Reviews for மறக்கவே நினைக்கிறேன்
30 reviews total
user_6817
★ 5/5 Feb 02, 2026நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுமையாக ரசித்துப் படித்த புத்தகம் இது. ஆசிரியரின் வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பு — ஒவ்வொன்றும் சுவாரசியமானது, நிகழ்வுகள் நிறைந்தது, இரண்டு முறை படிக்கத் தகுந்தது.
அனுபவங்கள் நேர்மையானவை — கதாபாத்திரங்களில் ஒரு மனிதத்தன்மையை உணர்ந்தேன். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு அனுபவங்கள் என்று மெதுவாகப் படித்தேன். அவசரப்படாமல், கதையோடு வாழ்ந்து ரசியுங்கள்.
ஆசிரியரின் பன்முகமான, செழுமையான அனுபவங்களைப் படிக்கும்போது பொறாமையே வரும். நகர வாழ்க்கையா கிராம வாழ்க்கையா என்ன ஒருவரின் வாழ்க்கையை நிகழ்வுகள் நிறைந்ததாக ஆக்குகிறது என்று யோசிக்க வைத்தது.
"பரியேறும் பெருமாள்" ஒரு கற்பனைக் கதை என்று நினைத்திருந்தேன் — இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான் புரிந்தது, பெரும்பாலான விஷயங்கள் மாரி செல்வராஜின் உண்மையான வாழ்க்கை அனுபவங்கள் என்று.
user_6816
★ 5/5 Feb 02, 2026மாரி செல்வராஜ் எழுதியிருக்கும் கிராமத்தைப் போன்ற ஒரு கிராமத்தில் வளர்ந்தவன் நான். இந்தப் புத்தகத்தைப் படிப்பது என் சொந்தப் பால்யத்திற்குள் அடி எடுத்து வைப்பது போல இருந்தது. உச்சி குடுமன், உள்ள காதன் முதல் தசரா கொண்டாட்டங்கள் வரை — பல விஷயங்கள் என் நினைவுகளை உயிர்ப்பித்தன.
தசரா நேரத்தில் குரங்கு வேடம் போட்டுக்கொண்டு தெருவில் நடப்பார்கள் — சில நேரம் குழந்தைகள் பயப்படாமல் இருக்க முகமூடியை நீக்குவார்கள், சில நேரம் தைரியமாகப் பின்தொடரும் குழந்தைகளைப் பயமுறுத்த வேண்டுமென்றே நடிப்பார்கள்.
வாழைத் தோட்டங்கள் வழியாகவும், தாமிரபரணி நதிக்கரை ஓரமாகவும் நம்மை அழைத்துச் செல்லும் இந்தக் கதைகள் நிலத்தோடும் நீரோடும் ஆழமாகப் பிணைந்த வாழ்க்கையின் ஒளி, மணம், ஒலி எல்லாவற்றையும் உணர வைக்கின்றன.
மஞ்சோலை தொழிலாளர்கள் மீதான காவல்துறை வன்முறை பற்றிய அத்தியாயம் வலிமையானது — நமது சமூகங்கள் எதிர்கொண்ட அநீதிகளின் வலிக்கும் அவசியமான நினைவூட்டல்.
இந்தப் புத்தகம் ஒரு சுயசரிதைக்கும் அப்பாற்பட்டது — இதே மண்ணில் வளர்ந்த நமக்கு ஒரு கண்ணாடி போன்றது. மறந்துவிட்டதாக நினைத்த விஷயங்களை நினைவுபடுத்தியது.
user_6815
★ 5/5 Feb 02, 2026பரியேறும் பெருமாள் படம் வெளியான முதல் நாள் தியேட்டரில் படம் பார்த்தேன். இடைவேளைக்குப் பிறகு நண்பனிடம் "சாதிப் பஞ்சாயத்தை இழுத்துவிடப் போகிறான் இந்த டைரக்டர்" என்றேன். ஆனால் க்ளைமேக்ஸ் காட்சியில் அற்புதத்தை நிகழ்த்திவிட்டான்.
அவர் 2013-ல் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்தான் இது. அப்போதே படித்த பலருக்குத் தெரியும் — அந்தப் படத்தில் இருந்த பல காட்சிகள் அவரது வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நினைவுகள் என்று. மாரி செல்வராஜ் மறக்க நினைக்கும் சம்பவங்களை அறிய நினைப்பவர்கள் இதைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
user_6814
★ 4/5 Feb 02, 2026மாரி தனது பால்யத்தைத் திரும்பப் பார்க்கும் கட்டுரைகள் இவை. தனது எழுத்து தான் தனது படைப்புகள் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. நான் இப்புத்தகத்தை மூன்றாவது முறை வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனது பால்யத்தை, எனது வாழ்வின் முதல் பாகங்களைப் படம் பிடித்துக் காண்பிக்கப்படுகிறது.
