Reviews for காடோடி

28 reviews total

user_17087

★ 4/5 Feb 02, 2026

சமீபகாலமாக நான் வாசித்த புத்தகங்களில் சிறந்தவற்றுள் ஒன்று இது. போர்னியோ மழைக்காடுகளின் அழிவை உணர்வுபூர்வமாக சித்தரிக்கும் அற்புதமான படைப்பு.

user_17086

★ 5/5 Feb 02, 2026

காட்டில் ஒரு நெடிதுயர்ந்த மரத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? அதன் பசிய இலைகள், அது தரும் நிழலின் தண்மை, அம்மரத்தில் தங்கும் பறவைகள், விலங்குகள், இவ்வளவு வளர இது எடுத்துக்கொண்ட ஆண்டுகள் இவையெல்லாம் தானே? ஆனால் மனிதரில் சிலருக்கு மரம் பச்சை டாலராக மட்டுமே தெரியும்! அந்த சிலருக்காக போர்னியோ மழைக்காடுகளில் மரம் வெட்டும் வேலைக்கு செல்கிற ஆசிரியர் தன்னோடு நம்மையும் கூட்டிச்செல்லும் பயணமே காடோடி.

போர்னியோ என்கிற பசிபிக் தீவு மலேசியா, புரூனே, இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகள் அடங்கிய வெப்பமண்டல மழைக்காடுகள் கொண்டது. அமேசான் காட்டுக்கு நிகரான பல்லுயிர் வகைமை கொண்ட காடுகள் இவை. கதையின் ஓர் அங்கமாக கடமான், கேழையாடு, செம்படாவ், மலை அணில்கள், சறுக்கிகள் என பல உயிரினங்கள் வருகின்றன.

வெறும் காடும் காட்டுவிலங்குகளின் கதை மட்டுமே இல்லை காடோடி. மரம்வெட்டும் முகாமில் மலாய், சீனர், பழங்குடிகள் என்று பல்வேறு இன மக்கள் தங்கள் வேறுபாடு மறந்து வாழும் அன்றாடம் கொண்டது. பிரியும் நாள் வரும் என்று அறிந்தும் ஒருவருக்கொருவர் செலுத்தும் நிபந்தனையற்ற அன்பும் ஒரு வகையில் காடு மனிதருக்கு அளிக்கும் கொடைகள் போலத்தானே!

தொல்குடி பிலியவ் சொல்கிறார்: எங்களுக்கு அன்பு செலுத்த மட்டுமே தெரியும். அதையும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு வகையாக செலுத்தத் தெரியாது. இப்போது உன் மேல் வைத்துள்ள அதே அன்பைத்தான் இதோ இம்மரத்தின் மீதும் வைத்துள்ளேன் என்று.

இயற்கையை மனிதர்களின் உணர்வுகளால் திணிக்காதீர்கள் — அதற்கு நம்மைப் பழி வாங்குவது தான் வேலையா என்று சொல்லி ஆச்சரியமூட்டுகிறார் பிலியவ்! காட்டின் அழிவைக் கண்டு எழுதும் ஆசிரியரின் மனநிலையை வாசிக்கும்போதே கண்கள் கசிகிறது!

user_17085

★ 5/5 Feb 02, 2026

காடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று தான் நக்கீரன் ஐயா எழுதிய காடோடியை வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் அன்பு நட்பு பிரிவு சோகம் வியப்பு இயற்கை காதல் கவித்துவம் இப்படி நான் எதிர்பாராத பல உணர்வுகளும் புரிதல்களும் இதில் கொட்டிக் கிடந்தது!

ஒரு சாமானிய மனிதன் காட்டை எப்படி பார்க்கிறான், காட்டிலேயே பிறந்து வளர்ந்த தொல்குடி மனிதர் காட்டை எப்படி பார்க்கிறார் என்று இவர் பார்த்து உணர்ந்த நிகழ்வுகளை எழுதியதைப் படித்த போது மனம் வியப்புற்றது! எழுத்தாளர் சந்தித்த பல உணர்வுகளையும், அவர் சந்தித்த மனிதர்களின் உணர்வுகளையும் தன் எழுத்தில் கவித்துவத்தோடு நம்மையும் சேர்த்து உணர வைப்பது தான் இந்நூலின் அற்புதம்!

விலங்குகளுக்கு உணவு எவ்வளவு முக்கியம் என்று எல்லோரும் தெரிந்து வைத்திருப்போம். ஆனால் விலங்குகளுக்கு உணர்வு எவ்வளவு முக்கியம் என்பதை இதைப் படித்துத் தான் தெரிந்துகொண்டேன். மரம் பேசும் என்பதையும்கூட! மனிதன் எப்படி தன் பேராசையால் இயற்கையைச் சந்தைப் பொருளாக மாற்றி அழிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறான் என்பதே இந்நூலின் கரு. படித்து முடித்ததும் கண்ணீர் துளிகள், மனதில் ஏதோ ஒரு நெருடல் வலி, பல புரிதல்கள் — இவை அத்தனையும் நமக்கு வராமல் இருந்தால்தான் ஆச்சரியம்!

