Reviews for சூடிய பூ சூடற்க [Soodiya poo soodarka]

14 reviews total

user_11804

★ 3/5 Feb 02, 2026

இதுவரை படித்திடாத எழுத்தாளர்களை வாசிக்க வேண்டும் என முடிவெடுத்து படித்த புத்தகம் தான் தலைகீழ் விகிதங்கள். பின் அவருடைய சிறுகதைத் தொகுப்பான இந்த புத்தகத்தை படிக்க நேர்ந்தது. இதில் 15 சிறுகதைகள் உள்ளன.

நாஞ்சில் நாடனுக்கே உண்டான வட்டார மொழிவழக்கு, எதார்த்தம், கேலி, இயற்கை, அரசியல், சமூகத்தின் அவலம் என எல்லாமும் இதிலும் இருக்கிறது. ஒவ்வொரு கதையும் வித்தியாசமாக, நம்மை சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது, நம்மை உணர்ச்சிக் கடலில் மூழ்கவும் செய்கிறது. இது சாகித்திய அகாடமி விருது பெற்ற புத்தகம். மனித வாழ்வு வலிகள் நிறைந்தது, அதை இலக்கியத்தின் மூலம் வாசிக்கையில் இன்னும் சக மனிதர்களின் மனதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

user_11803

★ 5/5 Feb 02, 2026

அருமையான சிறுகதைகள். ஒவ்வொன்றும் பொக்கிஷம். சிறிதும் அலுப்பு வராத யதார்த்த கதைகள். நாஞ்சில் நாடனின் வாழ்க்கை அனுபவங்கள் அவர் பேனா மையின் மூலம் களிப்பு நடனம் ஆடியிருக்கின்றன.

யாம் உண்பேம், கடவுளின் கால், செம்பொருள் அங்கதம் மற்றும் சங்கிலி பூதத்தன் மிக சிறப்பானவை.

user_11802

★ 4/5 Feb 02, 2026

நான் முதலில் வாசித்த சிறுகதை தொகுப்பு எழுத்தாளர் ஜெயகாந்தனுடையது. அதற்குப் பின் வாசித்தது எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடைய சூடிய பூ சூடற்க.

ஒரு பயணக்கட்டுரை வாயிலாக நம்மை அவருடைய உலகுக்கு கடத்திச் சென்று பின்பு அந்த தளத்தில் ஒரு கதை சொல்கிறார். ஏ.கே. செட்டியார் அவர்களின் பயண கட்டுரைகளை விரும்பி வாசித்ததாலோ என்னவோ சூடிய பூ சூடற்க வாசிப்பதில் இருந்த ஆர்வம் கூடியிருந்தது.

பல கதைகள் இருந்தாலும், நான் மிகவும் இசைந்தது அவரது சொந்த அனுபவங்களிலிருந்து எழுதிய தன்ராம் சிங்க் மற்றும் திராவிட கட்சிகளின் தீவிர முற்போக்கு சிந்தனை எதுவரை போகக்கூடும் என்ற ஒரு கற்பனை கதையான மணமானவர்களுக்கு மட்டும்.

தன்ராம் சிங் ஒரு நேபாளி கூர்காவை பற்றிய கதை. நெய்வேலி டவுன்ஷிப்பில் வாழ்ந்தபோது அங்கே இரவு நேர காவலுக்காக கூர்க்காக்கள் இருப்பார்கள். மாதம் ஒரு முறை அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறை எல்லோருடைய வீட்டிற்கும் சென்று ஒரு சிரிப்போடு வேலைப்பார்த்ததற்கான பணம் வாங்கி செல்வதுண்டு. அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், அவர் ஏன் இங்கு வந்து வேலைப்பார்க்க வேண்டும், வேலைநேரம் போக மற்ற நேரங்களில் என்ன செய்வார்கள், அவர்களின் குடும்பம் எங்கே என்பது பற்றியெல்லாம் தெரியாது. உள்ளூர் மற்றும் வெளியூரில் அகதிகளாக வாழும் மனிதர்களை பற்றிய கதைகளை திரைப்படங்களின் வாயிலாக பார்த்ததுண்டு. மாதக்கணக்கில் தன் சொந்தங்களை பிரிந்து வாழும் ராணுவ வீரர்களும் கிட்டத்தட்ட இந்த பிரிவை சேர்ந்தவர்கள் தான். தன்ராம் சிங் வாசித்த பின் பால்ய கால நினைவுகள் வந்து சென்றன. அந்த கூர்க்காவை பற்றிய நினைவடுக்களில் எஞ்சியது அவர் முகத்தில் கண்ட அந்த சிரிப்பு தான்.

மணமானவர்க்கு மட்டும் என்ற கதை கிட்டத்தட்ட ஒரு விரும்பத்தகாத சமூகத்தை காண்பித்தது போல் உணர்கிறேன். திராவிட கட்சிகளின் முற்போக்கு சிந்தனையின் நீட்சியாகவும் மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கமாகவும் அதை பகடியாகவும் சித்தரித்தது போலவும் உணர்கிறேன். அவரது வெளிப்படையான மொழிநடையும் மிகவும் கவர்ந்தது.

user_11801

★ 5/5 Feb 02, 2026

மீண்டும் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதைகள். சில கதைகள் சென்ற வருடம் படித்த புத்தகத்தில் இருந்ததே இருப்பினும், மீண்டும் மீண்டும் கும்பமுனி சிறுகதைகள் மீது மிகுந்த காதலையும், கும்பமுனியின் வழி நாஞ்சில் நாடன் நடத்தும் பகடிகள், அவர் எழுத்தின் மீது மிகுந்த காதலையும் திணித்து போயிருக்கின்றன. மும்பையின் வாழ்க்கையையும், நாஞ்சில் நாட்டின் வழக்குகளையும் மெல்ல மெல்ல நம் மனதின் ஆழத்தில் விதைக்கிறார் நாஞ்சில் நாடன் அவர்கள்.

