Reviews for மோகமுள்

30 reviews total

user_5573

★ 5/5 Feb 02, 2026

தி.ஜானகிராமனின் மோகமுள் திரைப்படத் தழுவலை முன்பே பார்த்துவிட்டு மிகவும் பிடித்திருந்தது. நீண்ட நாளாக இந்தப் படத்தைப் பார்க்க விரும்பியும் கிடைக்கவில்லை. படம் பார்த்த பிறகு புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நினைத்தேன். 650+ பக்கங்கள் கொண்ட இந்த நீண்ட புத்தகத்தை முன்பே படிக்க முயன்று சில பக்கங்களிலேயே விட்டுவிட்டேன். மீண்டும் முயன்றேன், இந்த முறை பிடிவாதமாக படித்து முடித்தேன்.

மோகமுள் ஒரு காதல் கதை — வயதில் மூத்த பெண் இளையவன் என்ற காதல் கதை. 1950களில் எழுதப்பட்டது, அக்காலத்தில் இது வழக்கத்திற்கு மாறானதும் கிளர்ச்சிகரமானதுமாக இருந்தது. இது இசை, பக்தி, குரு-சிஷ்ய உறவு, நட்பு, மோகம் குறித்தும் ஒரு கதை. மிக அழகானது.

பாபுவுக்கும் யமுனாவுக்கும் இடையிலான உறவு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பாபுவுக்கும் நண்பன் ராஜத்துக்கும் இடையிலான நட்பும் அழகானது. இந்த மூன்று கதாபாத்திரங்களையும் நேசித்தேன், ஆனால் மற்ற பாத்திரங்களையும் நேசித்தேன் — பாபுவின் அப்பா, இசை குரு ரங்கண்ணா, யமுனாவின் தாயார், பாபுவின் மீது காதல் கொள்ளும் இளம்பெண், பிரபல இசைக்கலைஞர் ராமு, ரங்கண்ணாவின் பக்தியுள்ள சீடன், பாபுவின் வீட்டு உரிமையாளர்கள், யமுனாவுக்கு உதவும் அறக்கட்டளை பெண்மணி — அனைவரும் சிக்கலான, குறையுள்ள, அழகான மனிதர்கள்.

நாவல் முழுவதும் கர்நாடக சங்கீதம் நிறைந்திருக்கிறது. தொழில்நுட்ப அம்சங்கள் தெரியாவிட்டாலும் கச்சேரியில் அனுபவிக்கும் உயர்ந்த உணர்வை நாவல் நமக்கு அளிக்கிறது.

புத்தகமா படமா? படத்தை முதலில் பார்த்தேன், நேசித்தேன், ஆனால் புத்தகம் சிறந்தது என்று நினைக்கிறேன். புத்தகத்தில் உறவுகளை ஆராய அதிக இடமுள்ளது, நீண்ட உரையாடல்கள், விவரணைகள், தத்துவ சிந்தனைகள் உள்ளன. ராஜம் படத்தில் சிறிய பாத்திரம், ஆனால் புத்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். இசைக்கலைஞர் ராமுவும் புத்தகத்தில் கவர்ச்சிகரமான சிக்கலான பாத்திரம்.

மோகமுள் படிப்பதும் திரைப்படம் பார்ப்பதும் மிகவும் பிடித்திருந்தது. 20ம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த செவ்வியல் படைப்புகளில் ஒன்று. இளவயதில் படிக்காமல் இப்போது படித்ததில் மகிழ்ச்சி — இப்போது என் வாசிப்பு ரசனை முதிர்ச்சி அடைந்ததால் சிறப்பாக புரிந்துகொள்ளவும் ரசிக்கவும் முடிந்தது.

user_5572

★ 5/5 Feb 02, 2026

கர்நாடக இசை குறித்த ஆழமான தொழில்நுட்ப அறிவு இல்லாவிட்டாலும், தி.ஜாவின் அற்புதமான சித்தரிப்பு மற்றும் கதையாடல் மூலம் அர்த்தத்தின் பல அடுக்குகளையும் ஆழத்தையும் உணர முடிந்தது. பழைய காவிரி நதி போல் சீராக ஓடுகிறது கதை. எல்லா கதாபாத்திரங்களும் மிகவும் நினைவில் நிற்கின்றன, நிகழ்வுகளும் உணர்வுகளும் நம்பகமானவை, இறுதி அனுபவம் அற்புதமானது.

user_5571

★ 2/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தை படிக்கத் தொடங்கி ஒரு வருட காலமாகியும் இன்னும் என்னால் முடிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை எடுக்கும்போதும் இந்த முறை முடிக்க வேண்டும் என்றுதான் எடுப்பேன். ஏனோ தொடரவே முடிவதில்லை.

