Reviews for நீர் வழிப்படூஉம்

29 reviews total

user_11637

★ 5/5 Feb 02, 2026

தேவிபாரதி என்னும் புனைப் பெயரில் எழுதிவரும் எழுத்தாளர் ராஜசேகர் அவர்கள் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர். கொங்கு பகுதிக்கான கலாச்சாரத்தை வாழ்வியலை தன்னுடைய கதைகளின் மூலமாகவும் புதினங்களின் மூலமாகவும் இலக்கிய உலகத்திற்கு பங்களித்திருக்கிறார்.

இந்த புதினத்தின் நாயகரான காரு மாமா — அவரின் இறப்பின் வழியே ஆரம்பிக்கும் கதையானது முன்னும் பின்னும் நகர்ந்து அவர் வாழ்வையும் அந்த மண்ணின் வாழ்வியலையும் கொஞ்சும் கொங்குத் தமிழில் கொடுத்திருக்கிறார் தேவிபாரதி.

உடையாம்பாளையத்தின் குடிநாவிதரான காரு மாமா அந்த ஊருக்கு எப்படியான சூழலில் வந்தார், அவரின் வரவிற்குப் பிறகு அவர் வாழ்வில் நிகழ்ந்த கொந்தளிப்பான நிகழ்வுகள், இடையே 70களின் காலச்சூழலில் இருந்த வாழ்வியல் என மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பாக இருக்கிறது இந்த புத்தகம்.

இன்றைக்கும் ஒருசில கொங்கு கிராமங்களில் நாவிதர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிகழ்வுகளிலும் முக்கியமானவர்களாக கருதப்படுகிறார்கள். 70களிலும் 80களிலும் முடி திருத்தபவரின் வாழ்க்கை தொண்டு ஊழியம் செய்து வயிற்றைக் கழுவும் வாழ்க்கையாகத் தான் இருந்திருக்கிறது.

ராசம்மா அத்தையின் பிரிவுக்குப் பிறகான காரு மாமாவின் தனிமையும் வலிப்பு நோயும் அவரை உருக்குலைய செய்கிறது. அவரின் தனிமையை, யாருமற்ற வீட்டில் அநாதையாக நினைத்துக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கையை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

ஒரு மனிதனின் வாழ்வின் ஊடாக தான் சார்ந்த சமூகத்தின் வலியையும் வேதனையையும் சின்னச் சின்ன சந்தோசங்களையும் பிரதிபலித்திருக்கிறது இந்த படைப்பு.

user_11636

★ 5/5 Feb 02, 2026

நான் படித்த சிறந்த புத்தகம் இது! ஆசிரியரின் எழுத்து நடையும் மிகவும் பிடித்திருந்தது.

user_11635

★ 5/5 Feb 02, 2026

தமிழக கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவரும் காலச்சுவடின் பொறுப்பாசிரியராகவும் இருந்த தேவிபாரதியின் மூன்றாவது நாவல் இது. 2023ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற இந்நாவல் 2020ல் முதற்பதிப்பு கண்டுள்ளது.

நாவலாசிரியர் தனது சொந்த ஊரான கொங்கு பகுதியை சேர்ந்த உடையாம்பாளையத்தில், நாவிதக்குடியை சேர்ந்த காருமாமாவின் மரணத்தையும் அவரை காடு கொண்டு சேர்க்கும் படலமும் தான் பிரதான கதைப் போக்காக எழுதியிருக்கிறார்.

காருமாமாவுடன் கூடப் பிறந்த சகோதரிகள், அவர்களது கணவர்கள், மகன்கள், மகள்கள், காருமாமாவின் மனைவி, வாரிசுகள் என பல கதாமாந்தர்களின் கிளைக்கதைகளும் நாவலில் இடம்பெற்றுள்ளது.

