Quotes from இராஜராஜேச்சரம்

திருமதிலின் வடபுறம் 'திருமருவிய செங்கோல்' என்ற மெய்க்கீர்த்தியோடு காணப்பெறும் இரண்டாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்றுள்ளது. இக்கோயிலில் வைகாசி மாதம் நிகழும் பெரிய திருவிழாவின் போது 'ராஜராஜேஸ்வர நாடகம்' ஆடத் திருவாலந் திருமுதுகுன்றனான விஜயராஜேந்திர ஆச்சாரியனுக்கும் அவன் வம்சத்தார்க்கும் காணியாக ஆண்டொன்றுக்கு 120 கலம் நெல் இக்கோயில் பண்டாரத்திலிருந்து பெற ஆணையிட்டதை இக்கல்வெட்டு விவரிக்கின்றது (எண் 68). இந்தக் கூத்தன் சாந்திக் கூத்து என்னும் மரபைச் சார்ந்தவன். இவனுக்குச் சோழப் பேரரசன் விஜயராஜேந்திர ஆசார்யன் என்ற சிறப்புப் பெயரை அளித்திருந்தான்.
'இராஜராஜேச்சரம்'
பெரிய கோயில் திருச்சுற்று மாளிகையின் 36 பரிவார ஆலயங்களில் ஒன்று உமாபரமேஸ்வரியாருக்காக எடுக்கப்பெற்றதாகும். சோழர் கோயிற் கலைமரபில் பரிவார ஆலயங்களில் ஒன்றாகத் திருக்காமக் கோட்டம் என்னும் அம்மன் ஆலயத்தை எடுக்கும் மரபு இந்த ஆலயத்திலிருந்துதான் தொடங்கிற்று. பிற்காலப் பாண்டியர்காலப் பெரியநாயகி அம்மன் ஆலயமான இன்றுள்ள கோயிலுக்கு நேர் பின்புறம் வடபுறச் திருச்சுற்று மாளிகைப் பத்தியில் உள்ளதே பரிவார ஆலயத்து உமாபரமேஸ்வரி ஆலயமாகும். இதனை அவ்வாலயத்திலேயே திகழும் இரண்டு கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. இதுவரை பதிப்பிக்கப் பெறாத இக்கல்வெட்டுக்கள் இரண்டும் கோயிற்கலை மரபை அறியத் துணை செய்வதால் ஆய்வுலகில் சிறப்பிடம் வகிக்கத்தக்கன. இக்கோயில் கல்வெட்டுக்களை வெட்டுவித்த அலுவலர் அருமொழி தேவவளநாட்டு வண்டாழைவேளூர் கூற்றத்து சாத்தன்குடி வெள்ளாளன் இரவிபாலூருடையார் என்பதையும் இச்சாசனம் மூலம் அறிய முடிகிறது.
'இராஜராஜேச்சரம்'
இங்குள்ள கல்வெட்டொன்று இராசராசனின் சமய ஆசிரியர் ஈசான சிவபண்டிதர் என்று கூறுகின்றது (எண் 90). இவர் லகுளீச பாசுபத நெறியைச் சேர்ந்தவர். தஞ்சைப் பெரிய கோயிலின் தலைமைச் சிவாசாரியாராகப் பூஜை செய்தவர் பவனபிடாரன் என்பவராவார்.
'இராஜராஜேச்சரம்'
குந்தவையாரை இப் பெருமன்னன் 'அக்கன்' என்றும் 'வல்லவரையர் வந்தியத்தேவர் தேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார்' என்றுமே தன் கல்வெட்டுக்களில் குறிப்பிடுகிறான்.
'இராஜராஜேச்சரம்'
இராஜராஜன் திருவாயிலில் உள்ள ஒரு சிதைந்த கல்வெட்டுச் சாசனத்தின் ஓரிரு வரிகளே தெளிவாகக் காணப்பெறுகின்றன. "ராஜீஸ்வரமுடையார் ஸ்ரீ விமாநம் பொன் மேய்வித்தான் .... ராஜராஜ...."ன்ற இவ்வரிகளால் இராஜராஜேச்சரத்து விமானம் முழுவதும் பொற்றகடுகளால் போர்த்தப்பெற்று பொற்கோயிலாகவே இக்கோயில் விளங்கியது என்பதறியலாம்.