தொடக்கத்தில் கும்பகோணம் காபி, கோவில்கள், மல்லிகை பூ, யமுனாவின் பாதம், பாபுவின் மோகம், சங்கீதம் என்று அழகாகத்தான் இருந்தது கதையின் போக்கு. பிறகு கதை ஏனோ புளித்துவிட்டது. திடீர் மகிழ்ச்சிகள், தீரா வருத்தங்கள், தவிர்க்க முடியா கடமைகள் என்று வந்தபோதும் இந்தப் புத்தகம் என் கவனத்தை எப்போதுமே ஈர்த்ததில்லை. ஆசிரியர் சொல்லும் விதம் வளவளவென்று இருப்பது போலத்தான் தோன்றும். சொல்ல வந்ததை சொல்லுங்களேன் என்ற பொறுமையற்ற நிலை ஏற்படும்.

இந்த நிலைக்கு நான் காரணமா புத்தகம் காரணமா தெரியவில்லை. வருங்காலத்தில் இந்தப் புத்தகத்தை எடுத்தால் வேறு வித உணர்வு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

user_5570

★ 5/5 Feb 02, 2026

இந்த வருடத்தின் செவ்வியல் வாசிப்பு. அந்நாளைய கும்பகோணம், பாபநாசம், சென்னை என்று ஊர் சுற்றி வந்த மாதிரி இருக்கிறது.

தன்னை விட வயது அதிகம் உள்ள பெண்ணை காதலிப்பதை இன்றைய சமூகமே ஆங்காங்கே தான் ஏற்றுக் கொண்டு வருகிறது. ஆனால் இந்தப் புத்தகம் வெளிவந்த 1960-70 காலக்கட்டத்தில் எழுத்தாளருக்கு எப்படி தோன்றியது என்பதே ஆச்சரியம்தான். செவ்வியல் என்பதற்கு மிகவும் தகுதியான நூல். இப்படிப்பட்ட உறவை முகம் சுளிக்க வைக்காமல் மிகவும் உணர்வுபூர்வமாக வாசகனுக்கு கடத்துகிறார்.

வாசகர்கள் அனைவரும் வைத்தியை தங்கள் தந்தையாக, யமுனாவை தங்கள் காதலியாக, ரங்கண்ணாவை குருவாக நினைத்திருப்பார்கள்.

user_5569

★ 4/5 Feb 02, 2026

முதன் முதலாக தி.ஜாவை படிக்கிறேன்... என்ன அருமையான எழுத்து நடை! சிறிதும் தோய்வில்லை. பாபு போன்ற ஒரு கதாபாத்திரத்தை கதை நாயகனாக வைத்து கதை சொன்ன விதம்... அவன் நேசிக்கும் யமுனா, ராஜு, ரங்கண்ணா போன்றவர்களின் மேன்மையின் மூலம் பாபுவின் பல கீழ்த்தனங்களை காட்டிய விதம்... ஒரு கதாபாத்திரத்தை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த நாவல்.

user_5568

Feb 02, 2026

"மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு" என்று பாரதி இரண்டு வரிகளில் சொன்னதை 700 பக்கங்களில் சொல்கிறார் தி.ஜா, அதுவும் வெளுத்து வாங்கும் நடை வடிவத்தில்! சமுதாயக் கோட்பாடுகளை சவால் செய்வதில் தான் இந்த எழுத்தாளர்களுக்கு எவ்வளவு திருப்தி! இக்கோட்பாடுகளில் அகப்படாத எண்ணங்களை முக்காடு போட்டு தான் சிந்திக்க வேண்டும். சிந்தித்ததோடு மட்டும் இல்லாமல், இவைகளுக்கு உருவம் கொடுத்து, உணர்வு கொடுத்து, பிறகு எழுத்து வடிவம் கொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இம்மாதிரி நாவல்கள் ஒரு சமூகத்தின் முற்போக்கு முதிர்ச்சியை கணக்கிடும் ஒரு அளவுகோலாக இருப்பது பூரண சத்தியம். அவ்விதத்தில் மோகமுள் சுயேச்சையாக வெற்றி பெறுகிறது.

