Quotes from இராஜராஜேச்சரம்

கி.பி. ஆயிரமாவது ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் விளங்கிய கோபுரங்களிலேயே மிகப்பெரிய கோபுரமாகத் திகழ்ந்தது தஞ்சைப் பெருங்கோயில் கிழக்குக் கோபுரமான கேரளாந்தகன் திருவாயிலே ஆகும். பின்னாளில் ஏழுநிலை, ஒன்பது நிலை, பதினொரு நிலை, பதின்மூன்று நிலைக் கோபுரங்கள் எடுக்கப்படுவதற்கு அடிப்படையாய் விளங்கியது இக்கோபுரமேயாகும்.
'இராஜராஜேச்சரம்'
தற்போது காணப்பெறும் பெரிய இடபமும், இடப மண்டமும் தஞ்சையை ஆட்சி செய்த நாயக்க மன்னன் அச்சுதப்பன் காலத்தியப் படைப்புகளாகும். இவை போன்றே அம்மன் திருக்கோயில் பாண்டிய மன்னன் ஒருவனாலும், கந்தக்கோட்டம், மல்லப்ப நாயக்கர் மண்டபம், மூர்த்தி அம்மன் மண்டபம் ஆகியவை செவ்வப்ப நாயக்கர் காலத்திலும், கணபதி ஆலயம் மராட்டியர் காலத்திலும் கட்டப்பெற்றவையாகும். காஞ்சி கயிலாசநாதர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவன வீரேச்சரம் ஆகிய திருக்கோயில்களின் பத அமைப்பு, கோயில் கட்டுமானம் ஆகியவற்றைத் தஞ்சைப் பெரிய கோயிலோடு ஒப்பிட்டு நோக்கும்போது இக்கோயிலுக்குரிய இடப மண்டபம், பலிபீடம் ஆகியவை பண்டு அக்கோயில் எடுக்கப்பெற்ற காலத்தில் இராஜராஜன் திருவாயிலுக்கும், கேரளாந்தகன் திருவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் இருந்திருத்தல் வேண்டும் என உறுதியாகக் கொள்ளமுடிகிறது. முன்பு இவ்விடத்தில் இடம்பெற்றிருந்த இராஜராஜேச்சரத்துச் சோழர்கால நந்தி தற்போது தென்புறத் திருச்சுற்று மாளிகையில் இடம்பெற்றுத் திகழ்கின்றது. இவற்றைத் தொகுத்து நோக்கும்போது இராஜராஜேச்சரத்தின் முதற் பிராகாரத்தில் சண்டீசர் ஆலயம் தவிர வேறு எந்த ஒரு கட்டுமானமும் இல்லாமல் இருந்தது என்பது உறுதியாகின்றது.
'இராஜராஜேச்சரம்'
திருச்சுற்று மாளிகையின் புறச்சுவரான திருமதிலில் தென்கிழக்கு மூலையில் திகழும் அக்நிதேவர் ஆலயத்தை அடுத்து ஒரு வாயிலும், தென்மேற்கு மூலையில் திகழும் நிருதி ஆலயத்திற்கு அருகாக ஒரு வாயிலும் உள்ளன. மேற்குப் புற மதிலில் மிகச்சரியான மையத்தில் வருணதேவர் ஆலயத்தை ஒட்டி ஒரு வாயிலும், வடபுற மதிலில் வாயுதேவர் ஆலயத்திற்குக் கிழக்காக அணுக்கன் திருவாயில் எனும் வாயிலும் உள்ளன.
