Reviews for புயலிலே ஒரு தோணி
30 reviews total
user_5643
★ 4/5 Feb 02, 2026தமிழின் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று என்று சொன்னவர்கள் மிகைப்படுத்தவில்லை. ஆனால் சற்று சிக்கலான வாசிப்பு அனுபவம் — பண்டைத் தமிழ் படிப்பது கடினம் என்று நினைத்தால், சிங்காரத்தின் உலகத்துக்கு வாருங்கள், இரண்டாம் உலகப்போர் காலத்தின் பல நாடுகளின் கலப்பு தமிழை படியுங்கள்.
ஆரம்பத்தில் பாண்டியன் என்ற பெயரை வெவ்வேறு நாட்டு மக்கள் வெவ்வேறு உச்சரிப்பில் சொல்வது குழப்பமாக இருந்தது, ஆனால் வேகம் பிடிக்கும்போது அவர்களுடன் ஒன்றிணைந்து அவர்களின் மொழியையும் பழக்கத்தையும் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம். பல மொழிகள் கலந்த ஒரு புத்தகத்தை படித்த அனுபவம் கிடைக்கிறது.
மெடான் நகரத் தெருக்களில் ஜப்பானியப் படைகளின் நுழைவுடன் தொடங்கும் பயணம், மலேயா, சிங்கப்பூர், மதுரை என பாண்டியனின் நினைவுகள் வழியே நகர்கிறது. நேதாஜியின் வரவு — அவரை ஒரு தேசியத் தலைவராக மிகைப்படுத்தாமல், வேறொரு காட்சியில் வேறொரு கதைமாந்தரைப் போல இயல்பாக அறிமுகப்படுத்தியிருப்பது தனித்துவமானது.
போருக்கு முன்னும் பின்னும் நாம் பயணித்த இடங்களை மீண்டும் பார்க்கும் இறுதிக் காட்சிகள் மிக அழகு.
user_5642
★ 5/5 Feb 02, 20262016-ல் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது கோபிநாத் அவர்கள் நடிகர் தனுஷுக்கு பரிசாக இப்புத்தகத்தை வழங்கினார். அப்போது அவர் கூறியது — இப்புத்தகம் தமிழில் முதல் பத்து புத்தகங்களில் ஒன்று, அனைவரும் வாசிக்க வேண்டியது என்றார். அப்போது தோன்றிய வேட்கை தற்போது நிறைவுற்றது. அனைவரும் கூறுவதைப்போல தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓர் அதி அற்புதமான படைப்பு.
இரண்டாம் உலகப்போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவத்தையும் மிகத் துல்லியமாகவும் நம்பகத்தன்மையுடனும் சித்தரித்த நாவல். கதாநாயகன் பாண்டியன் இந்தோனேசியாவில் கடையில் வேலை செய்யும் தொழிலாளியாக அறிமுகமாகி, போரின் போது இந்திய ராணுவத்தின் இரகசிய அதிகாரியாக, நேதாஜியின் கட்டளைக்கு இணங்க பல்வேறு முக்கியமான செயல்களைச் செய்து இறுதியில் மாவீரனாகப் புகழ் பெற்றார்.
ஆசிரியர் ப.சிங்காரம், இந்தோனேசியாவில் சோழர்களைத் தொடங்கி பல்வேறு இனத்தவர் வெவ்வேறு காலகட்டத்தில் எவ்வாறு குடிபெயர்ந்து தமது வாழ்க்கை முறையைக் கட்டமைத்துள்ளனர் என்பதன் வரலாற்றை மிக அழகாகத் தொகுத்துள்ளமை சிறப்பு. கடல் பயணிகளின் அனுபவத்தையும் இடையிடையே எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் ஆழமாக எடுத்துரைத்துள்ளார்.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வுலகம் பெண்களை எவ்வாறு காட்சிப்பொருளாக நடத்தியது, போர்களின் போது மதுசார பழக்கங்கள் கொடிகட்டிப் பறந்தது, பெண்களை இழிவாக நடத்திய விதிமுறைகள் — இவற்றை விரிவாக விளக்கியுள்ளார். கடல்பயணம் கொண்டு பிழைப்புக்காக தூரதேசம் போகும் தொழிலாளிகளின் மனவேதனையை, தமிழ்ப் பற்றினை, ஊரின்பால் கொண்ட காதலையும் கிராமத்து வாசனையோடு மிகச் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
user_5641
★ 5/5 Feb 02, 2026தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. இது ஒரு அற்புதமான திரைப்படமாகவோ வெப்சீரிஸாகவோ வரக்கூடும்! இரண்டாம் உலகப்போரில் தமிழர்களின் பங்கை இந்நாவல் போல வேறு எந்த தமிழ் நூலும் கையாண்டிருக்காது என்று நினைக்கிறேன். சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் மற்றொரு சிறந்த படைப்பு.