'இராஜராஜேச்சரம்'
வாழைப்பழத்தைப் போலவே ஏலஅரிசி, செண்பக மொட்டு, இலாமிச்சம், பருப்பு, மிளகு, சீரகம், சர்க்கரை, நெய், புளி, தயிர், கொள்ளு, உப்பு, வாழைஇலை, வெற்றிலை, பாக்கு, சிதாரி, கர்ப்பூரம், விறகு, பழைய அரிசி ஆகிய பொருள்களின் விலைகளும், ஆடு, பசு, எருமை ஆகிய கால்நடைகளின் விலைகளும் ஒருவாறு வரையறுக்கப்பெற்றிருந்தன என்பதனைத் தஞ்சைப் பெரியகோயிற் கல்வெட்டுகளின் வழி அறிகிறோம். ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கிகளில் போட்டு அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு வருடத்திற்கு ஒருநாள் கோயில்களில் உரிய வழிபாடுகளைச் செய்யும் இன்றைய முறையை அன்றே இராசராசன் கைக்கொண்டிருந்தான் என்பதும், இந்தத் தொகையால் பயன்பெற்றவர்கள் பொது மக்களே என்பதும், அக்காலத்தில் விலைவாசி ஏற்ற இறக்கம் அதிகமாக இல்லாமல் விலைகள் பெரும்பாலும் நிலையாக இருந்தன என்பதும் என்பதும் இக்கல்வெட்டுகளால் நாம் அறியும் பொருளாதாரச் செய்திகள் ஆகும்.
'இராஜராஜேச்சரம்'
மேலைத் திருச்சுற்றில் உள்ள கணபதி ஆலயவாசலின் இருபுறமும் உள்ள ஒரு சாசனம் (எண் 37) இராசராசன் விநாயகருக்கு நாள்தோறும் வாழைப்பழம் நிவேதனம் செய்ய அறக்கொடை வழங்கிய செய்தியைத் தெரிவிக்கிறது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது தினந்தோறும் 150 வாழைக்கனி படைக்க மாமன்னன் 360 காசுகளை முதலாகக் கோயில் பண்டாரத்தில் வைத்தான் என்று மட்டுமே புலப்படும். இதனை ஆழ்ந்து சிந்தித்தால் ஒரு பெரிய பொருளாதாரத் தத்துவமே இதனுள் அடங்கியிருக்கக் காணலாம். ஒரு நாள் அமுதுபடிக்கு 150 பழங்கள் தேவை என்றால் ஒரு வருடத்திற்கு (360 நாள்) 54000 பழங்கள் தேவைப்படுகின்றன. அன்றைய வாழைப்பழ விலை ஒரு காசுக்கு 1200 என்பதாகும். இவ்விலையில் ஒரு வருடத்திற்கு வேண்டிய தொகை 45 காசுகள் ஆகும். இத்தொகையை ஆண்டு வட்டியாகப் பெறும் மூலதனம் 360 காசுகள் என்பதிலிருந்து வட்டி விகிதம் 12 ½ என எளிதில் கணக்கிட்டுக் கொள்ளலாம். இந்த மூலதனத்தைத் தான் வணிகர்களுக்குக் கடனாக வழங்கும்படி ஏற்பாடு செய்திருந்தான். கோயில் பண்டாரத்தார் தஞ்சை வணிகர்களுக்கு இம் மூலத்தனத்திலிருந்து 12½℅ வட்டிக்குக் கடன் வழங்கினர். அவ் வணிகர்கள் தாம் செலுத்த வேண்டிய வட்டியை நாள்தோறும் அதன் மதிப்பிற்குச் சமமான வாழைப் பழங்களாக அளித்தனர். 