Reviews for காடோடி

28 reviews total

user_17097

★ 5/5 Feb 02, 2026

போர்னியோ காட்டுக்குள் மரம் வெட்டும் நிறுவனத்தின் அலுவலராகப் போகும் எழுத்தாளரின் அனுபவங்களின் தொகுப்பு. ஒரு பெரும் மழைக்காட்டின் அழிவுக்கு சாட்சியாக இருந்து அந்த காடுகளின் பண்புகள், வாழ்வியல், மரங்கள், தொல்குடிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை என இந்த புத்தகத்தின் எல்லா பக்கத்திற்கும் உயிர் உள்ளது. அந்த உயிர் எப்படி ஒவ்வொரு மரம் வெட்டி விழுகையில் அவதிப்படுகிறது, அதன் விளைவு என்ன என்று ஒரு பெரும் ஆவணப் புத்தகமாக இருக்கிறது காடோடி.

ஒரு பெரும் மழைக்காட்டில் உலாவி பின் வெளி வருகையில் அந்த அழிவால் ஏற்பட்ட குருதி என் மேலும் சிறிது பட்டுவிட்டது. இனி எந்த காட்டுக்கு போனாலும் இந்த குருதி நாற்றம் என்னை துரத்திக் கொண்டு வரும்.

user_17096

★ 5/5 Feb 02, 2026

நாவல் படிக்கத் தொடங்கி படித்து முடிக்கும் வரை ஒரு வனத்தில் பயணித்து வாழ்ந்தது போன்ற ஒரு உணர்வை அளித்த ஆசிரியருக்கு நன்றி!

முக்கியமாக ரலா-துவான் காட்சிகள் மிகவும் ரசித்தேன்.

தனிப்பட்ட முறையில் என் வாழ்வில் மாற்றம் தந்த ஒரு புத்தகம். இதை நான் என் வாழ்வை காடோடிக்கு முன், காடோடிக்கு பின் என்றே சொல்லுவேன். புத்தகத்துக்கு பின் என் பார்வை — பச்சை மரங்கள், இயற்கை, செடி கொடிகள், பறவைகள் மீதான பார்வையே முற்றிலும் மாறியது. இப்போது தான் நான் நிதானித்து அவைகளை ரசிக்கவே தொடங்கி உள்ளேன். புத்தகத்திற்கு முன் அப்படி நான் சிந்தித்ததே இல்லை. இயந்திர வாழ்வில் இயற்கை அளித்த கொடைகளை நான் அவ்வளவாக பொருட்படுத்தியே இல்லை என்று சொன்னால் மிகையாகாது.

user_17095

Feb 02, 2026

தமிழில் சூழலியல் நாவல்கள் வருவதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது ஒரு தனித்துவமான முயற்சி. தமிழகத்தில் இலக்கியம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை இது தருகிறது.

புத்தகத்தின் முதல் பகுதியை முடித்தவுடன், இதை சற்று நிறுத்தி வைத்துவிட்டு பின்னர் மீண்டும் வாசிக்கலாம் என முடிவு செய்தேன். நகரத்தில் பிறந்து ஊடகங்களின் தாக்கத்தில் வளர்ந்தவனாக, இந்த ஆசிரியர் என்ன சாதிக்க முயற்சிக்கிறார் என்பதை நான் பாராட்டுகிறேன்.

இந்த புத்தகம் தன் நோக்கத்தை நிச்சயம் அடையும் — தமிழ்நாட்டின் அனைத்து மூலைகளையும் எளிதில் சென்றடைந்து, நிறுவனங்கள் எவ்வாறு காடுகளை விழுங்குகின்றன என்ற விழிப்புணர்வை உருவாக்கும். காட்டில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கையை ஆசிரியர் இன்னும் விரிவாகப் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

user_17094

★ 5/5 Feb 02, 2026

மூன்றாண்டுகளுக்கு முன்னால் புத்தகத் திருவிழாவில் வாங்கியிருந்தேன். படிக்கத் தொடங்கிய சூழலில் மிக நல்ல நூல் என்பதை திறந்த சில நிமிடங்களிலே மனதார உணர்ந்தேன்.

தற்கால மனிதன் எந்நாளும் கற்றுக்கொள்ள முடியாத எண்ணற்ற படிப்பினையை காடுகள் கொண்டுள்ளன. அவற்றைக் கற்க வேண்டுமானால் காட்டின் தொல்குடியாக இருக்கவேண்டும், இல்லாது போனால் எந்நாளும் மனிதன் காட்டினுள் மாணவனாக மட்டுமே இருக்க வேண்டும்.

