About வைரமுத்து (Vairamuthu)


675 Followers

வைரமுத்து ராமசாமித் தேவர் மற்றும் அங்கம்மாள் இணையருக்கு மேட்டூரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு நான்கு வயதாக இருந்தபோது, மேட்டூர் அணைக்காக இவரது கிராமம் கையகப்படுத்தப்பட்டதால், இவர்களின் குடும்பம் தேனி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி கிராமத்திற்கு இடம்பெயர்ந்தது. கிராமத்துச் சூழலும், அறுபதுகளில் தமிழகத்தில் எழுந்த தமிழ் மற்றும் பகுத்தறிவு இயக்கங்களும் இவருடைய கவிதை ஆர்வத்தை வளர்த்தன. பெரியார் மற்றும் அண்ணாவின் உரைகளும், கருணாநிதியின் எழுத்துக்களும், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற கவிஞர்களின் படைப்புகளும் இவருடைய சிந்தனையை வடிவமைத்தன.

பதினான்கு வயதிலேயே திருவள்ளுவரின் திருக்குறளால் ஈர்க்கப்பட்டு யாப்பிலக்கண விதிகளின்படி கவிதை இயற்றத் துவங்கினார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, தனது 19 வயதில் 'வைகறை மேகங்கள்' என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இத்தொகுப்பு மகளிர் கிறித்துவக் கல்லூரியின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பின்னர், 1979-ல் 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்' என்ற இவரது புதுக்கவிதை தொகுப்பு வெளியானது. 1980-ல் பாரதிராஜாவின் 'நிழல்கள்' திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராகத் திரையுலகில் அறிமுகமானார். இவர் ஏழு முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.