Reviews for மறக்கவே நினைக்கிறேன்

30 reviews total

user_6837

★ 5/5 Feb 02, 2026

எப்படி, எங்கே ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் எழுதியது என்ற பிம்பத்தோடு தான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் வாழ்ந்து பார்க்காத, அனுபவித்திராத நெல்லை மண்ணின் வாசனையை எனக்குள் கடத்திவிட்டார்.

"பறவைகளின் கடிதம்" கட்டுரையைப் படித்து முடிக்கும்போது எதற்காக அழுதேன் எனத் தெரியவில்லை. பறவைகளை நேசித்த ஸ்டீபன் சுந்தரம் வாத்தியாரை நினைத்தா? அல்லது இறந்து போன பறவைகளை நினைத்தா? சரியாகத் தெரியவில்லை.

அதுபோலவே வேகவைத்த நெற்பானைக்குள் மடிந்துபோன ராஜி பூனை மனதை நீண்ட நேரம் பிராண்டியது. சம்படி ஆட்டக்காரனாக இருந்து அப்பா சந்தித்த அவமானம், கார்த்திகாவாக மாறிய நண்பனின் மரணம், மதிப்பெண் குறைந்ததற்காகத் தற்கொலை செய்துகொண்ட நண்பன், சாதியை வைத்து அவமானப்படுத்தி அனுப்புவது — ஒவ்வொரு பக்கமும் தரம்.

ஒரு மனிதனுக்கு இத்தனை அனுபவங்களா என வியப்பு மேலிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. பரியேறும் பெருமாளின் காட்சிகளை அவர் உருவாக்கவில்லை — வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறார் என்பது புரிகிறது. இப்படியொரு அட்டகாசமான எழுத்தாளரைச் சினிமா விழுங்கிவிடுமோ என்ற கவலையும், அடுத்தடுத்த படைப்புகள் எப்படி இருக்கப் போகின்றனவோ என்ற எதிர்பார்ப்பும் ஒரு சேர எழுகிறது.

user_6836

★ 5/5 Feb 02, 2026

கல்லூரிப் படிக்கும் காலத்தில் ஆனந்த விகடனில் வந்த மாரி செல்வராஜின் தொடரை வாசிக்கத் தொடங்கிய பசுமையான நினைவுகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. ஒரு ரயில் பயணத்தில் விகடனை வாங்கிப் படிக்கத் தொடங்கி, எளிய மக்களோடு உரையாடத் தொடங்கிய நாட்களில் மாரியைப் பற்றி நினைத்திருக்கிறேன் — "யாரடா இந்த ஆள், இப்படி எழுதுகிறானே!"

சமூகத்தில் ஏராளமான தனித்துவமிக்க மனிதர்கள், உள்ளங்கள் வாழத்தான் செய்கின்றன — அவர்களைக் காணாமல் நகர்வதுதான் நமது துர்பாக்கியம். ஒரு திருநங்கையின் மாசற்ற அன்பினால், பிராணிகளை நேசிக்கும் ஆசிரியரால், ராஜி எனும் பூனையை நேசிக்கும் மென்மையான உள்ளத்தால், ஜோ எனும் பேரன்புமிக்கவளால் — இந்த உலகம் ஓர் அரவணைப்பைப் பெறுகிறது. அந்த அரவணைப்பின் கதகதப்பில் இருந்துதான் மாரி எனும் பூக்கள் மலரத் துவங்குகின்றன.

மாரி = மழை. இன்னும் ஆயிரம் துளிகளைச் சிந்த வேண்டிய பழங்குடிக் கிராமத்திலிருந்து ஒரு வாசகன் எழுதுகிறேன்.

user_6835

★ 4/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்திலிருந்து கற்றுக்கொண்டவை நிறைய. ஐந்தாவதாகப் பிறக்கும் பிள்ளை ஆணாக இருந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்ற மூடநம்பிக்கைகளைக் கடந்து வந்தவர் மாரி செல்வராஜ்.

