Reviews for குருதிப்புனல் [Kuruthipunal]
30 reviews total
user_21886
★ 4/5 Mar 06, 2026எனக்கு இ.பா-வின் முதல் அறிமுகம் இந்நூலின் வழி. சாகித்ய அகாடமி மற்றும் சங்கீத் நாடக் அகாடமி விருதுகள் வாங்கிய ஒரே தமிழ் எழுத்தாளர். இவரது எழுத்து நடை வெளிப்படையானது — எதார்த்த மனிதர்களின் கலந்துரையாடல் அப்படியே இருக்கும் எழுத்து வடிவில்.
கதையின் கரு: கீழ்வெண்மணி உண்மைத் துயரச்சம்பவமும் அதன்பின் இருந்த சாதிய அரசியலும். கூலித்தொழிலாளிகளின் போராட்டமும், ஆதிக்கச் சாதியினர் குடிக்கத் துடித்த ஏழைகளின் குருதியும்.
காலம்: 1968. திராவிட சிந்தனை மேலோங்கி, தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த வேளை. மார்க்சிச கம்யூனிச சிந்தனைகளும் பரவலாக மக்களுக்குத் தெரிந்த காலம்.
கண்ணையா நாயுடுவின் சாதிய சகதியில் ஊறிய வெள்ளாடை வெளிப்பாடும், ராமைய்யாவின் கம்யூனிச அறிவும், கோபாலின் புரட்சி தீப்பொறியும் — எல்லாமே இந்த நாவலை ஒரு உன்னதமான படைப்பாக்குகிறது.
உலகம் குறித்த பல கேள்விகளுடன், சாதியும் கம்யுனிசமும் மோதும் களமாக இந்நாவல் அமைகிறது. 44 பேரின் குருதி கலந்த புனல், அரசியல் பகடைக்கும் அதிகார ஆசைக்கும் கிடைத்த கேவலமான வெற்றி. சாகித்ய அகாடமி விருதுக்குத் தகுதியான படைப்பு!
user_21885
Mar 06, 2026எக்காலத்துக்கும் ஒத்துப்போகும் அரசியல் கருத்து, கதை சொல்லும் களத்தில் சிறப்பாக பிணைந்துள்ளது. இ.பா-வின் எழுத்தாற்றல் அற்புதம்!
user_21884
★ 5/5 Mar 06, 20261980களில் பிறந்த எனக்கு தமிழக அரசியலைப் பற்றிய புரிதல் திராவிட இயக்கத்தில் இருந்து தொடங்குகிறது. 1960களில் தமிழகத்தின் ஒரு பகுதி எப்படி இருந்தது என்பதைக் காண இந்தப் புத்தகம் ஒரு ஜன்னலாக அமைகிறது. கீழ்வெண்மணி படுகொலை என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
1960களில் ஒரு தமிழ்க் கிராமத்தில் சாமானிய மனிதனின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இனிமையான, சுருக்கமான வாசிப்பு. அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.
user_21883
★ 5/5 Mar 06, 2026உரிமையை கூட சலுகையாய்ப் பெற வேண்டிய நிலையில் நம் மக்கள் சிலர் இருப்பதன் வலி சொல்லில் அடங்காதது. "இப்பெல்லாம் யாருங்க?" எனும் ஒற்றை முகமூடியில் இன்னும் ஒளிந்துகொண்டிருக்கிறது கீழ்மை.
கீழ்வெண்மணிப் படுகொலைகளை நீதி, அரசியல், அதிகாரம் மறைக்கலாம், மறக்கலாம். வரலாற்றில் அதை இலக்கியம் மூலம் பதிவு செய்திருக்கிறார் இ.பா.
user_21882
★ 4/5 Mar 06, 2026சகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு அற்புதமான படைப்பு. ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்தேன் — மோசமான தொகுப்பாக இருந்தாலும், என்னுள் இருந்த சந்தேக வாசகனின் இதயத்தைத் தொட்டது. கீழ்வெண்மணி படுகொலையை அடிப்படையாகக் கொண்ட இந்நாவல் — 1967ல் நிலவுடமையாளர்-விவசாயி மோதலில் 42 தலித்துகள் உயிரிழந்த உண்மைச் சம்பவம்.
இது ஒரு சோகமான புத்தகம். படித்து முடிக்கும்போது, பக்கங்களைத் தாண்டி அந்தக் காலத்துக்கும் இடத்துக்கும் சென்று கோபாலுக்கு ஆதரவாக நிற்க மனம் துடிக்கும். புரட்சிகளின் முக்கியத்துவம், போராட்டங்களுக்கு எதிரான அவற்றின் நிலைப்பாடு, சமூக இயக்கங்களில் தனிமனித சுயநலம் — இவையெல்லாம் சிந்திக்க வைக்கும்.
ஆசிரியரின் கதையாடல் திறன் இறுதி சில பக்கங்களில் உச்சத்தை எட்டுகிறது. சாகித்ய அகாடமி விருதுக்கு முற்றிலும் தகுதியான படைப்பு. தமிழ் இலக்கியத்தை மேலும் ஆராய என்னைத் தூண்டிய நாவல்.
user_21881
★ 4/5 Mar 06, 2026கதை எழுதப்பட்ட காலத்திலான எதார்த்தமான அரசியல் நிலையை எந்தவித சார்பும் இன்றி நேர்மையாக படம் பிடித்து காட்டுகிறது இந்த புத்தகம். இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான் என் சொந்த ஊரான தஞ்சையில் இப்படி ஒரு கோரச் சம்பவம் நடந்து இருப்பதை பற்றி அறிந்துகொண்டேன்.