60 காசுகள் கடனாகப் பெற்றால் ஆண்டு வட்டி 7½ காசு அல்லது 9000 பழங்கள் ஆகிறது. இதனை நாளுக்கு 25 பழமாகக் கொடுக்கவேண்டும். இவ்வாறே 120 காசுகளுக்கு 50 பழம் தினசரி வட்டியாகும். தஞ்சாவூர்ப் புறம்பாடி நித்தவிநோதப் பெருந்தெரு வணிகர்களுக்கும், திரிபுவன மாதேவிப் பேரங்காடி வணிகர்களும் தனித்தனியே 60 காசுகளும், மும்முடிச்சோழப் பெருந்தெரு வணிகர்களும், வீரசிகாமணிப் பெருந்தெரு வணிகர்களும் தனித்தனியே 120 காசுகளையும் இந்த ஏற்பாட்டின்படிக் கோயிலிலிருந்து கடனாகப் பெற்றனர். இதற்கு வட்டியாக விநாயகரின் அமுதுபடிக்கு நாள்தோறும் இவர்களால் முறையே 25+25+50+50 என மொத்தம் 150 வாழைப்பழங்கள் கொடுக்கப்பெற்றன. மூலதனம் கரையாமல் நாள் வழிபாடு தொடர்ந்து நடைபெற இது ஏற்ற முறையாக அமைந்தது. இதுமட்டுமல்லாமல் இங்கு மற்றொன்றையும் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். மன்னனால் ஒரு தொகை கோயில் பண்டாரத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. அதனை வட்டிக்கு விட்டு ஒழுங்காகக் கணக்கை பராமித்து வருவது கோயில் நிர்வாகிகளின் பணியாகிறது. கடனைப் பெற்றுத் தம் வாணிகத்துறையில் தாம் பயனடைவதோடு வட்டி என்ற பெயரில் நாள்தோறும் விநாயகர் கோயில் வழிபாட்டிற்கு வணிகர்கள் வழிசெய்கிறார்கள். இவ்வாறு அரசு, கோயில் நிர்வாகம், பொதுமக்கள் (வணிகர்கள்) என்ற முத்தரப்பினரும் இணைந்து செயல்படும் நிலை உண்டாகிறது. இது ஒருவகையான கூட்டுறவு அமைப்புதானே! மற்றொன்று, இந்த வட்டிவிகிதம், வாழைப் பழவிலை ஆகிய இரண்டும் முத்தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஏனைய பொதுமக்கள் அனைவரும் அறியும்படிக் கல்வெட்டாகக் காட்டிசிப்படுத்தப்படுகிறது. இதனால் ஒரு காசுக்கு ஆண்டொன்றிற்கான வட்டி அரைக்கால் காசு என்பது (12½℅) அனைவருக்கும் சந்தேகத்திற்கிடமில்லாமல் அறியும்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறே வாழைப் பழத்தின் விலையும் காசுக்கு 1200 என உறுதி செய்யப்படுகிறது. இதனால் கடனுக்குரிய வட்டி விகிதமும் வாழைப்பழத்தின் விலையும் அரசாங்கத்தால் மறைமுகமாகக் கட்டுப்பாடு செய்யப்பட்டு விடுகின்றன.
