Reviews for குருதிப்புனல் [Kuruthipunal]

30 reviews total

user_21896

★ 4/5 Mar 06, 2026

சாதிய கட்டமைப்புக்குள்ளான ஒரு ஊரில் உள்ள ஒரு உயர்சாதி தலைவனுக்கும், படித்த ஒரு இளைஞனுக்கும் ஏற்படும் மோதலில் என்ன நிகழ்கிறது என்பது பற்றி எழுத்தாளர் கற்பனைக் கதையை எழுதாமல் இயற்கையாய் என்ன நிகழுமோ அதை திறம்பட கூறியிருக்கிறார்.

முற்கால சாதிய கட்டமைப்புகளுக்கு உண்டான ஒரு உலகத்தைக் குறித்து தெரிந்துகொள்ள ஒரு நல்ல நூல்.

user_21895

★ 4/5 Mar 06, 2026

கீழ்வெண்மணி படுகொலையை அடிப்படையாகக் கொண்ட நாவல். ஆரம்பத்தில் நவீன தமிழ் சினிமாவில் காணக்கூடிய நிகழ்வுகளை சித்தரிப்பது போல் தோன்றினாலும், 70களில் வெளியான புத்தகம் என்பதை கருத்தில் கொண்டால், நவீன தமிழ் சினிமா இது போன்ற படைப்புகளால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.

உள்ளூர் பேச்சுவழக்கு சற்று கடினமாக இருந்தாலும், கதை வேகம் பிடித்தது. ஆசிரியர் ஒரு கதாபாத்திரத்தின் சிந்தனை செயல்முறையை விவரிக்கும் விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் கோபால், சிவா பார்வையில் இல்லாமல், அம்மாவாசி அல்லது பாப்பாத்தி போன்ற கதாபாத்திரங்களின் பார்வையில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

user_21894

★ 3/5 Mar 06, 2026

எழுத்து நடை தனித்துவமானது — உள் உரையாடல்களையும் வெளி உரையாடல்களையும் இணைக்கும் விதம் சிறப்பு. கதாபாத்திரங்களின் உள் உரையாடல்கள் மிகவும் யதார்த்தமானவை — மனிதர்கள் எப்படி சிந்திக்கிறார்கள், எப்படி சூழ்நிலைகளை ஆராய்கிறார்கள் என்பதை அற்புதமாகச் சித்தரிக்கிறது.

ஆனால் கதாபாத்திர வளர்ச்சியில் நாவல் தோல்வியடைகிறது. நிகழ்வுகளின் விவரிப்பும் ஒவ்வொரு சூழலிலும் தனிப்பட்ட எண்ணங்களும் இருக்கின்றன, ஆனால் கதாபாத்திரங்கள் ஏன் குறிப்பிட்ட வகையில் நடந்துகொள்கிறார்கள் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

கிராமப்புற தமிழகத்தைப் பற்றி அறிய விரும்புவோருக்கு, அடிப்படை அறிவு இருந்தால் சுவாரஸ்யமான வாசிப்பு.

user_21893

★ 4/5 Mar 06, 2026

இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்குச் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்ட கதை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கீழ்வெண்மணி என்னும் கிராமத்தில் விவசாயிகளுக்கு நேர்ந்த அதிபயங்கரக் கொடுமையை எடுத்துரைக்கிறது. மிராசுதார்களுக்கும் சிறுபான்மையின மக்களுக்கும் இருந்த வேறுபாட்டைக் கலைநயத்துடன் சொல்லியிருப்பார் ஆசிரியர்.

தில்லியில் படித்த இளைஞன் கோபால், நண்பன் சிவாவுடன் கிராமத்து மக்களின் போராட்டத்தில் இணைகிறான். கண்ணையா நாயுடுவின் ஆதிக்கத்தை எதிர்த்து, கம்யூனிஸ்ட் ராமய்யாவுடன் சேர்ந்து நடத்தும் புரட்சியே கதைக்களம்.

