"அக்கரைச் சீமையிலே" - சுந்தர ராமசாமி
=======================================
திரு சுந்தர ராமசாமி அவர்களின் ஆரம்ப காலகட்டமான 1950களில் பல்வேறு பத்திரிக்கைளில் பிரசுரமான அவருடைய சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம். ஏழ்மை, வறட்சி, வறுமையின் கொடுந்தீ நாக்கு , கருணை, அன்பு-அந்நியோன்யம் , ஊடல், உழைப்பு, ஒழுக்கம், கேலி போன்ற பல்வேறு கதைக்கருக்களை கொண்டு இச்சிறுகதைகளை மிக உணர்வுபூர்வமான வகையில் எழுதியருக்கிறார். ஒவ்வொரு கதையை வாசிக்கையிலும், நம் நெஞ்சக்கூட்டுக்குள் ஒரு குறகுறுப்பு ஊர்வதை உணர்வது மட்டுமல்லாது, கதையின் கடைசியில் ஒரு பெருமூச்சையும் வெளிக்கொணர்ந்து விடுகிறது. ஒவ்வொரு கதையும் உணர்வுக் குவியலாலான ஒவ்வொரு சுருக்குப் பை.
*அக்கரைச் சீமையிலே*
ஆப்ரிக்க 'புலவாயோ' நகர பயண கதை, முதல் நபர் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது.
பிழைக்க போன ஆப்ரிக்க தேசத்தில், தமது ஏழ்மையையும் சோகங்களையும் கொட்டி தீர்க்கும் திருநெல்வேலி நாயூடுவை பற்றியும், சுதந்திர பெற்ற இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என எண்ணி, தமிழகம் வரதூண்டும் தமது பெரும் ஆவலையும் சொல்லும் கதை. வாசித்து முடிக்கையில் பெருமூச்சொன்றை விடுவிக்கும் அளவிற்கு, அக்கால இந்தியரின் சூழலை ஆப்ரிக்க மண்ணிலிருந்து படம்பிடித்திருக்கிறது இச்சிறுகதை....1953ல் 'சாந்தி' எனும் பத்திரிக்கையில் வெளிவந்தது
*அடைக்கலம்*
ஒரு பிராமணப் பாட்டி, தன் பயணத்திற்காண காத்திருப்பில் சிந்திக்கும் விஷயங்களையும், சந்திக்கும் நிறைமாத சூலியான துரைச்சாணிக்கு அவள் தரும் அடைக்கலம் பற்றியானது இக்கதை
இடையில், டெல்லியிலுள்ள தனது மகள், மாப்பிள்ளை, பேரக்குழந்தைகளிடம் தான் காணும் தலைமுறை வேறுபாடுகளையும் சொல்கிறது அவளது எண்ணவோட்டங்களின் மூலமாக....சரஸ்வதி பத்திரிக்கை, 1958
*முதலும் முடிவும்*
அழகு எனும் ஏழைச் சின்னபெண்ணின் 'பங்களா' வீட்டைப் பற்றிய எண்ணவோட்டத்தை படம்பிடிக்கும் கதை. அப்பெண் குழந்தை பங்களாவில் வாழ அந்த பங்களாத் தாய் தம் மகனை பிற்காலத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சொல்லிவிடுகிறாள். அந்த கனவோடவே வளரும் அப்பெண், அந்த வீட்டிற்கு எந்த வகையில் வந்து சேர்கிறாள் என்பதை சொல்லும் கதை....புதுமைபித்தன் நினைவு மலர், 1951
*பொறுக்கி வர்க்கம்*
ஓட்டலின் புழக்கடையில் பொறுக்கி திண்ணும் பொறுக்கியையும், அவனை அடித்து துன்புறுத்திய முதலாளி வர்க்கத்தை எதிர்க்கும் முன்னாள் பொறுக்கி வர்க்கத்தை சேர்ந்தவனைப் பற்றிய கதை...சாந்தி 1953
*தண்ணீர்*
வறண்ட பூமியானதினால் ஏற்பட்ட நீர் தட்டுப்பாட்டுக்கும், வாடி வரும் பயிர்களை காப்பதற்கும், வானம் பார்த்து ஏமாந்த உழவர்கள், அணையிலிருந்த நீரை தரமறுக்கும் அதிகார வர்க்கத்தினை எதிர்த்து போராடிய கதை...சாந்தி 1953
*உணவும் உணர்வும்*
பசி எனும் பெரும் தீ, தெருவில் வாழும் எட்டு வயது மகனையும் அவனது தாயையும் படுத்தும் பாட்டை, அக்குழந்தை, 'பசி...பசி' எனும்போது அத்தாயின் ஆற்றாமையை உணர்வுப் பூர்வமாகச் சொல்லும் கதை...1955
*கோவில் காளையும் உழவு மாடும்*
ஊர் ஒதுக்குப்புற 'மாடன்' கோவிலில் இரவில் மட்டும் தங்கி வாழ்ந்து வருபவரைப் பற்றியும், பின்னொரு நாளில் வந்து தஞ்சமடைந்த, உழைத்து உழைத்து ஓடாகிப் போன கிழவனைப் பற்றியுமான கதை.
