Reviews for எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்

19 reviews total

user_11599

★ 3/5 Feb 02, 2026

ஒரு எழுத்தாளனின் கதை என்ற அறிமுகத்தால் இந்தப் புத்தகத்தை எடுத்தேன். எழுத்துப் பற்றியோ, எழுத்தாளனாக இருப்பதால் அவன் அடையும் அனுபவம் பற்றியோ கதை இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் படிக்க ஆரம்பித்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.

கதைக்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை. முடிந்துவிட்டதா என்பதை இரண்டு மூன்று முறை நம்மை நாமே கேட்டுக்கொள்கிற நிலைமை படிப்பவருக்கு இருக்கும். நாவலுக்கான விதிமுறைகளை மீறிப் படைக்கப்பட்ட படைப்பு என்று இணையத்தில் பலர் கொண்டாடினாலும், தனித்திருக்கும் அனைத்தும் சிறந்திருக்கும் என்று நினைப்பது மடமையே.

வரம்புகள் மீறப்பட்டு மிகவும் வெளிப்படையான ஆபாச வர்ணனைகள் கதாபாத்திரத்தின் உள்ளத்து எண்ணத்தைப் பிரதிபலிக்க உதவுகிறது என்ற எண்ணத்தைத் தாண்டி, தேவையில்லாத இடத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணம்தான் எழுந்தது. இந்தப் படைப்பு ஒரு பிரபலமான ஆங்கிலப் பழமொழியைப் பொய்யாக்கியுள்ளது — "துரோகம் செய்யாத ஒரே நண்பன் புத்தகம்".

user_11598

★ 4/5 Feb 02, 2026

இது ஒரு இருத்தலியல் நாவல். மனிதன் இப்போது எதுவாக இல்லையோ அதுதான், இப்போது எதுவாக இருக்கிறானோ அதுவல்ல என்று வரையறை செய்கிறது இருத்தலியல். மொழி என்பது மனிதனின் இருப்பை நிலைபடுத்துவதற்கான தொழில்நுட்பமாகக் கையாளப்படுகிறது. பெயரற்ற பொருட்கள் மனிதனின் இருப்பை நிலைகுலைய வைப்பதால் அவன் பொருட்களின் மீது பெயர் வைக்கிறான்.

வேறுவேறு சூழலில் வாழும் மனிதன் வெவ்வேறு பெயர்களை மொழியாகக் கொண்டுள்ளான். வேறுவேறு இனங்கள் ஒன்றையொன்று சந்திக்கும்போது அதிகாரம் பிறக்கிறது. மொழியின் மீது கட்டப்பட்ட அறிவும் அறிவின் மூலம் கட்டப்பட்ட ஆதிக்கமும் சமச்சீரற்ற அதிகாரத்தை உருவாக்குகிறது. இதுவே இன்றைய சுரண்டலுக்கும் வழிசெய்கிறது.

தமிழில் எதார்த்தவாதம் என்று வரும்போது அழகியலுக்காக எதார்த்தவாதம் கைவிடப்படுகிறது. இது தன்னிலை ஒடுக்குமுறை ஆகிறது. தமிழில் அழகியல் கட்டுடைப்பு நடக்கவே இல்லை — அதை நடத்தியது சாரு தான். நாகரீகத்தின் போலித்தனத்தை, சமூகப் பிற்போக்குத்தனத்தைக் கடுமையாகச் சாடுகிறது இந்தப் புதினம். தனது துணிச்சலும் அங்கத மொழியாலும் அழகியல் உடைப்பாலும் தனக்கான இடத்தைச் சாரு அடைந்துள்ளார்.

user_11597

★ 1/5 Feb 02, 2026

சாரு நிவேதிதா இந்த நாவலை எழுதிய விதம் எனக்குச் சுவாரஸ்யமாக இல்லை. நான்லீனியர் எழுத்து நடை என்றாலும், பெரும்பாலான கதாபாத்திரங்களையும் பெயர்களையும் லீனியர் வடிவில் எழுதியிருந்தாலும் கூட இணைக்க முடியாது. யாரேனும் இந்த நாவலைப் புரிந்துகொண்டேன் என்றால் நம்ப வேண்டாம். புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டது இது.

user_11596

★ 4/5 Feb 02, 2026

முற்றிலும் வழக்கத்திற்கு மாறான ஒரு கதை சொல்லாடல், கட்டமைப்பு. வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து சுவாரசியமாக சரசரவென கதை இழுத்துச் சென்றது. சூர்யா என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து அதன் மூன்று தலைமுறை குடும்பத்தின் கிளைக்கதைதான் இந்த நாவல்.

