Reviews for துப்பட்டா போடுங்க தோழி

25 reviews total

user_11144

★ 5/5 Feb 02, 2026

பெண் சமுதாயத்தை முன்னிறுத்த முயற்சி செய்யும் புத்தகங்களில் முதன்மையான புத்தகம் தான் இது.

துப்பட்டா போடுங்க தோழி, யாருங்க இந்தக் குடும்பப் பெண், கற்பை நொடிக்கு நொடி நிரூபிக்க வேண்டுமாம், உன் சம்பாத்தியம் உன் உரிமை, கல்யாணம்தான் பெண்ணுக்கு எல்லாமுமா, தாய்மைதான் பெண்ணின் அடையாளமா, வாகனம் பழகு பெண்ணே — போன்ற முப்பது தலைப்புகளின் மூலமாக நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார் கீதா இளங்கோவன்.

பெண் சமுதாயம் முன்னேறுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எல்லாவற்றையும் முட்டி மோதி வெல்ல இப்புத்தகம் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. பெண்ணின் கண்களின் மூலம் பெண்ணின் கலங்கிய உலகத்தைப் பார்க்கும் வாய்ப்பு இப்புத்தகம் அளிக்கிறது.

"பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதல்ல... ஆணாதிக்கச் சிந்தனைக்கு எதிரானது" — கீதா இளங்கோவன்

user_11143

★ 5/5 Feb 02, 2026

மொத்தம் 30 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் உரிமைகளும் ஆசைகளும் கனவுகளும் எப்படி காணாமல் போகின்றன என ஆசிரியர் சொல்லும் விதம் அருமை.

பெண்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சின்ன சின்ன பிரச்சினைகள் தான் — இதெல்லாம் ஒரு விஷயமா என்று நினைத்திருப்போம், ஆனால் அது எல்லாமே இந்த சமூகக் கட்டமைப்பினால் நமக்கு நாமே போட்டுக்கொண்ட கட்டுப்பாடு.

தன்னுடைய உடல் மீது பெண்களுக்கு எப்போதும் இருக்கும் சுய உணர்வு, குடும்பப் பெண் இப்படித்தான் இருக்கணும் என்ற நிபந்தனை, திருமணத்திற்குப் பிறகு பெண் வேலைக்கு போனாலும் குறை போகாவிட்டாலும் குறை — இன்னும் பல விஷயங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

எளிமையான நடையில் நேர்த்தியாகவும் எல்லாருக்கும் புரியும் மாதிரி அழகாகவும் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் சிறியதாகவும் கச்சிதமாகவும் உள்ளது. தொடக்க நிலை வாசகர்களுக்கும் ஏற்றது.

user_11142

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தில் மொத்தம் 30 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் கற்பனையோ, அதிகம் பூசி மொழுகப்பட்ட வர்ணனைகளோ இல்லாமல் ஆணாதிக்க பொதுப்புத்தி ஒரு பெண்ணை எந்த மாதிரி எல்லாம் அடக்கி ஆள்கிறது என்பதை நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் உறுதியான கருத்துகளை பதிவு செய்துள்ளது.

ஒரு பெண் பிறந்தது முதல் இறக்கும் வரை அவளை இந்த சமுதாயம் எப்படி நடத்துகிறது. சுடிதார்களில் ஏன் பாக்கெட் வைப்பதில்லை, ஒரு நல்ல குடும்பப் பெண்ணை தேடுகிற சமுதாயம் ஏன் ஒரு நல்ல குடும்ப ஆணை தேடுவதில்லை போன்ற பல கேள்விகளை ஆழமாய் பதிவு செய்கிறது.

பிரச்சினைகளை மட்டும் பேசாமல் அதற்கான தீர்வுகளையும் பேசுகிறது. கற்பு, சுயப்பரிவு, நட்பு, பயணம், வேலை, சம்பாத்தியம், பாலியல் கல்வி, குடும்ப கட்டுப்பாடு போன்ற பல தலைப்புகள் அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் மிகவும் எளிமையாக பேசப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகம் பெண்களை பற்றிய புத்தகமாக இருந்தாலும், ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமான புத்தகம்.

user_11141

★ 5/5 Feb 02, 2026

விடுதலை வேண்டும் என்ற ஆசை தோன்ற அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம் என்ற விழிப்புணர்வு தேவை. அந்த விழிப்புணர்வு வராமல் பெண்களைப் பார்த்துக் கொள்ள எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என எழுத்தாளர் துல்லியமாக விவரிக்கிறார்.

