Reviews for பேட்டை
29 reviews total
user_10052
★ 4/5 Feb 02, 2026சில புத்தகங்களை வாசிக்கும் போது அதன் கதாபாத்திரங்கள் எழுந்து வந்து நம்முடன் நடமாடத் தொடங்கிவிட்டதாகவே தோன்றும். பேட்டை அவற்றுள் ஒன்று. நம் கையை இறுகப் பிடித்து சிந்தாதிரிப்பேட்டையை சுற்றிக் காண்பித்தது போல இருந்தது.
அனுபவத்திலிருந்து வரும் சொற்களுக்கு மதிப்பு அதிகம். கொஞ்சம் கூட செயற்கைத்தனம் இல்லாது மனம் விட்டு பேசியிருப்பது போன்றிருக்கும் தமிழ்ப்பிரபாவின் எழுத்து தான் பேட்டையின் பலம். சிறந்த கதை சொல்லியாக வளர வாழ்த்துக்கள்.
user_10051
★ 4/5 Feb 02, 2026சென்னை மண்ணின் சரித்திரத்தில் மீண்டும் ஒரு நல்ல பதிவு. தமிழ்ப்பிரபாவின் பேட்டை நாவல் சிந்தாதிரிப்பேட்டையின் வரலாற்றையும் அந்த நிலத்தின் மக்களின் வாழ்வியல், அரசியல், உணவுப்பழக்க வழக்கங்களை மிக அழகாகவும், காலகட்டத்தை குறியீடு வழியாகவும் ரூபன் என்ற இளைஞனின் வாழ்க்கையை மிக விரிவாக விவரித்துள்ளார்.
நகோமியம்மா, ரெஜினா, லாரன்ஸ், சௌமியன் மற்றும் பூபாலன் போன்ற பாத்திரங்கள் நிஜ வாழ்வின் மனிதர்களைப் போல நாவலில் வலம் வருகிறார்கள். ஆனால் பாலு மற்றும் அண்டா உருட்டி போன்ற கதாபாத்திரங்களை இன்னும் சிறப்பாக விவரித்து அணுகி இருக்கலாம்.
user_10050
★ 4/5 Feb 02, 2026பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் தஞ்சை, மதுரை, நாகர்கோவிலிலிருந்து தான் வரவேண்டுமா, வட சென்னையிலும் இருந்து வரலாம் என்று நிறுவிய நாவல். பேட்டை உருவான வரலாறு, அது எப்படி ஹவுசிங் போர்டு ஆக மாறியது மற்றும் அங்கு வாழும் அனைவரையும் பற்றிய கதை.
நாவலில் பல கதை மாந்தர்கள் இருப்பதால் சில நேரம் கதையின் மையய ஓட்டம் எதுவென்று புரியவில்லை. ரூபன், ரெஜினா, நகோமியம்மா, இவாஞ்சலின் கதாபாத்திரங்கள் வலுவாக எழுதப்பட்டுள்ளன. மதம் மற்றும் அது எப்படி அவர்களின் வாழ்வில் ஊடுருவியுள்ளது என்று நாவல் நெடுக விவரிக்கப்படுகிறது, அதுவே கொஞ்சம் அயற்சியாக உள்ளது.
கடைசியில் எல்லாம் சுபமாக முடிவது கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தது. இவை எல்லாம் சிறு குறைகள் தான், இந்த நாவலை எழுத தமிழ்ப்பிரபா மிகக் கடினமாக உழைத்துள்ளது தெரிகிறது. காட்சிகள் கண் முன்னே எளிதாக விரிந்தன. இது ஒரு மிகச் சிறந்த நாவல், அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.
user_10049
★ 3/5 Feb 02, 2026சிந்தாதிரிப்பேட்டையைக் கதைகளமாகக் கொண்டு 1980களிலிருந்து இன்று வரை மக்களின் வாழ்வியல் மாற்றங்களைப் பேசும் நாவல். அங்கே வாழும் மக்களின் மதநம்பிக்கைகள், மொழி, தொழில், விளையாட்டு, உணவு, இசை என பல்வேறு விஷயங்களை யதார்த்தமாக பேசுகிறது.
