Reviews for ரயில் நிலையங்களின் தோழமை

22 reviews total

user_16334

★ 5/5 Feb 02, 2026

ஆசிரியர் எழுதியிருக்கும் பயண நூல்கள் பல. அவற்றில் முக்கியம் வாய்ந்தது தேசாந்திரி. அதற்கு அடுத்தாற்போல் இந்த நூல்.

இதில் 18 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் பல்வேறு பயணங்களின் அனுபவக் கட்டுரைகள். பல உலக நாடுகள், இந்தியாவின் பல மாநிலங்கள் என வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காண பல்வேறு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

லட்சமாண்டுகள் பழமையான ஆதிமனிதர்கள் வாழ்ந்த குகையிலிருந்து கட்டுரை துவங்குகிறது. பின்பு நயாகரா நீர்வீழ்ச்சி, குதிரைச் சந்தை, ஹத்தி கும்பா, திப்பு சுல்தானின் கோடை மாளிகை என பல்வேறு இடங்களுக்குச் சென்ற பயணங்களை சுவைபட விவரிக்கிறார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவிடம் கேட்பாரற்றுக் கிடப்பதை எண்ணி மனம் வருந்துகிறார்.

உலகின் மிக உயரமான கட்டடத்தில் உள்ள உணவகம், மைசூர் அரண்மனைக்கு பள்ளி நாட்களில் சென்ற நினைவுகள் என பல அனுபவங்கள் எழுத்துகளின் ஊடே நம்மை வருடுகின்றன.

ஊட்டியை உருவாக்கிய சல்லிவன் எனும் ஆங்கில ஆட்சியாளரின் முயற்சி பற்றிய தகவல் சுவாரஸ்யமானது. இப்படி பயணக் கட்டுரைகளின் வழியாக நாம் அறிந்திடாத பல வரலாற்று உண்மைகளைக் கூறியுள்ளார்.

பயணங்களை நேசிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.

"அருவி, வீழ்ந்த இடத்தில் தேங்கிவிடுவதில்லை! தன் அடுத்தப் பயணத்தைத் துவங்கிவிடுகிறது!"

user_16333

★ 5/5 Feb 02, 2026

சுவாரஸ்யமான, சிந்திக்க வைக்கும் வாசிப்பு! ஆசிரியரின் முதல் புத்தகமாக இதை வாசித்தேன்.

கட்டுரைகள் ரயில் பயணங்கள் பற்றியதாக இருக்கும் என்ற எண்ணத்தில் தொடங்கினேன். ஆனால் சில பக்கங்கள் வாசித்த பிறகு, இவை பயண அனுபவங்கள் பற்றிய சிறு கட்டுரைகள் என்று புரிந்தது. ஒவ்வொரு மதிப்புரையும் சொல்வது போல், இதுவரை நாம் பயணம் செய்த விதத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கும் நூல். புத்தகத்தின் மையச் செய்தி — ஒவ்வொரு பயணமும் நம் உள்ளத்தை மாற்ற வேண்டும், நம்முள் ஒரு பயணத்தை நிகழ்த்த வேண்டும்.

வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் நடத்திய பயணங்களை எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையிலும் வாழ்க்கையின் எளிய விஷயங்களை — தரையில் அமர்ந்து சாப்பிடுவது, ஏசி அறைக்கு பதிலாக மரநிழலில் ஓய்வெடுப்பது, புகைப்படம் எடுப்பதை விட காட்சியை ரசிப்பது, சாலையோர உணவை அனுபவிப்பது — இவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.

சில குறிப்பிடத்தக்க கருத்துக்கள்: காந்தியின் நினைவிடம் மனசாட்சியை கேள்வி கேட்கிறது. பிகாஸோவின் பதில் — கலை என்பது உணர்வின் வெளிப்பாடு, பொருள்களின் நகல் அல்ல. இணையமும் புகைப்படக்கலையும் உண்மையான கலையைப் பார்க்கும் ஆர்வத்தை குறைத்துவிட்டன. புதுமைப்பித்தனுக்கு கம்பர் நினைவிடம் போல ஒரு நினைவிடம் வேண்டும். ஊட்டியை கண்டுபிடித்த ஜான் சல்லிவன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.