பாபு ஒரு தீவிரமான ரசிகன். தான் ரசிப்பவை தன்வசமிருக்க அமைதியாகக் குட்டிக்கர்ணம் அடிக்கும் இயல்பு கொள்ளும் அளவிற்கு அவனே அறியாத ஒரு தீவிரத்தனம். அவனை விட 10-12 வயது மூத்த யமுனாவை ரசிக்கிறான். மோகம் கொள்கிறான். சங்கீதத்தை சிறுவயதில் ரசிக்கிறான். அவன் கட்டுக்குள் கொண்டு வர பிரம்மப்பிரயத்தம் செய்கிறான். சமுதாயம் போடும் வேலி, தனக்குத் தான் போட்டுக்கொள்ளும் வேலி இவற்றிலிருந்து ஒருவன் தன்னை விடுவித்துக் கொண்டு, தான் ரசிக்கும் விஷயங்களை எப்படி அடைகிறான் என்பதே மோகமுள்.

பெண் பிள்ளை என்றால் கலியாணம் தான் பிறவிப் பயனோ என்றிருக்கும் யமுனா ஒரு மிகைப்படுத்தப்பட்ட கேள்விக்குறி. தி.ஜா அவளைப் பற்றி பெரிதாக விவரிக்கவில்லை. பாபுவின் கண்கள் மூலமாகவும் அவள் தாயார் பார்வதியின் பரிமாற்ற நிலை மூலமாகத்தான் யமுனாவைப் பற்றி யூகிக்க முடிகிறது.

தங்கம்மாள் கதையில் வரும் நேரம் சொச்சம் என்றாலும் அவள் கதாபாத்திரத்தின் தாக்கு வலிமையோ ராட்சதத்தனம். வறுமையால் விலங்கிடப்படும் அவளின் நிலமை, இல்லாததை நினைத்து ஏங்கி அவள் தற்கொலை செய்யும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது.

பொதுஜனத்தின் பயித்தியக்காரத்தனமான கலா ரசனையை உதறித்தள்ளிவிட்டு, தொன்றுதொட்டு வந்த சங்கீதத்தின் நலன் கருதி சங்கீதம் பாடும் ரங்கண்ணாவின் கதாபாத்திரம் மிகவும் பாதிக்கிறது. இப்பாக்கியவான்களை பொதுஜனம் அலட்சியப்படுத்துவது சமூகத்தின் மூடத்தனம் என்று தி.ஜாவும் ஆமோதிப்பது மனசைக் குளிர்விக்கிறது.

user_5567

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தை 90களில் கல்லூரி நாட்களில் படித்தேன். முதல் 200 பக்கங்களைப் படிக்கும்போது 1930/1940 காலகட்டத்தைப் புரிந்துகொள்ள சிறிது நேரம் பிடித்தது. ஆனால் அதற்குப் பிறகு அடுத்த 400 பக்கங்களை முழுமையாக ரசித்துப் படித்தேன். உண்மையில் கதை முடியும் தருவாயில், இது ஒருபோதும் முடியாத புத்தகமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

அற்புதமான வாசிப்பு அனுபவம். "அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்" என்ற முடிவு இல்லை — கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை மட்டுமே காட்டுகிறது. மிகவும் பரிந்துரைக்கிறேன்.

user_5566

★ 4/5 Feb 02, 2026

மோகம் குறித்த யதார்த்தமான பார்வை. "மோகம் முப்பது நாள் தான்" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஆனால் இந்த நாவலில் ஜானகிராமன் அதை கேள்விக்குறியாக்குகிறார் — மோகம் பல ஆண்டுகள் கூட நீடிக்கும் என்பதை நிரூபிக்கிறார்.