முதல் அத்தியாயத்தில் சிந்தாதிரிப்பேட்டை உருவான வரலாறு தரும் சுவாரசியம், மற்ற அத்தியாயங்களில் கொஞ்சம் குறைந்தே காணப்படுகிறது.
user_10048
★ 2/5 Feb 02, 2026சென்னையைப் பற்றிய நாவல் என்பதாலேயே வாசிக்க ஆர்வம் அதிகமானது. நாவலின் ஆரம்பம் அமர்க்களம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வெள்ளையர்களுக்குத் தேவைப்பட்ட துணிகளை நெய்ய சின்னத்தரி பேட்டையும், சாயம் போட காலடிபேட்டையும் உருவான சரித்திரத்தோடு நாவல் ஆரம்பிக்கிறது. முதல் அத்தியாயம் 80 பக்கத்திற்கு சிந்தாதிரிப்பேட்டை மக்கள் கூடவே வாழ்ந்ததுபோல் இருந்தது. பேச்சு மொழியில் வார்த்தைகள் எல்லாம் அவர்கள் வாழ்க்கையின் அங்கமாகவே இருப்பதை எந்த நெருடலும் இல்லாமல் பயன்படுத்தியிருப்பது அருமை.
இரண்டாவது அத்தியாயத்திலிருந்து நாவலின் சறுக்கல் ஆரம்பம். சில அத்தியாயங்கள் நுணுக்கமாகவும் நிறைய குறிப்புகளுடன் மக்களின் இயல்பையும், பல அத்தியாயங்கள் மேலோட்டமாகவும் கதை நகர்கிறது.
பெரிய எதிர்பார்ப்போடு வாசிக்க எடுத்த புத்தகம் ஆரம்பத்தில் நல்லா இருந்தாலும் போகப்போக ஏமாற்றமே. மேலோட்டமான வாசிப்பனுபவத்தையே தரக்கூடிய நாவல்.
user_10047
★ 3/5 Feb 02, 2026தமிழ்பிரபா எழுதியுள்ள பேட்டை சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியை களமாகக் கொண்ட நாவல். மின்சார ரயிலில் சிந்தாதிரிப்பேட்டை என்ற அறிவிப்பைக் கேட்டிருக்கிறேன், ஆனால் இந்த இடத்திற்கு பின்னால் இவ்வளவு வரலாறு இருந்தது என்று யோசித்ததே இல்லை.
எதனால் இந்த இடத்திற்கு சிந்தாதிரிப்பேட்டை என்று பெயர் வந்தது, அங்குள்ள மக்களின் மொழி, தொழில்கள், நம்பிக்கைகள், சண்டைகள், ஏமாற்றங்கள், சாதனைகள், உறவுகள் என பல்வேறு அம்சங்களும் இந்நாவலில் கலந்துள்ளன. சென்னையின் விளிம்புநிலை மக்களின் வாழ்வு குறித்த அழுத்தமான சலனங்களை ஏற்படுத்தும் புனைவுகள் வாசகர்கள் மத்தியில் அரிதாகவே வருகின்றன. தமிழ்பிரபாவின் பேட்டை அத்தகையதொரு முக்கியமான படைப்பு.
user_10046
★ 4/5 Feb 02, 2026சார்பட்டா படிக்கும் முன்பே தமிழ்ப்பிரபா எழுதிய பேட்டை நாவலை படித்து விட வேண்டும் என்று தொடங்கினேன். 380 பக்க நாவல் என்பதால் நேரம் கூடுதலாக தேவைப்பட்டது. சென்னையை மையமாக வைத்து நகரும் கதைக்களத்தில் ஒரு புத்தகம் படிப்பது எனக்கு இது தான் முதல் முறை. சென்னை அழகு தமிழ் படிக்க படிக்க ஒரு ஆர்வத்தையும் கிளர்ச்சியையும் உண்டு செய்தது.
வரலாற்று அறிமுகத்துடன் தொடங்குகிறது இந்த நாவல், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சென்னையில் என்னென்ன மாற்றங்கள் நடந்தேறியது, எப்படி சிந்தாதிரிபேட்டை உருவானது, அங்கு பின்னாளில் சாதி ரீதியிலான தெருக்கள் உருவானது என்பதை விளக்கமாக எழுதியுள்ளார்.
கதையின் நடுவில் சில தொய்வுகள் இருந்தாலும், கதை களமும் அதில் வரும் மனிதர்களும் நம்மை பிடிப்புடனும் ஈடுபாட்டுடனும் வைத்துள்ளார்கள். ரூபன், சௌமியன், ரெஜினா, நகோமியம்மா போன்ற கதாபாத்திரங்கள் குறிப்பிடத்தக்கவை.