user_5640
★ 3/5 Feb 02, 2026இந்நாவலை முதல் முறையாகப் படிக்கும்போது, ஏராளமான கதைமாந்தர்களும் அவர்களின் பெயர்களும் மிகவும் குழப்பமாக இருந்தது. நாவல் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிறகுதான், இவைதான் நாவல்களின் தன்மை என்பதை உணர்ந்தேன். ஜெயமோகனின் நாவல் கட்டுரையும் இந்நாவல் பற்றிய வேறொரு பார்வையை தந்தது. விரைவில் மீண்டும் படிக்க வேண்டும்.
user_5639
★ 5/5 Feb 02, 2026புயலிலே ஒரு தோணி தமிழின் ஆகச்சிறந்த கிளாசிக் நாவல்களில் ஒன்று. அழகியல் மற்றும் தத்துவத்தின் கலவை. சிங்காரத்தின் எழுத்துநடை சொக்க வைக்கிறது. அந்த இடங்களை நேரில் சென்று பார்க்கத் தூண்டுகிறது. தமிழ் இலக்கிய வர்ணனைகள் மேலும் அழகூட்டுகின்றன. மொத்தத்தில் காலத்தை வென்ற படைப்பு.
user_5638
★ 4/5 Feb 02, 2026பலரின் பரிந்துரைகளுக்குப் பிறகு இந்தப் புத்தகத்தை வாங்கினேன். இது பாண்டியன் என்ற கதாநாயகனின் கதை — இரண்டாம் உலகப்போர் மற்றும் 1950களின் தொடக்கத்தில் தெற்கு ஆசிய நாடுகளில் அவனது பயணம். ஆரம்பத்தில் நண்பர்களுடன் நிதானமான உரையாடல்களும் தமிழகத்தின் இனிய நினைவுகளும் நிறைந்திருக்கும். பாண்டியன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்த பிறகு கதை வேகம் பிடிக்கிறது.
பழைய தமிழகத்தின் நினைவுகள் அற்புதமாக இருக்கின்றன, குறிப்பாக மதுரை பற்றிய பத்தாவது அத்தியாயம். பழைய வாழ்க்கை முறைகளையும் பழக்கவழக்கங்களையும் உணர முடியும். எழுத்துநடை சற்று கடினமாக இருந்தாலும் பழகிவிடலாம் — அதுதான் நாவலின் உயிர்நாடி.
ஆசிரியர் இரண்டே நாவல்கள் எழுதியவர், தானே முன்னாள் இந்திய தேசிய ராணுவ உறுப்பினர் என்பது எழுத்தில் தெரிகிறது. 1970களில் பத்தாண்டுகள் போராடி வெளியிடப்பட்ட இந்நாவல் இப்போது வாசகர்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இவரும் இவரது படைப்புகளும் கொண்டாடப்பட வேண்டியவை. இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
user_5637
★ 3/5 Feb 02, 2026எழுத்துநடை மிகவும் வித்தியாசமானது. பிற மொழிச் சொற்களின் பயன்பாடு கதையுடன் இணைவதை கடினமாக்குகிறது. இது இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஒரு தமிழனின் பயணம் பற்றியது — ஒரு குறிப்பிட்ட கதைக்கோடு என்று எதுவும் இல்லை. ஒட்டுமொத்தமாக மோசமான வாசிப்பு அனுபவம் அல்ல.
user_5636
★ 4/5 Feb 02, 2026மிகவும் அழகான புதினம். இதில் வரும் ஒவ்வொரு காட்சியையும் சிங்காரம் விவரிக்கும் விதம், நாம் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தலையைச் சுற்றி நோட்டம் விடுவது போலவே இருக்கிறது — அந்த உணர்வை நமக்குள்ளும் கடத்துகிறார். இந்தப் புதினத்தை முடிக்கும் சமயத்தில் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு சிறு பயணம் சென்ற உணர்வு ஏற்படும்.
