1. முதலும் முடிவும்
‘எங்க டீச்சர்’ கதையை பாரதி பாஸ்கர் அவர்கள் வாசிக்க கேட்டிருக்கிறேன் என்றாலும், இது நான் வாசித்த சு.ராவின் முதல் சிறுகதை. சு.ராவை வாசிக்க பல நாட்களாய் ஆவல் கொண்டிருந்தேன். அண்மையில் அவரைப் பற்றிய ஆவணப்படமும் பார்த்திட, அவ்வெண்ணம் மேலோங்கி விட்டது. அவர் பேசிய விதம் எனக்கு நெருக்கமான யாரையோ நினைவுப்படுத்த, இந்த ஜனவரி 1 அன்றே, முதல் கதையை கையில் எடுத்துவிட்டேன்.
அழகு, ஒரு ஏழை குடிசை தாயின் மகள். அவள் தாயின் சினேகிதியான நாயகியின் மாட மாளிகை கண்டு மயங்கி அங்கேயே இருந்துவிட ஆசை கொள்கிறாள். அவளது ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதே கதை. அக்காலத்து நாட்டு நடப்பையும், அதனால் ஒருவன் அடையும் சுய ஆதாயத்தையும், கதை பின்னலில் இழுத்து கட்டியிருப்பார் சு.ரா.
ஒரு பெரிய வரலாற்றுத் தகவலை, ஒரு வரியில் வைத்திருப்பார். மிளகு ஏற்றுமதி பற்றி. இக்கதையினால்,நான் மிளகின் கதையை தேடிக்கொண்டு சென்றேன். ஒரு காலத்தில், மிளகு பண பரிமாற்றமாக விளங்கியிருக்கிறது. மிளகை தேடி இந்தியா வர நினைத்த கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கிறார். (அதைதான் இந்தியா என்று சொல்லிக்கொண்டாராம். தன் தவறை ஒத்துக்கொள்ளவே இல்லையாம். தற்செயலாய், முதற்நாள் தான், Trevor Noah, அவரின், புதிய காட்சியில் (Show) இதைப்பற்றி குறிப்பிட்டிருந்ததை கேட்டிருந்தேன்)
மசாலாக்களின் அரசனாக கருதப்பட்டது மிளகு. அதை தேடிதான் வாஸ்கோட காமா, இந்தியாவிற்கு வந்திருக்கிறார். அவர் Cape of Good Hope-ஐ சுற்றி சரியான வழியை கண்டடைந்து விட்டார்.
மேலும், மிளகின் தோற்ற வரலாறு மற்றும் கட்டுகதைகள் எல்லாம் படிப்பதற்கு சுவாரஸ்மாக இருக்கிறது.
(உ.சா. துணை : )
மேலும், ஒருவனது பொருளாதார நிலை,இன்னொருவனால், எந்த அளவுக்கு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதையும் காட்டியிருப்பார். இந்த கதை 1951-ல் வெளியாகியிருக்கிறது. இன்றும் இது பொருத்தமாகவே இருக்கிறது, பல தருணங களில்.
கதையின் சில வரிகள்
நல்லமிளகை உள்நாட்டில் வாங்கி வெளிநாட்டிற்கு அனுப்பும் வியாபாரம் பிள்ளைக்கு - தற்சமயம். நம்நாட்டில் பிறக்கும் நல்ல மிளகு, நம் நாட்டு மக்களைவிட அமெரிக்காவிலிருக்கும் வெள்ளையனுக்குப் பிடிக்கும் பொருளாக அமைந்துவிட்டது பிள்ளையின் அதிர்ஷ்டம். அமெரிக்கன் யந்திரத்தினால் நல்லமிளகு செய்யும்வரை பிள்ளைக்கு யோகம்தான்!