அனைவரும் அந்தக் காடோடியைப்போல் இயற்கை சூழல் மீது காதல் கொள்பவராக மாறவேண்டும் என்பதே இந்நூல் நமக்கு சொல்லாமல் சொல்கிறது! காடோடி பல உணர்வுகளால் ஆன ஒரு அற்புத படைப்பு!

user_17084

★ 5/5 Feb 02, 2026

எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர் நக்கீரன் அவர்கள் சூழலியல் சார்ந்த நிறைய படைப்புகளை கொடுத்திருக்கிறார். அவற்றில் பெரும்பான்மையானவை கட்டுரைத் தொகுப்புகள் தான். அவர் எழுத்தில் உருவான காடோடி புதினம் காட்டைப் பற்றிய புரிதலை நாட்டிலிருக்கும் மனிதர்களுக்கு கொடுக்கின்ற மகத்தான படைப்பு!

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தீவான, மழைக்காடுகளைக் கொண்ட போர்னியோ தான் கதைக்களம். ஆசிரியர் ஒரு மரம் வெட்டும் நிறுவனத்தில் வேலையில் இருந்த பொழுது நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட புதினம் இது.

நாவலில் பக்கத்துக்குப் பக்கம் புதிய புதிய மர வகைகள், உயிரினங்கள் என ஆச்சரியத்தை புத்தகம் முழுக்க நிறைத்திருக்கிறார். கதையில் வரும் ஓமர் ஒரு கலைக்களஞ்சியத்தைப் போன்ற அன்பான மனிதர். அவரின் வாயிலாக எல்லா உயிரினங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை கதைப் போக்கில் கொடுத்திருக்கிறார்!

முருட் பழங்குடி மக்களைப் பற்றிய சித்திரமும் அவர்களின் ஒருவனான ஜோஸின் கம்போங்கிற்கு செல்வதும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியலும் அங்கே கதை சொல்லிக்கும் ரலா என்கிற பெண்ணுக்கும் இடையில் பூக்கும் காதல் — ஆனால், அது காணல் நீராக மறைந்து போகும் கணமும் வாசிப்பவர் மனதில் ஒரு பாராங்கல்லின் கனத்தை ஏற்றி வைத்துவிடுகிறது!

அந்தக் கானகத்தில் காணக் கிடைக்கும் மனித இனத்தின் மூத்த விலங்குகளைப் பற்றிய தகவல்கள் எல்லாம் புதியது! கதையின் இடையே வரும் சமையல்காரப் பெண்ணான யொகன்னா ஆரம்பத்தில் சாதாரணமானவளாக இருந்தாலும் இறுதியில் அவளின் கதையும், கதை சொல்லியுடன் அவளின் நட்பும் நம் மனதில் நின்றுவிடுகிறது!

இந்தக் கதையின் கதாநாயகன் பிலியவ் கதாப்பாத்திரம் உணர்த்திச் செல்லும் மனநிலை ஒவ்வொரு மனிதனுக்குமான பாடம்! காட்டழிப்பு என்கின்ற செயலுக்கு எதிரான புள்ளியில் காட்டின் பக்கமிருந்த அந்த கதாப்பாத்திரம் பேசிய ஒவ்வொரு சொல்லும் மனசாட்சியை கேள்வி கேட்கும்!

user_17083

★ 5/5 Feb 02, 2026

மிகவும் கனமான நாவல். போர்னியோ காடுகளின் அழிவை உணர்வுபூர்வமாக சித்தரிக்கும் இந்த புதினம், படிக்கும்போது மனதை கனக்க வைக்கிறது. சூழலியல் குறித்த ஆழமான சிந்தனையை ஏற்படுத்தும் படைப்பு.

user_17082

★ 4/5 Feb 02, 2026

சமீபத்தில் ஒரு ஆங்கில ஆவணப்படத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள காடுகள் பாமாயில் தயாரிப்பிற்காக பெருமளவில் அழிக்கப்பட்டு வந்ததையும் அது இன்றும் தொடர்வதையும் பார்க்க நேர்ந்தது. அதனால் அங்கு பல காடுவாழ் விலங்குகள் அரிதாகி வருவதையும் கூறியிருப்பார்கள். காடோடியும் அதை அப்படியே விரிவாக கூறிவிட்டது. வசிக்கும் மக்களுக்கும் அது எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் கூறியிருக்கிறார் நக்கீரன்.

காடுவாழ் மக்களின் வாழ்க்கைமுறை, பலதரப்பட்ட மக்கள் வசிக்குமிடத்தில் ஏற்படும் பலதரப்பட்ட மனித உணர்வுகள், உணவு முறைகள், இப்படி பலவற்றையும் சேர்த்து அதிக பொருட்செலவில்லாமல் நம்மாளும் துவானோடும் ஓமரோடும் அன்னாவோடும் சிலகாலம் வாழமுடிகிறது. நம் மனதும் ரலாவிற்காக ஏங்கும். அவளை பார்க்கமுடியாத என்ற உணர்ச்சியை தூண்டும்.

user_17081

★ 3/5 Feb 02, 2026

நக்கீரனின் காடோடி படித்தேன். கிழக்கு மலேசியாவில் நடந்த மற்றும் நடந்து கொண்டிருக்கிற காட்டழிப்பில் பங்கேற்ற அல்லது உதவியாக இருந்த ஒருவருடைய மனநிலையைப் பேசும் நாவல்.

user_17080

★ 3/5 Feb 02, 2026

இந்த நாவல் பற்றிய சுருக்கமான அறிமுகம். காடோடி போர்னியோ காடுகளின் அழிவை பேசும் ஒரு முக்கியமான புதினம்.