ஸ்டீபன் சுந்தரம் வாத்தியார், பால்யத்தில் செய்த நிறைவேறாத சத்தியங்கள், பூசாரி, கட்சியின் மீதோ அல்லது தனி மனிதன் மீது கொண்ட கண்மூடித்தனமான அன்பால் தன்னைச் சுற்றியுள்ள உறவுகள் எப்படி மன உளைச்சல் அடைகிறார்கள், திருவிழா, சிறு தெய்வங்கள், கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு அவரது காணிக்கையைத் திருடியது — பிறகு பயந்து அதை எப்படியாவது திரும்பக் கொடுக்க முயற்சி செய்வது, தான் ஏன் குடிப்பதில்லை, சொட்டு அக்காவின் கதை, தன் பயத்தால் குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வெளியே செல்லும் தந்தை, நண்பர்கள் காதலுக்குக் கவிதை எழுதித் தருவது...
ஒன்றை ஒன்று தொட்டுத்தான் இயற்கையும் அன்பும் அமைந்துள்ளது.
user_6813
★ 5/5 Feb 02, 2026மாரி செல்வராஜ் தனது வாழ்க்கை நினைவுகளைப் புனைவு மேலிட நம் கைகளில் தவழவிட்டிருக்கிறார்.
"பரியேறும் பெருமாள்" திரைப்படம் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வு இப்புத்தகம் படிக்கும்போதும் ஏற்படுவதை உணர முடிகிறது.
"நினைத்துத்தான் ஆக வேண்டும். நினைத்தால் தான் மறக்க முடியும். மறக்கத்தான் நினைக்கிறேன்" — என்றவர் தனது நினைவுகளை நம்மீதும் திணித்து மறக்க முடியாமல் செய்து விடுகிறார்.
கட்டாயம் ஒரு முறை படித்துப் பாருங்கள். தூத்துக்குடி மாவட்டத்தின் ஏதோ ஓர் கிராமத்தில் வாழ்ந்த கட்டுப்பாடுகளுக்கு அடங்காத சிறுவனின் கைகோர்த்து அவனது பால்யத்தையும் மனிதர்களையும் ஆசுவாசமாக வேடிக்கை பார்க்க...
user_6812
★ 5/5 Feb 02, 2026ஏறக்குறைய நான்கு வருடங்களுக்கு முன்னால், பிரியா ஒரு புத்தகக் கண்காட்சி போனாள். அன்று அவள் என் கைகளில் இந்தப் புத்தகத்தைக் கொடுத்துவிட்டுப் போன கணத்திலிருந்தே எரியத் துவங்கியது மாரியின் மீதான என் அன்பின், ஆச்சரியத்தின் அகல்.
ராமின் உதவி இயக்குனர் என்ற ஒற்றைப் புள்ளியின்மீதே நம்பிக்கைகளைக் குவித்து வாசிக்கத் துவங்கினேன். அதன்பின் நிகழ்ந்ததெல்லாம் பேரன்பின் ரசாயன மாற்றங்கள். ஒரு புத்தகத்தை மறுவாசிப்பு செய்வதே மிக அரிது — ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன்.
பிரியாவிடம் புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்த சில மாதங்களுக்குப் பின்தான் அந்த ஆசை துளிர்த்தது — எனக்கென தனியாக ஒரு பிரதி வைத்துக்கொள்வோம் என்று. ஆனால் அப்போது எங்கும் கிடைக்காத காலம். எத்தனை கடை, நூலகம், பதிப்பகம் அலைந்தும் கிடைக்கவே இல்லை. பின் பிரியா கொடுத்த அந்தப் பழைய விகடன் பிரதியை, எங்கே திரும்பினாலும் இந்தப் புத்தகம் கிடக்கிற இந்தச் சமயத்திலும் மாற்றிக்கொள்ள விருப்பமே இல்லை.
மாரியின் மீது கொண்டிருக்கும் அன்புக்கும் ஆச்சரியத்திற்கும் காரணம், புத்தகக் கடைசியில் வருகிற அந்தக் கவிதைதான். மாரியின் சிரசின் முள்முடியிலிருந்து வழிகிறது அன்பின் பேரூற்று!
user_6811
Feb 02, 2026மாரி செல்வராஜ் தனது உண்மைகளைக் கட்டி வைத்து, கனமான மனபாரங்களைக் கட்டவிழ்த்த தளம் இது. நமது மனதுக்குள்ளும் இதுபோன்ற ஒரு மறக்க வேண்டிய நிர்வாணமான உண்மை உள்ளது — அதுவே அதற்கு அழகான உடை அணிவித்து மறைக்கிறது.
இன்றில்லையெனினும் என்றாவது அது வெளிப்படும் கண்ணீராக. அதை, அந்தப் பாரத்தை அதிக நாள் சுமக்கும் திராணி நமக்கில்லை. யாருமற்ற ஒரு ரயில் பயணத்தின் ஜன்னலோர கண்ணீர் சொட்டுகள் வரையும் கோடுகள் அவை.
