சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் பாதை... அதில் பறக்கிறது பறவையாக நினைவு...
நா. முத்துகுமார் அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் ரசிக்கும் படி எழுதி இருக்கிறார்..
ஒவ்வொரு கட்டுரையும் நம் வாழ்வில் இருக்கும் உறவுகளை, அதன் நினைவுகளை கண்டிப்பாக நினைத்துப் பார்க்க வைக்கும். ஒரு மழை நாளில், ஆசுவாசமாய் படிக்க கூடிய ஒரு feel good புத்தகம்.
சில தலைப்புகள் நம் காலசக்கரத்தை பின்னோக்கி இயக்குகின்றன,
சில தலைப்புகள் சிலவற்றை கேள்விக்குள்ளாக்குகின்றன,
படிக்க சொல்லவும் பயமாக இருக்கிறது. தனிமையில் இரவில் படித்தால் அழுது விடுவீர்கள்.
இன்று படிக்காமல் விட்டு பின்னாளில் படிக்கும்போது முன்பே படிக்காததை எண்ணி மனம் பதறி துடிக்கும்.
ஐந்து சொட்டு கண்ணீர் தானே, வந்தால் துடைத்து கொள்ளலாம். படித்து விடுங்கள் இந்த புத்தகத்தை.
*இரண்டு நாள் முன்பு தான், பத்ரி ஷேசாத்ரி என்னும் பிரபலமான கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் அண்ணாவை idiot என்றார்.
எட்டு வருடங்கள் முன்பு இறந்த நா.முத்துக்குமார் அடுத்தடுத்த தலைப்புகளின் கீழ் இவ்வாறு எழுதுகிறார்:
1. "ஷேசாத்ரிகளும் பத்ரிநாத்களும்..."
2. "அண்ணாதுரை அழைத்தால் காஞ்சிபுரம் வராமல் இருக்குமா?"
This is a coincidence, however surprising.
"நினைவோ ஒரு பறவை"
(“நா.முத்துகுமார் கட்டுரைகள்” தொகுப்பு)
தனது "பாலகாண்டம்", "கிராமம் நகரம் மாநகரம்" போன்ற கட்டுரை தொகுப்புகள் போலவே இப்புத்தகமும் கவித்துவ கட்டுரைகளாலானது. 35 கட்டுரைகளை கொண்டுள்ளது.
தான் சந்தித்த மனிதர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என அவர்களை, ஒவ்வொரு கட்டுரையின் கதாநாயகர்களாகவும் கதாநாயகிகளாகவும் சித்தரித்து, அவர்களுடனான அனுபவத்தை இக்கட்டுரைகளில் கவிதைநடையில் எழுதியுள்ளார். மேலும் அமெரிக்க பயணத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அங்கு சந்தித்தவர்கள் பற்றியும் கட்டுரைகளாக எழுதியுள்ளார்.
கவித்துவமாகவும் சிறுநகைச்சுவையோடும் சென்றாலும், எப்போதும் போல வெறுமையும் மென்சோகமும் இழையோடும் கட்டுரைகள். பிற எழுத்தாளர்களின் கவிதைகளையோ அல்லது கட்டுரைக் குறிப்புகளையோ மேற்கொள் காட்டி, அது எந்த படைப்பில் வெளிவந்துள்ளது என்பதைச் சொல்லி ஒவ்வொரு கட்டுரையும் தொடங்கப்படுகிறது.
திரு முத்துகுமாரை எப்போது வாசித்தாலும் அல்லது அவரது பாடல்களை கேட்டாலும், “இன்னும் கொஞ்சம் காலம் அவர் உயிருடன் இருந்திருக்கக்கூடாதா? இத்தமிழ் உலகம் பற்பல கவிதைப் பொக்கிஷங்களைப் பெற்றிருக்குமே” எனத் தோன்றுகிறது.
கிட்டத்தட்ட 170 பக்கங்களை கொண்ட இந்த கட்டுரைத்தொகுப்பை நாம் வசித்துக்கொண்டிருந்த காலங்களில், காற்றில் பூக்களின் வாசம், சிந்தனைகள் கவித்துவ அம்சம்.
இருப்பினும், அந்த பக்கங்களுக்குள் இருக்கும் எழுத்துக்கள் நமக்குள் ஏற்படுத்தும் கனம் அதிகம்.
எப்போதாகிலும் மனச்சோர்வு கொண்டால், இத்தொகுப்பில் மீள்வாசிப்பின்மூலம் ஏதேனும் ஒரு பக்கத்துக்குள் நுழைந்து தொலைந்து போகலாம்.
(சில கட்டுரைகள் ஏற்கனவே முதல் சொன்ன இரண்டு கட்டுரை தொகுப்புகளில் வெளிவந்தவை.)
