Reviews for பேட்டை

29 reviews total

user_10062

★ 4/5 Feb 02, 2026

பேட்டை பற்றி சிறு குறிப்பு வரைக என்பதற்கான பதிலுடன் புத்தகம் தொடங்குகிறது. அதன் நீட்சியாக பயணிக்கும் நாவல், ரூபன் பிறப்பிற்கு முன்னிருந்து ரூபனின் 25-30 வயது வரை செல்கிறது.

ரூபன், இவாஞ்சலின், ரெஜினா, குணசீலன், பாலு, ஆமோஸ், சைலேந்தர், நகோமியம்மா, கிளியாம்பாள், லாரன்ஸ் என ஏராளமான கதாபாத்திரங்கள். அத்தனை கதாபாத்திரங்களுக்கும் கதை உண்டு; எல்லாரும் ஒரு வினை ஆற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு இடத்தில் கூட சோர்ந்து கீழே வைக்காததற்கு காரணம் - இது உயிரோடு துள்ளிக்கொண்டே முகத்தில் நீரை வாரியடிக்கும் துடிப்பான மீன்; அத்தனை ஜீவனோடு இருக்கிறது.

user_10061

★ 4/5 Feb 02, 2026

கதை நகோமியம்மா என்ற ஒரு புள்ளியில் ஆரம்பித்து அவள் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, வேறொரு கதாபாத்திரம் வழியாக வேறொரு தளத்திற்குச் சென்று, இப்படி வெவ்வேறு கதாபாத்திரம் வழியாக பல்கிப்பெருகி இறுதி வடிவம் கொள்கிறது.

இதில் இருக்கும் மிகப்பெரிய சவால் - கதை வெவ்வேறு தளங்களுக்கு வெவ்வேறு மனிதர்கள் வழியாகத் தாவிச் செல்வதால் சுவாரசியத்தை இழந்து விடும் வாய்ப்பு அதிகம், அல்லது வாசகனைக் குழப்பி கதையை வேறுவிதமாக புரிந்துகொள்ளச் செய்யும் சாத்தியமும் ஏராளம். இந்த சவாலை முடிந்தளவுக்கு சமாளித்திருக்கிறார் தமிழ்ப்பிரபா.

user_10060

★ 3/5 Feb 02, 2026

தமிழ்ப்பிரபா அவர்களின் பேட்டிகளையும் நேர்காணல்களையும் கண்டு அவரை மிகவும் பிடித்துப்போக அவரின் நாவல்களை படிக்க வேண்டும் என்ற ஆசை முளைத்தது. அவரின் பேட்டை நாவலைத் தேர்வு செய்தேன்.

நாவல் மிக சுவாரசியமாக தொடங்கி விறுவிறுவென முன்னேறிக்கொண்டிருந்தது. எழுத்து நடையும், கதை மாந்தர்கள், அவர்களின் வாழ்வியல் சார்ந்த விஷயங்களை கூறும் விதமும் அருமையாக இருந்தது.

இருந்தும் ஒரு கட்டத்திற்கு பின் நாவல் எதை நோக்கி நகர்கிறது என்று புரியாமல் போக, சலிப்பு தட்டியது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கி, சற்றே ஏமாற்றத்துடன் முடித்தேன்.

user_10059

★ 4/5 Feb 02, 2026

தமிழ்ப்பிரபாவின் பேட்டை சிந்தாதிரிப்பேட்டை 1735ல் உருவான கதை என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கிறது. தலித் மக்கள் பல்வேறு பிரிவினைகளுக்கு உட்பட்டு கூவ ஆற்றின் அருகே வாழ்வாதாரத்தை நடத்தி, பின்னாளில் 1967ல் அரசின் உதவியால் அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு மாறிய மக்களின் வாழ்வியலைப் பற்றிய முழுமையான நாவல்.

