Reviews for மோகமுள்
30 reviews total
user_5593
★ 4/5 Feb 02, 2026இசை, கதை நகர்வில் ஒரு மாபெரும் பங்கு வகிக்கிறது. தி.ஜா நிச்சயமாக இசை ஞானம் உள்ளவராகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இசைக்கு மனக்கட்டுப்பாடு அவசியம். ஒவ்வொரு முறை பாபு மனதின் கட்டுப்பாடு இழக்கும்போது இசை அவனை எப்படியோ கரைச்சேர்த்துக் காக்கிறது, உணரவைக்கிறது என்பதை அருமையாக எழுதியிருக்கிறார்.
திருமணங்களில் வயது இடைவெளி என்பது இன்று சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. ஒருவேளை தி.ஜா இன்று இருந்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பாரோ என்னவோ. ஆனால் அனைவரும் யோசிக்க மறக்கின்ற ஒரு கருவை விட்டுச் சென்றிருக்கிறார் — பாலியல் உணர்வுகள். தி.ஜா இதை மேலும் ஆராய்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அல்லது நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டாரோ. ஒருவேளை அக்காலத்தில் இவ்வளவு எழுதுவதே புரட்சிகரமான ஒன்று.
கதையின் நாயகி யமுனாவின் பாத்திரத்தோடு வெகுவாக ஒப்பிட்டுக்கொள்ள முடிகிறது. ஆனால் அவள் ஆரம்பத்திலிருந்தே ஏதேனும் ஒரு வேலையில் அமர்ந்திருக்கும் பெண்ணாகவோ வியாபாரம் செய்யும் பெண்ணாகவோ இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
user_5592
★ 3/5 Feb 02, 2026பாபுவிற்கு தன்னை விட பத்து வயது பெரிய பெண்ணிடம் ஒரு மோகம். பொதுவாக ஆசிரியர் ஜானகிராமனுக்கு மனிதனின் மென்னுணர்வுகளை தொட்டுச்செல்லும் கதையமைப்பில் ஆர்வமுண்டு.
ஆசிரியர் இதை 800 பக்கங்களுக்கு எழுதியுள்ளார். பல இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறார். இதை அவர் தெரிந்தே செய்கிறார். ஏனென்றால் எந்த இடத்திலும் இக்கதையை காதலோடு பொருத்தவில்லை. மோகத்தை மையமாய் கொண்ட கதை இது. "மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு" என்று பாரதி இரண்டு வரிகளில் சொன்னதை 800 பக்கங்களில் சொல்கிறார் ஆசிரியர்.
பெண் பிள்ளை என்றால் கலியாணம் தான் பிறவிப் பயனோ என்றிருக்கும் யமுனா ஒரு மிகைப்படுத்தப்பட்ட கேள்விக்குறியாய் இருக்கிறாள். அப்படியே 40 வயதும் கல்யாணம் ஆகாமலே கழிந்துவிடுகிறது. சூழ்நிலை கைதியாய் இருக்கும் யமுனா, அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்காத பாபு என்று கதை ஒரு சராசரி மனிதனின் சுபாவம் சொட்ட அமைந்துள்ளது.
1930களின் மெட்ராஸ், கும்பகோணம், தஞ்சை நகரைக் கண்முன்னே காட்டும் ஆசிரியர் சில நேரங்களில் பாமர சங்கீத ரசிகர்களை முட்டாள் என முத்திரை குத்தி உண்மையான கர்நாடக சங்கீதத்தை விரிவாக விளக்குகிறார். மொத்தத்தில் பாபுவோடு பயணித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது.
user_5591
★ 5/5 Feb 02, 2026"உள்ளே எப்போதும் நிலவிக்கொண்டிருக்கும் ஆதார ஸ்ருதிக்கு உலகத்து ஒலியெல்லாம் ஸ்தாயிகளாகவும் ஸ்வரங்களாகவும் கேட்கின்றன."
"என் ஞாபகங்கள், ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாற வேண்டும் என்று விரும்பினேனோ எல்லாமாக சேர்ந்து இந்த நாவலை உருவாக்கியிருக்கிறேன்" என்று கதையின் பின்னுரையில் தி.ஜா எழுதியிருப்பார்.
1950களின் கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், சென்னையை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். 3 இரவில் இதைப் படித்து முடித்தேன், ஆனால் நெடு நாட்கள் இதனோடு பயணித்த ஒரு இணக்கம்.
பாபு தன்னை விட பத்து வயது மூத்தவளான யமுனாவின் மீது மோகம் கொள்கிறான். இதற்கு எதிராக எப்போதும் போல நம் சமுதாயக் கோட்பாடுகள். ஆனால் அது மட்டுமல்ல கதை! காதல்-இசை, தந்தை மகன் உறவு, நட்பு, சகோதர வாஞ்சை, குரு பக்தி, இசைத் தேடல், காமத் தேடல் என பல நுண் கதைகள். இவை எல்லாவற்றையும் மீட்டும் இசையாக மோகம்.
நான் எதிர்பாராத முடிவு தான் — அது காலத்தின் வெற்றியா? யமுனாவின் நேர்மைக்கான வெற்றியா? பாபுவின் மன உறுதிக்கான வெற்றியா? இசையின் வெற்றியா? மோகத்தின் வெற்றியா? என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் இது தி.ஜாவின் வெற்றியே!