“ராசா வந்தாச்சு” என்றாள் அழகு. இருவரும் விளையாடலாமென்பது பொருள். (இவ்வரி எனக்கு கு.அகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையை நினைவுப்படுத்தியது. ஆகையால் குறித்துக்கொண்டேன்)
“இருந்தாலும் நீ பொல்லாதவதான்.…. சாதிச்சுப்புட்டியே” என்று சொல்லி அழகுவின் நெற்றியில் கை கொடுத்து உருவிவிட்டு விரலைச் சொடுக்கித் திருஷ்டி கழித்தாள். அழகுவின் கண்களில் நீர் சுரந்தது. - அந்ந கண்ணீர் சொல்லும், கதையின் ‘முதலும் முடிவும்’.
*
2. தண்ணீர்
எந்த முன்னேற்றமோ அல்லது முட்டுக்கட்டையோ நான் பிறந்து வளர்ந்த காலத்தில் இருந்துதான் எல்லாம் நடப்பதாய், சொல்லப்போனால் உலகமே அதன்பின்தான் இயங்குவதாய் எனக்குள்ளே ஒரு உள மயக்கு. அது அபத்தமான நினைப்பு என்று தெரிந்த பின்பும் கூட எப்போதும் அந்த மயக்கு தீண்டப்படாமல் இருப்பதாய் தோன்றுகிறது.
இந்த கதை 1953-ல் வெளிவந்திருக்கிறது. ஆனால், நாட்டில் இன்னும் இதே நிலைமைதான்.
இதில் குறிப்பிட்டுள்ள அத்தனை குறைபாடுகளும் சற்றும் குறையாமல் அப்படியே இருப்பதாய் இருக்கின்றன. இதில் வரும் சில நம்பிக்கை ஒளிகளை போல், இன்றும் இருப்பது, ஒரு சமூகம் ஆண்டாண்டாய் எவ்வாறு வலம் வருகிறது என்பதை குறிப்பதாய் உணர்கிறேன். குறிப்பாக, இதில் எனக்கு பிடித்த, பாதித்த பத்தி கீழ்வருமாறு:
“ஐயா, இந்தப் பீப்பாய் ஓட்டையெ அடைக்கப்பிடாதா? தண்ணி பாளாப்போகுதே!” இதே வார்த்தைகளைக் கிழவி தினம் தினம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கோ உடம்பிலிருந்து சதா ரத்தம் ஒழுகிக்கொண்டிருப்பதுபோல் வேதனை. அந்த ஓட்டையை அடைக்க, சுண்டுவிரலைக் கேட்டால் கூட வெட்டிக் கொடுத்து விடுவாள் கிழவி! தண்ணீர் வீணாகிறது. தண்ணீர்! தண்ணீர்!!
மேலும் இதில் உலவும் நம்பிக்கை ஒளிகளை கண்டபோது, அண்மையில் வெளிவந்த மாரி செல்வராஜ்-தனுஷ் படக்காட்சிகள் நினைவெழுந்தன. இரண்டிலும் எடுத்துக்கொண்ட கரு வேறு என்றாலும், கருவி ஒன்றென தோன்றியது.
கே.பி இயக்கிய தண்ணீர் தண்ணீர் படத்தின் தலைப்பு (கதையும் கூட இருக்கலாம், இன்னும் படம் பார்க்கவில்லை. இவ்வருடம் பார்க்க வேண்டும்) இதிலிருந்து வந்திருக்குமோ என்று தோன்றியது.
சு.ரா அந்த மக்களின் அவலங்களை கதறாமல், கூப்பாடில்லாமல், ஆழமாய் தொட்டுச் சென்றிருப்பார்.
(உ.ம்) ‘கிணறுகளில் நெல் போட்டுப் பத்திரமாக வைக்கலாம். ஆனால் அவர்கள் வீடுகளில் மணி நெல்கூட இல்லை. கிணறு, கிணறாக இருந்திருந்தால் பானைகள் காலியாகவும் இருந்திராது’.