user_5565

★ 5/5 Feb 02, 2026

அனுபவங்களின் விளைச்சலில் தத்துவங்கள் பிறக்கின்றன. எல்லாத் தத்துவங்களும் எல்லா மனிதர்களின் வாழ்க்கையோடு பொருந்திப் போக வேண்டிய அவசியமில்லை. கால வெள்ளத்தில் தத்துவங்கள் படித்தோ சிலது அனுபவித்தோ அறியப்பட்டுக் கொண்டே தானிருக்கிறது. முற்போக்கோடு தத்துவங்கள் முரண்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. தத்துவங்கள் தீர்வுகளைக் கொள்வதில்லை ஆனால் நியாயமான வாழ்க்கைக்கான சமாதானங்களை விதிர்த்துக் கொண்டேயிருக்கின்றன.

தத்துவங்களோடமைந்த எழுத்திற்கான உயிர்ப்பு, அதன் காலமும் அன்றைய வாழ்வியல் நடைமுறைகளும்தான் நிர்ணயிக்கின்றன. சிலவை காலத்திற்கொவ்வாதவையாகி நம்மிலிருந்து அகண்டு விடுகிறது.

தி.ஜா என அழைக்கப்படும் தி.ஜானகிராமனின் "மோகமுள்"ளை வாசித்ததில் என்னுள் படர்ந்தது பிரமிப்பின் உச்சமே.

கடந்த நூற்றாண்டின் அரைப்பகுதியில் (1955) எழுதப்பட்ட இப் புதினம் 21ம் நூற்றாண்டின் கால் பகுதியில் வாழும் ஒரு வாசகனை சிலிர்க்கவோ பிரமிக்கவோ வைப்பதற்கான உயிர்ப்பை தி.ஜாவின் முற்போக்கு எண்ணங்களே.

சில விமர்சனங்களை வாசித்த போது பொருந்தா காமம் எனச் சித்திரிப்பது எப்படி என்ற ஐயுறல் சாதாரணமாகவே தோன்றியது. இயற்கையில் மாற்றப்படாத நியதி ஆணுக்குப் பெண் அவ்வளவே. அதில் வயது வித்யாசம், அழகு இவையெல்லாம் சமூகத்தின் பார்வைக்கு போடும் போலித் தீனி தான். பெரும்பான்மையான மக்கள் சமூகத்தின் வறட்டுப் பார்வைக்கும் பழங் கொள்கைகளுக்கும் ஒட்ட வாழ்ந்து சலித்து விடுகிறார்கள்.

இக்காலத்தில் வாசிக்கின்றவர்களுக்கு இதன் மொழி நடை மீது பெரிய தர்க்கத்தை ஏற்படுத்தலாம். இப் புதினம் வேண்டுமென்று வலிய அம்மொழி நடையில் எழுதப்படவில்லை என்பதே என் பார்வை. ஒவ்வொரு மொழிநடையும் அதற்குரிய அழகைப் பெற்றேயிருக்கின்றன. கதையின் களனையும் கதை மாந்தர்களையும் சார்ந்தே மொழி நடை பிரதானமாகிறது.

கதைக்களன் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் வாழ்ந்த பிராமண குடும்பங்களைச் சார்ந்தது. காலக்கட்டம் 1930க்கும் 50க்கும் இடையில் நடந்த உண்மைச் சார்ந்த புனைவுகளின் தொகுப்பு. அதில் கர்நாடக சங்கீதம் பிரதான இடத்தைப் பெற்று கதை முழுதும் மெல்லிசைப் போல படர்கிறது.

கதையின் நாயகனான பாபு குழந்தை பருவத்திலிருந்தே கர்நாடக சங்கீதத்தின் மீது ஆசை கொள்ளலும் அதனையொப்ப அவரின் அப்பா வைத்தி அவனின் ஆசைக்கு ஒத்த சுயநல கொள்கைகளை திணிக்காத பெரும் சுதந்திரத்தை வழங்கும் தாராளபாங்குமிக்க பாத்திரமாக வலம் வருகிறார். அவரின் பார்வை இன்றைய பெரும்பான்மை அப்பாக்களால் கூட பார்க்க முடியாத தனித்தன்மை வாய்ந்தது.

