Reviews for எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்
19 reviews total
user_11609
★ 5/5 Feb 02, 2026ஜீரோ டிகிரி படிப்பதற்கு முன் படிக்க வேண்டிய முதல் புத்தகம் இது. மிகவும் சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம். இதைத் தவறவிடாதீர்கள்.
user_11608
Feb 02, 2026அருவருப்பான எழுத்து — இதை ஒரு பாராட்டாகவே சொல்கிறேன்! இந்த எழுத்து நடை தமிழ் இலக்கியத்திற்கே புதிது. மதிப்பெண் கொடுக்க இயலாத புத்தகம்.
user_11607
★ 2/5 Feb 02, 2026இந்த நாவல் முதலில் முன்வைப்பது எதையுமே அல்ல. ஒரு கடிதத்தில் துவங்குகிறது — ஒருவர் கதாசிரியரைப் பார்க்க வருகிறார், ஆனால் பார்க்க முடிவதில்லை. பதில் எழுதும் போக்கில் சில சம்பவங்கள், சில மேற்கோள்களைச் சொல்கிறார். பெரும்பாலும் எதற்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது.
பின்னர் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை தொடங்குகிறது. அதுவும் இயல்பான நிகழ்வோ கதை மாந்தர்களோ கொண்டிருக்கவில்லை. கொஞ்சமும் இயல்பில்லாத மனிதர்கள், மிகைக் கற்பனை, தொடர்பில்லாத எழுத்து நடை. நான்லீனியர் என்று சொன்னாலும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும், அதற்கும் வழியில்லை.
இந்த எண்ணம் தோன்றாமல் இருக்க எப்படிப் படிப்பது, எப்படிப் புரிந்துகொள்வது என்று ஒருவர் பின்னுரையில் விளக்கம் எழுதியுள்ளார். சுருக்கமாக, இதைப் படிப்பதற்கு அவரின் இணைய எழுத்துக்களையே படித்துவிடலாம்.
user_11606
★ 3/5 Feb 02, 2026ஒழுக்க உலகில் மிகையானவர்களாகக் கருதப்படுபவர்களைப் பற்றி ஆராய்வதே இந்த நாவலின் கருப்பொருள். ஆனால் அதற்குத் தேவையான ஆழம் இல்லை என்று உணர்கிறேன்.
user_11605
★ 3/5 Feb 02, 2026இந்தப் புத்தகத்தைப் படித்தால் ரீடர்ஸ் பிளாக் ஆகிவிடும். சாருவின் புத்தகங்களை இனிமேல் தயங்கித்தான் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
user_11604
★ 4/5 Feb 02, 2026முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனாலும் ஒரு நல்ல உணர்வைத் தருகிறது இந்த நாவல்.
user_11603
★ 5/5 Feb 02, 2026இது சாரு நிவேதிதாவின் எழுத்து. இது ஒரு புதிய உலகத்தைத் திறக்கும். உங்களுக்கு இரண்டே வழிகள் உள்ளன — ஒன்று இந்த transgressive உலகத்தை நிராகரித்து வெளியேறுவது, அல்லது இந்த transgression-ஐப் புரிந்துகொள்ள முயன்று அதனுடன் தொடர்வது.
user_11602
★ 5/5 Feb 02, 2026என் மனதில் நான் புழுங்கிக்கொண்டிருந்த கேள்விகளை அப்பட்டமாக ஒரு புனைவாக எழுதியிருக்கிறார் சாரு. உறவுகள், உறவுகளுக்குப் பின்னால் உள்ள ஆதிக்கம் — அதை ஆண் சுமக்கப் பெண் சிறைப்படுத்தப்படுகிறாள். சிறு வயது முதலே ஆணின் மீது இந்த ஆதிக்கம் பொறுப்பு என்ற பெயரில் வளர்த்தெடுக்கப்படுகிறது.
