Quotes from விஷ்ணுபுரம்

அகங்காரமிருந்தால் வாழ்க்கையின் அடிகள் ரொம்ப வலிக்கும்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
எழுக! இதோ புதிய தினம்! முடிவின்மையின் எல்லையற்ற கருணையிலிருந்து இன்னொரு துளி! சலனமின்மையின் பெருங்கடலில் இருந்து இன்னோர் அலை. இதோ வெறுமையின் புன்னகை ஒளியெனத் திரண்ட கதிரவன் பிறந்து வருகிறான். இருளின் ஆழத்திலிருந்து மேகங்கள் நுரைத்து எழுகின்றன. கதிர்கள் தொட்ட இடங்களில் மரங்கள் பசுமையாக உருவாகின்றன. மேகங்களிலிருந்து வழியும் காற்று கிளைகளைத் தழுவுகிறது. பறவைகளை வாரி வானில் இறைக்கிறது. அவற்றின் குரல்களிலிருந்து ஒலி உருவாகிறது. பனியின் திரையை நழுவவிட்ட மலைகள் சிவக்கின்றன. புதிய அருவிகள் பொங்கிச் சரிகின்றன. எழுக! இன்று புதிதாய் பிறந்தெழுக! நெருப்பாக எழுக! காற்றாக எழுக! வானாக எழுக! இல்லாமையிலிருந்து இருப்புக்கு வருக! இருளிலிருந்த ஒளிக்கு வருக! மரணத்திலிருந்து அதீதத்திற்கு எழுக!
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
மகாகாவியங்கள் தொலைதூரத்து மலைகளைப் போல. நம் மனதின் வடிவக் கற்பனைகளுக்குள் அவற்றின் வடிவம் அடங்காது. ஒரு பகுதியைப் பார்க்கும்போது அதன் மறுபகுதி மறைந்திருக்கும். நாம் நிற்கும் இடத்திற்கு ஏற்பவும், நம் மனதின் கற்பனைக்கு ஏற்பவும், அவை மாறி மாறித் தோற்றம் தரும். எப்போது நமது மனஉருவகங்களை அவற்றின்மீது போட ஆரம்பிக்கிறோமோ, அந்தக் கணத்தில் காவிய தரிசனம் முடிவடைகிறது. பிறகு நாம் பெறுவது வெறும் அகங்கார தரிசனம்தான்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
மனிதர்களை மனம் அச்சுறுத்துகிறது. அதனுடன் தனிமையில் ஒருகணம்கூட அவர்களால் இருக்க முடிவதில்லை. பொழுதுபோகவில்லை என்றும், தனிமை என்றும் எதைச் சொல்கிறான் மனிதன்? செயலற்ற கணத்தில் மனம் தெளிந்து ஆழம் தெரிகிறது. அது அவனை அச்சுறுத்துகிறது.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
குருநாதரை வணங்குகிறேன் தனிமை நிறைந்த தவத்தை முழுமை செய்ய இந்த எளிய பிட்சுவிற்கு ஆசியளியுங்கள். எனது ஆனந்தத்தை நண்பர்கள் அறியாமலிருக்கட்டும்! எனது துயரத்தை எதிரிகள் அறியாமலிருக்கட்டும்! தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால் இந்தப் பிட்சுவின் ஆசை நிறைவேறும். எனக்கு முதுமை வருவதை நண்பர்கள் அறியாமலிருக்கட்டும்! நோய் வருவதை சகோதரி அறியாமலிருக்கட்டும்! தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால் இந்தப் பிட்சுவின் ஆசை நிறைவேறும். எனது மரணம் மனிதர்கள் அறியாமலிருக்கட்டும்! எனது பிணத்தை கழுகுகள் காணாமலிருக்கட்டும்! தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால் இந்தப் பிட்சுவின் ஆசை நிறைவேறும். எனது உடலைச் சுற்றி யாரும் கூடாமலிருக்கட்டும்! எனது பிரிவை எண்ணி யாரும் அழாமலிருக்கட்டும்! தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால் இந்தப் பிட்சுவின் ஆசை நிறைவேறும். நான் எங்கு போனேன் என்று யாரும் கேட்காமலிருக்கட்டும்! நான் எங்குள்ளேன் என்று யாரும் சொல்லாமலிருக்கட்டும்! தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால் இந்தப் பிட்சுவின் ஆசை நிறைவேறும். மலை மடிப்புகளின் இருண்ட குகையில் பிட்சுவின் இந்த ஆசை அனைத்து பூதங்களின் இச்சையை வெல்லட்டும்! இந்தப் பிட்சுவின் ஆசை நிறைவேறட்டும்!
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
காடு... மனித சஞ்சாரமில்லாதிருப்பதன் சுதந்திரத்தை தாவரங்கள் கொண்டாடுகின்றன.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
பிம்பங்கள் குமுறிக் கொப்பளிக்கும் இருண்ட ஆழம் ஒன்று. அதன் ஒவ்வோர் அலைக்குப் பின்பும், இடைவெளியின் நொடியில் அது தோன்றி மறைகிறது.” “அந்த ஆழமே ஸ்வப்பனம். அதில் உன்னை ஆழத்திக்கொண்டால் அடித்தரை வெளியாகத் திறக்கும். அதன் பெயர் சுஷûப்தி
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
உண்மையான வாழ்வின் ஈரமற்ற தீவிரத்தைத் தாங்கமுடியாமல் நான் தப்பித்து ஒளியும் குகைகளா இந்த இறந்தகாலங்கள்?
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
ஆனால் எந்தக் கணத்தில் மரணம் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? அதை இதுவரை நான் கண்டதில்லை. அறிய வேண்டுமென்று நான் ஆவலோடு தவித்தலைந்த காலங்கள் உண்டு. இன்று தெரிகிறது. அதை அறியமுடியாது. அறிய முயல்வதே அபத்தம். ஏனெனில், மரணம் என்பது ஞானத்தின் அழிவு. அதை ஞானத்தால் எப்படி அறியமுடியும்? வைத்திய சாஸ்திரம் ஒரு ஞானம். எனக்கு இந்தப் பிறவியில் விதிக்கப்பட்ட கர்மம் இது. நான் மரணத்தை அறியவேண்டிய அவசியமில்லை என்று பின்பு உணர்ந்தேன். மரணத்தின் வருகையை அறிந்தால் போதும். உயிரின்மீது அது குவியும்போது என் கடமையை ஆற்றினால் போதும், என்னால் மரணத்தைத் தடுக்க முடியாது; மரணம் பிரம்மாண்டமானது. விஷ்ணு பள்ளிகொள்ளும் அனந்தகாலரூபன் மரணமேதான். இந்த மெய்ஞானமே எனக்கு அமைதி தந்தது.
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'
மனிதன் ஞானத்தை உருவாக்குகிறான். அது கூன்போல அவன் முதுகில் உட்கார்ந்திருக்கிறது. தள்ளாடியபடி அதை சுமந்து திரிகிறான்
ஜெயமோகன் (Jeyamohan) — 'விஷ்ணுபுரம்'