பாதுகாப்பு, பாசம், பொறுப்பு, பாராட்டு என ஆண்கள் விரிக்கும் பல விதமான பட்டு கம்பளங்களின் மீது நடந்தபடி வாழ்க்கையைக் கடந்து செல்வது தான் பெண்களின் பிறவிப்பயன் என்ற கருத்தை வளர்த்து வரும் இந்த ஆணாதிக்க சமூகம் ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது என சான்றுரைக்கிறார்.

தனது ஆடையைத் தேர்வு செய்வது முதல் தனது ஊதியத்தை நிர்வாகம் செய்வது வரை அனைத்திலும் பெண்கள் தற்சார்பு உடையவர்களாக திகழ வேண்டும் என ஊக்கப்படுத்துகிறார்.

திருமணம், தாய்மை, குடும்ப கட்டுப்பாடு, உருவ கேலி, ஆடைகள் பற்றிய விமர்சனம் போன்ற பல பரிமாணங்களில் பெண்களுக்கு தங்கள் உடல் மீதான அடிப்படை உரிமைகளே எப்படி மீறப்படுகின்றன என்பதை திறம்பட எடுத்துக் காட்டுகிறார்.

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல என்றும், பெண்களும் ஆண்களுக்கு நிகரான இயல்பான மகிழ்வான வாழ்க்கையை வாழ வேண்டும் என பேரன்போடு வலியுறுத்துகிறார்.

user_11140

★ 5/5 Feb 02, 2026

"துப்பட்டா போடுங்கள் தோழி" என்ற சொற்றொடரை நிறைய முகநூல் பதிவுகளில் பார்த்திருப்போம். அத்தகைய சொல்லாடல்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய ஆணாதிக்க சிந்தனைகளை நாம் பெரிதாய் கண்டுகொள்வதில்லை.

தன் சாதியை, மதத்தை, அதன் பெருமைகளைப் பறைசாற்றிக்கொள்ளக் கிடைத்த ஒரு கருவியாகவே பெண்ணும் பெண்ணைச் சுற்றிய இயக்கங்களும் நடைபெறுகின்றன. மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாகப் பல பங்கு வகிக்கும் பெண்ணுடைய சொந்த உடல் மீதும் உரிமை மீதும் அவளுக்கே உரிமை இல்லாமல் செய்துவிடுகிறது இந்த சமுதாயத்தின் கற்பிதங்கள்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் தாய் வழிச் சமுதாயமாக இருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. விவசாய முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நிலம், உடைமை எனச் சுருக்கப்பட ஆரம்பித்த காலங்களில் பெண்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு அவள் ஓரிடத்தில் அடைக்கப்படுகிறாள்.

பெண் மென்மையானவள் என்ற கற்பிதத்தினால் சில செயல்கள் முடக்கப்படுகின்றன. ஆனால் பளு தூக்குதல், பாக்ஸிங், மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் போன்ற கடினமான விளையாட்டுகளில் பெண்கள் வெற்றி பெறுகிறார்கள் — இதுபோன்ற எளிமையான கேள்விகளினால் நம்மைச் சிந்திக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.

user_11139

★ 5/5 Feb 02, 2026

என் துப்பட்டாவை நான் பார்த்துக் கொள்கிறேன்.. உங்கள் பார்வையை நீங்கள் தாழ்த்திக்கொள்ளுங்கள்! பெண்களின் உடையை விமர்சிப்பதை விட, ஆண்களின் பார்வையை மாற்றுவதுதான் தேவை என்ற வலுவான செய்தியை ஒரே வரியில் சொல்லும் புத்தகம்.

user_11138

★ 4/5 Feb 02, 2026

பெண்கள் வாழ்க்கையின் பல்வேறு தளங்களில் சந்திக்கும் சவால்களைப் பற்றி பேசும் நல்ல புத்தகம். ஆண் ஆதிக்க சமூகம் திணிக்கும் நிபந்தனைகளால் ஏற்படும் பிரச்சினைகளை அலசுகிறது.

புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட பல விஷயங்கள் இன்றும் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கின்றன. அதே சமயம், எழுத்தாளர் வெளிப்படுத்திய அனைத்து கருத்துகளையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில இடங்களில் ஒரே மாதிரியான தொனியில் இருந்தது.

ஒட்டுமொத்தமாக, பெண்கள் கடந்து வரும் கஷ்டங்களை புரிந்துகொள்ள நல்ல கண்ணோட்டத்தை தரும் படைப்பு.

user_11137

★ 5/5 Feb 02, 2026

தோழி கீதா இளங்கோவனின் இந்தப் புத்தகம் பெண்கள் தினம் சந்திக்கும் நெருடல்கள், சமுதாய கட்டமைப்பு, நம்மை அறியாமலும் அறிந்தும் அன்பு, காதல், கல்யாணம், தாய்மை என்று எப்படியெல்லாம் ஒரு பெண்ணை முழுநேர பிணைக்கைதிகளாக வைத்திருக்கிறோம் என்ற 126 பக்க கட்டுரைகள்.

ஒவ்வொரு பகுதியும் பெண்களின் உரிமை, சுதந்திரம், தற்சார்பு குறித்து மிகத் தெளிவாக விவரித்திருக்கிறார்.

"வாசக்டமி" குறித்த கட்டுரை நிறைய கேள்விகளை எழுப்பியது. பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கேள்விப்பட்ட வார்த்தைகள் ஏன் நம் சமூக வாழ்வில் யாரும் கடைபிடிக்கவில்லை என்ற கேள்வி எழுப்பியது.

இந்தப் புத்தகம் நிறைய கேள்விகளும் நிறைய பதில்களும் தந்தது. ஒரு பெண்ணின் நிஜ தேவைகள் என்ன, பெண்ணை குறித்து நம் தவறான புரிதல்களை இந்தப் புத்தகம் தெளிவு செய்கிறது.

user_11136

★ 5/5 Feb 02, 2026

பெண்ணியம் பற்றிய புரிதல் இன்று இருப்பது போல் 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததா என்றால் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் இன்னும் உணர வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன என்று இந்தப் புத்தகம் தெளிவுபடுத்தியது.

பெண் குழந்தைகள் வீட்டில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதில் தொடங்கி, திருமணமான பெண்கள் தனக்கென நேரம் ஒதுக்கி உல்லாச பயணம் செல்ல வேண்டும் என்பது வரை அனைத்தையும் அலசி ஆராய்கிறார் நூலாசிரியர்.

கற்பு என்பது இந்த ஆணாதிக்க சமுதாயம் பெண்களைச் சிறை செய்ய உருவாக்கிய ஆயுதம் என்று தெளிவுபடுத்திய அத்தியாயங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை. இந்த சமுதாய கட்டமைப்பை உருவாக்கி, அதை பெண்கள் கடைபிடிக்கச் செய்ததும், அதற்கு பெண்களையே காவலர்களாக நியமித்துவிட்டு "பெண்ணுக்கு பெண் தான் எதிரி" என்று நம்பச் செய்ததுதான் ஆணாதிக்கத்தின் வெற்றி.

படித்து, வேலை பார்க்கும் பெண்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. இந்தக் குற்ற உணர்வு தேவையற்றது என்று விளக்கும் அத்தியாயம் மனதிற்கு ஆறுதல் அளித்தது. அனைத்து வயதினரும், அனைத்துப் பாலினத்தவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

user_11135

★ 4/5 Feb 02, 2026

அருமையான புத்தகம். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆண்கள் சமூகம் பெண்களை வீட்டில் அடக்கி விட வேண்டும் என்று எப்படிச் சிந்திக்கிறது, அதற்கான யுக்திகளை எவ்வாறு கையாளுகிறது என்பதற்கான கையேடு.

30 கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு தொடங்கி குடும்பப் பெண், வேலைக்கு போவது, உடற்பயிற்சி, வாகனம் ஓட்டுவது, நண்பர்கள், தாய்மை, பயணம், உரையாடல்கள், காதல், சுயபரிவு, குடும்ப கட்டுப்பாடு, சம்பாத்தியம் வரை தெளிவான விளக்கம்.