Reviews for உடையார் - பாகம் 6
30 reviews total
user_6698
★ 5/5 Feb 02, 2026குடந்தை, தஞ்சை, பழையறையில் வலம் வந்தது போல் இருந்தது. தஞ்சை கோவில் போக வேண்டும், சிற்பங்களை கையால் வருட தோன்றுகிறது!
அஸ்திவாரத்திலிருந்து விமானம்-கலசம் வரை நடந்தவைகளை அசை போட்டிட வேண்டும்! சோழம்! சோழம்! சோழம்!
user_6697
★ 5/5 Feb 02, 2026மாமன்னர் இராஜராஜரைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள அனைவரும் பரிந்துரைத்தது உடையார் என்னும் புதினமே. எழுத்துச்சித்தர் பாலகுமாரன் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது உடையார் என்னும் சரித்திரப் புகழ் பெற்ற புதினமே.
ஊரடங்கு காலத்தில் கங்கை கொண்ட சோழனை வாங்கி வாசித்து வியந்தேன். தந்தை எட்டு அடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாய்ந்துள்ளார் என்று உணர முடிந்தது. தந்தை பாய்ந்த 8 அடியை பற்றியதே இந்த உடையார்.
கல்கி அவிழ்க்காத முடிச்சுகளையும் பல கேள்விகளுக்கு விடையையும் பாலகுமாரன் அவிழ்த்துள்ளார். உடையார் புதினத்தை வாசிக்கும் பொழுது நம்மை சோழர் காலத்துக்கே அழைத்து செல்கிறார் ஆசிரியர். நடந்தே நம் கைப் பிடித்துக்கொண்டு அழைத்துச் செல்வதாக தோன்றுகிறது — கதை அவ்வளவு மெதுவாக நகர்கிறது.
தஞ்சை பெரிய கோவிலை எவ்வாறு கட்டி முடித்தார் என்று மிக விரிவாக நேர்த்தியாக எழுதியுள்ளார். பெண்களின் நிலை, மன்னர்களின் வாழ்வு, போர்கள், வணிகம், சமய ஈடுபாடு என பல்வேறு விடயங்களை படம்போட்டு காட்டியுள்ளார்.
கதைக்குள் கதை என்று நீண்டு கொண்டே போவதும், இடையிடையே தத்துவங்கள் கதையின் வேகத்தை குறைப்பதும் சிறு குறைகள். ஆனால் இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு தஞ்சை பெருவுடையார் கோவில் சென்றால் நாமும் இராஜராஜரை நிச்சயமாக தேடுவோம்.
இரவு பகல் பாராது மேற்கொண்ட உடையார் என்னும் தவ வாழ்வு 16 நாட்களில் மனநிறைவுடன் முற்றுபெற்றது.
user_6696
★ 4/5 Feb 02, 2026இராஜராஜசோழன் மற்றும் பெரிய கோவில் இரண்டும் தமிழின் பெருமைகள். அதை எழுத்தாளர் மிக அழகாக கூறியிருக்கிறார். ஆனால் ஏதோ முதல் 3 பாகங்களில் இருந்த விறுவிறுப்பு மீதி 3 பாகங்களில் இல்லை.
ஒரு பகுதியை கூற முன்னாள் நடந்தவற்றையும் சேர்த்து கூறும்போது கொஞ்சம் அலுப்பாக உள்ளது. ஆனால் எழுத்தாளரின் பணி மிகவும் போற்றவேண்டிய ஒன்று. நன்றி திரு. பாலகுமாரன் ஐயா அவர்களே.
user_6695
★ 4/5 Feb 02, 2026பொன்னியின் செல்வனை விரும்பிய அனைவருக்கும் நான் பரிந்துரைக்கக்கூடிய தொடர் உடையார். வரலாற்றுப் புனைகதையாக இவ்வளவு பெரிய தொடரை எழுதுவது எளிதான காரியம் அல்ல. ஆனால் பாலகுமாரன் அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
ஆறு புத்தகங்கள், சுமார் 2500 பக்கங்கள் — படித்து முடித்தபோது கதை இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று வருத்தமாக இருந்தது. புத்தகம் என் மீது ஏற்படுத்திய தாக்கம் அவ்வளவு பெரியது. சில கதாபாத்திரங்களுக்கு சரியான முடிவு கொடுக்கப்படாமல் விடப்பட்டிருப்பது குறை.