ஆசிரியர் எளிமையான, தூய தமிழில் எழுதியிருக்கிறார், வாசிப்பு அமைதியாகவும் இனிமையாகவும் இருக்கிறது. புனைகதை அல்லாத நூல்களுக்கு எளிதாக மாறுவதற்கு இது ஒரு நல்ல தொடக்கம். ஆசிரியரின் மேலும் படைப்புகளை வாசிக்க ஆவலாய் இருக்கிறேன்!

user_16332

★ 4/5 Feb 02, 2026

பயண பிரியர்களுக்கு ஒரு சிறு தீனி போன்ற நூல்! குறுகிய நேரத்தில் படித்து முடிக்கலாம், ஆனால் மனதில் நீண்ட நேரம் தங்கும்.

user_16331

★ 4/5 Feb 02, 2026

வெறும் 100 பக்கங்களில் 100க்கும் மேற்பட்ட பயண அனுபவங்களை தந்திருக்கிறார். சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதும் திறன் பிரமிக்க வைக்கிறது.

user_16330

★ 5/5 Feb 02, 2026

அழகான 18 பயணக்கட்டுரைகள். "இயற்கையின் கருணையால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" — இந்த ஒரு வரியில் புத்தகத்தின் சாரம் அடங்கியிருக்கிறது.

user_16329

★ 5/5 Feb 02, 2026

நகுலனின் அழகான கவிதையுடன் ஆரம்பிக்கிறது இந்த புத்தகம் — "திரும்பிப் பார்க்கையில் காலம் ஓர் இடமாக காட்சி அளிக்கிறது". பயணங்களின் அழகையும், பெரிதும் அறியப்படாத ஆனால் அருமையும் பெருமையும் வாய்ந்த இடங்களை காணும்போது வரும் மகிழ்ச்சியையும் அழகாய் விவரிக்கிறது.

ஒரு புதிய ஊரில், மேல்தட்டு விடுதிகளில் தங்கி, அன்றாடம் உண்பதையே உண்டு, எல்லோரும் செல்லும் இடங்களுக்கே சென்று வருவதை விட, அந்த ஊரின் அடித்தட்டு இடங்களில் தங்கி, அவ்வூரின் பிரத்யேக உணவுகளையும், கலைகளையும் அனுபவிப்பதே ஒரு நிறைந்த பயணம்.

இப்புத்தகத்தின் அருமையை பறைசாற்ற இந்த வரிகளே போதும்: "நிறைய பயணம் செய்தவன் ஒருபோதும் இயற்கையை சீரழிக்க மாட்டான். உணவை வீணடிக்க மாட்டான். சக மனிதர்களை வெறுக்க மாட்டான். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமே."

பயணத்தை விரும்புவோர் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

user_16328

★ 5/5 Feb 02, 2026

இந்த வருடம் வாசித்து முடித்த முதல் புத்தகம்.

ரயில் பயணங்களை பற்றிய புத்தகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் வாசிக்க தொடங்கினேன். ஆனால் 18 அத்தியாயங்களும் வெவ்வேறு பயணக் குறிப்புகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

பயணங்களில் நாம் அதிகம் கண்டிராத, காண வேண்டிய இடங்களின் தொகுப்பு. நம் நாட்டில் நாம் அறிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று இந்த புத்தகம் மூலம் காட்டியுள்ளார். அவற்றை நேரில் காண வேண்டும் என்ற ஆவலுடன் புத்தகத்தை நிறைவு செய்கிறேன்.

user_16327

★ 4/5 Feb 02, 2026

காமதேனு இதழில் தொடராக வந்த 18 பயணக்கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. வெளிநாடுகளிலும் வட இந்தியாவிலும் பயணம் செய்யும்போது கிடைத்த அனுபவத்தை கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

இதில் நிறைய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் அருமையாக இருந்தது. போன இடத்தை மட்டும் பார்க்காமல் அதை சுற்றி என்ன நடக்கிறது, அங்கு இருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை எல்லாம் கவனித்து எழுதியிருக்கிறார்.

இது இல்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அந்த அத்தியாயத்திற்கு பொருத்தமான படத்தையோ அல்லது புத்தகத்தையோ பரிந்துரைத்திருக்கிறார்.

பிடித்த கட்டுரைகள் — நயாகராவின் சாரல், கம்பனின் நினைவிடம், அரண்மனையின் உள்ளே, ரணக்பூரின் காலவிருட்சம், நியூயார்க்கில் ஒரு இரவு, பிகாஸோவின் முன்னால், கும்பல்கர் கோட்டை, காந்தியெனும் நெருப்பு.

