சரம்'
தஞ்சைப் பெரிய கோயிலில் இருந்த பண்டாரங்களில் நவரத்தினங்களும், பொன்னும், வெள்ளியும், காசும், நெல்லும் பெருமளவில் குவிக்கப் பெற்றிருந்தன. பல செப்புத் திருமேனிகளும், தங்கம், வெள்ளியால் ஆன விக்கிரகங்களும் இருந்தன. இவை அனைத்தும் சோழ மண்டலத்து மக்களின் சொத்து ஆகும் என்ற உணர்வை இராசராசன் தன் கல்வெட்டு மூலமாக (எண் 70) ஏற்படுத்தினான். "கேரளாந்தகன் திருவாயில் மெய்க்காப்பாளர், இராசராசன் திருவாயில் மெய்க்காப்பாளர், அணுக்கன் திருவாயில் மெய்க்காப்பாளர்" என்ற கல்வெட்டு வரிகளால் அனைத்து வாயில்களிலும் காப்பாளர்கள் இருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது. சோழ மண்டலம் முழுவதிலுமிருந்த 118 ஊர்களிலிருந்தும் மெய்க்காவலர்கள் நியமிக்கப் பெற்றனர் என்பதை இக்கல்வெட்டுப் பட்டியலோடு காட்டுகின்றது. ஒரு மெய்க்காவலனுக்கு ஆண்டொன்றுக்கு 100 கலம் நெல் ஊதியமாக அளிக்கப்பெற்றது. இவ்வூதியத்தை அவனை நியமித்த ஊர்ச்சபையே கொடுக்க வேண்டும். அவர்கள் பணிக்குரிய இவ்வூதியம் தவிர அவ்வூரிலிருந்து பணிக்கு வரும்போது உரிய படிச்செலவினையும் அந்தந்த ஊரினரே ஏற்கவேண்டும் என்றும் இம்மாமன்னன் வழிவகுத்தான். தஞ்சைப் பெருங்கோயிலின் சொத்துக்கள் எவற்றையும் மன்னனது படையினரோ அல்லது அலுவலரோ பாதுகாக்கவில்லை. நூற்றுப் பதினெட்டுக்கும் மேற்பட்ட சோழமண்டலத்து ஊர் மக்களே பாதுகாத்தனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மக்களாட்சி நெறிக்கு இதனினும் சிறந்த சான்றொன்று இருக்கமுடியாது.
— 'இராஜராஜேச்சரம்'
இந்த விநாயகர் கோயிலுக்கு அருகில் திருச்சுற்று மாளிகைப் பத்தியின் தென்மேற்குப் பகுதி முழுவதும் மிக நீண்டதொரு கல்வெட்டு மராட்டியில் காணப்பெறுகின்றது. தஞ்சைப் பெரிய கோயிலிலுள்ள கல்வெட்டுக்களிலேயே மிகப் பெரியது இதுவேயாகும். இது இரண்டாம் சரபோஜி மன்னரால் வெட்டப் பெற்றதாகும். 'போன்சலே வம்ச சரித்திரம்' எனப்பெறும் இக்கல்வெட்டில் மராட்டியர் வம்சாவளி முழுமையாக எழுதப்பெற்றுள்ளது. இது ஒரு தனி நூலாகத் தஞ்சாவூர் சரசுவதி மகால் நூல்நிலையத்தாரால் வெளியிடப்பெற்றுள்ளது. இதில் சரபோஜி மன்னர் காலத்து வரலாறு கூறும் பகுதியில் இவருக்கு உறுதுணையாய்த் திகழ்ந்த ஸ்வார்ஷ் பாதிரியாரின் புகழ் பாடப்பெற்றுள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்த மருது சகோதரர்களைப் பிடிக்கப் பண உதவியும், ஆள் உதவியும் செய்தார் என்பதை இக்கல்வெட்டு, "ஆங்கில அரசாங்கத்திற்கு தெற்கு பிரதேசத்தில் இருந்த மருதை என்னும் பாளையக்காரரை