1970-80 களில் கதை நடைபெறுவதாக அனுமானிக்கலாம். கொங்கு பகுதி நாவிதக்குடி வட்டார வழக்கில் எழுத்துநடை செல்வதால் ஆரம்பத்தில் சற்றே கடினமாக உள்ளதென்றாலும், பிறகு போகப்போக ஒன்றிவிடமுடிகிறது.

user_11634

★ 4/5 Feb 02, 2026

ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருக்கும் ஒன்று கதை! கதைகளின் வாயிலாக தான் நாம் எல்லா காவியத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம்.

நான் வசிக்கும் நிலத்தில், என்னுடன் இருக்கும் மனிதர்களைக் கண்டு கண்ணீர் சிந்தினேன், சிரித்தேன், மன்னித்தேன், மண்டியிட்டு மன்னிப்பு கேட்டேன். காரு மாமா, பெரியம்மா, சுந்தராடி வலசு பெரியம்மா, பெரியப்பா, ஈஸ்வரி அத்தை, நாச்சிபாளையத்தார் — எல்லா மனிதர்களும் நம்முடையவர்கள்.

குடிநாவிதர்கள் பற்றிய வழக்காறு, அவர்கள் கற்றுக்கொண்ட சடங்குகள் — நான் பார்த்த ஒன்று, ஆனால் முழுவதுமாக தெரிந்துகொள்ள முயற்சிக்காத ஒன்று. ஒப்பாரியின் ஆழம் அறிய முயல்கிறேன்.

ஒருவரின் மரணம் பல உறவுகளை மன்னிக்க வைக்கிறது, மன்னிப்பு கேட்கத் தயங்கும் போது எல்லாவற்றையும் நொறுக்கி ஒரு கை கொடுக்கிறது. தேவிபாரதியின் எழுத்துக்கள் நிச்சயமாக என்னைப் பின்தொடரும்.

user_11633

★ 4/5 Feb 02, 2026

இந்தப் புத்தகம் சாகித்ய அகாடமி விருது மூலம் கவனத்திற்கு வந்தது. புத்தகமோ ஆசிரியரோ பற்றி முன்பு எதுவும் தெரியாது. வாங்கியவுடனே படிக்க ஆரம்பித்தேன். தகப்பன் இல்லாத அல்லது விவாகரத்து பெற்ற குடும்பத்தின் மகனாக இருப்பதன் கனவுகள் போன்ற பயம் எனக்கு எப்போதும் இருந்தது. இந்த புத்தகம் அந்த கனவை நினைவுபடுத்தியது.

ஒரு சோகமான நிகழ்வில் ஆரம்பிக்கும் கதை, அந்த நிகழ்வின் வழியாகவே பயணிக்கிறது. ஆரம்பத்தில் எளிதான வாசிப்பு அல்ல — கவனமும் முயற்சியும் தேவை. ஆனால் அதன் பிறகு சுவாரசியமாகச் செல்கிறது.

கோயம்புத்தூர் சுற்றுவட்டாரத்தில் வாழும் குடி நாவிதர் சாதி மக்களின் வாழ்க்கையை அழகாகச் சொல்கிறது இந்த நாவல். நல்ல உணர்வோடு முடிகிறது கதை.

user_11631

★ 4/5 Feb 02, 2026

நீர் வழிப்படூஉம் என்ற சொல்லைப் பார்த்தவுடன் நினைவுக்கு வருவது கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற புறநானூற்றுப் பாடல் தான். உலகின் தலைச்சிறந்த அறிஞர்களும் ஞானிகளும் புரிந்துகொள்ள தவறிய ஒரு வாழ்க்கை நெறியை எப்படி ஒரு தமிழ் கவிஞன் எழுதிவிட முடியும் என்ற வினாவுக்கு விடை தான் இந்த நாவல்.