முதியவரை மணந்த தங்கம்மாள் பாத்திரம் தன் வயதிற்கேற்ற உந்துதலால் பாபுவால் கவரப்படுவதும் தன் மோகத்தை தீர்க்க மேற்கொண்ட யுக்திகளும் அதன்பின் அவளின் மரணமும் பேரிளம்பருவத்தை தொட்ட பாபுவை நிலை தடுமாறச் செய்தாலும் பாபுவின் உள்ளுக்குள் அப்பாவின் உபதேசங்களும் நண்பனான ராஜிவின் உரையாடல்களும் குருவான ரங்கண்ணாவின் உபதேசங்களும் காப்பாகவே இருக்கிறது.

இந்த பாதுகாப்பு வளையங்கள் எல்லா இடங்களிலும் எடுபடுவதில்லை. சூழலும் சம்பவங்களும் அதை தீர்மானிப்பதோடு பாபுவும் தன்னிலை மாறி தாண்டிய சூழலும் நடப்பதுதான் கதை மேலும் நகரும் விதையாகிறது.

யமுனா என்ற நாயகியின் பாத்திரம் பொருந்தாத இரு வேறு சமூகத்தினிடையில் திருமண பந்தத்தில் பிறக்கிறது. நிலக்கிழாராக வாழும் சுப்ரமண்ய ஐயரின் திடீர் இறப்பும் அதன் பின் படிப்படியான வீழ்ச்சியில் வாழ்வே அற்றுப் போகும் யமுனாவின் வாழ்வில் திருமணம் பல்வேறு காரணத்தால் தடைப்பட்டுக் கொண்டிருக்க நாயகனான பாபுவின் நேச உணர்வை எதிர்கொள்ள நேரிடுகிறது.

வளரிளம் பருவத்திலிருந்து பேரிளம் பருவத்திற்கு மாறும் பாபுவின் வேட்கை ஒருதலைக்காதலா, உடல் சார்ந்த பிரச்சினையா என்ற கேள்விகளெல்லாம் கடந்து கதையின் ஏதோவொரு புள்ளியில் இருவரையும் தொடர்ந்து இணைத்துக் கொண்டே காலத்தையும் கடத்தி விடுகிறது.

காலம் முதிர்வதேயில்லை ஆனால் கதாபாத்திரங்கள் அடையும் மூப்பும் பக்குவமும் இழப்பும் எதிர்பார்ப்பும் இருவருக்குமிடையேயான முடிவுறாப் பந்தத்தை அறுபடாமல் கெட்டிப்படுத்துகிறதா அல்லது நைத்து விடுகிறதா என்ற புதிரோடு விடுகிறேன்.

காலம் காலமாக திருமண பந்தத்தின் மூலம் தான் பாலியல் பந்தம் சரி என்ற தவறான கலாச்சார ஒழுக்கை தி.ஜாவின் கதாபாத்திரங்கள் மீறுவதும் அதுவே சங்கீத வாழ்வியலின் உச்சத்தை அடையப் போகும் வாயிலின் சாவியாகப் போகிற கருதுகோளாவதும் அக்கால கொள்கை முரண்பாடுகளை தகர்ப்பதே நாவலின் அதீதம்.

தி.ஜாவின் பாலியல் விவரிப்புகள் விரசமில்லாத புனைவின் நீந்தலில் நம்மை கடத்தி விடுவது எழுத்தாளுமையின் உச்சமே. கலையை நேசித்து உச்சத்தை தொட நினைக்கும் கதாபாத்திரத்தோடே குழந்தைத் திருமணம், நிலப்பிரபுத்துவம், பெண்களின் நிலை, கலப்புத் திருமணம் போன்ற சமூகப் பிரச்சினைகளோடே பயணிக்கிறது.