1. தையல்
2. கறிச்சுவை
3. தெய்வம் வாழும் வீடு
4. ரோஜாப்பூ மிஸ்
5. தோழியின் கணவன்
6. கல்யாணத் தேன் நிலா
7. கல்யாணம் மாமா
8. தம்பி விடு தூது
9. நகர் நீங்கும் படலம்
10. மூழ்கி மூழ்கி மீண்ட கதை
11. பெண் புத்தரின் சரிதம்
12. ஒரு தகப்பனின் கதை
13. சீட்டுக்கட்டின் ராணிகள்
14. ஒரு ரூபாய் ரகசியம் *1
15. (A+B)2 = A2+B2+2AB *1
16, பவழ நாட்டு இளவரசன் *1
17. மழைக்கு ஒதுங்கும் மாடார் *2
18. காயத்ரியின் கதை
19. அஞ்சு ருபா டாக்டர் *1
20. ஒலியும் ஒளியும்
21. நினைவோ ஒரு பறவை
22. நிலா மிதக்கும் பள்ளங்கள் *1
23. குறிஞ்சிப் பாட்டு *2
24. எழுத்து, சொல், பொருள் *1
25. இன்றே இப்படம் கடைசி
26. கேளுங்கள் கொடுக்கப்படாது *1
27. வெந்து தணிந்த காடு *1
28. வளர்சிதை மாற்றம் *1
29. 'பா' for பார்த்தசாரதி
30. 'அ' for அமெரிக்கா
31. 'க" for கதை கேளு
32. 'இ' for இலை, தழை
33. 'த' for தமிழன்டா
34. 'கௌ' for கௌபாய்
35. 'ஹா' ஹார்வர்ட்
*1- "பாலகாண்டம்" தொகுப்பில் வெளிவந்த கட்டுரை
*2 - "கிராமம் நகரம் மாநகரம்" தொகுப்பில் வெளிவந்த கட்டுரை
புத்தகத்திலிருந்து ...
\
"இரண்டு வகையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
முதல் வகை,
கேள்விக்கான விடையைக் கற்றுக்கொடுப்பவர்கள்;
இரண்டாவது வகை,
விடையே இல்லாத கேள்வியைக் கேட்கத் தூண்டுபவர்கள்!"
-பாப் டைலன்
/
\
ரயிலை ரசிக்காதவர்கள் உண்டா? ரயில் பயணங்கள் எப்போதும் எனக்கு பிடித்தமானவை. ரயில் ஒரு யானைக் கூட்டமாக இருக்கிறது. நெளியும் பாம்பாக இருக்கிறது; கனைக்கும் குதிரையாக இருக்கிறது; இப்போதுதான் பிறந்து மெல்லச் சிணுங்கும் குழந்தையாக இருக்கிறது.
அழகான பெண்கள் ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு மாதிரி இருப்பது போல, ரயிலும் ஒவ்வொரு பார்வைக்கும் ஒவ்வொரு வடிவம் கொள்கிறது. சிவபெருமானுக்கு அடுத்ததாக நெற்றிக்கண்ணுடன் அலைவது ரயில் வண்டிகள் மட்டுமே. ரயில் வண்டி, 'ஆயிரம் ஜன்னல் வீடு'!
ஒரு தாயைப்போல ரயில் நம்மை மடியில் அமர வைத்துத் தாலாட்டுகிறது. எதிரொலி போல், நாம் மனதுக்குள் எந்தப் பெயரை நினைக்கிறோமோ அதே பெயரைத் தன் நெடிய நாக்கால் உச்சரித்து நம் தோழனாகிறது.
/
\
திருமணம் என்பது உறவினர்கள் ஒன்று கூடும் ஜமா. தெரிந்த முகங்களும், தெரியாத முகங்களும் ஒன்று கலக்கும் உற்சாக உற்சவம். ஞாபகங்களின் டிரங்குப் பெட்டியைத் திறக்கையில் சட்டென்று வெளிப்படும் ரசகற்பூர வாசனையின் கமகமா. தேக்கு மரக் கதவில் கட்டியிருக்கும் வெள்ளி மணிகள் காற்றில் ஆடும் கிண்கிணி. ஆணையும் பெண்ணையும் முன்வைத்து அனைவரும் இணையும் மானுட சங்கமம்.
/
\
"தெரியாததை எழுதாதே. தெரிஞ்சிக்கிட்டு எழுது. நீ ஒரு கிளையை பத்தி எழுதுனா, அந்த எழுத்து மேல குருவிங்க வந்து உட்காரணும் "
/
\
'வளர்ற கொடிக்கு கொம்பு நட்டுக்கொடுக்கறதோட எல்லா தகப்பனும் நிறுத்திக்கணும். காத்தோட திசையைத் தேடித் பற்றி படர்ந்து அதுவா மேல வந்துடும்'ங்கிறது என்னோட நம்பிக்கை.