'இராஜராஜேச்சரம்'
இவ்வாயில் வழியே உள்ளே சென்றால் இராஜராஜன் திருவாயிலுடனும், திருச்சுற்று மாளிகையுடன் இணைந்த திருமதிலோடு கூடிய இராஜராஜேச்சரம் என்னும் பெருந்திருக்கோயில், வடமேற்கில் சிவகங்கை குளம், இவைகளுக்கிடையே கோயிலின் வடபாரிசத்தில் ஒரு பரந்தவெளி ஆகியவை உள்ளன. இப்பரந்தவெளி தற்போது சிவகங்கைப் பூங்காவாகத் திகழ்கின்றது. இப்பகுதி சோழர் காலத்தில் 407 நாட்டிய நங்கையர் வசித்த இரு தளிச்சேரிகள் மற்றும் கோயில் சார்ந்த பணியாளர்களின் குடியிருப்புப் பகுதியாக இருந்திருத்தல் வேண்டும். கோயிற் பணியாளர்களைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டுக்கள் எல்லாம் திருக்கோயிலின் வடபுற மதிலின் வெளிப்புறமே காணப்பெறுவதால் இக்கருத்து வலுப்பெறுகின்றது.
'இராஜராஜேச்சரம்'
தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள முருகன் ஆலயமும், இராஜராஜீச்சரத்து மகாமண்டபத்திற்கு முன் உள்ள முகமண்டபமும் நாயக்கர்கால படைப்புகளாகும்... ...முகமண்டபத்துத் தூண்கள் இரண்டில் காணப்பெறும் ஆடற்காட்சிகளும் குறிப்பிடத்தக்கனவாகும். ஒருவன் வளைந்த கொம்பு போன்ற குழலை ஊத, ஒருவன் நின்றவாறு மத்தளம் இசைக்கின்றான். இவர்கள்தம் இசைக்கேற்ப இரு பெண்கள் நடனமாடுகின்றனர். ஒரு பெண் யக்ஷ்கான நடனமும், ஒரு பெண் தலையில் குடமொன்றை வைத்தவாறும் ஆடுகிறாள். இரண்டாம் தூணில் காணப்பெறும் சிற்பக்காட்சியில் ஒருவன் மத்தளத்தை இசைத்தவாறு ஆட, ஒரு பெண் தலையில் குடத்தை வைத்துப் பிடித்துக்கொண்டு மற்றொரு கரத்தை தொங்கவிட்ட நிலையில் ஆடுகின்றாள். இது குடக்கூத்து என்னும் பண்டைய ஆடல் மரபின் ஒருவகையாகும். ஆடலாசிரியனின் இலக்கணம் கூறவிழைந்த இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் பதினொரு வகையான ஆடல்கள் பற்றி கூறியுள்ளார். அதில் கண்ணன் ஆடிய குடக்கூத்து ஒன்றாகும். சிலம்பிற்கு உரைகூறும் அடியார்க்கு நல்லார் விநோத கூத்துக்களில் ஒன்றாக குடக்கூத்தினை குறிப்பிட்டுள்ளார். "வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும்" என்ற சிலம்பின் கடலாடு காதையில் கூறும் கூற்றுக்கு உரையாக "காமன் மகன் அநிருத்தனைத் தன் மகள் உழை காரணமாக வாணன் சிறை வைத்தலின் அவனுடைய சோவென்னும் நகர வீதியிற் சென்று நிலங்கடந்த நீல வண்ணன் குடங் கொண்டாடிய குடக்கூத்தும்; இது பஞ்சலோகங்களாலும் மண்ணாலும் குடங்கொண்டானது" என்றும் குறிப்பிட்டுள்ளார். அக்கூத்தின் ஒரு நிலைதான் இங்கு நாயக்கர்கால நாட்டிய மரபாக இருந்துள்ளது. இக்குடக்கூத்தே பின்னாளில் கரகாட்டம் என்ற பெயரோடு சில மாற்றங்கள் பெற்றுத் திகழலாயிற்று.