இந்த சமூகப் பிரச்சினைகள் யாவும் அவர் காலத்தில் பார்த்த மனிதர்களின் வாழ்வியல் முறைகளில் நடந்தேறிய உண்மைகளை தனக்குரிய புனைவு களத்தில் இணைத்திருப்பதாக தி.ஜாவின் பின்னுரையில் அறிய முடிகிறது. காலம் கடந்தும் மோகமுள் உயிர்ப்புடன் இருப்பதற்கான ஆணிவேர் போலியான கலாச்சார ஒழுங்கை மீறுவது மட்டுமல்ல, கதாபாத்திரங்களின் தனித்துவம் கொண்ட காத்திரமான நேர்மையான வெளிப்படுத்தலே.

user_5564

★ 5/5 Feb 02, 2026

ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுவேறு அளவுகோல்கள் வைத்திருக்கும் சமூகத்தில், ஒரே ஒரு நிகழ்வு சிக்கலான சுழல்களை உருவாக்கிவிடும் என்பதை அற்புதமாகக் காட்டுகிறது இந்த நாவல். தி.ஜா தன் காலத்திற்கு மிகவும் முன்னோடியாக எழுதியிருக்கிறார் — "அம்மா வந்தாள்" போன்ற அதிர்ச்சி மதிப்பு அல்ல, கதாபாத்திரங்களின் உண்மையான உணர்வுகளே இந்த நாவலின் சிறப்பு.

1930களின் நடுப்பகுதியிலிருந்து 1950கள் வரை கும்பகோணத்தின் பிராமண குடியிருப்பை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதை, அக்காலத்தின் அழகான விவரணைகளுடன், அதே நேரத்தில் சமூக மரபுகளை நுட்பமாக கேள்வி கேட்கிறது. கர்நாடக இசைக் கலைஞர்களின் குணாதிசயங்கள், நிலவிய பழக்கவழக்கங்கள், ஆணாதிக்கம், இலட்சியவாத கிளர்ச்சியாளர்கள் — முழுமையான பாத்திரப் படைப்பு.

இருபதுவயது மாணவன் பாபு, முப்பது வயது யமுனாவுக்கும் அவள் தாயாருக்கும் உதவத் தொடங்கும்போது அவர்களின் உறவில் ஒரு அப்பாவித்தனமான தூய்மை இருக்கிறது. வைத்தி, ராஜம் போன்ற வலுவான துணைப் பாத்திரங்கள் கதைக்கு ஆழம் சேர்க்கின்றன.

பக்கத்து வீட்டு இளம் மணப்பெண் தங்கம்மாவின் ஆசைக்கு ஒரு பலவீனமான தருணத்தில் பாபு இணங்கும்போது, அவனுக்குள் ஏதோ உடைகிறது — யமுனாவைத்தான் நேசிக்கிறான் என்பதை உணர்கிறான். மறுநாள் காலையில் யமுனாவிடம் ஓடிச்சென்று அழும் காட்சி — எழுத்தின் ஆழம் அபாரம்!

யமுனா நிராகரிக்கிறாள், தங்கம்மாவை பாபு தவிர்க்கிறான் — இவை எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கின்றன. பாபு தன் குருவிடம் கர்நாடக இசை கற்கத் தொடங்குகிறான் — அற்புதமான பாத்திரப் படைப்பு! பத்தாண்டுகள் உருண்டோடுகின்றன, குரு இறக்கிறார், பாபு சென்னைக்குச் செல்கிறான். யமுனா நாற்பதை நெருங்கியும் வாழ்க்கையால் மண்டியிடவைக்கப்பட்டிருக்கிறாள். மீண்டும் சந்திக்கும்போது தங்கள் வாழ்க்கையை எப்படி மறுகட்டமைக்கிறார்கள் என்பதே கதையின் எஞ்சிய பகுதி.

மோகம் ஒரு நேர்மறையான உந்துசக்தியாகக் காட்டப்படுவது — புதியதும் அல்ல, பழையதும் அல்ல. எழுத்து ஒருபோதும் வீரசமாக மாறாது. இசையின் குணமளிக்கும் சக்தி, நட்பின் பொறுப்பு, பெற்றோரின் எதிர்பார்ப்புகள், நல்ல மனிதர்களின் பெருமை — இவையெல்லாம் கதையில் அழகாகப் பின்னப்பட்டுள்ளன. தி.ஜா ஏன் இத்தனை உயரத்தில் வைத்துப் போற்றப்படுகிறார் என்பது இதைப் படித்தால் புரியும். மிகவும் பரிந்துரைக்கிறேன்!