உடையாம்பாளையம் கிராமத்தில் யாருமற்ற சிதிலமடைந்த குடிசையில் வாயில் நுரைதள்ள ரத்தக்கசிவுடன் குப்புற விழுந்து கிடக்கும் குடிநாசுவனான காருமாமாவின் இறப்புடன் தான் கதை தொடங்குகிறது. காருமாமாவின் தங்கை மகன் கூறுவது போல கதை தொடர்கிறது. ராசம்மா அத்தை செட்டியோடு தன் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடியது காருமாமாவின் வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனை.

இலக்கியம் என்பது என் மண்ணின் மக்களை, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அப்பட்டமாக, உண்மையாக, உயிரோட்டத்துடன் உணர்வுபூர்வமாக படைப்பதுதான் சிறந்த இலக்கியம். அந்த வகையில் நீர் வழிப்படூஉம் ஒரு தலைசிறந்த இலக்கியம் தான்.

தன் சொந்தத்திற்குள் கோபம், போட்டி, பொறாமை, விருப்பு, வெறுப்பு என கலவையான உணர்வுகள் இருந்தாலும் காருமாமா போன்ற ஒற்றை உயிர் தான் அந்த மொத்த குடும்பத்தையும் ஒன்று சேர்த்து உறவாட செய்கிறது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி வரையறையில்லா பேரன்பு மட்டுமே அவர்களுடைய நிரந்தரமான நிறைச்செல்வம்.

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே ஊசலாடும் இந்த மனிதப்பிறவியின் ஒரே பற்றுதல் பேரன்பைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

user_11630

★ 5/5 Feb 02, 2026

இந்த நூலின் அட்டைப்படமே பல்வேறு உணர்வுகளை நம்முள் கடத்துகிறது. இந்நூல் குடிநாவிதர் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புதினம். காருமாமா என்ற ஒற்றை நபரை கருவாகக் கொண்டு அவரைச் சுற்றியுள்ள மனிதர்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

ஈரோடு பகுதியை மையமாகக் கொண்டு கொங்கு பகுதி மக்களின் வழக்கியலை வழக்காறு மொழியில் எழுதியுள்ளார். குடிநாவிதர்கள் எளிமையாக முடிதிருத்துபவர்கள் மட்டுமல்ல — அவர்கள் முன்னொரு காலத்தில் அரும்பெரும் பணியை ஆற்றியிருக்கின்றனர். பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்து மக்களின் வாழ்விலும் ஓர் அங்கமாக இருந்துள்ளனர். பிரசவம் பார்ப்பது, தொப்புள்கொடி நறுக்குவது, நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது என மருத்துவர்களாக அனைத்து மருத்துவ முறைகளையும் அறிந்துள்ளனர் என்பது வியப்பின் உச்சம்.

சாதி படிநிலைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும், குடிநாவிதர்கள் எவ்வாறு போற்றப்பட்டனர், வீட்டுவேலை செய்வது முதல் அடிமைத்தனமாக எவ்வாறு இழிவுபடுத்தப்பட்டனர் என்னும் முரண்பாடுகளை சிறப்பாக விளக்கியுள்ளார்.

ஒருவர் இறப்பின்போது கூடும் கூட்டத்தை வைத்தே அம்மனிதனின் வாழ்வை கணித்துவிடலாம். அப்படித்தான் இந்நூல் உறவின் முக்கியத்துவத்தையும், உறவின் பலத்தையும், உறவுமுறைகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒப்பாரிப் பாடல்கள் பற்றியும் அதனைப் பாடுபவர்களின் வாழ்வியல் சிறப்புகள் பற்றியும் மிகவும் அருமையாக எழுதியுள்ளார்.

user_11629

★ 4/5 Feb 02, 2026

பரபரப்பாக ஆரம்பித்து அட பாவமே என்று முடிந்த நாவல். மனுசனாக பொறந்துட்டா சாவுக்காக காத்திருந்து தான் ஆகணும், ஆனா அந்த சாவு வரதுக்குள்ள பல நல்ல மனுஷங்களை சம்பாதிச்சுக்கணும். அப்படி தான் காரு மாமா உடையாம்பாளையம் மக்களையும் சொந்தக்காரர்களையும் சம்பாதிச்சு வெச்சிருக்காரு.

