Every house wife's feelings
நாம ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கறதுக்குப் பயப்படறோம். பயப்படணும்! அது எவ்வளவு உயர்ந்த குணம். அன்புக்கு உரியவங்களைத்தானே வெறுக்கவும் முடியும்... அப்படி அன்புக்குரியவங்களை வெறுக்கறதுக்கு ஆயிரம் காரணமிருந்தும், வெறுக்காமல் இருக்கணும்னா பிரிவுதான், விலகிடறதுதான் உத்தமம்...”
புத்தகம்: காத்திருக்க ஒருத்தி
ஆசிரியர்: த.ஜெயகாந்தன்
அழகம்மாள்- இவள் காத்திருப்பு அழகானது இவளை போலவே. யாருக்காக காத்திருக்கிறாள்? அவளது வாழ்க்கை தான் என்ன? உரையாடல் தேவைப்படாத உணர்வுபூர்வமான ஒரு புரிதல் இக்கதையில்! அந்த மாடிப்படியில் அவளது காத்திருப்பை அவள் விரும்பியிருக்க கூடும் என நினைக்கிறேன்.இப்படி தான் கதை நகர்கிறது. ஏக்கத்துடனும் வைராக்கியதுடனும் வாழ்பவள்.கதையின் முடிவில் ஜெயகாந்தன் அவர்கள் அமைத்த நிகழ்வு,என்ன ஒரு புரிதல்!! சிறுகதை தான் அத்தனை உணர்வுகள்!!!
பிரகாசம்- தாயின் அன்பை மட்டுமே ருசித்த ஒருவனுக்கு தந்தையின் அரவணைப்பு கிடைக்குமா? தவறான புரிதல் மாறி புதிய உறவு பரிமாற்றம் நிகழுமா? அப்படி கிடைக்கும் தருவாயில் அவர்கள் பேச்சு வார்த்தைகள் எப்படி இருக்கும்? அவ்வளவும் அழகானவைகள்!!!
ராமதுரை-சங்கீத வித்வான்,எனக்கு அவரை பிடித்திருந்தது,அவர் புரிந்து கொண்டார் அவளை,அவளும்! ஆம்,இருவரும்!!
“வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பாக - அது ஒரு சுமையாயினும் ஒரு குழந்தையும் - அதை வைத்துக் காப்பாற்ற ஓரளவு பொருளாதார வசதியும் இருந்து விடுகிற பட்சத்தில் புருஷத்துணை என்பது ஒரு பெண்ணுக்கு அவ்வளவு அவசியமானதல்ல என்பதே அவள் வாழ்வில் அனுபவித்து அறிந்த பாடம்.”
“யார��யோ எதிர்பார்த்து யாருக்கோ காத்திருப்பவளை போல் அங்கேயே - ஒரு சித்திரமாய் நின்றிருந்தாள் அழகம்மாள். “
ஆசையாய் நேசித்த உறவை பிரிய நேருமானால் வாழ்க்கையை வாழ காரணம் கிடைக்குமா?
விழகிருந்தால் அன்பு வெறுப்பாகிவிடுமா?
என் கேள்விகளுக்கு ஜேகேவின் பதிலாய் சில வரிகள் இப்புத்தகத்திலிருந்து
“அன்புக்கு உரியவங்களைத்தானே வெறுக்கவும் முடியும்... அப்படி அன்புக்குரியவங்களை வெறுக்கறதுக்கு ஆயிரம் காரணமிருந்தும், வெறுக்காமல் இருக்கணும்னா பிரிவுதான், விலகிடறதுதான் உத்தமம்...”
இக்கதையில் வருவதுபோல் நமக்காக காத்திருக்க ஒருவர் இருந்தால் நம் வாழ்வு எப்படி இருக்கும்? அப்படி ஓர் உறவு நம்மிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காத்திருக்குமா?
📌அன்பு - காத்திருக்க வைக்கும்,தேவைகள் இல்லாதவரை!
வாழ்க்கையில் எப்போது நாம் ஒருவருக்காக காத்திருப்போம்??
காதலால்!
பாசத்தால்!!
எவ்வளவு நாள் ஆகினும் ஏமாறக் கூடாது என்ற மன உறுதியால்!!
அப்படித்தான் அழகம்மாள் காத்திருக்க ஆரம்பித்தது!!
ஒவ்வொரு முறையும் அதே வீடுதான்!
வீட்டில் அதே இடம்தான்!
ஆனால் மனிதர்கள் தான் வேறுவேறு உறவு...
மகனுக்காக அவள் எடுத்த முடிவைப் பாராட்டிய மனது, அவள் கணவன் விஷயத்தில் தடம் புரண்டது வருத்தமே!!
தனி மனித ஒழுக்கத்திற்கு அவன் ஈடுபடும் கலையோ! தொழிலோ! என்றுமே இடையூறு கொடுப்பதில்லை!! அவை வெறும் சாக்கு போக்கு மட்டுமே என்பது என் கருத்து!!