ஏழாவது தொகுப்பு மிகவும் முக்கியமானது — சமூகத்தின் சாதிய இறுக்கம் குறித்த ஆழமான பார்வையைத் தருகிறது. ரசூல் போன்ற கதாபாத்திரங்கள் சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

இன்று 1200க்கு 605 மதிப்பெண் வாங்குபவன் ஒரு நாள் உலகின் தலைசிறந்த திரைப்பட இயக்குனராக ஆக முடியும். மதிப்பெண்ணை விட தினமும் வாழ்க்கையில் எதையாவது கற்றுக்கொண்டு சாதிக்கும் வரை சாகாமல் இருப்பதே சாதிக்க வழி.

ஒவ்வொரு அத்தியாயமும் வாழ்க்கையின் ஒரு பாடத்தைச் சொல்கிறது.

user_6834

★ 4/5 Feb 02, 2026

திருநெல்வேலி விளிம்புநிலை மக்களிடையே வளர்ந்த ஒரு சிறுவனின் உண்மையான, கலை நயமிக்க கதை சொல்லல். தனது பால்யகால நிகழ்வுகளை மிகவும் நேர்மையாகப் பகிர்ந்திருக்கிறார்.

user_6833

★ 5/5 Feb 02, 2026

தீரா கதைகள், முடிவில்லா பயணம், தாகம் தீர அனுபவம். நம் வாழ்க்கையில் பால்ய பருவத்தில் சில கசப்பான நினைவுகள் இருக்கும் — அதை நினைவு கூறும் ஒரு நொடி உடல் சிலிர்க்கும், பிறகு நாம் அதைக் கடந்து செல்வோம்.

ஆனால் மாரி செல்வராஜ் அதை நினைவு கூர்ந்து அழகியலோடு, அரசியலோடு, இயற்கையோடு இணைந்து நமக்கும் அவர் வாழ்க்கை அனுபவத்தை ஓர் அனுபவமாக மாற்றுகிறார். பல கதாபாத்திரங்கள் நெகிழச் செய்தன. சில பகுதிகளைப் படித்து முடித்தவுடன் புத்தகத்தை மூடி வைத்து ஓர் ஆழ்ந்த அமைதிக்குள் செல்வேன்.

நான் படித்த புத்தகங்களில் நீண்ட நாள் எடுத்துக்கொண்டு படித்த புத்தகம் இதுதான் — அவர் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்கள் அதற்கு மிகப்பெரிய காரணம். முடிந்தவரை இதை வாங்கிப் படியுங்கள் — இப்புத்தகம் மிகப்பெரிய அனுபவம்.

user_6832

★ 5/5 Feb 02, 2026

இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு ஆகச் சிறந்த கதை சொல்லி. ஒரு நாளில் முடித்துவிடலாம் என்று எடுத்த புத்தகம் — ஆனால் ஒவ்வொரு கதைக்குப் பிறகும் ஒரு இடைவெளி தேவைப்பட்டது.

ஜோ, திவ்யா, குமார் அண்ணன், ராஜி, செல்வலட்சுமி, பூங்குழலி, மணிமேகலை, டாக்டர், ஸ்டீபன் வாத்தியார் என எல்லா கதாபாத்திரங்களும் ஏதோ ஒரு வழியில் நிச்சயம் பாதிக்கும்.

"தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்" நூலை வாங்கிவிட்டு, அதே புத்தகக் கண்காட்சியில் தோழி பிறந்தநாள் பரிசாக வாங்கிக் கொடுத்த புத்தகம் தான் "மறக்கவே நினைக்கிறேன்". கடந்த சில வாசிப்புகள் அரசியல், அறவியல் தளத்தில் இருந்ததால் இந்த நூல் எனக்குள் ஒர் ஆழ்ந்த அமைதியை நிறுவிச் செல்கிறது.

அமைதியைத் தேடும் வாசகர்கள் அவசியம் வாசிக்கலாம்.

user_6831

★ 5/5 Feb 02, 2026

சில மாதங்களாக தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்கிறேன். இதுவரை வாசித்ததில் என்னை மிகவும் பாதித்த நூல் மாரி செல்வராஜின் "மறக்கவே நினைக்கிறேன்".

இந்தப் புத்தகத்தில் அவரது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் — அவர் ஊரில் நடந்த கதைகள், கல்லூரி நினைவுகள், வெவ்வேறு சுபாவங்கள் கொண்ட மனிதர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பற்றிய கதைகள். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கவிதை போல இருந்தது.