மனிதனின் பேராசைக்கு இயற்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் அரிந்து திண்ணும் அரக்கனாய் உருமாறியது கால மாற்றத்தில் ஏற்பட்ட பெருங்கொடுமை. ஞானம் பெற விரும்புவோர் காடோடியோடு கொஞ்ச காலம் பேச்சு நடத்துங்கள்.

user_17093

★ 5/5 Feb 02, 2026

உலகின் மூன்றாவது பெரிய தீவும், ஆசியாவின் மிகப் பெரிய தீவுமானது போர்னியோ தீவு. அமேசான் காடுகளைப் போன்று போர்னியோ தீவுக் காடுகளும் உலகின் மிகப் பழமையான மழைக்காடுகள் ஆகும். அந்த மழைக்காடுகள் தான் கதைக்களம்.

மரத்தின் பச்சையை டாலர்களாக எடைபோடும் கார்ப்பரேட் நிறுவனங்களால் கழுத்து நெரிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக மடிந்து கொண்டிருக்கும் போர்னியோ காடுகளின் அவலம் வெள்ளையர்கள் காலம் தொட்டு இன்று வரை தொடர்கிறது.

ஒரு வெட்டுமரக் கம்பெனியில் பணியாளனாக, காட்டைப் பற்றிய முன்அறிவு எதுவும் இல்லாமல் சுற்றுலா பயணி போல நுழையும் துவான் என்ற இளைஞனின் பார்வையில் கதை நகர்கிறது. அவன் காட்டுக்குள் நுழைந்து கொண்டிருக்கும் போது, மெல்ல மெல்ல காடும் அவனுள் நுழைகிறது.

அங்குள்ள முகாம் மனிதர்கள் அவன் குடும்பமாகிறார்கள். ஓமரிடம் கற்றுக் கொள்கிறான். ரலாவிடம் காதலில் விழுகிறான். ஜோஸின் நட்பில் இயற்கைக்கு அருகில் செல்கிறான். ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி பிலியவ் என்ற தொல்குடி முதியவர் மூலமாக காட்டினை உணர்கிறான்.

காடு என்பது வெறும் மரங்கள் அல்ல, அதைச் சார்ந்த உயிரினங்கள், நிலப்பரப்பு என எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து உயிர்ப்புடன் இருக்கும் ஒரு தனி உலகம் என்று உணர்ந்து கொள்ளும் போது, மரம் வெட்ட வந்தவன் வெட்டுண்ட மரத்தைக் கண்டு கண்ணீர் உகுக்கிறான்.

அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய அருமையான சூழலியல் புத்தகம்.

user_17092

★ 5/5 Feb 02, 2026

மிகச் சிறந்த படைப்பு. போர்னியோ காடுகளின் அழகையும் அவலத்தையும் ஒருசேர உணர வைக்கும் இந்த நாவல், சூழலியல் இலக்கியத்தில் ஒரு முக்கியமான நூல்.

user_17091

★ 5/5 Feb 02, 2026

நான் வாசித்த புதினங்களில் நீண்ட நாள் மனதளவிலான தாக்கத்தை ஏற்படுத்திய தலைசிறந்த படைப்பாக காடோடி திகழ்கிறது. இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்முடன் உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்துவிடுகின்றன. குறிப்பாக, பிலியவ் எனும் காட்டு மனிதர் எனது மனதை ஆழமாக கவர்ந்தவர் — அவரின் இயற்கை மையமான தன்மையும் உள்ளார்ந்த மனிதநேயமும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நாவலின் மிக முக்கியமான தனிச்சிறப்பு என்னவென்றால், இதில் வரும் முதன்மைக் கதாபாத்திரத்திற்கு பெயர் இல்லாதது. அந்த வகையில், அந்த பாத்திரம் நாமாகவே மாறுகிறோம். இது வாசிப்பை ஒரு தனிப்பட்ட அனுபவமாக மாற்றி நம்மை நேரடியாக கதையின் நாயகனாக மாற்றுகிறது — இது ஒரு மிகச் சிறப்பான இலக்கிய முயற்சி.

காடோடி நமக்கு காட்டு வாழ்க்கையின் இயல்பு, பழங்குடியினரின் வாழ்வியல், கலாச்சார மாற்றங்கள் மற்றும் மனித மனதில் ஏற்படும் மாறுபாடுகளை தெளிவாகவும் அழகாகவும் சொல்கிறது. தமிழ் வாசகர்கள் தவறாமல் வாசிக்கவேண்டிய, உருப்பெற்ற ஒரு புதினம் இது.

user_17090

★ 5/5 Feb 02, 2026

நக்கீரனின் காடோடி புதினமல்ல — தூய தமிழ் சொற்களை கற்றுத்தரும் சொற்களஞ்சியம்; விலங்குகளையும் தாவரங்களையும் கற்றுத்தரும் உயிரியல் பல்கலைக்கழகம்; காட்டு வாழ்க்கையையும் காட்டு மனிதர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தும் மானிடவியல் புத்தகம்; சாட்டையடி வார்த்தைகளால் நம்மைக் காயப்படுத்தி சூழல் அவலங்களை நம் கண்முன் நிறுத்தும் கண்ணாடி.