இந்தக் கதையில் ஏற்படும் நிகழ்வுகளும் தடைகளும், புரட்சியை உருவாக்க முனையும் எந்த ஒரு சமூகமும் சந்திக்கும் இன்னல்கள் எனும் உண்மையை மறுக்க முடியாத கனத்த நெஞ்சோடு முடிகிறது இந்த புத்தகம்.
user_21880
★ 1/5 Mar 06, 2026இவ்வளவு செயற்கையான ஒரு நாவலை நான் இதுவரை படித்தது இல்லை. சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் என்பதால் எடுத்தேன், பெரும் ஏமாற்றம். கதாபாத்திரங்கள் ஆங்கிலத்தில் உரையாடும் இடங்கள் வாசிப்பிற்கு முட்டுக்கட்டையாகவும் எரிச்சலையும் தருகிறது.
கம்யூனிசம் எத்தனை மகத்தான சித்தாந்தங்களை முன் வைத்தாலும் இறுதியில் அழிவின் புதைமேட்டில் தான் நிற்கும். கடந்த நூற்றாண்டின் தோற்றுப்போன ஒரு சித்தாந்தம் — அதையே ரஷ்யாவில் பார்த்தோம்.
user_21879
★ 5/5 Mar 06, 2026கீழ்வெண்மணி படுகொலை — அதிகாரத்தில் இருப்பவர்கள் வீசுகிற ரொட்டித்துண்டுக்காக, புத்தியை விபச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவன் என்றும் தாழ்த்தப்பட்டவனாகவே இருக்கிறான். "பேயரசு செய்தால் அங்கு பிணம் தின்னும் சாத்திரங்கள்"
user_21878
★ 3/5 Mar 06, 20261968ல் நடந்த கீழ்வெண்மணி படுகொலையை பின்புலமாக கொண்டு புனையப்பட்ட ஒரு புதினம். இந்த புதினத்தை தழுவி "கண் சிவந்தால் மண் சிவக்கும்" என்ற திரைப்படம் வந்ததை பலரும் அறியலாம்.
தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள நிலக்கிழார்களின் ஆண்டான் அடிமை முறையையும், சாதிய அடக்குமுறைகளையும், அதனை எதிர்ப்போர்களின் மீது பிரயோகிக்கப்பட்ட கொடுமையான வன்முறையை வெகுஜன மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விமர்சித்ததில் இந்நூலுக்கு ஒரு பங்கு உண்டு.
நீங்காத வடுவை ஏற்படுத்திய இக்கொடிய சம்பவத்தின் தீவிரத்தன்மையை, இந்நூல் கலை உரிமம் என்கின்ற பேரில் நீர்த்துப்போக வைத்துவிட்டதோ என்கின்ற ஐயமே இந்நூலை படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்டது. நிகழ்வின் பின்புலனை பற்றிய விரிவான ஒரு பகுப்பாய்வாக இந்நூல் இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். மாறாக, அவை முக்கிய கதாபாத்திரங்களின் மனோ பகுப்பாய்வாகவே இருந்தது.
கதாபாத்திரங்களின் அரசியல், உளவியல் மற்றும் புரட்சி பற்றிய சம்பாஷணைகளும் விவாதங்களும் சிந்திக்க வைத்தாலும், அவை ஒரு கோர்வையாக இல்லாததினாலும், ஒலிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆங்கில உரையாடல்களாக இருப்பது எரிச்சல். யதார்த்தவாதத்துக்காக சேர்க்கப்பட்ட இழிச்சொற்களையும் வசைகளையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
குருதிப்புனலில் சில குறை நிறைகள் இருந்தாலும், பலராலும் அறியப்படாத நம் வரலாற்றின் இருண்ட அத்தியாயத்தினை மக்களின் பிரக்ஞைக்கு கொணர்ந்த ஒரு முக்கிய படைப்பே.
user_21877
★ 5/5 Mar 06, 2026தமிழ்நாட்டில் கம்யுனிசம் என்கிற கடல் அளவு கான்செப்ட் இரண்டு இட்லியோடு முடிந்துவிடுகிறது. மிக நேர்த்தியான நுட்பத்தோடு ஒரு கிராமத்தின் வாழ்வியலையும், டெல்லி போன்ற பெருநகரத்தில் இருந்து இங்கு வந்து கம்யுனிசத்தின் பிடியில் அகப்பட்ட இரண்டு இளைஞர்களின் வாழ்க்கை சூழலையும் விவரிக்கின்றது குருதிப்புனல்.
மேல்தட்டு எஜமானின் சிரம் உயருமே ஆனால், அவனிடத்தில் கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளியின் சிரம் தாழும். அன்றாட உணவுக்கு அல்லாடும் விவசாயிகளின் போராட்டத்தை தட்டி கேட்க ஒவ்வொருமுறையும் சே குவாராவை எதிர்ப்பார்த்திருப்பது இயலாத ஒன்று. நம்மில் ஒருவர் சத்ரியகுலத்தை வேரறுத்து ரத்தக்குளத்தில் குளித்த அந்தணன் பரசுராமனாய் மாறினாலே போதும். இந்த ஒற்றை வரி கொண்டு கம்யுனிசம் படைக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெற்று, அன்றைய கம்யுனிஸ்டுகள் எதிரில் சவாலாய் நின்ற இந்த படைப்பு முற்றுபுள்ளியின்றி தொடரும் விதத்தில் நின்றிருப்பது கம்யுனிசத்தின் எதார்த்தத்தின் உச்சகட்டம். என்றேனும் ஒரு நாள் நமக்கருகே, நம்மில் ஒருவரால் இந்த சூழல்களை சந்திக்க நேரிடலாம்.