இந்த புத்தகத்தில் மொத்தம் 15 கதைகள் இடம்பெற்று இருக்கின்றன. பகடியில் அரசியல் கேள்விகளை முன் வைக்கும் நாஞ்சில் நாடன், உயிர்ப்புள்ள உணர்வுகளின் சந்திப்புகளையும் தவற விடுவதில்லை. வலைகள் எலிகளுக்கானவை என்ற கதையில், உயிர்ப்புள்ள உணர்வுகளை மட்டும் வைத்துக் கொண்டு பயணம் செய்யும் மக்களின் கதை அது. அவர்களின் பாடுகளையும், இடம் மாறி மாறி செல்லும் தொடர் வண்டியில் அவர்களுக்கென எழுதி வைக்கப்பட்ட அவமானங்கள் எவ்வாறு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்பதையும், அப்படியான மனிதர்களை இன்று வரை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடத்துகிறோம் என்பதனையும் அவரின் கதையின் வரிகள் சொல்லுகின்றன.

பொதுவாகவே தொடர்வண்டியில் உள்ள பொது பெட்டியில் பயணிக்கும் மனிதர்களின் கதை. வாழ்வின் அடித்தட்டென நாமே நம்மில் பலர் முடிவு செய்து பார்க்கக்கூடிய மனிதர்களின் கதை. அவர்களும் நம்மில் ஒருவர் என்ற படிப்பினையை கொடுத்து வளர்க்கவில்லை இந்த சமூகமும் ஏன் சில நேரங்களில் வீடும் கூடத்தான். விவசாயிகளின் தொடர் வண்டி பயணத்தின் ஏற்படும் சங்கடங்களின் ஊடே பிரயாணப்படுகிறது கதை. தமிழ்நாட்டில் விரட்டி அடிக்கப்படும் இடங்களை தொட்டு துளையிட்டு நோக்கிய கணங்களை கதையில் சொல்லி இருக்கிறார்.

படுவப் பத்து என்ற கதையில் ஐந்து வெவ்வேறு முடிவுகள் இருக்கின்றன கதைக்கு. படிக்கும் மனதிற்கு ஏற்ப எடுத்துக்கொள்ளலாம் என்ற வகையில் எழுதியுள்ளார். அல்லது இவ்வாறான முடிவுகள் மட்டுமே சாத்தியம் என்கிற தொனியில் எழுதி இருக்கிறார். கதை எளியவர்களுக்கும் பெரியவர்கள் என்று பெயரிடப்பட்டிருப்பவர்களுக்குமான பொது இடம் என்ன என்பதை சொல்லும்படியான கதை. பள்ளமான வயற்காட்டின் கதை என்பதால் படுவத் பத்து என்பது தலைப்பாகி போனதை சுட்டி காட்டியுள்ளார் நாஞ்சில் நாடன். பத்து என்பது வயற்காட்டையும், படுவம் என்பது சற்றே தாழ்ந்த நிலத்தையும் குறிக்கிறது.

வயல் வேலை செய்யும் பரமனின் கையில் கிடைக்கிறது ஒரு கிரீடம். இது நடப்பது சங்கராசுப்பையரின் படுவத்தினை உழும் தருணத்தில். பரமனும் முப்படாதியும் எப்படி இதை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதும், 5 முடிவுகளுடன் கூடிய கதை.

இப்படி எல்லாக் கதைகளும் ஒவ்வொரு முறையில் நம்மை வந்தடைகின்றன. கற்பனையா? அல்லது அசப்பில் வாழ்ந்தவரா? என்பதைத் தாண்டி நாஞ்சில் நாடன் கதைகளில் வரும் எழுத்தாளர் கும்பமுனியும், அவரின் உதவியாளர் தவசிப்பிள்ளையும் நெஞ்சில் நிற்கும் பாத்திரங்கள். பகடி செய்வதில் நிகரற்றவர்கள். அறுந்து அந்தரத்தில் தொங்கும் பாங்கு கொண்ட சமூகத்தின் மீதான கோபமும், பெருங்கசப்பும் அச்சு அசலாய் கும்பமுனியின் மூலம் வெளிப்படுகிறது.

எத்தனை முறை வாசிப்பினும் கதை எழுதுவதன் கதை, கும்பமுனி முறித்த குடைக்காம்பு, தேர்தல் ஆணையத்துக்கு திறந்தவெளிக் கடிதம், மணமானவருக்கு மட்டும் போன்ற கதைகளில் ஓர் எழுத்தாளர் படும் பாடு, அதைத் தாண்டி அவர் இந்த சமூகத்தை பார்க்கும் விதம், அரசின் மீதான கோபம் ஆகியவை மிகத் தெளிவாகத் தெரிகின்றன. கும்பமுனி சொல்லும் வார்த்தைகளில், கேட்கும் கேள்விகளில் நிறைவாய்த் தெரிவதை தவிர்த்து கடந்து போக முடியாத எழுத்துகள். தவசிப்பிள்ளை இல்லாத கும்பமுனியை நினைத்தும் பார்க்க முடியாத அளவிற்கு ஆழமாய் நிற்கிறார் தவசிப்பிள்ளை.

அற்புதமான சிறுகதைகள். படித்துப் பாருங்கள்.