'இராஜராஜேச்சரம்'
இவ்வாலயத்து திருமதிலின் வடபுறம் திருமருவிய செங்கோல் என்ற மெய்க்கீர்த்தியோடு காணப்பெறும் இரண்டாம் இராஜேந்திரசோழனின் கல்வெட்டொன்று உள்ளது. இரண்டாம் இராஜேந்திரசோழரின் ஆறாம் ஆட்சியாண்டான கி.பி. 1057இல் தொடங்கி ஆண்டுதோறும் வைகாசிமாதப் பெரிய திருவிழாவின் போது தஞ்சை இராஜராஜேஸ்வரமுடையார் கோயிலில் "இராஜராஜேஸ்வர நாடகம்" என்ற நாடகம் நிகழ்த்துவதற்கு திருவாலன் திருமுது குன்றனான விஜயராஜேந்திர ஆச்சாரியனுக்கு மன்னனே ஆண்டுதோறும் 120 கலம் நெல் வழங்குவதற்கான ஆணையைப் பிறப்பித்தான். அதன்படி அவ்வாச்சார்யனும் அவன் வர்க்கத்தாரும் சந்திரன் சூரியன் உள்ளளவும் அக்காணியைப் பெற்றுக்கொண்டு அந்த நாடகத்தை கோயிலில் நடத்தவேண்டும் என்பதே மன்னனின் கட்டளையாகும். இக்கல்வெட்டுச் சான்றுகொண்டு நோக்கும்போது நாட்டிய நாடகமாக "இராஜராஜேஸ்வர நாடகம்" தொடர்ந்து சோழர் காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதறிய இயலுகிறது.
'இராஜராஜேச்சரம்'
எக்காளம் என்பது நீண்ட குழல் வடிவில் திகழும் வாயால் ஊதி இசைக்கும் கருவியாகும். திருவிழாக்களில் இறைவனின் திருமேனி உலா போகும்போது அதற்கு முன்பாக இசைக்கப்படுவதாகும். இக்கருவியும் ஈசனின் உலாவை மக்களுக்கு அறிவிக்கும் பேரொலி எழுப்பக்கூடியது. சைவ ஆகமங்கள் கோயிலை எடுப்பித்த கர்த்தாவே வாய் கூவி ஈசனின் உலாவை அறிவிப்பதாகக் கருதப்பெறுவதே எக்காளம் திருச்சின்னம் போன்ற கருவிகளின் ஒலி என்று கூறுகின்றன. எனவே மாமன்னன் இராஜராஜன் சேரனையும், பாண்டியனையும் வென்று அவர்தம் பண்டாரங்களிலிருந்து கொணர்ந்த பொன் கொண்டு 13 எக்காளங்களை செய்தளித்தான். அப்பதின்மூன்று எக்காளங்களிலும் சிவபாதசேகரன் என்றும் ஸ்ரீராஜராஜன் என்றும் பெயர் பொறிக்கப் பெற்றிருந்தனவாம். அவற்றை ஊதும்போது அவ்வொலி சிவபாதசேகரன் என்னும் இராஜராஜனின் திருவாய் எழுப்பும் ஒலியாகக் கருதப்பெற்றே இவ்வாறு பெயர் பொறிக்கப்பெற்றிருந்தன. இதனை தஞ்சைக் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகின்றன. இக்கல்வெட்டு வரிகளை ஆழ்ந்து நோக்கும்போது அந்த எக்காளங்கள் கங்கில் எனப்படும் அகன்ற வாய்ப்பகுதி, நீண்ட குழல், அதில் வளையங்களாக மோதிரங்கள் ஆகியவை கொண்ட பொன்னால் செய்யப்பெற்ற ஊதுகருவி என்பது புலப்படுகிறது. அக்கருவிகளின் அகன்ற வாய்ப்பகுதியில் (கங்கிலில்) தான் சிவபாதசேகரன், ராஜராஜன் என்ற பெயர்கள் பொறிக்கப்பெற்றதாகவும் கூறுகின்றது. எனவே எக்காளம் ஊதும் போது அதன் அகன்ற வாய்ப்பகுதி வழியே பேரொலி