Quotes from இராஜராஜேச்சரம்

சுவார்ட்ஸ் என்ற பாதிரியாரால் வளர்க்கப் பெற்று தஞ்சை அரசராக முடிசூடிய இரண்டாம் சரபோஜி 1798இல் பதவி ஏற்றபோதும், ஓராண்டுக் காலத்திற்குள்ளேயே ஆங்கில அரசு அவர்தம் பதவியைக் கைப்பற்றி ரெசிடெண்ட் என்ற அதிகாரிகள் வசம் ஒப்புவித்தது. இருப்பினும் சரபோஜி மன்னர் தஞ்சைப் பெரியகோயிலுக்கு பல திருப்பணிகளைச் செய்ததோடு புதிய கணபதியார் ஆலயத்தையும் கட்டுவித்தார். பல அறக்கட்டளைகளைத் தோற்றுவித்தார். காலச்சூழல் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிய வைத்தது. இதனைச் சாதகமாக்கிக் கொண்ட சுவார்ட்ஸ் பாதிரியார் பெரிய கோயிலின் தீர்த்தக்குளமான சிவகங்கை குளக்கரையில் சிப்பாய்கள் வழிபாடு செய்ய புதிய கிறித்துவ தேவாலயத்தைக் கட்டுவித்தார். தஞ்சைக் கோயிலில் சரபோஜி மன்னர் வெட்டுவித்த போன்ஸ்லே வம்ச வரலாறு என்ற பெரிய கல்வெட்டுத் தொடரில் சுவார்ட்ஸ் பாதிரியாரின் புகழும் இடம்பெறுமாறு செய்தார்.
'இராஜராஜேச்சரம்'
கி.பி.1773 முதல் 1776 வரை ஆர்க்காட்டு நவாப்பின் படையினரும், பிரிட்டிஷ் கிழக்கிந்தியப் படையினரும் தங்கள் பாடி வீடாக பெருவுடையார் கோயிலைப் பயன்படுத்தினர். பெருவுடையார் லிங்கம் உள்ள கருவறையோடு மகாமண்டபமும், முருகன் ஆலயமும், திருச்சுற்று மாளிகையும்  படையினர் தங்குமிடமாக இருந்தன. முகலாய, கிறித்துவ வீரர்கள் அங்கு தங்கியமையால் திருமேனிகளின் கைகளும் கால்களும் உடைக்கப்பெற்றன. அவர்கள் தங்கி இருந்ததற்குச் சான்றாக முருகன் ஆலயத்தின் அர்த்தமண்டபத்தில் "Shelter For 36 Persons" என்ற எழுத்துக் குறிப்பும், கருவறை அர்த்த மண்டப வாயிலில் ARP பாதுகாப்பிடம் என்ற குறிப்பும், திருச்சுற்று மாளிகையில் வடபகுதியில் ARP WARD III என்ற பெயர்க் குறிப்பும் இன்றும் இருப்பதைக் காணலாம்.
'இராஜராஜேச்சரம்'
பிரதாப சிம்மனின் ஆட்சிகாலமான கி.பி.1758இல் பிரஞ்சு தளபதி லாலி என்பான் தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டான். இவனது முற்றுகையின்போது தஞ்சைக் கோயிலின் தென்கிழக்குப் பகுதிகள் மூன்று நாட்கள் பீரங்கித் தாக்குதலுக்கு உட்பட்டது. இறுதியில் கோட்டைச்சுவர் தகர்க்கப் பெற்றது. இந்நிகழ்வு தஞ்சைக் கோயிலுக்கு ஏற்பட்ட பேரழிவாகும். "A History of the Military Transactions of the British Nation in Indostan" என்ற Robert orme என்பார் எழுதிய நூலில் 1758இல் பிரஞ்சுக்காரர்கள் தஞ்சைப் பெரியகோயில் இடம்பெற்றுள்ள சிறிய கோட்டையை பீரங்கிகள் கொண்டு தாக்கியதும், பின்னர் கி.பி.1771 மற்றும் 1773இல் பிரிடிஷ் கிழக்கிந்திய கம்பெனியார் தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டுத் தாக்கியதையும், அப்போது பெரிய கோயிலின் மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள் தாக்குதல்களுக்கு இலக்காகியதையும் வரைபடங்களோடு பதிவுசெய்துள்ளார். இத்தாக்குதல்கள் தஞ்சை மராட்டிய அரசர் இரண்டாம் துளஜா மன்னர் காலத்தில் நிகழ்ந்தன. இவர் கி.பி.1763 முதல் 1787 வரை மன்னராக திகழ்ந்தார்.