எனக்கு ஆச்சரியம் பொதிந்த வரிகளாய் தோன்றியது,
‘அணைதிறப்பு விழா பிரமாதமாக நடந்தது. ஒரு பெரிய மனிதர் நிறையப் பேசினார். உட்கார்ந்த இடத்திலிருந்தவாறே அணையைத் திறந்துவைத்தார்’.
எனக்கு கலைஞரும், ஜெயலலிதா அவர்களும், ரிமோட் பொத்தான் அழுத்தி திறந்து வைக்கும் காட்சி படிமங்களே கண்ணில் தெரிந்தன. 50களிலே எவ்வாறு செய்திருப்பார்கள்? ஒரு வேளை, தகவல்கள் பொறிக்கப்பட்ட கல்லின் திரையை நூலிழுத்து திறந்திருப்பார்களோ என்று நினைத்துக் கொண்டேன். அவ்வாறு சிறு வயதில் செய்தி காட்சிகள் பார்த்திருப்பதாய் உள்ளம் தானே நடித்து நம்பிக்கொண்டது. உண்மையா பொய்யா என்பது அதற்கே வெளிச்சம்.
மூளை சென்று கூகுளை தட்டி எழுப்பி கேட்க , உண்மையான ஆச்சர்யம் இங்குதான் என்று தோன்றியது - 1950 ஆம் ஆண்டு ஜெனித் ரேடியோ கார்ப்பரேஷனால் டெலிவிஷனைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்ட முதல் ரிமோட் உருவாக்கப்பட்டது. லேசி போன்ஸ் என்று அழைக்கப்படும் ரிமோட், ஒரு கம்பி மூலம் தொலைக்காட்சியுடன் இணைக்கப்பட்டது. வயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல், ஃப்ளாஷ்மேடிக், 1955 இல் யூஜின் பாலியால் உருவாக்கப்பட்டது.
இக்கதை வெளிவந்த வருடம் 1956. ஒரு வரி என்றாலும், அந்த வரலாறை அவ்வரியில் பொதித்து இன்று 2024ல் அதை தோண்ட வைத்துவிட்டார்.
‘பட்டதெல்லாம் எடுத்து சொல்ல பட்டப்படிப்பு தேவையில்ல’ என்று போக்கிரி படப்பாடலில் ஒரு வரி உண்டு.
பட்டம் படிச்சவன் வந்தாலும், பட்டாளமே வந்தாலும், பிள்ளைக்கு பாதி வயிறு நெரப்ப கூட வழியில்லாம, பட்டினி கெடக்கும் சமூகத்தின் மூளை, பகுத்தறியும் அறிவிற்கு நிகராய், எந்த பட்டப்படிப்பும் நிற்கமுடியாது என்றே தோன்றுகிறது.
*
11. சன்னல்
சன்னல்- நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், ஏதேனும் ஒரு சன்னலை நோக்கியிருந்திருப்போம்.
அது அக்கட்டத்தின் (இக்)கட்டிலிருந்து தன்னை தற்காலிகமாக அவிழ்த்து மீட்டுக் கொள்ள உதவியிருக்கக்கூடும்.
அல்லது, அறைக்கு அப்பால் இருக்கும் அண்டத்தின் பிரம்மத்தை நோக்கி புரிந்துக் கொள்ள எத்தனிக்கும் என்புக்கு ஏதும் உரைத்திருக்கக்கூடும்.
இன்னும் சொல்வதென்றால், தத்துவத்திற்கும், தனித்துவத்திற்கும் அடிகோலிட்டிருக்கவுங்கூடும்.
சிலருக்கு, அதுவே வாசலாகவும் அமைந்திருந்திருக்கும். அப்படி ஒரு மனிதனின் வாழ்வில் அவன�� இருக்கும் 10*10 அறையில் அவனுக்கு ஜீவனாய் திகழும் ஒரு சன்னலின் இன்றியமையாத பங்கை, பாங்காய் சொல்லியிருக்கிறார் சு.ரா. நாளுக்கு நாள் நான் சு.ராவை நெருங்குகிறேன். அவரின் கதையை படிக்கப் போகிறோம் என்ற பரவசமும், இன்று என்ன கதை என்ற ஆர்வமும் மேலோங்கிட உணர்கிறேன்.