மனதைக் கவர்ந்த சில இடங்களையும், ஆர்வத்தைத் தூண்டிய சில புத்தகங்களையும் குறித்து வைத்திருக்கிறேன். சிறிய புத்தகம் தான். பயணக்கட்டுரைகள் படிக்க நினைப்பவர்கள் இந்த புத்தகத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.

user_16326

Feb 02, 2026

இந்த புத்தகம் மிகவும் கவர்ந்ததற்கு சில காரணங்கள் உண்டு. இதுவரை வாசித்த பயண கட்டுரைகளில் பயணம் சென்ற அனுபவம், காட்சி விவரணை மற்றும் அந்த இடத்தின் வரலாறு ஆகியவை அடங்கியதாக இருக்கும்.

ஆசிரியர் ஒவ்வொரு இடத்திற்கு போகும்போது மேற்கண்ட அனைத்தையும் நமக்கு கடத்துவதோடு மட்டுமல்லாமல், காணச் சென்ற அந்த இடமானது தனக்கு மற்ற இடங்களை நினைவுபடுத்தியவை அனைத்தும் பகிர்கிறார். வெறும் உணர்வு சார்ந்த நினைவலைகள் இல்லாது அறிவார்ந்த ஒப்பீட்டு ஆய்வையும் நம்மோடு பகிர்கிறார்.

மைசூர் பற்றிய நினைவலைகள் உணர்வுகள் சார்ந்தது. மைசூர் என்ற இடத்தை கேட்கும்போதெல்லாம் நினைவுக்கு வருவது குடும்பத்துடன் சென்று கண்டு களித்த அந்த தருணங்களை மீள்பார்வை செய்வதற்கு ஒரு ஒளிப்படம் கூட இல்லையே என்ற ஏக்கம் தான்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பழமையான கட்டிடங்களுக்கு முன் நம் தமிழ்நாட்டு பழமை வாய்ந்த கட்டிடங்கள் ஒன்றுமே கிடையாது என்ற அவதானிப்பு சற்று திகைப்பூட்டினாலும், அறிவார்ந்த ஒரு கருத்தாகப் பார்க்கிறேன்.

ஒடிஷா மாநிலத்திற்கு போக வேண்டும் என்ற ஆசையை ஒரு கட்டுரை அளித்திருக்கிறது. அங்குள்ள அரிசியின் விளைச்சலைப் பற்றிய தகவல்கள் அறியாதவை.

இந்த புத்தகத்துடன் சேர்த்து ஆசிரியரின் 4 புத்தகங்களை வாசித்துவிட்டேன். ஒன்று கூட சலிப்பு தட்டவில்லை. அவரின் படைப்புகளை மேலும் வாசிக்க ஆவலோடு இருக்கிறேன்.

user_16325

★ 4/5 Feb 02, 2026

இந்த புத்தகத்தில் தன் பயண அனுபவங்களையும், நிறைய வரலாற்று தகவல்களையும் தன் எழுத்தின் மூலம் மிகவும் அழகாகவும், சுருக்கமாகவும் விளக்கியுள்ளார்.

சுற்றுலா என்றால் வழக்கமாக ஊட்டி, கொடைக்கானல் என்று செல்லும் நபர்களுக்கு இந்த நூலை படித்த பிறகு நிறைய மாற்றம் வரும். நம் தமிழ்நாட்டில், இந்தியாவில் இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருப்பதே நமக்கு தெரியவில்லையே என்று ஆச்சரியப்படுவோம். ஒரு இடத்துக்கு செல்லும் முன்பு அந்த இடத்தை பற்றி தெரிந்து கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும்.

நிறைய இடங்களுக்கு தன் எழுத்தின் மூலம் நம்மை அழைத்து செல்கிறார். அறியாத பல இடங்களையும், வரலாறுகளையும் தேடி தேடி நமக்கு அழகாக எடுத்து கூறுவதே தனி சிறப்பு.

வெளிநாட்டிலோ வேறு மாநிலத்திலோ பயணிக்கும்போது அங்கு தமிழ் பேசும் நபர்களை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று ஒரு இடத்தில் கூறியிருப்பார். இது நிறைய பேருக்கும் அனுபவம் இருக்கும்.

காந்தியை பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருப்பார் — இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளையர்களைக் கூட மரியாதையாகவே விமர்சனம் செய்தார், ஒரு முறை கூட அவர்களை இழிவாக பேசியதில்லை என்று.

கல்வி நிலையங்களை உருவாக்கியதில் சமணர்கள் முன்னோடிகள். மலைக்குகைகளில் சமண பள்ளிகளை நிறுவினார்கள். சாதி சமய வேறுபாடற்ற சமத்துவக் கல்வி அவர்களாலே முதன்முறையாக வழங்கப்பட்டது.

சிறந்த புத்தகம், நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்.