'இராஜராஜேச்சரம்'
சோழப்பெருவேந்தன் மூன்றாம் குலோத்துங்கன் மதுரை அரசன் குலசேகர பாண்டியனோடு 1202இல் போரிட்டபோது மதுரை நகரிலிருந்த பாண்டியனின் அரண்மனையைத் தரைமட்டமாக இடித்து அவர்தம் பண்டாரங்களிலிருந்த பெரும் பொருளைக் கைப்பற்றினான். அதன்பிறகு அவன் முதலில் சென்ற இடம் ஆலவாய்ப் பெருமான் உறையும் மதுரைத் திருக்கோயிலாகும். அங்கு சென்ற அவன், தான் கவர்ந்த பொருள்களை அந்த ஈசனுக்கு அளித்ததோடு, பெருமானை வீதிஉலா எழுந்தருளச்செய்து திருவீதியில் நின்று சேவித்தான் என்று தன் மெய்க்கீர்த்த்திப் பாடல்களில் கூறிக்கொள்கிறான். பின்பு பாண்டியன் வலிமையுற்ற போது மாறவர்மன் சுந்தரபாண்டியன் மூன்றாம் இராசராச்சோழனின் ஆட்சிகாலத்தில் (கி.பி.1219இல்) சோழநாட்டின் மீது படைஎடுத்து வந்து, சோழனை வென்று அவன் தலைநகரங்களான உறையூரையும், தஞ்சையையும் செந்தழலிலிட்டு அழித்ததோடு அரண்மனையையும் தரைமட்டமாக்கினான். தான் சோழநாட்டில் கவர்ந்த அரும்பொருள்களைத் தில்லை நடேசப்பெருமானுக்கு அளித்து அஞ்சலி செய்தான். பாண்டியனின் செய்கை கூறும் ஓர் அற்புதக் கல்வெட்டுப் பாடல் திருச்சிக்கு அருகேயுள்ள திருவெள்ளாறையில் உள்ளது. அதில் சுந்தரபாண்டியன் சோழநாட்டில் அரசு கேந்திரங்களாகத் திகழ்ந்த அத்தனை இடத்தையும் அழித்தான் என்றும், ஆனால் அவன் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (சங்க காலத்தில்) கரிகாற் சோழனைப் புகழ்ந்து "பட்டினப்பாலை" என்ற சங்கத்தமிழ் நூலை உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் பாடியதற்காக பதினாறு நூறாயிரம் பொற்காசுகளையும், நினைவுப் பரிசாக பதினாறுகால் மண்டபம் ஒன்றினையும் அளித்திருந்தான்; அந்த பதினாறு கால் மண்டபத்தைத் தான் அழிக்காமல் காத்தான் என்று பெருமையோடு கூறிக்கொள்கிறான். இந்நிகழ்வு தமிழ் மன்னர்களின் பண்பு நலனை எடுத்துக்காட்டுவதாகும். தமிழ் வேந்தர்கள் தங்கள் பகைமையை அரசு கேந்திரங்களில் மட்டுமே காட்டினரேயன்றி ஒருபோதும் பகைநாட்டுக் கோயில்களை அழிக்கவில்லை, மாறாக பகையரசர் தங்கள் பெயரால் அக்கோயில்களில் வைத்துள்ள அறக்கட்டளைகளுக்கு மேலும் பொருள் தந்து பகைவர் பெயரால் நிகழும் பூசனைகளை மேலும் சிறக்க வழி செய்தனர் என்பதைப் பல கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. சேரனாலோ, சோழனாலோ, பாண்டியனாலோ, பல்லவராலோ, அதியராலோ இன்னபிற தமிழ்மரபு மன்னர்களாலோ ஒருபோதும் கோயில்களை அழிக்கப்படவில்லை; மாறாகப் பொலிவு பெற்றன.
'இராஜராஜேச்சரம்'
அருணகிரியார் தஞ்சை இராஜராஜேச்சரத்துக்கு எழுந்தருளி மூன்று திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார். அவர்தம் பாடல்களில் தஞ்சை இராச கோபுரத்தமர்ந்த முருகப் பெருமானின் புகழ் பொற்றப்பெற்றுள்ளது.
'இராஜராஜேச்சரம்'
இராஜராஜ சோழனின் இராஜகுருவாக விளங்கியவர் சர்வசிவபண்டிதர் என்பார் என்பதை அப்பெருவேந்தனின் தஞ்சைக் கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன. கல்வெட்டுச் சான்றுகள் அடிப்படையில் இராஜராஜனும், கருவூர்த்தேவரும் சமகாலத்தவர் என்பதற்கு இதுவரை எந்த கல்வெட்டுச் சான்றுகளும் கிடைக்கவில்லை....தற்போது தஞ்சைக் கோயிலில் திகழும் கருவூரார் கோயில் 20ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பெற்றதாகும்.