அடக்க வேண்டி இருந்தது. அதற்காக மகாராஜா தம் சைன்யத்திலிருந்து 50 இந்து வீரர்களையும், 20 முகமதிய வீரர்களையும், மேலும் சிலரையும் சிவன்னா என்பவருடன் அனுப்பியதோடு, சைன்யத்தின் செலவுக்காகத் தாமே கையிலிருந்த பணத்தைக் கொடுத்து ரெசிடென்ட் பிளாக்பர்ன் துரையோடு 1801 ஜீன் 7ஆம் தேதி அனுப்பினார்" என்று கூறுகிறது. இந்த 1801ஆம் ஆண்டிலேயே மருது சகோதரர்கள் ஆங்கிலேயரால் பிடிக்கப்பெற்றுத் தூக்கிலிடப்பட்டது நினைவுகூரத்தக்கதாகும். இந்தக் கல்வெட்டில் உள்ள மராட்டியர் சரித்திரம், வரலாற்று அடிப்படையில் எழுதப்பெறவில்லை. தஞ்சை அரண்மனையில் முன்பிருந்த மராட்டியர் வரலாற்று நூல் அமரசிம்மனால் திருவிடைமருதூருக்குக் கொண்டு செல்லப் பெற்றுவிட்டது. அதனால் சரபோஜி மன்னரின் ஊழியரான பாபுராவ் 1803இல் புதியதாக இதை எழுதினார். சரியான குறிப்புகள் இல்லாததால்தான் இப்புதிய வரலாற்றில் மராட்டிய மன்னர்களின் பழைய வரலாறு பிழைபட அமைந்துள்ளது. இராசராசனின் கல்வெட்டுக்களில் காணும் மெய்க்கீர்த்தி, கோயில் மதிக்கப்பெற்ற பண்பு, மக்களாட்சித் தத்துவம் போன்ற பல்வேறு கூறுகளை, ஆங்கிலேயர்களின் தயவில் வாழ்ந்த சரபோஜியின் கல்வெட்டுக்களோடு ஒப்பிடும்போது மிகச் சரிந்த ஒரு நிலையைத்தான் காணமுடிகிறது. விநாயகர் கோயிலிலுள்ள வேறு சில மராட்டியக் கல்வெட்டுக்கள் வாயிலாகச் சரபோஜி மன்னர் செய்த திருப்பணிகள், அறக்கொடைகள் பற்றி மேலும் பல செய்திகளை அறியமுடிகிறது.
— 'இராஜராஜேச்சரம்'
விநாயகர் கோயிலின் வடக்கு மேற்குச் சுவர்களில் காணப்பெறும் மராட்டிக் கல்வெட்டுக்கள் சரபோஜி மன்னரின் காலத்தில் நிகழ்ந்த ஒரு விசாரணையையும், அதன் தீர்ப்புப் பற்றியும் கூறுகின்றன. தஞ்சாவூர் வெட்டியான் காணியாட்சி பற்றிய வழக்கில் உண்மையை அறிய, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைப் பிரகதீசுவரசுவாமி சன்னதியில் கொதிக்கும் நெய்யில் கையைவிடச் செய்து, அதை மையமாக வைத்துத் தீர்ப்பு வழங்கியமை குறிக்கப்பெற்றுள்ளது.
— 'இராஜராஜேச்சரம்'
விநாயகர் கோயிலின் வடக்கு மேற்குச் சுவர்களில் காணப்பெறும் மராட்டிக் கல்வெட்டுக்கள் இரண்டாம் சரபோஜி மன்னரின் காலத்தில் நிகழ்ந்த ஒரு விசாரணையையும், அதன் தீர்ப்புப் பற்றியும் கூறுகின்றன. தஞ்சாவூர் வெட்டியான் காணியாட்சி பற்றிய வழக்கில் உண்மையை அறிய, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைப் பிரகதீசுவரசுவாமி சன்னதியில் கொதிக்கும் நெய்யில் கையைவிடச் செய்து, அதை மையமாக வைத்துத் தீர்ப்பு வழங்கியமை குறிக்கப்பெற்றுள்ளது.