இப்பகுதி மக்கள் வாழ்வின் பல்வேறு நுணுக்கங்களை மிக தெளிவாகவும் முழுமையாகவும் விவரிப்பதோடு, உரைநடையும் அருமை. வழக்காடு மொழி, தொழில்முறை, உணவுப்பழக்கம், மத நம்பிக்கை, உறவுகள், சாதி அரசியல், மன உளைச்சல், நகரமயமாதல் என பல அழுத்தமான கருத்துக்களை விட்டுச் செல்கிறது.

நாவலின் மிக முக்கிய அம்சமான எதார்த்த வட்டார வழக்கு சென்னையின் அடையாளத்தை தெளிவுறக் காட்டுகிறது. எழுத்து கதை கண் முன்னே நகர்கிற உணர்வைத் தருவது சிறப்பு! இவற்றுக்கு மேல் கதை சொல்லப்பட்ட தொனியில் நகைச்சுவைக்கும் பஞ்சம் இல்லை.

user_10058

★ 3/5 Feb 02, 2026

இந்நாவல் சென்னையின் அசல் முகத்தை அப்படியே காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளது! மொழி, கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, அன்றாட வாழ்க்கை அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ராமர் தோட்டம் (சிந்தாதிரிப்பேட்டை) மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இந்நாவல் காட்டுகிறது.

பல கதாபாத்திரங்கள்! நிறைய வரலாறு! சென்னை ஒவ்வொரு காட்சியிலும் பதிந்திருக்கிறது. குடிசையிலிருந்து, கேரம் போர்டில், ஓவியத்தில், சுவரோவியக்காரனாக, ஐடி ஊழியனாக - அனைத்திலும் யதார்த்தம்!

கடைசி 50-60 பக்கங்களில் ஒரு நிகழ்வை மீண்டும் மீண்டும் மிகைப்படுத்தியது குழப்பமாக இருந்தது. வாசிப்பனுபவத்தை சலிப்பாக்கியது. ஆனால் சென்னை தமிழ் உரையாடல்களைத் தாண்டி, தூய தமிழில் ஆசிரியரின் விவரணைகள் அருமையாக இருந்தன. இவ்வளவு செழுமையான தமிழில் சமீபகால படைப்புகளை காண்பது அரிது! சென்னையின் அசல் முகத்தை அறிய விரும்புவோருக்கு கண்டிப்பாக நல்ல வாசிப்பு.

user_10057

★ 5/5 Feb 02, 2026

பேட்டை உருவான வரலாற்றுடன் துவங்கிய கதை, சிங்கப்பூரான் - கிளியாம்பா தம்பதி மகன் குணசீலனுக்கு ரெஜினாவுடன் திருமணம் முடிந்து மகன் ரூபன் பிறந்ததிலிருந்து, ரூபனும் கிருத்துவ மதமும் பேட்டையில் வளர்ந்ததுடன் முடிகிறது.

என்னை உருக வைத்த நிகழ்வுகள் - ரூபனின் காதலி இவாஞ்சலின் பணம் சேர்த்து வைத்து தனக்கென சொந்தமா ஒரு அருவி வாங்கவேண்டும் என்ற ஆசையும் அதற்கான காரணமும் அழகானவை. இயந்திரத்தின் அசுர வளர்ச்சி ஆர்டிஸ்ட் பூபாலனை ஏடிஎம் காவலாளியாக்கியது கவலைப்படுத்துகிறது.

பாலுவின் கேரம் திறன், லாரன்ஸ் முன்னேற்றிய விதம், பாலு விளையாட்டில் முன்னேறி பேட்டையில் ஆயிரம் பேருக்கு அன்னதானமிட்டது நாவலின் பெருமை மிகு தருணம். கிளியாம்பா, நகோமியம்மா, ரெஜினா, இவாஞ்சலின் போன்ற பெண் பாத்திரங்கள் நம்மை பேட்டையில் வாழ வேண்டும் என்று ஏங்க வைக்கின்றன.

user_10056

★ 4/5 Feb 02, 2026

தமிழ்ப்பிரபா சார்பட்டா பரம்பரை படத்தின் இணை எழுத்தாளர். சின்னத்தறிப்பேட்டை என இப்போது சிந்தாதிரிபேட்டை என அழைக்கப்படும் பகுதியின் வரலாற்றுடன் கதை தொடங்குகிறது. கிளியாம்பாள், நகோமியம்மா, ரெஜினா, ரூபன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் அறிமுகமாகிறது.