இதை நான் 15 ஆண்டுகள் முன்பே படித்திருந்தால் நான் பட்ட மனவதைக்கு மருந்தாக இருந்திருக்கும். என் உள்ளே இருந்த பழைமைவாதியும் அப்போதே அழிந்திருப்பான். 20 வருடங்கள் முன்பு படித்திருந்தால் உண்மையான சுதந்திரப் பாதையில் இருந்திருப்பேன்.
user_11601
★ 4/5 Feb 02, 20261989இல் அதுவும் தன் முதல் நாவலாக சாரு நிவேதிதா இப்படி ஒரு எழுத்தைப் பதித்திருப்பது வியப்பளிக்கிறது. இந்த நாவல் நான்லீனியர் வடிவத்தில் இருந்தாலும், அதைச் சற்று விளக்கும் அடிப்படையில் நாவலின் இறுதியில் 30 பக்கங்கள் இடம்பெற்றிருப்பது சிறப்புக்குரியது. எந்த இடத்திலும் ஒரு தனிப்பட்ட கருத்தை முன்வைக்காமல் வெறுமனே கேள்விகள் அல்லது விவாதங்களை எழுப்பி நம்மைச் சிந்தனைத் தேடலில் திளைக்க வைக்கிறது.
எது விலக்கப்பட்டிருக்கிறதோ அதுவும் இயல்பாகப் பேசப்பட வேண்டும் என்பதை உரக்கச் சொல்கிறது. சமூகத்தில் ஒரு அடையாளம் பதித்திருக்கும் மனிதர்கள் தனிப்பட்ட வாழ்வில் மாறுபட்ட அடையாளத்துடன் இருக்கும் சகஜத்தைப் பெரிதும் பேசியுள்ளது.
மனித வாழ்வில் சுற்றமும், சூழலும், பழகும் மனிதர்களும் நம் எதிர்காலத்தைப் பெரிதும் தீர்மானிக்கிறார்கள் என்பதை வாழ்வியல் அபத்தங்களின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது. அழகியல், அறவியல், அதிகாரம் ஆகிய மூன்றும் அன்றாட நிகழ்வுகளில் வகிக்கும் முக்கியத்துவம் பற்றி வெவ்வேறு கோணங்களில் பேசியுள்ளது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் எக்ஸிஸ்டென்சியலிசம் என்ற தத்துவம் பொருந்துமா என்ற விவாதத்தையும் எழுப்பியுள்ளது.
user_11600
★ 3/5 Feb 02, 2026இந்தச் சிறிய நாவல் வெளிவந்து மூன்று தசாப்தங்கள் கடந்திருந்தாலும், அது இன்னமும் தமிழ் வாசிப்பின் நடை, மொழி, எதிர்பார்ப்புகளைச் சவாலிடும் முக்கியமான படைப்பாகத் திகழ்கிறது.
இந்த நாவல் ஒருபுறம் கொண்டாடப்படுவதற்கும் மற்றொருபுறம் சகித்துக்கொள்ள முடியாததாகப் புரியப்படுவதற்கும் காரணம், அது தமிழ் புனைகதை மொழியை முற்றாகச் சிதைத்து, புதிய கதை சொல்லல் நடைமுறையை உருவாக்கியதிலேயே உள்ளது. பின்நவீனத்துவ மனோபாவத்துடன் எழுதப்பட்ட முதல் முக்கிய தமிழ் நாவல்களில் ஒன்றாக இதைச் சுட்டிக்காட்டலாம்.
இங்கு கதை என்பது நேராகச் செல்லும் தொடர்ச்சி அல்ல; அனுபவத்தின் பிளவுகள், மனச் சிதைவுகள், சிந்தனையின் சீரற்ற அலைச்சல்கள் ஆகியவற்றின் வழியே உடல் மொழிபோன்ற கதையாக்கம் உருவாகிறது. வாசகருக்கு ஏற்படும் அசௌகரியத்தில்தான் இந்த நாவலின் முக்கிய அரசியல் அமைந்துள்ளது. ஏனெனில் அது ஒத்திசைவைப் பெறுவதற்காக எழுதப்படவில்லை; மாறாக, எதிர்ப்பின் வழியே வாசிப்பை உருவாக்குவதற்காகவே கட்டமைக்கப்பட்டுள்ளது.