'இராஜராஜேச்சரம்'
இப் பெருமன்னன் ராஜராஜீச்சரத்தில் திருவிளக்கு எரிப்பதற்காகப் பல ஆயிரக்கணக்கான ஆடு, பசு, எருமைகளைத் தந்திருந்தான். ஒரு விளக்குக்கு நாள்தோறும் ஓர் உழக்கு நெய் அளிக்கவேண்டும். இதற்காக காசாகவோ நிலமாகவோ வைக்காமல், சமுதாயத்திற்குப் பயன்படும் கால்நடைச் செல்வங்களையே முதலாக வைத்தான். இதுபற்றி நான்குக் கல்வெட்டுக்கள் (எண்கள் 63, 64, 94, 95) விரிவாக எடுத்துரைக்கின்றன. இராசராசனோடு அவனது மனைவியரும், உயர்நிலை அலுவலர்களும் அரண்மனைப் பணிப்பெண்களும், மற்றவர்களும் கால்நடைச் செல்வங்களை வழங்கயுள்ளனர். ஆடு, பசு, எருமை ஆகியவற்றின் மதிப்பு அந்நாளில் எவ்வளவு என்பதும் இக்கல்வெட்டுக்களால் அறிய முடிகிறது. காசு ஒன்றுக்கு 2 ஆடும், காசு இரண்டுக்கு 1 பசுவும், காசு மூன்றுக்கு ஒரு எருமையும் விற்கப்பெற்றதை அறிகிறோம். பல இடங்களில் வாழ்ந்த இடையர்களும் இந்தக் கால்நடைகளைப் பெற்றுக்கொண்டு நாள்தோறும் ஓர் உழக்கு நெய் அளக்க ஒப்பந்தம் செய்திருந்தனர். ஒருவன் 96 ஆடுகளையோ, 48 பசுக்களையோ அல்லது 16 எருமைகளையோ பெற்றுக்கொண்டால் அவற்றை அவன் நன்றாகப் பராமரித்து அதிலிருந்து வரும் பயன் முழுவதையும் அடைய முடியும். கோயிலுக்கு அவன் தரவேண்டியது நாள்தோறும் ஓர் உழக்கு நெய் மட்டும்தான். ஆனால் கால்நடைகளை தான் பெற்ற எண்ணிக்கையிலேயே சந்திர சூரியர் உள்ளனவும் அவனும் அவன் வம்சத்தாரும் நன்கு பராமரிக்க வேண்டும். இதனால் கோயிலில் ஒரு விளக்கு எரியும் போது அதன் பின்புலத்தில் சோழநாட்டில் ஒரு கால்நடைப்பண்ணை தொடர்ந்து மக்களுக்குப் பலன் அளித்தது என்பதை அறியலாம். இவ்வாறாக 4000க்கும் மேற்பட்ட ஆடுகளும், 4000க்கும் மேற்பட்ட பசுக்களும், நூற்றுக்கு மேலான எருமைகளும் அளிக்கப்பெற்றதைக் காணமுடிகிறது. இக்கொடையை இராசராசனோடு இணைந்து அளித்த தேவியர் பெயர்களும், உயர்நிலை அலுவலர்கள் இருபத்து எழுவர் பெயர்களும், படையினர் பலர் பெயர்களும் இக்கல்வெட்டால் அறியமுடிகிறது. தஞ்சை நகரத்தின் உள்ளாலை எனப்பட்ட அகநகர், புறம்படி என வழங்கிய புறநகர், அங்கிருந்த தெருக்கள், பெருந்தெருக்கள், பேரங்காடிகள், அங்காடிகள், வேளங்கள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக அறியமுடிகிறது. இவ்வாறே கால்நடைச் செல்வங்களைப் பெற்ற இடையர்களின் ஊர், பெயர், உறவினர் பற்றியும் அறியமுடிகிறது.
