Reviews for புயலிலே ஒரு தோணி

30 reviews total

user_5653

★ 1/5 Feb 02, 2026

தமிழில் படித்த ஒரு புதினத்துக்கு ஒரு புள்ளி கொடுக்கும் நிலை வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை!

இந்தப் புதினத்தின் தலைப்பு என்னைக் கவர்ந்தது, விமர்சனங்களையும் நம்பி வாங்கினேன். மோசம் போனதுதான் மிச்சம்! ஒரு வாக்கியத்தில் கூற வேண்டுமாயின், நானே என்னைத் தண்டித்துக் கொண்டது போல ஆகிவிட்டது. கதியோட்டம், கதாப்பாத்திரங்கள் என எதுவும் விளங்கவில்லை.

கதையின் ஓட்டம் ஒரு வெளிநாட்டு தமிழ் அகதியின் வாழ்க்கை விஷயங்களை மனம் போன போக்கில், வாசகர்களை மனதில் வைக்காமல் எழுதி அனுப்பிவிட்ட மாதிரி இருந்தது! இதைப் படித்து முடிப்பதற்குள் அரைப் பைத்தியமாக மாறிவிடுவேனோ என்று அச்சம் கூட தோன்றிற்று. முக்கால் வாசி புதினத்தில் தமிழே காணோம்! இது எப்படி தலை சிறந்த புதினம் என்கிறார்களே?!

பாண்டியன் பல நாடுகளுக்குச் சென்று இறுதியில் இறக்கிறான் — அவ்வளவுதான் புரிந்தது. எல்லாமே குழப்பமாகவும் ஒத்திசைவில்லாமலும் இருந்தது. எழுபது சதவிகிதம் இந்தோனேசிய, தாய், ஜப்பானிய மொழிகளில் இருந்ததால் படிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இந்தக் குழப்பத்திலிருந்து மீள எனக்கு இரண்டு நாட்கள் தேவைப்பட்டன!

user_5652

★ 5/5 Feb 02, 2026

பா.சிங்காரம் தன் வாழ்வில் எழுதிய இரண்டே இரண்டு நாவல், இது நான் படித்த முதல் நாவல். நவீன இலக்கியத்தின் ஆகச் சிறந்த படைப்பாக இதைப் பற்றி பேசாத இலக்கியவாதியே கிடையாது தமிழில்.

கதை நிகழும் காலம் இரண்டாம் உலகப்போர், இடங்கள் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் போன்ற ஆசிய தென்கிழக்கு நாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலே இந்நூல். இரண்டாம் உலகப்போரில் தமிழக மக்களுக்கு எவ்வளவு பங்கிருந்திருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இக்கதையின் மூலம் உணரலாம்.

ஆரம்பத்தில் வாக்கியங்கள் சற்று கடினமாகவே இருந்தது, பல நாட்டு மொழிகளின் கலப்பால் வாசிக்க சிரமம். ஆனால் கதையின் சுவாரசியம் படிக்கத் தூண்டியது.

கதாநாயகன் பாண்டியனின் பயண வாழ்க்கையை சொல்லும் இந்நாவலில் பலவிதமான உரையாடல்கள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன — நண்பர்களுடன், கர்னலுடன், ஆயிஷாவுடன், நேதாஜியுடன். வாசிக்கும்போது கற்பனையில் தெரியும் படத்தை எதிரில் பார்த்தால் இன்னும் அற்புதமாக இருக்குமே என்ற எண்ணம் வரும்.

இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழில் இரண்டாம் உலகப்போரைக் கருவாக வைத்து எடுத்த திரைப்படம் என் நினைவில் இல்லை — இந்நாவலை ஒரு சீரிஸாக எடுத்தால் அற்புதமாக இருக்கும்.

user_5651

★ 4/5 Feb 02, 2026

கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டது இப்புத்தகத்தை வாசித்து முடிக்க. பாதி புத்தகம் வரை எதற்கு இது வாசிக்கிறேன் என்ற உணர்வோடு விருப்பமில்லாமலேயே வாசித்தேன். கொஞ்சம் கடினமான நடை.

இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் கதை நடைபெறுகிறது, பெரும்பாலான அத்தியாயங்கள் இந்தோனேஷியாவை கதைக்களமாகக் கொண்டிருக்கும். கதை என்ற வகையை விட திரைக்கதை என்ற வகையில் அதிகம் பொருந்திப் போகும் என்று நினைக்கிறேன்.