மாரி செல்வராஜ் மை கொண்டு கிறுக்கிய பேனா நம் மன பாரங்களைச் சற்றேனும் குறைக்கும் வல்லமையுடையது. ஒவ்வொரு அனுபவமும் நம் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தோடு ஒத்திசைந்து, சற்றேனும் நம்மை நாம் செய்தவைக்காக ஒரு துளி கண்ணீரால் முற்றுப்புள்ளி தேடுகிறது.
user_6810
★ 5/5 Feb 02, 2026"வாழ்க்கை இலக்கியம் ஆகாது. வாழ்க்கையிலிருந்து பெறப்படுவது தான் இலக்கியம்."
"கடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தால் அழுகை வராத வாழ்க்கை எத்தனைப் பேருக்கு சாத்தியம்?" — அப்படியாக மாரி செல்வராஜ் தன் கடந்த காலத்தை நம்மோடு பகிர்ந்துக் கொள்கிறார். அவருடைய கடந்த காலம் அவருக்கு மட்டும் இல்லை — எல்லாருக்கும் அழுகை வரும். அத்தனை வலி, காயம், காதல், அன்பு என எல்லாமே இருக்கிறது.
இதில் வரும் ஒரு சம்பவத்தைக் கூட ஒரு அத்தியாயமாக, ஒரு கதையாகக் கடந்து விடவே முடியாது. எல்லா கதாபாத்திரங்களும், எல்லா சம்பவங்களும் மனதைப் பயங்கரமாகப் பாதிக்கின்றன. மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நிறைய வலி இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. அவர் "மறக்கவே நினைக்கிறேன்" என்ற தலைப்பில் யாருமே மறந்து கடந்துப் போக முடியாத ஒரு படைப்பைப் படைத்திருக்கிறார்.
மாரி செல்வராஜ் — தமிழ் கலையுலகின் பொக்கிஷம்.
user_6809
★ 5/5 Feb 02, 2026என்றும் மறக்க முடியாத மனிதர்களையும், அனுபவங்களையும், நினைவுகளையும் நமக்கும் கொடுத்துவிட்டார். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது வாய் சிரித்ததை விட மனம் கனத்தது தான் அதிகம்.
user_6808
★ 5/5 Feb 02, 2026தன் வாழ்வின் மறக்கமுடியாத சம்பவங்களை மறைக்காமல் பகிர்ந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
பலதரப்பட்ட அனுபவங்களைப் பெற்றிருப்பவர் பேச்சாளராகவோ, எழுத்தாளராகவோ, படைப்பாளியாகவோ இருப்பின் அவர்களின் பேச்சும், எழுத்தும், படைப்பும் சிறப்பானதாக இருக்கும் — அதற்கு இந்தப் புத்தகமும் மாரியின் திரைப்படங்களும் உதாரணம்.
சட்டக்கல்லூரியில் பயிலும்போது தனது கல்லூரித் தோழியின் அழைப்பின் பேரில் அவளது சகோதரி திருமணத்திற்குச் சென்றபோது தனது சாதியால் ஏற்பட்ட அவமானம், பெண் வேடமிட்டு ஆடும் தன் தந்தைக்கு இளைஞர்கள் சிலரால் ஏற்பட்ட அவமானம் எனப் பரியேரும் பெருமாள் படத்தில் காட்டிய பல காட்சிகள் இவருக்கு நேர்ந்தவை. இவரது அனுபவங்கள் பலவும் அதிர்ச்சியையும், வியப்பையும், வருத்தத்தையும், சிந்தனையையும் ஏற்படுத்துகின்றன.
பறவைகளை உயிராய் நேசித்த ஸ்டீபன் சுந்தரம் வாத்தியாரும், கொப்பரையில் நெல்லோடு வெந்து அவிந்த பூனை ராஜியும், கட்டித்தழுவும் ரசூலும், பாவைக் கூத்து நடத்தும் தாத்தாவும், உச்சி குடும்பனும், உளுவ தலையனும், ஊர் பெருசுகளை வழியனுப்பும் மூக்கைய்யா தாத்தாவும், குடும்பத்தாரால் கைவிடப்பட்ட திருநங்கை கார்த்தியும், சொட்டு அக்கா, வேங்கையன் அண்ணாச்சி, சின்ன குப்பை மாமா எனப் பலரும் இன்னும் சில நாட்களுக்காவது நினைவுகளில் வாழ்வார்கள்.
புத்தகத்தை முடித்தபோது ஒரு வாழ்வில் கலவையான இவ்வளவு அனுபவங்களா என்ற வியப்பும், 32 வருடங்களில் நமக்குச் சொல்லிக்கொள்ளும்படி ஏதாவது அனுபவங்கள் இருக்கிறதா என்ற கேள்வியும் தானாகவே தோன்றியது.
நல்ல வாசிப்பனுபவத்திற்கு கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைக்கிறேன்.