/
\
" அமெரிக்கா செல்ல கவுன்சில் கியூவில் அதிகாலையில் நிற்கும் சுரேஷ்களுக்கும் ரமேஷ்களுக்கும் ஒரு செய்தி! இது ஒருவழிப்பாதை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். 'திரும்பி வந்து தாய்நாட்டுக்கு சேவை செய்யப் போகிறேன்' என்று ஜல்லியடிக்காதீர்கள். இந்த நாட்டை பொறுத்தவரை, நீங்க���் அனைவரும் நடுத்தர குடும்பங்களில் பெருமையாக பேசிக்கொள்ளத்தக்க, அதிகம் பயனில்லாத வஸ்துகள்தான். சென்று வாருங்கள்...குட்லக்!" - எழுத்தாளர் சுஜாதா
/
\
உலகத்தில் உள்ள அத்தனை மொழி பேசும் மக்களையும் ஒரேசாலையில் சந்திக்க முடியுமா? பள்ளத்தாக்கு முழக்க பூ பூத்ததைப் போல அத்தனை முகங்களிலும் இனம்புரியா புன்னகையையும், உற்சாகத்தையும் தரிசிக்க முடியுமா? முடியும் என்றால் நீங்கள் டைம்ஸ் ஸ்கொயருக்கு செல்ல வேண்டும்!
/
\
இருட்டும் வரையில் டைம் ஸ்கொயரில் திரிந்து விட்டு பென் ஸ்டேஷன்(Penn Station) வந்தடைந்து நியூ ஜெர்சி செல்ல டியூப் ரெயிலை பிடித்தோம். ரயில் பெட்டி முழுக்க குஜராத்திகள், பஞ்சாபிகள், தெலுங்கர்கள், தமிழர்கள் என ஒரே இந்திய வாசம். "இன்னைக்கு சண்டே என்பதால் கூட்டம் ரொம்ப கம்மி. வீக் டேஸ்ல இன்னும் அதிகமா வருவாங்க" என்றான் நண்பன்.
/
\
"கூழாங்கல்லில் தெரிகிறது
நீரின் கூர்மை" - இயக்குநர் லிங்குசாமி
/
\
"நீர் என்றைக்கும் வீழ்ச்சியடைவதில்லை,
அது வீழ்வது எல்லாம் எழுவதற்கே!" - கவிஞர் விக்ரமாதித்யன்
/
நா.முத்துக்குமார், எனக்கு பிடித்த பாடல்களையும், கவிதைகளையும், கதைகளையும் எழுதிய ஒரே எழுத்தாளன். அவரின் ஒருவொரு வார்த்தைகளும் எனக்கு புரியும் வகையில் இருப்பது அவரை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் ஆனால் அதை தாண்டி அவரின் எழுத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது, சிலருக்கு அது ஆன்மா எனக்கு “என் வாழ்வின் படிமங்கள்”.
"நினைவோ ஒரு பறவை" அவர் நினைவுகளோடு என் நினைவுகளையும் சேர்த்து புத்தகம் முழுக்க நினைவு பறவையாக பறக்க வைத்து. அவரின் ஆயா எனக்கு என் ஆயாவை நினைவூட்டினார், அவரின் அக்கா என் அக்காவையும், அவரின் நண்பர்கள் என் நண்பர்களையும், ஏன் அவரின் அத்தனைகளும் என் அத்தனைகளை நினைவூட்டிய படியே நூல் முழுக்க சுமந்து சென்றது.
கல்யாண்ஜி, கலாப்ரியா, சாம்ராஜ் என யாரை வாசித்தாலும் எனக்கு முத்துக்குமாரின் கவிதைகள் தான் பிடிக்கிறது. முதல் காதல் என்பதால் அப்படியாக இருக்க கூடும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு முத்துகுமாரை வாசித்ததில் உடல்,உள்ளம், நான் என அனைவரும் நலமாக இருக்கிறோம், இன்னும் அவரின் 3 புத்தகங்கள் தான் மிச்சம் இருக்கிறது, பொறுமையாக தான் வாசிப்பேன், அதையும் வாசித்து முடித்துவிட்டால், முத்துக்குமாரை எங்கே தேடுவேன்? யார் எனக்காக எழுதுவார்கள்? யாரவது முத்துக்குமாரை கனவில் சந்தித்தால் நான் கேட்டேன் என்று சொல்லுங்கள்!
இறந்தபின்னும் வாழ்கிறார்.
நினைவோ ஒரு பறவை
நா.முத்துக்குமார்
"திரும்பி பார்க்காமல் நேராக நடந்து போ!" என்று சுடுகாட்டிலிருந்து கிளம்புபவர்களிடம் சொல்வதைப்போல, வாழ்க்கை என்னிடம் திரும்பி பார்க்காதே என்று பலமுறை சொன்னாலும் வலுக்கட்டாயமாக மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன்.நேராக நடந்து செல்ல நான் எறும்பு இல்லை;சின்னஞ்சிறு மனிதன் !