"காதல்", "இசை" என்ற இரு ஆழ்கடலில் நம்மை நீந்த விடுகிறார். சமுதாயக் கோட்பாடுகளாக வரும் தடைகளைக் கடந்து கரை சேருமிடத்தில் காதலும் இருக்கும், இசையும் இருக்கும்!
user_5590
★ 5/5 Feb 02, 2026இருநூற்றி நாற்பத்தெட்டு எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியில் அந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி எத்தனையோ லட்சம் வார்த்தைகளை உருவாக்கலாம். அத்தனை வார்த்தைகளையும் மாற்றி மாற்றி உபயோகப்படுத்தி கோடிக்கணக்கான வாக்கியங்களை உருவாக்கலாம். அப்படி உருவாக்கப்படும் வாக்கியங்களில் சில கவிதைகளாக, கதைகளாக புத்தகங்களில் இடம்பிடிக்கும், பாடல் வரிகளாக வெள்ளித்திரையில் மின்னும், சில வரிகள் வரலாற்றையே மாற்றும். வாக்கியங்களின் சக்தி என்பது அது அமையும் பொருட்டிலே உள்ளது. அப்படி வாக்கியங்களை அமைக்கும் வித்தையடைந்தவர்கள் சிலரே. அந்த சிலருள் சிறப்பானவர் ஜானகிராமன்.
நாவலைப் படிக்கும் போதே மெல்லிய ராகம் பின்னணியில் கேட்டுக்கொண்டே இருப்பது போன்ற உணர்வு நமக்கு இருக்கிறது. மோகமுள் நாவலைப் பொறுத்தவரை அது யாரும் எழுதாத கதையோ புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உரைநடையோ அல்ல. உங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தால் உங்கள் தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவனின் கதை அது. அப்படியிருந்தும் இந்த நாவல் இத்தனை அற்புதமாக இருப்பதற்கு காரணம் ஆசிரியரின் வித்தை மட்டும் தான்.
நாவலைத் தர்க்க முறையில் கூட அணுக முடியாது அளவு புனிதமாக இருப்பது மிகவும் ஆச்சரியம். நாவலின் கதாபாத்திரங்கள் எதுவும் இதிகாசத் தன்மையுடன் சமூகத்தில் தனித்தோ உச்சாடனத்தில் இருப்பது போன்றோ இல்லாமல் இருப்பதே ஒரு தனி சிறப்பு. கலையை மையமாகக் கொண்ட ஒரு நாவலில் கதாபாத்திரங்களுக்கு இடையேயான போட்டியோ பொறாமையோ அகங்காரமோ பழிவாங்கலோ இல்லாமல் இருக்கும் நாவல் இது தான்.
இந்தத் தமிழ் நாவலை தமிழ் வாசகனாகிய நீங்கள் இதுவரை படிக்காமல் இருந்தால் இழப்பு உங்களுடையதே. இன்னும் ஆயிரம் மடங்கு பேசப்பட வேண்டிய, இன்னும் லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட வேண்டிய, இன்னும் கோடிப்பேரின் கைகளுக்குச் செல்ல வேண்டிய நாவல் இந்த மோகமுள்.
user_5589
★ 5/5 Feb 02, 2026உங்கள் வாழ்வில் காணும் "க்ரஷ்" என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் இதுதான்.
user_5588
★ 4/5 Feb 02, 2026அருமையான புத்தகம். சிறப்பான கதையாடல். தைரியமான கதை. திரைப்படத்தையும் பார்க்க வேண்டும், ஆனால் புத்தகத்தின் அருகில் கூட வர முடியாது என்பது உறுதி!
user_5587
★ 5/5 Feb 02, 2026மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று! கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்.
user_5586
★ 5/5 Feb 02, 2026செவ்வியல் நாவல். தீவிர தமிழ் வாசகர்கள் யாரும் இதைத் தவறவிடக்கூடாது.
user_5585
★ 5/5 Feb 02, 2026சிலவற்றை சொல்லி புரியவைக்க முடியாது. அனுபவித்தால் தான் அதன் இன்பம் கிடைக்கும்.
மோகமுள் என்னை குத்தவே இல்லை. மயில் இறகாய் என் நெஞ்சை வருடிவிட்டுச் சென்றது. இரு வாரங்கள் பாபுவுடன் நான் வாழ்ந்துள்ளேன். ஆனால் இந்த வாழ்வு என் மனதில் நீங்காது இருக்கும் என்பது திண்ணம்.
user_5584
★ 5/5 Feb 02, 2026இந்த நாவலைப் படிப்பது என் வாழ்நாள் இலக்கும் சாதனையும். இந்த நாவல் தன் காலத்திற்கு மிகவும் முன்னோடியானது. இன்றும் கூட இந்த கதாபாத்திரங்களை இந்த நோய்வாய்ப்பட்ட சமூகம் ஏற்றுக்கொள்ளாது.
தி.ஜா வாழ்க்கையைப் பற்றி வேறுபட்ட பார்வையும் எண்ணமும் கொண்டவர். வாழ்க்கையின் உண்மையை எழுதும் தைரியம் கொண்டவர். சமூகத்தின் விதிகளுக்கும் தடைகளுக்கும் அப்பாற்பட்டது வாழ்க்கை என்பதை நிரூபித்திருக்கிறார்.