Quotes from இராஜராஜேச்சரம்

கருவறைக்கு மேலாகவுள்ள ஸ்ரீவிமானத்தைக் கோபுரம் எனக் குறிப்பிட்டு அதன் நிழல் ஒருபோதும் கீழே சாயாது என்பர். சிலர் மேலேயுள்ள சிகரம், கலசம், இடபம் ஆகியவற்றின் நிழல் மட்டும் தரையில் விழாது என்றும் அவை கோபுரத்தின் மேலேயே விழும் என்றும் கூறுவர். இத்தகைய கூற்றுக்கள் அனைத்தும் தவறானவையாகும். இக்கோயில் ஸ்ரீவிமானத்தின் கலசம், சிகரம், கீர்த்தி முகம், இடபங்கள், நெடிதுயர்ந்த கட்டுமானம் ஆகிய அனைத்தின் நிழலும் எல்லாக் காலங்களிலும் தெளிவாகத் தரையில் விழும் என்பதுதான் உண்மை.
'இராஜராஜேச்சரம்'
பன்னிரு திருமுறைகள் வரிசையில் ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திருவிசைப்பா அருளிய ஆசிரியர்கள் ஒன்பதின்மரில் மூன்றாமவராகத் திகழ்பவர் கருவூர்த்தேவராவார். இவர் தஞ்சை இராசராசேச்சரத்து இறைவனைப் போற்றிப் பதினொரு பாடல்கள் பாடியுள்ளார். எல்லாப் பாடல்களிலும் இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத்து இறைவனின் புகழ் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. கருவூராரின் திருவிசைப்பா காரணமாக தஞ்சைப் பெருங்கோயில் திருமுறைத் தலங்கள் வரிசையில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
'இராஜராஜேச்சரம்'
தற்போது தெற்குப் பிராகாரத்தில் வராகி அம்மனுக்கென ஒரு சிற்றாலயம் உள்ளது. 20ஆம் நூற்றாண்டில் தெற்குப் பிரகாரத்தில் புதையுண்ட நிலையில் இடுப்பளவே உள்ள வராகியின் திருவுருவம் இருந்ததைக் கண்டு அங்கேயே அவ்வம்மனுக்கு சிற்றாலயம் அமைத்துள்ளனர். இவ்வாலயத்தின் திருச்சுற்று மாளிகையின் தென்பகுதியில் ஒரு நீண்ட பரிவாராலயம் திருமேனிகள் ஏதுமின்றி பூட்டப்பெற்ற நிலையில் உள்ளது. அது எழுவர் தாயர் என்னும் சப்தமாதர்களுக்கென பண்டு எடுக்கப்பெற்றதாகும். பிற்காலத் தாக்குதல்கள் மற்றும் கொள்ளை நிகழ்வுகள் நிகழ்ந்தக்கால் அவ்வாலயத்திலிருந்த கணபதி, யோகேஸ்வரர், பிராமி, வைஷ்ணவி, மாகேஸ்வரி, வாராகி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களைச் சிதைத்து அழித்துள்ளனர். இடுப்பளவே இருந்து மீண்டும் கிடைத்த வாராகியின் திருவுருவம்தான் தற்போது புதிய சிற்றாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
'இராஜராஜேச்சரம்'
1814ஆம் ஆண்டு குறிக்கப்பெற்ற மோடி ஆவணமொன்று (மூட்டை 72-21/6) தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு துவஜஸ்தம்பம் செய்வதற்கு இரண்டு புன்னை மரங்களும், ஒரு மணங்கு நல்லெண்ணையும், ½ மணங்கு குங்கிலியமும், 3 துண்டு வெள்ளைக் காடாத் துணியும், கால் மணங்கு தேங்காய் நாரும் தஞ்சை அரண்மனையிலிருந்து வழங்கப்பெற்றதாகக் குறிப்பிடுகின்றது.
'இராஜராஜேச்சரம்'
1813ஆம் ஆண்டு குறிக்கப்பெற்ற மோடி ஆவணமொன்று (116C) பிரகதீஸ்வர சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்ய 15 கலம் சம்பா அரிசி வழங்கப் பெற்றதாகக் கூறுகின்றது. தற்போதும் ஆண்டுதோறும் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். அன்னாபிஷேகம் செய்து, காய்கறியால் சுவாமியை அலங்காரம் செய்வர்.
'இராஜராஜேச்சரம்'
தஞ்சை பிரகதீசுவர சுவாமிக்கும் பஞ்சமூர்த்திகளில் மற்ற தெய்வங்களுக்கும் என ஐந்து தேர்கள் தஞ்சை நகரின் நான்கு இராஜவீதிகளிலும் தேர்த் திருவிழாக்களின் போது பவனி வந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நிகழ்ந்த தேர்விழாக்கள் பின் நிகழவில்லை. தஞ்சை நகரின் தெற்கு இராஜவீதியும் மேலராஜவீதியும் இணையும் இடத்தில் சுவாமி அம்பாள் தேர்கள் நின்ற தேர்ஏற்றுக் கூடங்கள் (தேர்முட்டி) தற்போது இடிபாடுகளுடன் காணப்பெறுகின்றன. மிகப்பெரிய தேர்முட்டியைப் பார்க்கும்போது தேரின் உயரத்தை நாம் ஊகம் செய்துகொள்ளலாம். தற்போது அத்தேர்ஏற்றுக் கூடங்கள் தனியார் சிலரின் மாட்டுத் தொழுவங்களாக மாற்றப்பட்டுள்ளமை வருந்துதற்குரியதாகும்.