கிழக்கு ஆசியாவில் தமிழர்களின் வாழ்வும் அவர்களின் தமிழ்ப் பற்றும் ஆழ்ந்த இலக்கிய அறிவும் அறிய முடிந்தது, அதோடு அவர்களின் வாழ்வியலையும் புரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் புதினம் பாண்டியனுடன் செல்லும் ஒரு சாகசப் பயணம் என்றே சொல்வேன்.
user_5635
★ 5/5 Feb 02, 20262020-ல் நான் படித்த சிறந்த புனைகதை. 1970களில் வெளியான இந்நாவலை இப்போதுதான் கண்டுபிடிக்கிறேன். இந்தியாவில் பிறந்த ஒரு தமிழனின் பரபரப்பான கதை — நேதாஜியின் ராணுவத்தில் பணியாற்றியது, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் வாழ்ந்த அனுபவம், மதுரையின் நினைவுகள்.
இந்நாவல் படிக்கும்போது எனக்கு இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வந்தன. சென்னை 600028 திரைப்படமும், "Pet the dog" என்ற திரைக்கதை உத்தியும். சென்னை 600028 போல, இந்நாவல் உண்மையாகவும் தைரியமாகவும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் கலாசாரத்தின் புனிதப் பசுக்கள் பல மகிழ்ச்சியாகக் கிண்டல் செய்யப்படுகின்றன. சிங்காரத்தின் எழுத்து காட்சிகள் நிறைந்தது — மதுரை, பினாங்கு, போர்க்களம், கடல்பயணம் எல்லாம் அவரது தெளிவான எழுத்தில் உயிர்பெறுகின்றன.
தமிழ் புரிந்தால் ஆனால் படிக்க இயலாவிட்டால், ஸ்டோரிடெல்லின் ஒலிப்புத்தகத்தை கட்டாயம் கேளுங்கள். தவறவிடக் கூடாத ஒரு சிறந்த நாவல்.
user_5634
★ 4/5 Feb 02, 2026கதைக்களம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக மலேயா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள், சீனர்கள், மலேயர்கள், இந்தோனேசியர்களின் அக்கால வாழ்வியலை போர்க்காலத்தின் ஊடாக இயல்பாகவும் அழகாகவும் விவரிக்கிறார் ஆசிரியர் ப.சிங்காரம்.
கதை முழுவதும் கதாநாயகன் பாண்டியன் வழியே நகர்கிறது. கதைமாந்தர்கள் பெரும்பாலும் தமிழர்களாயினும் அவர்களின் அக்கால மலேய கலந்த தமிழ் வழக்கு சற்று சிரமமாக இருக்கிறது வாசிக்க. ஆனாலும் அதற்குத் தக்க சண்மாணமாய் கதையின் பல சிறப்பம்சங்கள் காத்திருக்கின்றன.
தமிழ்ப் பேரவை எனும் அத்தியாயத்தில் பாண்டியன் மற்றும் அவன் நண்பர்கள் கூடியமர்ந்து உரையாற்றும் தமிழ் மீதான விமர்சனம், சமுதாய ரீதியான தத்துவ விவாதங்கள் சுவாரசியமானவை. பாண்டியனும் தங்கையாவும் நிகழ்த்தும் மானிட அறிவு பற்றிய விவாதம் குறிப்பிடத்தக்கது.
விவாதங்களிலும் வர்ணணைகளிலும் வரும் பல சங்க இலக்கியப் பாடல்கள் சிறிது புரியாவிட்டாலும், அதன் வர்ணணைகள் அழகே. தமிழ் நூல்களில் இது ஒரு கிளாசிக்.