Reviews for நீர் வழிப்படூஉம்
29 reviews total
user_11647
★ 4/5 Feb 02, 2026காருமாமா என்கிற ஆறுமுகத்தை காடேத்தும் சடங்கில் இருந்து ஆரம்பிக்கும் கதை. குடிநாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உள்ளார்ந்த உறவை சித்தரிக்கிறது.
அவருடைய பிரிந்துபோன குடும்பம் அவருடைய இறப்பின் மூலமே ஒன்று சேர்கிறது. தவறுகள் மன்னிக்கப்படுகிறது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பு பகிரப்படுகிறது.
user_11646
★ 5/5 Feb 02, 2026கொங்கு மண்டலத்தில் இருந்து வந்தவன் என்பதால் எழுத்துநடை மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. குடிநாவிதர் என்றொரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியையும் அவர்களது வாழ்வியலையும் பற்றி மிகவும் எதார்த்தமாக, எள்ளளவும் மிகைப்படுத்தாமல் எழுதியுள்ளார்.
பொதுவாக ஒரு புத்தகத்தின் வெற்றி என்பது அதிலுள்ள உயிர்த்தன்மை — வாசகன் அதனினுள் வாழ வேண்டும். அதை இந்த நூல் செவ்வனே செய்துள்ளது.
user_11645
★ 5/5 Feb 02, 2026சிறிய புத்தகம், மிகவும் நன்றாக எழுதப்பட்டுள்ளது. வட்டார வழக்கு காரணமாக ஆரம்பத்தில் படிப்பது சற்று கடினமாக இருந்தது. முதல் இரண்டு அத்தியாயங்களில் இருமுறை நிறுத்திவிட்டேன். இம்முறை உறுதியோடு ஆரம்பித்தேன்.
ஆசிரியர் முதல் பாதியில் கதாபாத்திரங்களையும் உறவுகளையும் கட்டமைக்கிறார். 30-40% கடந்தவுடன் புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை! கதை இறுதியில் வேகம் பிடிக்கிறது, கடைசி அத்தியாயம் அற்புதம்!
முடிவு கலவையான உணர்வுகளை தரலாம் — ஆனால் நிச்சயம் மறக்க முடியாத ஒன்று!
user_11644
★ 5/5 Feb 02, 2026நாவலின் தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ நீரின் முக்கியத்துவம் வாய்ந்த நாவல் என்று நினைத்தேன். ஆனால் படித்து முடித்த பிறகு தான் தெரிந்தது — வாழ்வின் மையம் குறித்த முக்கியத்தன்மை கொண்டது இந்த நாவல்.
இந்நாவலின் தனித்துவமே அனைவரையும் நடுநிலையாக நின்று எடுத்துக்கூறிய கதாபாத்திரங்கள் ஆகும். மொழிநடை மிகவும் எளிமையான கொங்கு நாட்டு பேச்சு வழக்கில் வித்தியாசமான முறையில் எடுத்துரைத்துள்ளார்.
தேவிபாரதி அவர்கள் இப்புத்தகத்தின் கதை எழுத்தாளராக மட்டுமல்லாமல் இக்கதையின் நாயகனாகவும் கதைசொல்லியாகவும் ஆவார்.
user_11643
★ 5/5 Feb 02, 2026சாகித்ய அகாடமி விருது பெற்ற புதினம் என்பதற்காக புத்தகக் கண்காட்சியில் வாங்கியது தான் இந்த புத்தகம். என்ன கதை என்று தெரியாது, தேவிபாரதி யாரென்று தெரியாது. அட்டைப்படத்தைத் தாண்டி எதுவுமே தெரியாது.
இத்தனை நாள் அலமாரியில் உறங்கிக்கொண்டிருந்த இந்த தேவிபாரதி, கடந்த நான்கு நாட்களாக என்னை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார். உறவுகள் பற்றிய என் பார்வையை மற்றொரு கரைக்கு அழைத்துச் சென்று காட்டி "இப்போது என்ன சொல்கிறாய்" எனக் கேட்டுவிட்டு கடந்து செல்கிறார்.