— 'இராஜராஜேச்சரம்'
முதலாம் இராசேந்திரனின் பத்தாம் ஆண்டு ஆட்சிக்குப் பிறகு அம் மன்னன் காலத்துச் சாசனங்கள் எதுவும் தஞ்சைப் பெரிய கோயிலில் காணப்பெறவில்லை. கங்கை கொண்ட சோழபுரம் சோழர்களின் தலைநகரமாக உருவானதற்குப் பின்பு தஞ்சை நகரமும், பெருங்கோயிலும் ஏறத்தாழக் கைவிடப்பெற்ற நிலையை எய்தின. காரணம் தஞ்சாவூரின் பெரும்பகுதி மன்னனின் பல்வேறு படையினர் குடியிருப்புகளாலும், வேளங்களாலும் (தனிக்குடியிருப்புக்கள்) நிரம்பியிருந்தது. தலைநகரம் மாறியதும் இங்கு வாழ்ந்தவர்களில் பெரும்பகுதியினர் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு இடம்பெயர்ந்தனர். இதனால் தஞ்சாவூர் சோபை இழந்தது. அதனால்தான் பின் வந்த சோழ மன்னர்களின் கல்வெட்டுக்கள் இங்கு மிகுதியாக இடம்பெறாமல் போயின. முதலாம் குலோத்துங்கனின் ஒரே ஒரு கல்வெட்டு வெளிப்புற மதிளின் வடபுறம் உள்ளது (எண் 58). இம்மன்னனது மெய்க்கீர்த்தியுடன் பதினைந்தாவது ஆட்சியாண்டு எனக் குறிப்பிட்டு வீரராசேந்திர சோழரின் தேவியரான அருமொழி நங்கையார் எனும் சிம்மஹன்மாதேவியார் பெயரினை குறிப்பிடும் இந்தக் கல்வெட்டு முற்றுப் பெறாமல் உள்ளது. இங்கு குறிப்பிடப்பெறும் வீரராசேந்திர தேவர் கி.பி. 1063 - 1070 வரை ஆட்சி புரிந்தவராவார்.
— 'இராஜராஜேச்சரம்'
இராசராசனின் பணிமகன் புரவுவரித் திணைக்களத்து வரிப் பொத்தக நாயகன் காஞ்சன் கொண்டையன் என்பான் வெண்கலத்தால் ஆன தளிகைகளையும் (எண் 88), தஞ்சாவூர்ப் புறம்படி மடிகை வியாபாரி நாராயணன் காமப்பை செட்டி இரத்தின அணிகலன்களையும் (எண் 89), செற்றூர்க் கூற்றத்து மருதத்தூருடையான் மதுராந்தகன் பராந்தகன் நவரத்தினங்கள் பதிக்கப்பெற்ற பொன் அணிகலன்களையும் (எண் 87) அளித்ததை கல்வெட்டுகள் பட்டியல்களோடு காட்டுகின்றன. இவ்வாறு மன்னனும், தேவியரும், உயர் அலுவலர்களும், மக்களும் அளித்தவை அனைத்தும் இன்றைய மதிப்பில் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையனவாகும். விமானத்தின் உச்சியிலுள்ள கலசத்திலிருந்து, சிறிய கரண்டி வரை ஒவ்வொன்றும் முறையாகப் பட்டியலிடப்பட்டு, கணக்கில் கொள்ளப்பெற்று, மக்கள் பார்வைக்குக் காட்டப்பெற்று, அவர்களுக்காகவே பயன்படுத்தப்பெற்றன என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.
— 'இராஜராஜேச்சரம்'
இந்திய அரசு 1954ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக 1000 ரூபாய் நோட்டில் தஞ்சைப் பெரிய கோயிலின் உருவத்தை அச்சிட்டு வெளியிட்டது. அக்கரன்சி நோட்டுக்கள் கொல்கத்தா, தில்லி, மும்பை, கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வெளியிடப் பெற்றன.
— 'இராஜராஜேச்சரம்'