கதையின் சிறப்பு என்னவெனில், அப்பகுதி மக்களின் மொழி, மக்கள் தொகையியல், வாழ்க்கை முறை குறித்த மிக விரிவான விவரணைகள். நாவல் 80களில் தொடங்கி தற்காலம் வரை பயணிக்கிறது. இந்த காலப்போக்கில் பழக்கவழக்கங்கள், உணவுத் தேர்வுகள், மத நம்பிக்கைகள், கல்வி, விளையாட்டு, தொழில் வாய்ப்புகள் என பல அம்சங்களை நாம் காண்கிறோம்.

350 பக்கங்களில் பரவிய இந்நாவலில், அசல் வட்டார வழக்கு மொழி கதையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. படிப்பவரை அம்மக்களின் உலகத்தில் மூழ்கடிக்கிறது. கண்டிப்பாக பரிந்துரைக்கிறேன்.

user_10055

★ 4/5 Feb 02, 2026

ஒரே மூச்சில் படித்துவிடும்படியான நாவல், ரொம்ப நாளாச்சு இப்படி படித்து. ஒரு வேகமான கதை சொல்லலுடன் செறிவான உள்ளடக்கம். நிறைய மனிதர்கள், எறத்தாழ ஒரு மானுடவரைவியல் தான் இது.

கவாப்பு கறியிலிருந்து பேயோட்டம் வரை, போகும் போக்கில் சிந்தாதிரிப்பேட்டையே வெகு இயல்பாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு மீ-நாவல் போல தன்னைத் தானே பரிசீலனைக்குட்படுத்தும் ஒரு அடுக்கும் இருக்கிறது!

user_10054

Feb 02, 2026

பேட்டை நாவல் சிந்தாதிரிப்பேட்டை மக்களின் வாழ்க்கையை அழகாக சித்தரிக்கிறது. கதாநாயகன் ரூபனுக்கு அவனது தாய் ரெஜினாவிடமிருந்து பரம்பரையாக வந்த மனநலப் பிரச்சினை உள்ளது. ரூபன் வழியாக, 40 ஆண்டுகால சிந்தாதிரிப்பேட்டை மக்களின் வாழ்க்கை முறையை சாதியம் மற்றும் உலகமயமாதல் அடிப்படையில் எழுத்தாளர் விவரிக்கிறார்.

சிந்தாதிரிப்பேட்டையின் உண்மை நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்ட இந்நாவலில், பேட்டை மக்களின் வாழ்வியல், சாதி அடுக்குகள் வழி தெருக்கள் அமைக்கப்பட்ட வரலாறு, கூவம் ஆற்றங்கரையில் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை என பல அடுக்குகளில் கதை விரிகிறது.

user_10053

★ 4/5 Feb 02, 2026

சென்னையின் ஒதுக்குப்புறமென கூவம் ஆற்றங்கரையில் ஆங்கிலேயரின் சுயநலத்தால் கூட்டி வந்து குடியமர்த்தப்பட்டு, காலப்போக்கில் ஒதுக்கி வைக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை தலித் மக்களின் தினசரி வாழ்க்கை, வாழ்வியல் எதார்த்தம், மொழி, உணவு, கானா, கேரம் போர்டு, மத நம்பிக்கை, கொண்டாட்டம், நட்பு, காதல், விளையாட்டு என சென்னையின் சிந்தாதிரிப்பேட்டையின் அப்பட்டமான வாழ்வியல் பிரதி - பேட்டை.