Non-linear ஆக கதையின் காலத்தில் முன்னும் பின்னுமாக நம்மை இழுத்து விளையாடுகிறார். காஃப்காவை படிக்கும்போது போல — Stream of consciousness என்ற நடையை தேவிபாரதி எழுத்தில் உணர்ந்தேன். பல இடங்களில் கொங்கு வட்டார வழக்கில் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போவார்கள்.
முதல் வாசிப்பில் காருமாமா மாமனிதனாக வியக்க வைத்தார். "பழசையெல்லாம் மனசுல வச்சுகிட்டு பாக்காம வந்துறாத" என்ற அவரது வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
இரண்டாவது வாசிப்பில் காருமாமா மட்டுமல்லாமல் அவரைச் சுற்றியிருந்த உறவுகள் பற்றி ஆழமாக புரிந்தது. குடிநாசுவ சமுதாய மக்களின் வாழ்க்கை, கிராமிய கலாச்சாரம், ஒப்பாரி, பால்யகால நினைவுகள் என இக்கதையில் பல அடுக்குகள் உள்ளன.
நான் தொடர்ந்து இரு முறை அடுத்தடுத்து வாசித்த முதல் புத்தகம் இது தான். ரொம்ப நாளுக்கு அப்புறம் என் மாமாவுக்கும் போன் பண்ணி பேசினேன் படித்து முடித்துவிட்டு.
user_11642
★ 4/5 Feb 02, 20262023க்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல். காருமாமா என்னும் குடிநாவிதனை காடேத்தும் சடங்கில் இருந்து ஆரம்பிக்கிறது.
ஒரு மனிதனின் வாழ்வின் ஊடாக தான் சார்ந்த சமூகத்தின் வலியையும் வேதனையையும் சின்னச் சின்ன சந்தோசங்களையும் பிரதிபலித்திருக்கிறது இந்த படைப்பு.
இந்நாவலின் தனித்துவமே அனைத்து கதாபாத்திரங்களையும் நடுநிலையாக நின்று எடுத்துக்கூறியதுதான். எந்த ஒரு இடத்திலும் வேறுபாடின்றி கதாபாத்திரத்தை ஏற்றி இறக்கிக் கூறியிருக்கிறார் ஆசிரியர் தேவிபாரதி.
கொங்கு பகுதி நாவிதக்குடி வட்டார வழக்கில் எழுத்துநடை செல்வதால் கதைக்குள் நுழைந்து பயணிக்க சற்றே கடினமாக உள்ளதென்றாலும், பிறகு ஒன்றிவிடமுடிகிறது.
சாதிய அடுக்கில் கீழ்பகுதியிலும் வர்க்க வேறுபாட்டில் விளிம்புநிலையிலும் உள்ளவர்களின் வாழ்வை மெல்லிய நீரோட்டம் போல காட்டியிருக்கிறது இந்நாவல்.
user_11641
★ 4/5 Feb 02, 2026ஒரு மனிதனுடைய இறப்பு என்ன செய்யும் — தன்னோடு அந்த மனிதனுக்கு இருந்த உறவை, அதன் உன்னதத்தை, ஆழத்தை, அழுக்கை ஞாபகப்படுத்தும். ஏற்கனவே இறந்த, இழந்துவிட்ட மனிதர்களின் நினைவுகளுக்கு இட்டுச் செல்லும். பழைய முறிந்து போன உறவுகளையும் அசைபோட வைக்கும்.
காரு மாமா — உடையாம்பாளையத்துக் குடி நாவிதன். பண்ணையமார்கள் சொல்கிற குற்றவேல்களை திறம்பட செய்வது, கோவில் திருவிழா, வீட்டு விசேஷம், கிடாய் வெட்டினால் இரண்டு நாள் ஆனாலும் உரிச்சு சுத்தம் பண்ணி தனக்குக் கிடைக்கிற பங்கு கறியைக் கூட பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கும் சரிபாதியாக பிரிச்சு கொடுப்பது — இப்படியான நினைவுகள் தான் காரு மாமா பற்றி யோசிக்கும்போது தோன்றுவது.