சிறுபான்மையின மக்களுக்கும் மேல் குடி மக்களுக்கும் இருந்த வேறுபாட்டை உணர்ச்சிப்பொங்க எடுத்துரைத்திருக்கிறார் எழுத்தாளர்.

user_21892

★ 4/5 Mar 06, 2026

தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையே உலுக்கிய 44 உயிர்களை தீக்கிரையாக்கிய கீழ்வெண்மணி படுகொலையினை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் நாவல்.

டெல்லியிலிருந்து தஞ்சாவூர் அருகே இருக்கும் கிராமத்திற்கு வருகிறான் சிவா, தன் தோழன் கோபாலைத் தேடி. கண்ணையா நாயுடுவின் ஆதிக்கத்தை எதிர்த்து கம்யூனிச ராமய்யாவுடன் இணைந்து விவசாயிகளின் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.

கீழ்வெண்மணி சம்பவம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்ததால், திமுக அரசு மீதும் அரசியல்வாதிகள் மீதும் காட்டமான விமர்சனத்தை வைக்கிறது நாவல். 44 உயிர்களை — பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமே — குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர எப்படி அரசு தவறியது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

நாவலில் போராட்டத்தில் இணையும் கோபால், சிவா இருவரும் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பது கொஞ்சம் உறுத்தியது. அதனாலேயே திமுக அரசையும் திராவிட கொள்கைகளையும் விமர்சிக்கும்போது நாவலின் நோக்கம் மீது கேள்வி எழும்புகிறது.

user_21891

★ 1/5 Mar 06, 2026

கீழ்வெண்மணி படுகொலையை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், கற்பனையான கதாபாத்திரங்களைத் தாண்டி மக்களின் வலியை என்னால் உணர முடியவில்லை. நாவல் உண்மையான பிரச்சனையிலிருந்து முற்றிலும் விலகி, மிகவும் வேறுபட்ட கோணத்தில் ஆராய்கிறது — அதனுடன் என்னால் தொடர்புபடுத்திக்கொள்ள இயலவில்லை.

அதிகம் எதிர்பார்த்தது என் தவறாக இருக்கலாம், ஆனால் இந்தப் புத்தகம் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதற்கு ஏன் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது என்று இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

user_21890

★ 5/5 Mar 06, 2026

"என்னை விட ஒசத்தின்னு ஒருத்தன் சொன்னான்னா, அதை எதிர்கிறேன்கிறதுக்காக என்கிட்ட பரம்பரை பரம்பரையா வேலை செய்துகிட்டு வர்ற பயலுகளை சிம்மாசனத்திலே உக்காத்தி வைக்கணுமா?" — மேலே குறிப்பிட்ட முரண் தான் இந்த நாவல்.

திராவிட அரசியல் 60 வருஷம் நாட்டை ஆண்டும் ஏன் சாதி முழுசா ஒழியலை என்று நினைப்பவர்கள் கண்டிப்பா இந்த நாவலை படிக்க வேண்டும். மேம்போக்கா பார்த்தால் வெறும் வர்க்கப் பிரச்சினை, பண்ணையார் தொழிலாளி பிரச்சினை என்று தோணும். ஆனால் அதுக்குள்ள இருக்கிற சாதியப் பிரச்சினை, அரசியல், மக்களோட உளவியல், தலைவனை கடவுளா பாக்குறது — எல்லாத்தையும் இந்த நாவல் அலசி ஆராயும். ஒரு கிளாசிக்.

user_21889

★ 5/5 Mar 06, 2026

இந்திரா பார்த்தசாரதி எழுதிய நான் வாசித்த முதல் நாவல் இதுவே. என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு கிராமத்தின் சாதி பிரச்சனையை கருவாக கொண்ட கதையமைப்பு.

நகரத்தில் வாழும் நன்கு பயின்ற இரு இளைஞர்களின் சிந்தனைகள் மற்றும் உரையாடல்கள் மூலம் பல சிந்தனை பரிமாற்றங்களை முன் நிறுத்தியுள்ளது இந்நாவல்.