'இராஜராஜேச்சரம்'
இக்கோயில் ஊழியத்திற்காகப் பரிசாரகர், பண்டாரி, கணக்கர் போன்றவர்களை நியமித்ததை மற்றொரு கல்வெட்டு (எண் 69) கூறுகின்றது. இக்கல்வெட்டு, 4 பாண்டாரிகளும், 170 மாணிகளும், 6 கணக்கர்களும், 12 கீழ்க்கணக்கர்களும் பணியிலமர்த்தப்பட்டதாகக் கூறுகின்றது. இவர்களுள் சிலர் நிலையான பணி புரிபவர்கள் ஆவர். மற்றையோருக்குப் பல்வேறு ஊர்களிலிருக்கும் இவர்கள் கோயில் நிர்வாகத்தில் பங்கேற்க வாய்ப்பளிக்கும் வகையில் சுழற்சிப் பணி முறையில் இப்பணிகள் அமைந்தன. கோயில் பண்டாரம், கருவறைப் பணி, கணக்குப் பணி ஆகியவற்றில் ஈடுபடுவோர் கோயிலுக்குரிய பெரும் சொத்துக்களை நிர்வகிப்பவர் என்பதால் அவர்களுக்குச் சொந்த நிலம், பொருள், உறவினர் இருக்க வேண்டும் என்பது இராசராசன் வகுத்த விதியாகும். கருவூலத்தில் பொன், நவமணிகள், நெல் போன்ற விலைமதிப்புள்ள பொருள்கள் இருந்ததாலும், அவை கோயிலுக்கும் மக்களுக்கும் உரிய பொதுச் சொத்து என்பதாலும், அதனைக் கையாள்வோர் தூயவர்களாக இருக்க வேண்டும் என்னும் கொள்கையின் அடிப்படையில் அந்தப் பணிக்குரியவர்களை நியமிக்கும் உரிமை ஊர்ச்சபையோரிடம் வழங்கப்பட்டிருந்தது. எடுத்துக்காட்டாக, 'க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுக் குடவாயில் சபையோர் இடக்கடவ மாணி ஒருவன்' என்று இராசராசன் ஆணையிட்டால் அச்சபையோர் தங்கள் ஊரிலிருந்து நேர்மையும் தகுதியும் படைத்த ஒருவனைத் தான் நியமிக்க முடியும். அவனால் தவறு நேருமாயின் அப்பொறுப்பு குடவாயில் சபையோருடையதாக ஆகிவிடும். மேலும் அவனால் கோயில் சொத்துக்களுக்கு ஏதாவது ஊறு நேருமாயின் அதனை ஈடுகட்ட அவன் பொருளும் நிலமும் உடையவனாகவும், நல்ல உறவினர்களை உடையவனாகவும் இருப்பானாகின் எவ்வகையிலாவது இழப்பை ஈடுசெய்து விடலாம். மேலும் மாணிகளுக்குரிய ஊதியத்தை ஸ்ரீ ராஜராஜேஸ்வரமுடையார் உள்ளூர்ப் பண்டாரத்திலிருந்து பெறவும், பண்டாரிகளும் கரணத்தார்களும் நாட்டுப் பண்டாரத்தே பெறவும், இராசராசன் ஆணையிட்டுள்ளான். உள்ளூர் பண்டாரம் என்பது கோயிலிலேயே கோயிற் பணியாளர்களால் நிருவகிக்கப்பெறுவதாகும். நாட்டுப் பண்டாரம் என்பது அரண்மனை நிர்வாகத்தில் உயர் அலுவலர்களால் இயக்கப்படுவதாகும். பண்டாரத்தை நிர்வகிக்கும் பண்டாரிகளும், கணக்கர்களும் கோயில் பண்டாரத்தில் முறைகேடுகள் செய்ய வழியில்லாமலிருக்கவே இத்தகைய வழியை இராசராசன் வகுத்திருந்தான். பாண்டி, தொண்டை நாடுகள் உள்ளிட்ட சோழ மண்டலத்தின் மக்களுக்கு, ஊர்ச்சபைகள் மூலமாக தஞ்சைக் கோயில் பணியாளர்களை நியமிக்கும் உரிமையும், இதன் சொத்துக்களைப் பாதுகாப்பதில் பொறுப்பும், உரிய பங்கேற்பும் இருந்தன என்பதை இக்கல்வெட்டு தெளிவாகக் காட்டுகின்றது.
'இராஜராஜேச்சரம்'
இந்திய அரசு 1954ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக 1000 ரூபாய் நோட்டில் தஞ்சைப் பெரிய கோயிலின் உருவத்தை அச்சிட்டு வெளியிட்டது. அக்கரன்சி நோட்டுக்கள் கொல்கத்தா, தில்லி, மும்பை, கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வெளியிடப் பெற்றன.
'இராஜராஜேச்சரம்'