ராசம்மா அத்தை ஓடிப்போனது கூட பெருசாக பாதிக்காத மாமா, பிள்ளைகளும் சேர்ந்து போயிருக்கிறார்கள் என்று தெரிந்ததும் தெருவெல்லாம் பைத்தியம் மாதிரி ஓடி தேடினதும், மகளோட அறுந்து விழுந்த கொலுசை வாழ்க்கை முழுக்க இறுக்கமாக பிடிச்சுக் கிட்டதும் — மனதை கலங்கடிக்கும் காட்சிகள்.
காலமும் உறவுகளும் கைவிட்ட மாமா — உடல் எல்லாம் மெலிஞ்சு, முகத்திலும் தலையிலும் முடி வளர்ந்து சிக்கு பிடிச்சு நடுரோட்டில் அலைந்து திரிந்த கோலம் இப்போ நினைச்சாலும் கண்ணில் நீர் தான் வருகிறது.
நீர்வழிப் படூஉம் — உறவுகளின் தேவையையும், அதனுள் நடக்கும் உணர்வு ரீதியான பாதிப்புகளையும், மன்னிப்பையும், மீண்டும் ஏற்றுக்கொள்ளலையும் அப்பட்டமாக பிரதி எடுத்துக் காட்டுகிறது. இதில் போலிகள் இல்லை — முழுக்க முழுக்க மனிதர்களும் அவர்தம் மேன்மைகளும் கீழ்மைகளும்.
user_11640
★ 5/5 Feb 02, 2026திருப்பூரில் உள்ள உடையாம்பாளையத்தில் வாழ்ந்த குடிநாவித குடும்பமான காருமாமாவும் பெரியம்மாவும் வாழ்ந்த வீட்டின் திண்ணையில் நானும் ஒரு கையாக தாயம் விளையாடிய உணர்வை சென்னையில் வசிக்கும் என்னுடைய மனம் உணர்ந்தது — இப்படி ஓர் வாழ்வை என்னுடைய வாழ்விற்கு அறிமுகப்படுத்திய தேவிபாரதிக்கு மனமார்ந்த நன்றிகள்.
அவருடைய வாழ்வில் இருந்து இக்கதாபாத்திரத்தை எடுத்து தன்னுடைய புனைவின் வாயிலாக இயக்கிய இந்நாவல் தமிழில் குடும்பவியலைச் சார்ந்த நாவல்களில் ஒரு முக்கியமான நாவலாக இருக்கக்கூடும்.
குடிநாவித சமூக மக்கள் என்று இருந்தார்கள் என்று இந்நாவலின் ஊடாகத்தான் அறிய நேர்ந்தது. அவர்கள் வாழ்வியல் வலிகளை வாசிக்கும் போது பல தருணங்களில் மனம் உருகி கசிந்தது. ஒரு குடும்பம், அந்த குடும்ப வாழ்வியல் சிக்கல்கள், உறவுகளில் ஏற்படும் முரண்கள், அண்ணன் தங்கையின் உறவு, உறவு பிரிவுகளின் ஏக்கம் — மிகவும் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் எழுதியுள்ளார்.
தேவிபாரதியின் எழுத்தும் அதனின் இறுக்கமும் ஆரம்பத்தில் கடினமாகவே இருக்கும். நான்கைந்து அத்தியாயத்தை கடந்தால் எளிதில் பிடிபடும். சமகால எழுத்தாளர்களில் தேவிபாரதி ஒரு முக்கியமான படைப்பாளி. இந்நாவலிற்கான சாகித்ய அகாடமி பரிசை அளித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
user_11639
★ 4/5 Feb 02, 2026"ஒரு ஊர்ல.." என்று ஆரம்பித்த கதைகளாலேயே நம்முடைய பால்யங்கள் நிரம்பி வழிந்தன. தலைமுறைகளைக் கடந்து அந்த ஊர் நம்மோடு வந்து கொண்டிருக்கிறது. ஒரு ஊர் சுமந்து வரும் கதைகளை எதற்குள் அடக்குவது?