உண்மைச் சம்பவமான அந்த சாதிக் கொடுமையை — மனித நேயமற்ற ஒரு நாகரிகமற்ற செயலை அடிப்படையாக கொண்டுள்ள கதை. அக்கதையை இவ்வுலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய ஓர் உன்னதமான படைப்பு. சமூகத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவினரின் அழுகை, கோபம், வெட்கம் என்று பல இன்னல்களை எடுத்துரைக்கிறது. அக்காலக் கட்டத்தில் இருந்த தமிழக அரசியல் நிலைமையை தைரியமாக விமர்சித்துள்ளது.

user_21888

★ 4/5 Mar 06, 2026

சுதந்திர தினத்துக்கு அடுத்து இந்நாவலைப் படித்தது சிறப்பு. "சுதந்திரம் கிடைத்துவிட்டதா?" — "இல்லை" என்ற எண்ணத்தின் சான்றாக இப்படைப்பு! உண்மைச் சம்பவத்தைத் தழுவியது என்று முன்னுரையே முணுமுணுக்க வைக்கும் நாவல்.

ஏட்டுப்படிப்பும் கவைக்குதவாத கற்பனைகளுமே கொண்ட இரு நகரவாசிகள், சாதிய வெறிகொண்ட நாயுடுவின் அட்டூழியங்களைக் களைத்தெறிய, கம்யூனிஸ்ட் காம்ரேட் ராமய்யாவுடன் இணைந்து நடத்தும் ஓர் கிராமத்துப் புரட்சியே கதைக்களம்.

கோபத்தின் காரணமாக தனிப்பட்ட பலவீனத்தின் அடிமைத்தனம், சாதிவெறியின் சூதுபொருகளாகப் பெண்டிரை அசுரவதம் செய்திருக்கிறது. குருதி ஓடும் தசைகளின் கூடுகளுக்கிடையே என்ன பேதம்???

"சாதிகள் இல்லையடி பாப்பா!" என்று முண்டாசு கவி சொன்னதன் அர்த்தமும் ஆழமும் புரிகிறது. செய்யும் தொழிலின் செல்வபலங்கொண்டு பிரித்த பிரிவு, பின்னாலே சாதி என்ற பெயரில் நடத்தும் பயங்கரம்.

user_21887

★ 4/5 Mar 06, 2026

இ.பா காவிரியாள் என்று எனக்கு இதுவரை தெரியாது. கும்பகோணம் பக்கத்து எழுத்தாளர் என்ற ஒரு கூடுதல் ஈர்ப்பு எனக்குள் வந்தது உண்மைதான். கீழ்வெண்மணி சம்பவங்கள் அவருக்குள் ஏற்படுத்திய சலனங்கள்தான் குருதிப்புனலின் மையக் கரு. வரிக்கு வரி அரசியலும் ஜாதியும் மானாவாரியாக இழுக்கப்பட்டு அடிபடுகிறது.

டெல்லியிலிருந்து திருவாரூர் பக்கம் வந்த இரு இளைஞர்கள் சிவா மற்றும் கோபால் கதையை ஒவ்வொரு கட்டத்திலும் நகர்த்துகிறார்கள். கிராமத்து நாவல் போர்வையில் இருக்கும் புரட்சிகரமான கருத்துகள் அடங்கிய கதை.

அரசியல் ஜனங்களை கெடுக்கவில்லை, ஜனங்கள்தான் அரசியலைக் கெடுத்துவிட்டார்கள் என்று எழுதுகிறார். நாவல் முழுக்க சாட்டையைச் சுழற்றுகின்ற வரிகள்! சாகித்ய அகாடமி விருது கிடைத்தது கன பொருத்தம்!

"வெற்றி அடையும் பக்கம் சாய்வதோ, இல்லாவிட்டால் செய்கை என்று வரும்போது அலிகளாக இருந்து விடுவதோதான் இந்நாட்டு இன்டெலக்சுவல்களுடைய கொள்கைத் தர்மமாக இருந்து வந்திருக்கிறது" — இது சரித்திரம் கூறும் உண்மை.