நான் இதுவரை படித்ததிலேயே இதுதான் முற்றிலும் மாறுபட்ட நாவல். இவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். ஏனென்றால் நாவலின் மையக்கரு, எதற்காக இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்கள் என்று என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஒருவேளை இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்கள் கழித்து இந்த நாவலைப் படித்தால் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன்.

user_11595

★ 4/5 Feb 02, 2026

சாருவை வாசிக்கும் முன் லக்ஷ்மி சரவணக்குமாரை வாசியுங்கள். ஏனென்றால் லக்ஷ்மி சரவணக்குமார் தொட நினைக்கும் உச்சமே சாரு.

user_11594

★ 1/5 Feb 02, 2026

கடவுள் நம்பிக்கையுள்ள சராசரி மனிதர்களுக்கு இருத்தலியல் பற்றிய கேள்வியோ குழப்பமோ இருப்பதில்லை. கடவுளை மறுக்கும்போதுதான் இருத்தலியல் பற்றிய கேள்விகள் வருகின்றன. நாம் ஏன் பிறந்தோம்? நம் வாழ்க்கையின் நோக்கம் என்ன? மனிதனுக்கான ஒழுக்கநெறிகள் தேவையா? தனிமனித சுதந்திரத்திற்கு எல்லையுண்டா? என்பன போன்ற கேள்விகள் வருகின்றன.

இருத்தலியல்வாதம் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைத் தேடுவதுதான் என்று சொன்னாலும், ஏற்கனவே மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளை, வரம்புக்குட்பட்ட சுதந்திரத்தை, அறம் சார்ந்த விஷயங்களை உடைத்து எல்லாவிதமான சமூக விழுமியங்களையும் புறக்கணிக்கிறது. இதனால் சமூகத்தைப் புறக்கணித்தல், குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தல், வரம்பு மீறிய போதை நுகர்வு, முறையற்ற பாலியல் வேட்கை எல்லாவற்றையும் சரிகாண்கிறது.

இந்த நாவலில் ஏன் இவ்வளவு ஆபாசம் இருக்கிறது என்று கேட்டால் இருத்தலியல் அடிப்படையில் இது எல்லாவற்றையும் கட்டுடைக்கிறது என்பார். கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைக் கேட்பதன் மூலம் எல்லா தனிமனித மற்றும் சமூகம் சார்ந்த பொறுப்புகளையும் புறந்தள்ளிவிட்டு எல்லாவிதமான இன்பத்தை நுகர்வது மட்டும்தான் என்கிற சுயநலமான உள்நோக்கத்தை நியாயப்படுத்துகிற ஒன்றாகத்தான் இந்த இருத்தலியல்வாதத்தை நான் பார்க்கிறேன்.

இருத்தலியல்வாதம் என்பது தத்துவமும் கிடையாது. ஒழுக்கக்கேட்டை நியாயப்படுத்துகிற ஒரு கவசம் மட்டுமே. மனிதன் சந்திக்கிற எந்தப் பிரச்சினைக்கும் அது தீர்வைக் கொடுக்காது. மாறாக புதிய புதிய பிரச்சினைகளைத்தான் ஏற்படுத்தும். பகுத்தறிவற்ற மூடநம்பிக்கைகள் எவ்வளவு ஆபத்தானதோ அதைவிட ஆபத்தானது மேற்குலகின் பகுத்தறிவற்ற முற்போக்கு தத்துவ உளறல்கள்.

user_11593

★ 4/5 Feb 02, 2026

இவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதே! ஏதாவது ஒரு கட்டத்தில் புரிந்துவிடும் என்ற நம்பிக்கையில் படித்து முடித்த சாருவின் இரண்டாவது நாவல் இது. இன்னும் அதற்கான பக்குவம் கிடைக்கவில்லை.

user_11592

★ 3/5 Feb 02, 2026

இருத்தலியல் என்பது மனிதர்கள் சமூக தடையின்றி சுதந்திரமாக தங்கள் தேர்வுகளையும் செயல்களையும் செய்யலாம் என்ற சிந்தனையை முன்வைப்பது. இயல்பான இருப்பின் சிந்தனை, உணர்வு, அனுபவத்தைப் பற்றி உரைப்பது.

கதையின் நாயகன் சூர்யா ஒரு பத்திரிகை எழுத்தாளன். தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் நாவலாக எழுத முற்படுகிறான். மிக எதார்த்தமாக கதை நகர்கிறது. பல சிக்கலான உறவுகளையும், சில கசப்பான உணர்வுகளையும் குறை கூறாமல் சூர்யாவின் வாயிலாக முன்வைக்கிறார் ஆசிரியர்.

user_11591

Feb 02, 2026

பிடிக்கவில்லை என்று சொல்ல முடியவில்லை, பிடித்திருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு குழப்பமான, சிந்திக்க வைக்கும் ஒரு நாவல் இது.