நீர்வழிப்படூஉம் ஒரு ஊரின் கதை. உறவுகள் வழியாக ஒரு ஊரின் பிறப்பை, வாழ்வை, இறப்பைச் சொல்லும் கதை. காரு மாமா, ராசம்மா அத்தை, முத்து அம்மா, பெரியம்மா — அத்தனை பேரும் அசலான மனிதர்கள். போலித்தனமற்ற அசலான கதை.
கிராமத்தில் இருப்பவர்கள் சூதுவாது தெரியாத வெள்ளந்திகள் என்ற மரபை எல்லாம் உடைக்கிறார். காருமாமாவே தனக்கு வரும் கருணைத் தொகையை அக்காவிடம் மறைக்கிறார். நல்லவனாக இருக்கும் நாயகனை விட்டு ராசம்மா அத்தை வேறொருவனுடன் ஓடுகிறாள்.
தாயக்கட்டையக் கொண்டு இந்தக் கதையின் முடிவை, இன்னொரு வாழ்வின் தொடக்கத்தை உருட்டியிருப்பது நூலாசிரியரின் நுட்பம். புதர் மண்டி, பாழடைந்து, வறட்டுப் பொட்டலாக, மனிதர்கள் வாசமின்றி நம்மை விட்டுக் கடந்து கொண்டிருக்கும் பாளையங்கள், குளங்கள், பட்டிகள், குடிகள் — எத்தனையோ ஊர்களின் சன்னமான ஒப்பாரி நீர்வழிப்படூஉம்.
user_11638
★ 5/5 Feb 02, 2026"பழைய விஷயங்களை மனசில் வைத்து யாரையும் வெறுக்காத, எல்லாரிடமும் அன்பா இரு." இந்த நாவலை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய முக்கியமான எண்ணம் இதுதான்.
மனித வாழ்க்கை, உறவுகளின் சிக்கல்கள், சுகங்கள், துக்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய உண்மைகளை மிக எளிமையாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்துகிறது. சிலருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாலும் ஒரு சின்ன பிரச்சனைக்காகவே உறவை முறித்து விடுகிறோம். இது மனித இயல்பு, இந்தச் சமூகத்தில் இருக்கும் எதார்த்தம்.
கதை நேரடியாக செல்லாது — Non-linear முறையில் எழுதப்பட்டிருக்கும். கவனத்துடன் வாசிக்கும்போதுதான் கதையின் அனைத்து விவரங்களையும் புரிந்துகொள்ள முடியும். ஆரம்பத்தில் 60-70 பக்கங்கள் குழப்பமாகத் தோன்றலாம், ஆனால் இந்த குழப்பமே நாவலின் தனித்துவம்.
கொங்கு தமிழின் பயன்பாடு கதையின் தனித்துவத்தை மேலும் அதிகரிக்கிறது. கொங்கு தமிழில் வளர்ந்தவன் என்பதால் அந்த உரையாடல்களின் உணர்வுகளை மிகவும் நெருக்கமாக உணர முடிந்தது.
மனித உறவுகளின் நுணுக்கங்களை, அவற்றின் மகிழ்ச்சியையும் துயரத்தையும், அதேசமயம் வெறுப்பின் வெறுமையையும் வெளிப்படுத்திய இந்த நூல் தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய படைப்பாக அமைந்துள்ளது. உலக இலக்கியங்களுக்கு இணையான படைப்பாக இந்த நாவல் தோன்றியது. ஒவ்வொருவரும் ஒருமுறை இந்த நாவலை வாசிக்க வேண்டும்.