மனுஷனுக்கு இழப்பு அதிகமானாலும் வாழ்க்கையை வாழ்ந்தபடியே போய்க்கிட்டு இருக்காரு. வலிப்பு நோய் மட்டும் வரலேன்னா ஈரோடு பண்ணையார்களுக்கு குடி நாவிதனா வாழ்ந்து காலத்தை வேறுபக்கம் திருப்பியிருப்பாரு.

உறவுமுறைகள், அவர்களின் மனிதப் பண்புகள், வாழ்க்கைப் பயணங்கள், வயது நகர நகர தடுக்க முடியாத மாற்றங்கள் என நாவல் பல விஷயங்களை நமக்கு கடத்துகிறது.

user_11628

★ 5/5 Feb 02, 2026

குடி நாவீதர்களின் எளிய வாழ்க்கையை சொல்ல போகும் படைப்பு என்ற பாவனையோடு நாவல் தொடங்குகிறது. ஆனால் நாவல் செல்ல செல்ல அதன் தீவிரமும் கதை நேர்த்தியும் சொல்லப்பட்டிருக்கும் விதமும் நம்மை திணறடிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். வட்டார வழக்குகள் படிப்பதற்கு சிரமமாகவே இருந்தது, நிறைய சொற்கள் புரியாமல் இருந்தது. நாவிதர்களின் வாழ்க்கையின் வழியாக அவர்களின் கொடுமையான வறுமையை சித்தரிக்கிறது இந்த நாவல்.

நாவலின் மையப் பகுதியில் தான் கதை சொல்லிக்கொண்டு இருப்பவரின் பெயர் நமக்கு தெரிய வருகிறது — கதை சொல்லியின் அம்மா பாசமலர் திரைப்படத்தின் மீது கொண்டிருந்த தீவிரமான பற்று காரணமாக அதில் சிவாஜி கணேசன் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயரை மகனுக்கு வைத்திருக்கிறார்.

கம்பறு அருவா இடுப்பில் சொருகிக்கொண்டு பிள்ளை பிரசவம் பார்த்து தொப்புள் கொடி அறுத்து நஞ்சுக்கொடியை அற்றி அந்த குழந்தையை சுத்தம் செய்து தாயிடம் கொடுக்கும் பெரியம்மா ஒரு முக்கியமான பாத்திரமாக வருகிறாள். தான் பிரசவம் பார்த்த குழந்தைகளை காணும் போதெல்லாம் அவர்களை அழைத்து மூக்கு முகத்தை தடவி பார்த்து சந்தோசமடைகிறாள்.

எந்த அச்சியில் குடும்ப உறவுகள் கட்டப்பட்டு இருந்தனவோ அவை இன்று உடைக்கப்பட்டதாக தோன்றுகிறது. காரு மாமாவை சுற்றி அத்தனை உறவுகளும் அவருக்காக அவருடன் இருக்கவே நினைக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதோ ஒருவரின் கட்டுப்பாட்டிலும் அவரின் அர்ப்பணிப்பிலும் குடும்பம் பின்னப்பட்டிருக்கும். காரு மாமா போன்றவர்களும் குடும்பத்திற்காக தன்னை பலியிட்டு கொள்பவர்களும் மிக அரிதாக ஆகிவிட்டார்கள்.

வறட்சியும் வறுமையும் இயலாமையும் அந்த மக்களை வதைக்கும் போது அவர்கள் தங்களுக்குள்ளாகவே வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு மரணத்தின் போது கசப்பும் பகையுணர்வும் மறந்து இயல்பாக அவர்களை ஏற்றுக் கொண்டு ஒன்றாக கலந்து விடுகிற பழக்கம் — அதே போல தான் காரு மாமாவின் மனைவியும் திரும்பி வரும்போது அவர்களை அந்த உறவுகள் ஏற்றுக் கொள்கிறார்கள்.