பிடிக்காததற்கு காரணம்: வேற்று மொழிச் சொற்களும் அர்த்தம் தெரியாத தெற்கத்திய வட்டாரச் சொற்களும் வாசிப்பைக் கடினமாக்கின; உரையாடல்களில் எந்த கதாபாத்திரம் எந்த வசனத்தைப் பேசுகிறது என்ற குழப்பம் இருந்தது.

பிடித்ததற்கு காரணம்: உளவியல் சார்ந்த, தத்துவங்கள் சார்ந்த எழுத்துக்கள் கொண்ட சில அத்தியாயங்கள்; ஆங்காங்கே வரும் இலக்கிய மேற்கோள்கள்; மொழி, இனம், தேசியம் சார்ந்த பற்றுகளை எதிர்க்கும் படைப்பு — இவை எனக்குப் பிடித்தமானவை.

இப்புத்தகத்தைத் திரைப்படமாகப் பார்க்க ஆவலாக உள்ளது.

user_5650

★ 4/5 Feb 02, 2026

ப.சிங்காரம் அவர்களின் இரண்டாவது நாவல். 1930-40களில் இந்தோனேஷியா, மலேஷியா போன்ற நாடுகளில் வேலை செய்தவர். இரண்டாம் உலகப்போர் கால கட்டத்தில் அவரின் அனுபவங்கள் மற்றும் அங்கு சந்தித்த மனிதர்களின் வெளிப்பாடே இந்த நாவல்.

கதையை விட கதைமாந்தர்கள் மற்றும் உரையாடல்களே பிரதானமாக உள்ளன. தமிழ் இலக்கியம், தமிழர்களின் வீரம், முன்னேற்றத்திற்கான யோசனை, ஜப்பானியரின் போர்திறன் என்று பரந்துபட்ட உரையாடல்கள் இருக்கின்றன.

கதையின் நாயகன் பாண்டியன், சின்னமங்கலத்திலிருந்து வேலைக்காக சுமத்ரா வந்தவன். இரண்டாம் உலகப்போர் சூழலில் சுமத்ராவிலிருந்து மலேயா சென்று திரும்பவும் சுமத்ரா வருவது கதையின் சட்டகம். முதல் இரு பாகங்களில் கப்பல் பயணமும் நண்பர்களின் கதைகளும் உரையாடல்களும் தமிழ்நாட்டு நினைவுகளும் நிறைந்திருக்கின்றன. மூன்றாம் நான்காம் பாகங்களில் பாண்டியன் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்வதும், அவனது வளர்ச்சியும், போர் நிகழ்வுகளும், நேதாஜியை சந்திப்பதும் நடக்கிறது.

கதைக்களம், சூழல், நிலப்பரப்பு, கதைமாந்தர்கள் என அனைத்தும் தமிழ் வாசகர்களுக்கு தரும் புது அனுபவம் காரணமாக கடலுக்கு அப்பால் மற்றும் புயலிலே ஒரு தோணி இரண்டும் தமிழின் மிக முக்கிய நாவல்கள், கண்டிப்பாக படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய நாவல்கள்.

user_5649

★ 4/5 Feb 02, 2026

என்ன ஜி இந்த புக்கையா எல்லாரும் இவ்வளவு பெருமையா பேசுறாங்க, பாதி புக்கத் தாண்டிட்டேன் வெறும் டிஸ்கிரிப்ஷன் தவிர வேற ஒண்ணுமே இல்லையே ஜி — முதல் 150 பக்கங்களை தாண்டிய பின்பு நண்பரிடம் நொந்து கொண்டிருந்தேன். இந்த 150 பக்கங்களை படிக்க எனக்கு இரண்டு மாதங்கள் ஆனது. அவ்வளவு கஷ்டமான எழுத்துநடை. இந்தோனேஷியா, மலாய், டச்சு, சீனம் என்று பல மொழிச் சொற்கள் மொழிபெயர்க்கப்படாமல் அப்படியே எழுதப்பட்டிருந்தன.