ஆம், சில மனிதர்களின் பாசம், காதல், ஏக்கம், துக்கம் என்று உணர்வுகளின் சங்கமமாக இருப்பதால் இதனை வேறு வழியின்றி புதினம் என்றே ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது.

எங்களை கடவுச்சீட்டு, நுழைவிசைவு இன்றி சில மாதங்கள் மலேசியா நாட்டின் கினபத்தாங்கன் ஆற்றிலும் அதனை சுற்றியுள்ள வனத்திலும் வாழ வழிவகுத்ததிற்கு மிக்க நன்றி, நக்கீரன் அவர்களே!

காடோடி என்பது தமிழ் சொற்களஞ்சியம், மலேசிய வனவிலங்கு குறிப்பு நூல், கினபத்தாங்கன் ஆற்றைச் சுற்றியுள்ள பழங்குடியினரின் மானிடவியல் பிரதிநிதித்துவம், அந்தப் பகுதியின் பல்வேறு பழங்குடிகளின் கலாச்சார ஆய்வு, மற்றும் கடைசியாக மிகவும் ஈடுபாட்டுடன் கூடிய நாவல். பணம் உந்துதலால் சிந்தனையற்ற நிறுவனங்கள் சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும், பழங்குடியினருக்கும், ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் செய்த ஈடுசெய்ய முடியாத சேதத்தை இது சரியாக எடுத்துக்காட்டுகிறது.

user_17089

★ 5/5 Feb 02, 2026

மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று. இது ஒரு புத்தகம் என்பதை விட ஒரு அனுபவம் என்றே சொல்லலாம். கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

user_17088

★ 5/5 Feb 02, 2026

காடோடி நூலை வாசிக்கத் தொடங்கும் முன்பு இது ஏதோ காடுகளுக்குள் சென்று வந்த அனுபவத்தைத் தான் தோழர் நக்கீரன் பகிர்ந்துள்ளார் என்று நினைத்தே வாசிக்கத் தொடங்கினேன். எந்த ஒரு புத்தகத்தையும் அதன் விமர்சனத்தையோ கதையையோ தெரிந்து கொண்டு வாசிக்கும் பழக்கம் இல்லை. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி எதார்த்தமாக வாசிக்கத் தொடங்கியது தான் காடோடி நூல்.

காடோடி போர்னியோ பகுதியில் உள்ள மழைக்காடுகளில் பயணித்ததைப் பற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஓர் சாதாரண பயணியாக இல்லாது, மரங்களை வெட்டும் முகாமில் பணிபுரியும் ஓர் வேலையாளாக இருந்துகொண்டு எவ்வாறு அவர் காடோடியாக மாறினார் என்பதே இதன் மையக்கரு.

காடுகளைப் பற்றி மட்டுமில்லாது தன் உடல் வேறு காடு வேறு என்று பிரித்தறியத் தெரியாத காடுகளின் பாதுகாவலர்களான பழங்குடியினர் வாழ்வியலைப்பற்றியும், ஆங்கிலேயர் ஊடுருவலால் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றியும், என்னதான் மதமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் இறுதிவரை அழியாது காப்பாற்றும் இயற்கை வழிபாடுகள் பற்றியும் மிகத் தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளார்.

விலங்குகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன அவற்றின் தன்மைகளும், வாழ்விடச் சிக்கல்களையும், நீரின் ஆற்றலையும், இயற்கையின் விந்தைகளையும் தொகுத்து அதிசிறந்த கதையாக வடித்துள்ளார். தொல்குடியினரைப் பற்றி நகரத்து மனிதர்கள் கட்டமைத்துள்ள பிம்பங்களை நொறுக்கியுள்ளார்.

நாடுவிட்டு நாடு வந்து பிழைக்க வரும் கூட்டத்தின் துயரங்கள், தொல்குடியினரையே இயற்கைக்கு எதிரியாக மாற்றப்படும் அவலங்கள், காதல் ஓவியம், நட்பின் இலக்கணம், உயிர்ப்புள்ள அன்பு உறவுகள், பிரிவாற்றாமை என முற்றிலும் ரசிக்கும்படியாக, உணர்வுப்பூர்வமான காவியமாக படைத்துள்ளார். அனைவரும் நிச்சயமாக வாசிக்க வேண்டிய ஓர் நூல்.