'இராஜராஜேச்சரம்'
அரச குடும்பத்து மகளிர் தங்கள் கணவன்மார் நினைவாக இலட்ச தீபங்கள் ஏற்றும் வழக்கம் மராட்டியர் ஆட்சிகாலத்தில் இருந்தது. அரண்மனை நூலகத்திலுள்ள "லட்ச தீப உத்யா பணம்" என்னும் சுவடி நூல் இதுபற்றி விவரிக்கின்றது. தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் மராட்டிய அரச குல மகளிர் இவ்வாறு இலட்ச தீபங்கள் ஏற்றியமை பற்றிய குறிப்புகள் பல மோடி ஆவணங்களில் உள்ளன. 1801ஆம் ஆண்டு முக்தாபாய் என்பவர் ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றியமை பற்றி ஓர் ஆவணம் விவரிக்கின்றது. அகல்யா பாய் சாப் என்னும் சரபோஜியின் மனைவி ஓர் லட்சம் விளக்குகளை ஏற்றியதோடு பிரகதீசுவர சுவாமியை ஒரு லட்சம் தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்தமையை அதே ஆவணம் குறிப்பிடுகின்றது. 1797இல் ஒரு லட்சம் வில்வ இலைகொண்டு அர்சித்ததை ஒரு ஆவணமும், 1801இல் ஒரு லட்சம் எருக்குகளால் அர்ச்சித்ததை மற்றொரு ஆவணமும் குறிப்பிடுகின்றன.
'இராஜராஜேச்சரம்'
பெரும்பான்மையான கல்வெட்டுக்கள் இராசராசனை அரு மொழி என்றே குறிப்பிட்டாலும், தஞ்சைப் பெரிய கோயிலில் இரண்டாம் கோபுர வாயிலில் உள்ள கல்வெட்டுப் பாடல் ஒன்று அருண்மொழி என்று குறிப்பிடுகின்றது.
'இராஜராஜேச்சரம்'
இரண்டாம் நத்திவர்ம பல்லவன் ஏறத்தாழ கி.பி. 750இல் சோழநாட்டில் நத்திபுரத்து ஆயிரத்தளி என்னும் ஊரில் ஆயிரம் லிங்கங்களைப் பிரதிட்டை செய்து ஓர் ஆலயம் எடுப்பித்தான். பின்பு அவ்வாலயம் 14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாலிக்காபூரின் படைஎடுப்பின்போது அழிக்கப்பெற்றது. அழிவுபெற்ற அவ்வாலயம் இருந்த பண்டைய நந்திபுரம் (ஆயிரத்தளி) என்னும் பேரூர் தற்போது தஞ்சைக்கண்மையில் உள்ள வீரசங்கம்பேட்டை, செங்கமேடு, இரட்டைக்கோயில், ஆவிக்கரை என்னும் சிற்றூர்களாக மாறின. இரண்டாம் சரபோஜி மன்னர் வீரசிங்கப் பேட்டையிலிருந்து புதையுண்டிருந்த 108 சிவிலிங்கங்களை எடுத்துவந்து 1801ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் நாளில் தஞ்சைக் கோயிலின் திருச்சுற்று மாளிகையில் பிரதிட்டை செய்தார் என்பதை சரசுவதி மகால் நூலகத்திலுள்ள மோடி ஆவணமொன்று (சரசுவதி மகால் மோடி ஆவண மொழிபெயர்ப்பு வால்யும் 1 எண்.14-7) எடுத்துரைக்கின்றது. சரபோஜி மன்னர் இந்த 108 லிங்கங்களின் பூஜைகளுக்கென ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தினர். அதற்காக சென்னையில் இருந்த மிஸ்டர் ஹாரிங்டன் என்பவரிடமிருந்து 5000 புலி வராகன்களை 1802ஆம் ஆண்டு மே 29ஆம் நாளில் கடனாகப்பெற்று கோட்டை தேவஸ்தானத்தின் உபலவானி பண்டாரத்தின் முதலீடு செய்தார். அந்தப் பணத்திற்கு ஆண்டொன்றுக்கு 10% வட்டித்தொகை கிடைத்தது. அவ்வாறு கிடைத்த வட்டியிலிருந்து மாதந்தோறும் 50 ரூபாய்களை இந்த 108 லிங்க பூஜைகளுக்காக அளிக்கப்பெற்றது என்பதை மற்றொரு மோடி ஆவணம் கூறுகிறது (வால்யும் 2-12, 17-41). சரபோஜி மன்னர் வீரசிங்கம் பேட்டையிலிருந்து கொணர்ந்த 108 லிங்கங்களும் தற்போது திருச்சுற்று மாளிகையின் மேலைத்திருப்பதியில் பரிவாராலயத்து கணபதியார் கோயிலுக்கு அருகே காணப்பெறுகின்றன.
'இராஜராஜேச்சரம்'
இந்திய அரசு 1954ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக 1000 ரூபாய் நோட்டில் தஞ்சைப் பெரிய கோயிலின் உருவத்தை அச்சிட்டு வெளியிட்டது. அக்கரன்சி நோட்டுக்கள் கொல்கத்தா, தில்லி, மும்பை, கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வெளியிடப் பெற்றன.
'இராஜராஜேச்சரம்'