இது எழுத்தாளரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் வைத்து எழுதிய ஒன்றாகத் தெரிகிறது. கதாபாத்திரங்கள் உண்மைத் தன்மை கொண்டவையாகவும் புனைவு தன்மை குறைந்து காணப்படுவதும் அந்த வாதத்திற்கு வலு சேர்கிறது. சார்பட்டா படத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் இந்த நாவலின் கதாபாத்திரங்களுடன் ஒத்துப்போகிறார்கள். எழுத்து நடை, கதை சொல்லும் விதம், இலக்கிய மேற்கோள்கள் எல்லாம் இதனை ஒரு நல்ல நாவலாக மாற்றியுள்ளது. அவசியம் வாசிக்கவும்.
user_10045
★ 3/5 Feb 02, 2026தமிழ்ப்பிரபாவின் பேட்டை சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியை களமாகக் கொண்டு பயணிக்கிறது. சென்னையின் பூர்வகுடிகளான தலித்துகளின் வாழ்க்கை முறை, மொழி, இசை, நட்பு, காதல், உணவு, ஆன்மீகம், மூடநம்பிக்கைகள், இறப்பு ஆகியவற்றை இந்நாவல் துல்லியமாக சித்தரிக்கிறது. 1980-களில் துவங்கி இன்று வரை சிந்தாதிரிப்பேட்டை மற்றும் வட சென்னை பகுதிகளில் நடந்தேறிய மாற்றங்களையும், அவை அப்பகுதி மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களையும் இந்நாவல் புனைவின் வழி நுட்பமாக விவரிக்கிறது.
கதையின் இரண்டு பிரதான கதாபாத்திரங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். ரெஜினா எனும் பெண் பாதிக்கப்படும் காலத்தில் மத வழிபாட்டுத் தளங்களையே உறவினர்களும் மக்களும் நாடுகின்றனர். ரூபன் அதே போல் பாதிக்கப்படும் போது, ரெஜினா மதத்தின் துணையை நாடுகிறாள். கடைசியில் நண்பர்களின் வற்புறுத்தலால் அவனை மனநல காப்பகத்தில் அனுமதிக்கிறார்கள்.
கவாப்பு போன்ற உணவு வகைகள், அவற்றின் சுவை, செய்முறை ஆகியவற்றை பதிவு செய்வதோடு அந்த உணவை சுற்றிய அரசியலையும் பல இடங்களில் பேசுகிறது. சாதிய படிநிலை, நகரமயமாதல், டிஜிட்டல் மாற்றத்தால் நலிந்த தொழில்கள் என சமகால அரசியலையும் சமூகச் சூழலையும் வெளிப்படுத்தும் நாவல்.
கிளைக் கதைகள் பல இருந்தும் அவற்றுள் சிக்கிக் கொள்ளாது பயணிக்கிறது. ஆங்காங்கே சிறுசிறு தொய்வுகள் இருந்தாலும் நிறைவான வாசிப்பாக அமைகிறது.
user_10044
★ 4/5 Feb 02, 20261735-ல் துவங்கி ஆங்கிலேயர்களால் அவர்கள் சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட சின்னதறி பேட்டை என்கிற சிந்தாதிரிப்பேட்டை ஊர் உருவான வரலாறு, அவ்வூரில் தலித் மக்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு, கூவம் நதிக்கரையோரங்களில் அம்மக்கள் தங்கி வாழ ஆரம்பித்து, அந்தப் பகுதியே எப்படி அவர்களின் நிரந்தர வாழ்விடமானது என்ற வரலாற்றிலிருந்து துவங்குகிறது இந்நாவல்.
சிந்தாதிரிபேட்டையில் பிறந்து வளரும் ரூபனின் வாழ்க்கையைச் சொல்வதன் மூலம், அந்தப் பகுதியின் நிலப்பரப்பு, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைமுறை, இசை, மத நம்பிக்கைகள், உணவு, உணவு அரசியல், போதை, சாதி அரசியல், நில அரசியல் ஆகியவற்றைப் பேசும் சுவாரசியமான நாவல் தமிழ்ப்பிரபா எழுதிய பேட்டை.