About வைரமுத்து (Vairamuthu)


675 Followers

வைரமுத்து தேனி மாவட்டம் மெட்டூர் கிராமத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் ராமசாமித் தேவர் - அங்கம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு நான்கு வயதாக இருந்தபோது, அணைக்கட்டுத் திட்டத்திற்காக இக்கிராமம் தண்ணீரில் மூழ்கியதால், இவரது குடும்பத்தினர் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி கிராமத்திற்கு இடம்பெயர்ந்தனர். கிராமப்புறச் சூழலும் இயற்கை எழிலும் இவருக்குக் கவிதை எழுதும் ஆற்றலையும் ஆர்வத்தையும் வளர்த்தன.

அறுபதுகளில் தமிழகத்தில் பரவிய தமிழ் மற்றும் பகுத்தறிவு இயக்கங்கள் இவருடைய கவிதை ஆர்வத்திற்கு வித்திட்டன. பெரியார், அண்ணா ஆகியோரின் பேச்சுகளும், கருணாநிதியின் எழுத்துக்களும், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற பெருங்கவிஞர்களின் படைப்புகளும் இவருடைய சிந்தனையை வடிவமைத்தன. தனது 14வது வயதிலேயே திருவள்ளுவரின் திருக்குறளால் ஈர்க்கப்பட்டு யாப்பு இலக்கண முறைகளுக்கு உட்பட்டு கவிதைகளை எழுதத் தொடங்கினார்.

சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து பயின்ற இவர், சிறந்த பேச்சாளராகவும் கவிஞராகவும் அங்கீகரிக்கப்பட்டார். தனது 19ஆம் வயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே 'வைகறை மேகங்கள்' என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இத்தொகுப்பு பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. பின்னர், 1979ஆம் ஆண்டில் புதுக்கவிதை வடிவில் 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்' என்ற நூலை வெளியிட்டார். 1980ஆம் ஆண்டு பாரதிராஜாவின் 'நிழல்கள்' திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராகத் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் எழுதிய 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலுக்காக 2003ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.