முதல் பாகத்தில் கருஞ்சூனியம், சித்தர்களின் சக்தி போன்றவை பற்றி சில சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் அடுத்த பாகங்களில் ஆசிரியர் அதை சரி செய்து, முடிந்தவரை பகுத்தறிவுடன் எழுதியிருக்கிறார். ராஜராஜ சோழன் காலத்தின் சமூக வாழ்க்கையை சித்தரிப்பதில் உடையார் பொன்னியின் செல்வனை விட சிறப்பாக இருக்கிறது.
இந்தப் புத்தகத்தை படித்தவர்கள் நிச்சயம் தஞ்சை பெரிய கோவிலுக்கு உடனே செல்ல விரும்புவார்கள் என்பது உறுதி.
user_6694
★ 5/5 Feb 02, 2026இந்த தொடரை வெறும் வரலாறாகவோ, பெரிய கோவில் கட்டப்பட்ட கதையாகவோ மட்டும் நான் பார்க்க மாட்டேன். இது அதையும் தாண்டியது. இந்தப் புத்தகத்தின் மையக் கருத்தாக நான் புரிந்துகொண்டது — "தான் என்று மறந்து அவன் தாள் பணிவதற்கும் அவனருள் வேண்டும்".
user_6693
★ 5/5 Feb 02, 2026செல்வரகவனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், நான் மிகவும் ஆர்வமாக நேசித்த ஒரே எழுத்தாளர் பாலகுமாரன் மட்டுமே. அவர் நாவல்கள் எழுதுவதில்லை, உணர்வுகளை எழுதுகிறார், காவியங்களை எழுதுகிறார். இந்த மகத்தான நாவலின் இறுதிப் பகுதியை வாசித்தபோது அதை மீண்டும் உணர்ந்தேன்.
ஐந்து மாத பயணம் இன்று முடிவுக்கு வந்தது. முடித்தபோது ஏதோ ஒரு வெறுமை என்னை ஆக்கிரமித்தது. சச்சின் கிரிக்கெட் மைதானத்தில் விடைபெற்ற உரை நிகழ்த்தியபோது ஏற்பட்ட அதே உணர்வு — வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆழமான உணர்ச்சி.
இந்த தமிழ் மண்ணைச் சேர்ந்தவர்கள் அல்லது இந்த மண்ணோடு தொடர்புடையவர்கள் அனைவரும் இந்த மகத்தான படைப்பை கண்டிப்பாக வாசிக்க வேண்டும். வாழ்க பாலகுமாரன்!
user_6692
★ 5/5 Feb 02, 2026மிகச் சிறப்பான எழுத்து. ஆனால் ஆசிரியர் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று சில பகுதிகளில் ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த நாவல் முழுவதும் ராஜராஜனின் நோக்கம் கோவில் கட்டுவதே. அந்தப் பணியின் உச்சகட்டமான கும்பாபிஷேகம் சாதாரண நிகழ்வு போல் விவரிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளித்தது.
கருவூரார், சிரலன் போன்ற பல கதாபாத்திரங்கள் சரியான தருணத்தில் காணவில்லை. ராஜேந்திர சோழனின் முடிசூட்டு விழாவும் மிகச் சாதாரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தேவையான இடங்களில் பிரம்மாண்டம் இல்லை.
ஆயினும், சில பகுதிகள் மிகவும் உணர்வுபூர்வமானவை. உலகம் கண்ட மிகச் சிறந்த மன்னனை மதிக்கத் தூண்டுகின்றன. ஒரு தொலைநோக்குப் பார்வையாளன், தலைவன், சிறந்த நிர்வாகி, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிறந்த மனிதன். சோழர்களின் மரபுச் சின்னங்கள் சாதி, மதத்தைக் கடந்து நம் முன்னோர்களின் வளமான நாகரீகத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் காட்டுகின்றன. ஆறு பாகங்களும் ஒட்டுமொத்தமாக அற்புதமான வாசிப்பு அனுபவம்.
user_6691
★ 5/5 Feb 02, 2026ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுப் புதினம் படித்த உணர்வு. இராஜராஜ சோழனின் வாழ்க்கையில் பங்கு கொண்டது போல் ஒரு எண்ணம்.