சரி இவ்வளவு பேர் சொல்றாங்களே படித்துத்தான் பார்ப்போம் என்று தொடர்ந்தேன். அடுத்த 150 பக்கங்களை மூன்று நாட்களுக்குள் படித்துவிட்டேன்! பொதுவாக முதல் நூறு பக்கங்களில் கவரவில்லை என்றால் அந்தப் புத்தகம் சுமாரானதாகவே இருக்கும், ஆனால் புயலிலே ஒரு தோணி இதற்கு விதிவிலக்கு. பழைய பாகவதர் பாட்டிலிருந்து திடீரென ஏ.ஆர்.ரகுமான் இசையைக் கேட்டது போல் இரண்டாம் பாதி வேகம் பிடித்தது.

மூன்று விஷயங்களுக்காக வியக்காமல் இருக்க முடியவில்லை: இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதப்பட்ட தமிழ் நாவல்; நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை செழுமையான நாவலாகக் கொடுத்திருக்கும் சிங்காரத்தின் படைப்பாற்றல்; மற்றும் புத்தகம் முன்வைக்கும் நியாயமான தர்க்கங்கள் — தமிழர் பழம்பெருமை பேசுவதை விடுத்து எல்லா மொழிகளிலும் சிறந்த இலக்கியங்கள் இருப்பதை அங்கீகரிக்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை, வலியோருக்கு எதிராய் போராடும் எளியோருக்கு உதவி செய்வதே அறம் என்ற நிலைப்பாடு.

இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழின் நவீன இலக்கியப் படைப்புகளுக்கு புயலிலே ஒரு தோணி ஒரு முன்னோடியாகவே இருக்கும்.

user_5648

★ 2/5 Feb 02, 2026

மிகையாகப் புகழப்படும் நாவல். முதல் இருபது பக்கங்களைத் தாண்டுவதே கடினம், குறிப்பாக பிற மொழிச் சொற்கள் தமிழில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருப்பதால். இறுதியில் ஒரு புனைகதையைப் படிப்பது போல் இல்லாமல் புனைவில்லாத நூல் படிப்பது போல் உணர்ந்தேன்.

user_5647

★ 5/5 Feb 02, 2026

புயலிலே ஒரு தோணி பற்றிய விரிவான விமர்சனம்.

user_5646

★ 3/5 Feb 02, 2026

தனித்துவமான அனுபவம். இரண்டாம் உலகப்போர் காலத்தை பின்னணியாகக் கொண்ட மிகவும் தனித்துவமான நாவல், வேறுபட்ட கதைசொல்லல் உத்தியுடன் இருக்கிறது. கதைமாந்தர்களின் உரையாடல்களும் உள்ளார்ந்த விவாதங்களும் அருமையாக இருக்கின்றன. ஆனால் படிப்பதற்கு சற்று கடினமான நாவல்.

user_5645

★ 4/5 Feb 02, 2026

இரண்டாம் உலகப்போர் காலத்தில் சுமாத்ரா, மலேயா, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ் மக்களின் வாழ்வைப் பற்றிய நிறைய தகவல்கள் இந்நாவலில் உள்ளன. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்துடன் சுவாரஸ்யமாகப் பின்னப்பட்டிருக்கிறது. இக்கதையில் வரும் பல தமிழ்ச் சொற்களை அறிந்து கொண்டது மகிழ்ச்சி.

user_5644

★ 3/5 Feb 02, 2026

அவ்வளவாக தமிழ் புத்தகங்கள் வாசித்துப் பழக்கமில்லை. வாசித்துப் பார்ப்போம் என்று வாங்கி ஆரம்பித்தேன். கதைக்களம் வேறு நாட்டில் வெவ்வேறு நகரங்களில் அமைந்திருக்கிறது. கதைமாந்தர்கள் ஆங்காங்கே புதிதாய் முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். முதல் பாதி வாசிப்பதற்கு சிறிது தடுமாற்றமாக இருந்தது. பிற்பகுதி அருமை.

கதை முழுவதும் பாண்டியன் மற்றும் அவனது நண்பர்களின் சிந்தனைகள் ரசிக்கும்படியாகவும், நான் இதுவரை சிந்திக்காத வகையிலும் இருந்தது. அதுவே எனக்கு கதையை மேலும் தொடரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. முடிவாக புயலிலே ஒரு தோணி படித்தது நல்ல அனுபவம்.