எழும். அங்கு மன்னவன் பெயர் எழுதப் பெற்றிருப்பதால் அவனே வாய்விலி ஒலி எழுப்புவதாக கருதப்பெற்று ஒலிக்கப்பெற்றனவே இந்த எக்காளங்கள் என்பதும் புலப்படும். இவ்விரு கல்வெட்டுக்கள் வாயிலாக பறையறைவு செய்யும் கடிகையர் 10 பேரும், காளம் ஊத 13 பேரும் பணி செய்தனர் என்பதறிகிறோம். ஐநூற்று முப்பத்தொன்பது நாட்டியம் மற்றும் இசைக்கலைஞர்களோடு திருப்பதிகம் பாடும் பிடாரர்கள் 50 பேரையும், பறையறைவு செய்யும் கடிகையர் 10 பேரையும் காளம் ஊதும் 13 பேரையும் சேர்த்து நோக்கும்போது மாமன்னன் இராஜராஜன் காலத்தில் 612 இசைக்கலைஞர்கள் பணிபுரிந்தனர் என்பதைக் கல்வெட்டுக்கள் செப்புகின்றன. இவர்கள் அனைவரும் ஈசனின் பணியாளர்களாகவே கருதப்பெற்றனர். அதனால்தான் அவர்களுக்குரிய ஊதியத்தினை இராஜராஜீச்சரமுடையார் திருப்பண்டாரத்திலிருந்து பெற்றனர். இக்கோயிலில் பணிபுரிந்த நிருவாகிகள் அரசு அலுவலர்கள் என்பதால் அவர்கள் நாட்டுப் பண்டாரத்திலிருந்து ஊதியம் பெற்றனர். கலைஞர்களின் பணி ஈஸ்வரார்ப்பணம் என்பதால் அவர்கள் எந்தவித அரசு கட்டுப்பாடுகளுக்கும் உட்படாமல் அவர்தம் கலைப்பணியை பூரண சுதந்திரத்துடன் செய்ய இயன்றது.
'இராஜராஜேச்சரம்'
இராஜராஜீச்சரத்தில் நிகழும் திருவிழாக்களை மக்களுக்கு அறிவிப்பதற்காக திருப்பறையறைவு (பறை கொட்டுதல்) செய்தல் ஒரு முக்கிய நிகழ்வாக மாமன்னன் இராஜராஜன் காலத்தில் நிகழ்ந்துள்ளது. கடிகையர் என்ற இசைக் கலைஞர்கள் இப்பணிபுரிந்துள்ளனர். இவ்வாலயத்து இரண்டாம் ராஜகோபுரமான இராஜராஜன் திருவாயிலில் உள்ள கல்வெட்டுச் சாசனத்தில் இதனை பற்றி குறிப்பிடப் பெற்றுள்ளது. ராஜேந்திர சிங்க வளநாட்டு மண்ணி நாட்டு நாட்டார் மங்கலம் என்னும் ஊரினனாகிய ராஜகேசரி கோதண்டராமன் என்னும் ஜயங்கொண்ட சோழ கடிகைமாராயன் என்பான் இராஜராஜச்சரம் என்னும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் நிகழும் பெரிய திருவிழாவின் கொடியேற்று நாளன்றும், ஆடவல்ல பெருமான் எழுந்தருளும் மூன்று நாட்கள் இவை என்று அறிவிக்கும் நாளன்றும் என இருநாட்களுக்கு திருப்பறை எனும் தோற்கருவியைக் கொட்டி விழா நிகழ்வை அறிவிப்பதற்காக, அக்கருவியை இசைக்கும் நாளொன்றுக்கு ஐவர் என, பத்துப் பேருக்கு தலா அரை காசு என ஐந்து காசுகள் சந்திரன் சூரியன் உள்ளளவும் ஆண்டுதோறும் செலவிட முதலீடாக நாற்பது காசினை முதலீடாக வைத்தான். காசு ஒன்றுக்கு ஆண்டொன்றுக்கு அரைக்கால் காசு என்ற வட்டி விகிதத்தில் ஐந்து காசுகளை ஆண்டுதோறும் அளிப்பதாக ஒப்புக்கொண்டு அந்த நாற்பது காசுகளை ராஜேந்திர