புத்தகத்தைக் கையில் எடுத்த பொழுது, சிற்ப சாஸ்திரம் மேலோங்கி இருக்கும் என்று எண்ணியே படிக்கத் தொடங்கினேன். ஆனால் படிக்கப்படிக்க, ஒரு கோயில் கட்டுவதை விளக்க சிற்ப சாத்திரங்களும் திட்ட சூத்திரங்களும் மட்டுமே முக்கியம் இல்லை என்பது புரிந்தது. அதைக் கட்டுபவனின் மனம் படுகின்ற உளைச்சல், எதிர்ப்படும் தடைகள், அந்தக் காலகட்டத்தில் நிகழும் சம்பவங்கள் அனைத்துமே மிகப்பெரிய பங்கு கொள்கின்றன.
கட்டடவியலைக் காட்டிலும் வாழ்வியலே இப்புத்தகத்தில் புலிக்கொடி நாட்டுகிறது. அதுவே இது வரலாறால் போற்றப்படக்கூடியதற்கு மிகப்பெரிய காரணம்.
இறுதிப் பக்கங்களைப் படிக்கும் பொழுது குருதி கொதித்துக் கண்களில் நீர் தளும்பி நிற்கிறது. பொன்னியின் செல்வனாய்த் தொடங்கி உடையாராய் முடியும் நம் அருள்மொழி வர்மன் ராஜனுக்கெல்லாம் ராஜன் தான்.
user_6690
★ 5/5 Feb 02, 2026தஞ்சைப் பெரிய கோயிலை மையமாக வைத்து சோழர் நாகரீகத்தை கண் முன்னே பார்ப்பது போன்று மிகச்சிறப்பாக எழுதப்பட்ட புத்தகம். தஞ்சைப் பெரிய கோவில் கட்டிடக்கலையின் உச்சம்.
படித்து முடித்த பின்னர் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. என்னுடைய அடுத்த பயணம் தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் பஞ்சவன் மாதேவியாரின் பள்ளிப்படை கோவில்.
தன் வாழ்நாளில் இதுதான் சிறந்த புத்தகம் என பாலகுமாரன் சிலாகிக்கிறார். அதுதான் உண்மையுங்கூட.
user_6689
★ 5/5 Feb 02, 2026அருண்மொழி என்றதுமே பொன்னியின் செல்வன் நினைவு வருவதை தடுக்கவே முடியாது. நானும் அப்படித்தான் உடையாரை ஆரம்பிக்கும்போது ஒவ்வொன்றையும் பொன்னியின் செல்வனோடு ஒப்பிட்டுக் கொண்டேயிருந்தேன். ஒவ்வொரு பாகம் முடியும்போதும் பொன்னியின் செல்வன் சிறிது சிறிதாக நம்மை விட்டு விலகி உடையார் மனதிற்குள் ஏறி அமர ஆரம்பித்தது.
தஞ்சை பெரிய கோவிலை நாமும் உடன் கட்டியது போன்ற ஒரு உணர்வைக் கூட கொடுக்கும். கோவில் கட்டுவதை மையமாக வைத்து அன்றைய கலாச்சார வளர்ச்சியையும், மன்னர்களின் மனப்போக்கையும் மிக அழகாக விவரித்து இருக்கிறார்.
முதல் பாகத்தை படித்து முடித்தபோது எத்தனையோ சந்தேகங்கள் எழுந்தன. இப்பொழுது அவை என்ன சந்தேகங்கள் என்றே தெரியாது அளவிற்கு உடையார் மனதிற்குள் அமர்ந்துவிட்டார்.
கடைசி பாகத்தை வாசிக்கும்போது என்னையறியாமல் ஒருவித துக்கம் மனதிற்குள் எழுந்தது. கண்ணீர் வரவில்லையே தவிர ஒரு துக்க உணர்ச்சியை உணர முடிந்தது. ராஜராஜ சோழன் நம்மையும் மீறி நம்முள் வந்து அமர்ந்துகொள்கிறார்.