கதையைப் படித்த பின்னர் நமக்காக ஓர் உயிர் காத்திருக்கிறது என்ற ஆவல் அல்லது ஆணவம் வருவதற்கும் மேல், அப்படி நமக்காக ஓர் உயிர் காத்திருக்கிறது என்ற எண்ணமே அருமையான விஷயம் தான்!! அவர்களை மறவாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள் ❤️🎐
சில மணி நேரங்களுக்குள் வாசிக்க உகந்த நூல்✨
உறவுகளுக்குள் விரிசல் வருவதற்கு தனி மனித பண்புகள் முக்கிய காரணம். விமர்சித்து காலம் முழுவதும் வாழ்வதற்கு, தனக்கேற்ற சுதந்தரத்தோடு பிரிந்து வாழ்வது மேல்.
ராமதுரைக்கு இசை,சங்கீதம் தான் உயிர். ஆனால் குடிகாரன். குடுப்பழக்கத்தால் குடும்பம் சீரழிய விரும்பாத அவர் மனைவி அழகம்மாள் அவரை வீட்டை விட்டு துரத்தவே 20 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
தன் மகன் பிரகாசம், எதிர் வீடு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய விரும்பவே, திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. தன் தந்தையும் திருமணத்தை எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும், அவர் நல்ல தகப்பன் என்று என்னவும் அழைப்பு விடுக்கிறான்.
இரு வீட்டாரின் முன்னிலையில் திருமணம் நல்ல படியாக முடிய, அன்றே தேனிலவுக்கு அவர்கள் செல்ல, அழகம்மாளும், ராமதுரையும் வீட்டில் இருக்கிறார்கள்.
மகன் ஆசைப்படி கடைசிக்காலத்தில் சேர்ந்து வாழலாமா என்ற எண்ணம் வர, நாம் பிரிந்து இருப்பதே மேல் என்கிறார் ராமதுரை. ஒரு வேலை வயது முதிர்ந்து கடவுள் அருளால் ஒன்றாக வாழ வேண்டிய சூழல் வந்தால் உங்களை தேடி வரலாமா என்ற கேட்க நிச்சயமாக காத்திருப்பேன் என்று கூறி விடைபெறுகிறார் .
ராமதுரையும் சேர்ந்து வாழும் நாளுக்காக காத்திருக்கிறாள் அழகம்மாள்!
'காத்திருக்க ஒருத்தி' ஜெயகாந்தன் எழுதிய ஒரு சிறுகதை. தன் மகனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அழகம்மாளிடம் இருந்து தொடங்குகிறது கதை. அந்த காத்திருப்பின் போது, அவளின் மனதில் எந்தெந்த காலக் கட்டத்தில் யார் யாருக்காக இதே இடத்தில், தான் காத்துக் கொண்டிருந்தாள் என்பது ஓடுகிறது. அப்படியே தன் வாழ்வில் நடந்த முக்கியமான சம்பவமும், முக்கியமான ஆளும் தன் கண் முன்னே வந்து செல்கிறான். யார் அந்த மனிதன்?, அப்படி என்ன சம்பவம் என்பது தான் இந்த சிறுகதை!
ஜெயகாந்தனின் எல்லா பெண் கதாபாத்திரம் போலவே, அழகம்மாளின் கதாபாத்திரமும் மிகச் சிறப்பான கதாப்பாத்திரமாக அமைந்திருக்கிறது. அவள் சூழ்நிலைகளை கையாளும் விதமும், மனிதர்களை புரிந்துக் கொண்டு ஏற்றுக் கொள்ளும் விதமும் வியப்பாக இருக்கிறது.
"பெண்கள், தங்கள் எல்லாப் பருவத்திலும் யாருக்கோ, எதற்கோ- காத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்," என்று ஜெயகாந்தன் எழுதியிருக்கும் இந்த வரியில் தான் எத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளது. இந்த ஒரு வரியே கதையை சொல்லி விடுகிறது. அவளை காயப்படுத்தியவர்களையும், தனக்கு கஷ்டமாக இருந்தாலும், அவர்களின் சூழ்நிலையில் இருந்து அவர்களை புரிந்துக் கொண்டு அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்கிறாள். இறுதியில் அழகம்மாளுக்கும் ராமதுரைக்கும் நடக்கும் உரையாடல் மிகவும் இயல்பாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இருந்தது. பிரகாஷத்திற்கும், அழகம்மாளுக்கும் டைனிங் டேபிளில் நடக்கும் உரையாடல் கூட அழகாக இருந்தது.
இந்த சிறுகதை வெறும் 75 பக்கங்கள் தான். அனைவரும் வாசித்து புரிந்துக் கொள்ளும் முறையில், எளிமையாக உள்ளது. இந்த சிறுகதையை அனைவரும் வாசிக்க வேண்டுமென நான் பரிந்துரைக்கிறேன்.
#வாசிப்போம்_வாழ்வோம்!