பண்டாரத்தினாலும் கிழவனாலும் என்ன பயன் ஏற்பட்டது பிறர்க்கு என்பதனை மிகநுட்பமாகவும் உணர்வுக்கலவைகளாலும் சொல்லபட்டிருக்கிறது இக்கதையில்...சாந்தி 1955
*கைக்குழந்தை*
இதுவரை மேற்சொன்ன கதைகள் போல அல்லாமல், பத்து ஆண்டுகால கணவன்-மனைவியான சாமு-ராஜி'க்குள் நடக்கும் தாம்பத்திய ஊடல்களாலும் அன்பாலும் ஆன உரையாடல்களை கொண்ட கதை. சாமுவின் உடலுக்கு முடியாதபோது அவனை கைக்குழந்தையாக கவனித்து, ராஜி கொண்ட பிரியத்தையும் கடைசியில் அவர்களுள் ஏற்பட்ட ஊடலையும் சொல்லியிருக்கும் விதம் ரசிக்கும்படியானது. இக்கதை தொகுப்பில் நம்மை ஆசுவாசப்படுத்திய பக்கங்கள் இக்கதையினுடையதுதான்...சரஸ்வதி 1957
*அகம்*
ஜானு எனும் பதின்ம தொடக்க வந்து பெண், அவளது தாய் அம்புஜம், அவர்களது வீட்டுக்கு வந்து செல்லும் டாக்டர், இவர்களே கதைமாந்தர்கள். ஜானு'வின் பார்வையில் இவர்கள் இருவரும் என்னவாக தெரிகிறார்கள், கொல்கத்தாவில் வேலை பார்த்து வரும் தனது தந்தை ஏன் தன்னோடு இருப்பதில்லை, ஏன் பிற வீட்டுப் பெண்கள் தன்னையும் தன்வீட்டையும் பாவ கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள் போன்ற சிந்தனைகள், சுயதர்க்கங்களாலும், தாய்-மகளுக்குள்ளான வாக்குவத வன்மங்களாலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு சோக முடிவுடன் முடிகிறது இப்பெருங் கதை...சரஸ்வதி 1957
*செங்கமலமும் ஒரு சோப்பும்*
'உலகெங்கும் ஒரே நோய்கிருமி மயம்' எனத் தொடங்குகிறது இக்கதை(2020ன் கொரோனா'வை ஞாபகப்படுத்தும் :-) விதமாக). செங்கமலமும் அவளது வீட்டில் வேலைசெய்யும் மற்றும் தோழியுமான கௌரிக்குட்டியும் கிருமி அணுக்களில் இருந்து காத்துக்கொள்ள சோப்பு குளியல் தொடர்பான கேலி உரையாடல்களை கொண்ட கதை...சரஸ்வதி,1958
Strong collection of short stories on the socio-political issues of the post-independent Tamilnadu. Feels quite weird to learn that captialism was always the prevailing phenomenon, irrespective of the political sturcture of the country/statue.