சிங்க வளநாட்டு தனியூர் வீரநாராயண சதுர்வேதி மங்கலத்துச் சபையோர் கடனாகப் பெற்றுச் சென்றனர். இக்கல்வெட்டில் நிவந்தமாக 40 காசுகளை முதலீடு செய்த கோதண்டராமன் என்பான் இத்திருக்கோயிலில் திருவாய்க்கேள்வி என்ற உயர்நிலை பதவி வகித்தவன் என்பதோடு அவனே "கடிமைபாராயன்" என்ற விருது பெற்ற கடிகையன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பறையறைவு (பறையை இசைப்பவர்) செய்பவரே கடிகையர் என அழைக்கப் பெற்றவராவர். திருப்பறையறைவு செய்வது என்பது கோயிலைக் கட்டிய கர்த்தாவாகிய இராஜராஜனே அக்கோயிலில் விழா நிகழ இருக்கின்றது என்பதை ஊரார்க்கு அறிவிப்பதாகக் கருதப்பெறுவதாகும். எனவே இங்கு மன்னனுக்காகத் திருவாய்க் கேள்வி பதவி வகித்த கடிகைமாராயன் ஒருவன் கடிகையர் ஐவர் பணிசெய்ய நிவந்தம் அளித்துள்ளான்.
'இராஜராஜேச்சரம்'
இந்த 407 நாட்டிய மங்கையரும் கோவிலுக்கு அருகே இருந்த தெற்கு மற்றும் வடக்குத் தாளிச்சேரிகளில் வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
'இராஜராஜேச்சரம்'
தஞ்சைப் பெருங்கோயிலில் நாட்டியக்கலை வளர்ந்த அளவுக்கு உலகிலேயே வேறு எங்கும் இந்த அளவு அக்கலை போற்றி வளர்க்கப்பெற்றதாக அறிய இயலவில்லை. நானூற்று ஏழு நாட்டிய நங்கையர்களும், ஏழு நட்டுவனார்களும், உடன் பாடுவார் நான்கு பேரும், மெராவியம் என்னும் இசைக்கருவி இசைப்பார் இருவரும், கானம்பாடுபவர்கள் இருவரும், வங்கியம் இசைப்பார் மூவரும், பாடவியம் என்னும் இசைக்கருவி இசைப்பார் நால்வரும், உடுக்கை வாசிப்பார் இருவரும், வீணை வாசிப்பார் இருவரும், ஆரியம்பாடுவார் மூவரும், தமிழ் பாடுவார் நால்வரும், கொட்டி மத்தளம் வாசிப்பவர் இருவரும், முத்திரைச் சங்கு ஊதுவார் மூவரும், பக்கவாத்தியம் வாசிப்பவர் ஐவரும், காந்தர்வர்கள் மூவரும், உவச்சர்கள் (மத்தளம் இசைப்பவர்கள்) இருபதின்மரும், உவச்சர்களோடு இயைந்து சகடை என்னும் தோற்கருவி இசைப்போர் அறுபத்து அறுவரும் என ஐநூற்று முப்பத்து ஒன்பது (539) பேர் இணைந்து இக்கலையைப் போற்றி வளர்த்தனர் என்பதை மாமன்னன் இராஜராஜனின் கல்வெட்டு பட்டியலிட்டுக் கூறுகின்றது. அக்கல்வெட்டில் அவர்களுக்கு அளிக்கப்பெற்ற ஊதியம், அவர்களுக்கு உரிய உரிமைகள் ஆகியவை கூறப்பெறுவதோடு நாட்டிய நங்கையர்களாக விளங்கிய நானூற்று ஏழு பேருக்கும் இரண்டு தளிச்சேரிகள் அமைத்து அவரவர்க்கு வழங்கப்பட்ட வீடுகளின் வீட்டு இலக்கம், அவர்கள் முன்பு பணிசெய்த இடம், அவர்களின் சொந்த ஊர் ஆகிய அனைத்தும் அப்பட்டியலில் காணப்பெறுகின்றன.
'இராஜராஜேச்சரம்'