இக்கதையில், அவர் விளக்கியிருக்கும் ‘அறைவியல்’ அபாரம்.
குறிப்பாக,
“அந்தச் சுவரில் தெளிவாகத் தெரிந்த நாலு கறுப்புப் புள்ளிகளைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்”
“என் கண்களுக்கு மேல் பதினொன்று உத்தரக் கட்டைகள். அந்தக் கட்டைகளில் . . . போதும்! எனக்கு அலுத்துவிட்டது”
மேற்கூறிய அனுபவங்கள் எனக்கும் உண்டு. எங்கள் வீட்டு ஹாலில், உத்திர கட்டைகளுக்கு பதிலாய், வளைந்த கம்பிகள் U வடிவில், 7 இருக்கும். நடுவில் மூன்று, இட வலங்களில் ரெவெண்டு என நான்கு.
அதனை ஃ வடிவில் எடுத்துக்கொண்டு, அல்லது முக்கோண வடிவாய் எண்ணிக்கொண்டு, ஒவ்வொரு தடவையும், ஒரு வளைவினை மையமாக கொண்டு, கண்காளால் கோடு கிழித்து விளையாடுவது, சிறு வயதில், எனது இரவு வழக்கம்.
அதே போல், ஊருக்கு சென்றால், இரவு உத்திர கட்டைகளை எண்ணிக் கொண்டு படுத்திருந்ததும், எனக்கு வலதுப்புறம் அப்பா கட்டிலில் படுத்து பேசிக்கொண்டிருக்க, எனக்கு இடப்புறமாய் அம்மா, பக்கத்தில் தம்பி படுத்திருக்க, எனக்கு தலைமாட்டில் சித்தி படுத்திருக்க, எனக்கு எதிர்புறத்தில் மாமா கட்டிலில் படுத்துக்கொண்டு, அருகில் உறங்கும் எனது கொள்ளு தாத்தாவை வம்பிழுத்துக்கொண்டும், செல்லமாய் மிரட்டிக்கொண்டும் கழித்த நாட்கள் நினைவெழுகின்றன.
“கட்டிலின் உயரத்திற்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும் மூக்கை வழித்துத் தேய்த்திருந்தது. அது உலர்ந்து பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது” - இந்த வரியில் நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு விட்டேன். கதைக்கு என்ன ஒரு இணக்கமான வரி. சபாஷ்.
“…… அன்றுதான் கன்றுகள் நட்டார்கள். அவை என் கண்முன்னே வளர்ந்தன. வளர்ந்து பெரிதாயின”. - காலத்தை குறிக்கும் (அ)பாரமான வரி என்றே கூறுவேன்.
ஒரு சிறுகதைக்கு ஒரு வரி முத்தாய்ப்பாய் அமைந்தாலே, காலத்திற்கும் அதை நாம் வளர்த்தெடுப்போம். இங்கு அம்மாதிரி வரிகள் - பாதி சிறுகதை.
அப்படி நான் பிரமித்த வரிகள் :
“ சாரல் சமயங்களில் தண்ணீர்த் திவலைகள் மின்சாரக் கம்பி வழியாகச் சிறிது தூரம் கீழ்நோக்கி ஓடிவிட்டு உதிரும். அப்பொழுது இளம் வெயிலும் அடித்துவிட்டால் போதும். அற்புதமாக இருக்கும். ஒரு திவலைத் தண்ணீரில் ஓராயிரம் நிறங்கள்”.
இக்கதை சொல்லும் மனிதன், சிலாகித்து பார்ப்பதாய் கூறும் மேக வர்ணனையில், அவனில்
உளவியலை தொட்டு சென்றிருப்பார். அதில் எம்மனதை தொட்டுவிட்டார்.
*