'இராஜராஜேச்சரம்'
ஸ்ரீவிமானத்தின் இரண்டாம் நிலையில் உள்ள கீர்த்தி முகம் ஒன்றில் மார்பளவு உடைய ஒரு மேலைநாட்டார் உருவம் தொப்பி அணிந்து காணப்பெறுகின்றது. இதனைச் சுட்டிக்காட்டி மாமன்னன் இராஜராஜனின் சிற்பிகள் எதிர்காலத்தில் ஐரோப்பியர் ஆட்சி தமிழகத்தில் நிலவும் என்பதை முன்னரே அறிந்து இவ்வாறு காட்டியுள்ளனர் என்பர். இதுவும் தவறான கூற்றாகும். தற்போது காணப்பெறும் ஐரோப்பியர் உருவம் தஞ்சை நாயக்கர் காலத்துத் திருப்பணியின்போது சுண்ணாம்பு காரையால் (சுதை) செய்யப்பெற்ற உருவமாகும். கி.பி.1620 காலகட்டத்தில் தஞ்சை நாயக்க அரசர் இரகுநாத நாயக்கருக்கும் டேனிஷ் அரசருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. டேனிஷ் அரசருக்கு இரகுநாத நாயக்கர் தங்க ஓலையில் தமிழில் எழுதிய நட்புறவுக் கடிதம் ராயல் ஆர்கைவ்ஸ், கோபன் கேஹனில் இன்றும் காட்சிப் பொருளாகவுள்ளது. தரங்கம்பாடியில் டேனிஷ் நாட்டவருக்கு வணிக மையம் அமைக்க இரகுநாத நாயக்கர் அனுமதி அளித்ததால், அந்நாட்டவர் சிலர் அடிக்கடி தஞ்சை வரும் வாய்ப்பு ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் திருப்பணிகள் நிகழ்ந்ததால், சிற்பி ஒருவன் தான் தஞ்சையில் கண்ட ஐரோப்பியர் ஒருவர் உருவத்தைத் தொப்பியுடன் இக்கோபுரத்தில் படைத்துள்ளான் என்பதே சாத்தியமான ஒன்றாகும்.
'இராஜராஜேச்சரம்'
தஞ்சை பெருவுடையார் முன்பு திகழும் ஒரே கல்லாலான நந்தி (இடபம்) இராசராசன் உருவாக்கியதென்றும், முன்னர் அவன் முயன்று செய்த நந்தி உருவத்தினுள் தேரை இருப்பது அறிந்து அதனை தவிர்த்துவிட்டு இப்பெரிய நந்தியை அவன் உருவாக்கினான் என்றும் சுவையான கதை கூறுவர். மேலும் புதிய பெரிய நந்தி ஒவ்வொரு நாளும் வளரத் தொடங்கவே பின்வந்தவர்கள் அதன் தலை மீது ஒரு பெரிய ஆணியை அடித்து அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தினர் என்றும் கூறுவர். இக்கூற்றுகள் அனைத்தும் கற்பனைக் கதைகளேயாகும். மாமன்னன் இக்கோயிலுக்கென வடித்த இடபம் (நந்தி) தற்போது வராகி கோயிலின் அருகே திருச்சுற்று மாளிகையில் உள்ளது. இது பிற்காலத்தில் அங்கு இடம்பெறச் செய்ததாகும். தற்போது காணப்பெறும் பெரிய இடபம் தஞ்சையை ஆட்சிசெய்த நாயக்க அரசர்கள் காலத்தில் உருவாக்கப்பெற்றதாகும். வளர்கிறது என்பதெல்லாம் கற்பனைக் கதைகளே.
'இராஜராஜேச்சரம்'
கற்பனைச் செய்திகள்: ஸ்ரீவிமானத்தின் உச்சியை மூடும் கற்களை பிரமரந்திரகல் எனக் குறிப்பிடுவர். தஞ்சைக் கோயிலின் உச்சியில் உள்ள சிகரம் பிரமரந்திர கல்லின்மேல் உள்ளதாகவும், அது அழகி என்ற கிழவி வைத்திருந்த கல் என்றும், அதன் நிழலில்தான் ஈசன் இருப்பேன் என்று இராசராசனின் கனவில் கூறவே அவ்வாறே அக்கல் அங்கு ஏற்றப்பட்டதாகக் கூறுவர். இப்புனைந்துரை 1800 காலகட்டத்திலேயே நிலவியது என்பதற்குக் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் எழுதிய பெருவுடையார் பாமாலையில் ஒரு பாடல் குறிப்பு உள்ளது.
'இராஜராஜேச்சரம்'
இந்திய அரசு 1954ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக 1000 ரூபாய் நோட்டில் தஞ்சைப் பெரிய கோயிலின் உருவத்தை அச்சிட்டு வெளியிட்டது. அக்கரன்சி நோட்டுக்கள் கொல்கத்தா, தில்லி, மும்பை, கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வெளியிடப் பெற்றன.
'இராஜராஜேச்சரம்'