சிறு வயதில் மற்றவர்களின் டைரி வாசிக்கும் பழக்கம், நண்பர்களுக்குக் காதல் கவிதை எழுதிச் சிக்கலில் மாட்டிக்கொண்டது — இவை சிரிக்க வைத்தாலும், ஜாதியால் சந்தித்த சவால்கள், நண்பர்கள் ரசூல் மற்றும் கார்த்திகாவின் கதைகள் சிந்திக்க வைத்தன.

மாரி செல்வராஜ் ஒரு நண்பருக்கு எழுதும் கடிதம் போல இதை எழுதியிருக்கிறார். பரியேறும் பெருமாள் படத்தில் ரசித்த பரியனை இந்தப் புத்தகத்தில் மீண்டும் சந்தித்தேன். இந்தப் புத்தகம் முடியவே கூடாதென்று நினைத்தேன்.

user_6830

★ 5/5 Feb 02, 2026

நுட்பமான, முழுமையான, மிகவும் வலிமிகுந்த பயணம். பெரும்பாலான கதைகள் துயரமானவை, இதயத்தைத் தொடுபவை — ஆனால் கதை சொல்லும் விதம் ஒரு அம்பு போலத் தைக்கிறது. ஒவ்வொரு கதையையும் படித்து முடித்தவுடன் 5-10 நிமிடம் இடைவெளி எடுக்க வேண்டியிருந்தது — அவ்வளவு சிந்தனையைத் தூண்டுகின்றன.

ஆரம்பக் கதைகள் ரசிக்கக்கூடிய விதமாக இருந்தன. ஆனால் படிக்கப் படிக்க மேலும் உணர்வுபூர்வமாகவும் வலிமிகுந்ததாகவும் மாறின. சில கதைகள் சமூகத்தையும் மனிதர்களின் நம்பிக்கைகளையும் கேள்வி எழுப்புகின்றன.

இந்தப் புத்தகத்தில் வரும் முழுமையான கதாபாத்திரங்களில் ஒருவராக இருக்க விரும்பத் தோன்றியது — அந்த அளவுக்கு அற்புதமாக மனிதர்களைச் சித்தரித்திருக்கிறார்.

user_6829

★ 5/5 Feb 02, 2026

வெளியூர், வெளி மாநிலங்களுக்குச் செல்கையில் யாரேனும் "நீங்க திருநெல்வேலி மாவட்டமா?" என்று கேட்கும்போது ஏற்படும் பரவசம் — அதே உணர்வு மாரி செல்வராஜின் திரைப்படங்கள் பார்க்கும்போதும், இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதும் எழுகிறது. "அப்படியே நம்ம ஊரில் பேசுகிற மாதிரியே படத்திலும் பேசுகிறார்களே" என்ற உணர்வு.

எங்கள் ஊரின் அருகில் உள்ள ஊர்களை மையப்படுத்தி எழுதப்பட்ட புத்தகம் நான் வாசிப்பதும் இதுவே முதல் முறை. மாரிசெல்வம் என்ற ஒரு கிராமத்துச் சிறுவன் கடந்து வந்த மனிதர்கள், தாண்டி வந்த அனுபவங்கள், மறக்க நினைத்தும் முடியாமல் மனதில் தேக்கி வைத்த ரணங்களை இயக்குனர் மாரி செல்வராஜாக நம்முடன் பகிர்ந்துகொண்ட தொகுப்பு இது.

user_6828

★ 5/5 Feb 02, 2026

அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் — ஆசிரியர் தன் வாழ்க்கையில் அனுபவித்த செழுமையான நிகழ்வுகளை நம்மோடு பகிர்கிறார். எந்த முன்முடிவும் இல்லாமல் நான் படித்த முதல் புத்தகம் இது.

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் எனது தலைப்புகள்: டைரித் திருடன், சோற்றுக் கள்வர்கள், பறவையின் கடிதம் — ஸ்டீபன் சுந்தரம் வாத்தியார், ராஜி எனும் பூனைக்குட்டி, மாரி பெயர்க் காரணம், நேர்த்தியான சம்படி ஆட்டக்காரன் மகன், ரசூலின் கதை, 999 — சுந்தரமூர்த்தியின் மதிப்பெண், பாவைக்கூத்து, மூக்கையா டாக்டர்...

ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு வழியில் நிச்சயம் உங்களைப் பாதிக்கும்.