Reviews for சூல்

28 reviews total

user_10653

★ 4/5 Feb 02, 2026

2016 ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்ற சூல் நாவல், கோபல்ல கிராமம், ஆதிமங்களத்து விஷேசங்கள் போன்ற படைப்புகளை நினைவூட்டுகிறது.

உருளைக்குடி கிராமத்தின் மனிதர்களையும் அவர்களின் நம்பிக்கை மற்றும் வாழ்க்கை முறைகளையும் பதிவு செய்துள்ளார் சோ.தர்மன். முத்துவீரன் என்ற கதாபாத்திரத்தின் இரட்டை அர்த்த உரையாடல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

சூல் என்ற தலைப்பு பெண்ணின் பெருமை பற்றியது என்று நினைத்தேன், ஆனால் நீர் நிறைந்த கண்மாயை சூல் என்று நிறுவுகிறார் ஆசிரியர். கடவுள் மறுப்பு, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை மறைமுகமாகப் பகடி செய்கிறார். தவறவிடக்கூடாத முக்கியமான நாவல்!

user_10652

★ 5/5 Feb 02, 2026

சூல் — உருளைக்குடி கிராமத்தின் வாழ்வியலை முன்வைத்து எழுதப்பெற்ற புனைவு. சோ.தர்மன் சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்திய கிராமத்தை அதன் இயல்பு மாறாமல் பல களப்பணிக்குப் பின் வெளிப்படுத்தியுள்ளார். கண்மாயை நிறைசூலியாகச் சித்தரித்து கதை நகர்கிறது.

சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் மக்களின் வாழ்வியல் எவ்வாறு மாறுபடுகிறது என்பதன் புனைவுக் காவியம். கண்மாய் வேளாண்மைக்கு மட்டுமல்லாமல் பல உயிரினங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது.

பனை மரங்களின் தன்மை, தூக்கணாங்குருவி அறிவிக்கும் மழைவரவு, அய்யனார் கோவில்களின் பின்னணிக் கதைகள், கொப்புளாயியின் மெய்சிலிர்க்க வைக்கும் கதை — அனைத்தும் அற்புதம்.

ஆங்கிலேயர்களின் மதமாற்றம், சீமைக் கருவேலம், ஜிலேபி கெண்டை மீன் அறிமுகம் — இவை கிராமத்தின் அழிவை துல்லியமாகக் காட்டுகின்றன.

user_10651

★ 5/5 Feb 02, 2026

நாவல் உருவான கதையைப் படித்ததும் விவசாயம் சார்ந்த நுணுக்கங்களின் நாவல் என்று நினைத்தேன். ஆனால் சோ.தர்மன் உருளைக்குடி மக்களின் 200 ஆண்டு வாழ்வியலை நம் முன் கொண்டுவந்திருக்கிறார்.

குளத்தின் முக்கியத்துவம் — மனிதர்கள், பறவைகள், மீன்கள், கால்நடைகள், பயிர்கள் அனைத்தும் குளத்தை நம்பி இருப்பதும், ஊரே ஒன்றுகூடி தூர்வாரி சுத்தம் செய்து ஒற்றுமையாக வாழ்ந்த அழகும் கண்முன் காட்டுகிறார்.

சுதந்திரத்திற்குப் பின் அரசின் தலையீட்டால் எல்லாம் சீரழிந்த கதை வேதனையளிக்கிறது. சக மனிதர்களிடம் காட்டும் அக்கறை, கால்நடைகளிடமும் இயற்கையிடமும் காட்டும் பாசம் — இந்த வாழ்வுமுறை இப்போது இல்லை என்று ஏங்க வைக்கிறது.

நீர்ப்பாய்ச்சி, கொப்புளாயி, குப்பாண்டி போன்ற கதாபாத்திரங்கள் மனதை விட்டு நீங்காமல் நிலைத்திருப்பார்கள்.

user_10650

★ 4/5 Feb 02, 2026

இப்புதினத்தின் வாயிலாகவே தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு கிராமத்திற்குச் செல்லலாம். நுழையும் காலம் மன்னராட்சி, வெளியேறும் காலம் மக்களாட்சி — ஆனால் உங்கள் வயது கூடியிருக்காது!

இயற்கையோடு கலந்த வாழ்வே கதையின் அச்சாணி. மாடப்புறா ஏன் தாழ்வான இடத்தில் கூடு கட்டுகிறது? தூக்கணாங்குருவி ஏன் ஆண் பனையில் கூடு கட்டுகிறது? இம்மாதிரியான கேள்விகளுக்கு நகர வாழ்வில் விடை தெரிய வாய்ப்பில்லை.

கிராமக் கதைக்களத்தில் கொச்சை வார்த்தைகளும், இரட்டை அர்த்தங்களும் இயல்பாக வருகின்றன. சாதி சில இடங்களில் பிரிவுகளாகவும் சில இடங்களில் பிரிவினைகளாகவும் காட்டப்படுகிறது.

கடைசி அத்தியாயம் வரை புதிய கதாபாத்திரங்கள் வந்தாலும், கூட்டமான கிராமத்தின் மத்தியில் இருப்பது போன்ற உணர்வால் சலிப்பு ஏற்படவில்லை. நாட்டுப்புறவியல் ஆர்வலர்கள், மண் சார்ந்த இலக்கிய ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

user_10649

★ 3/5 Feb 02, 2026

எட்டயபுர சமஸ்தானத்திற்கு உட்பட்ட உருளைக்குடி கிராமத்தின் கண்மாய், அதைச் சுற்றி வாழும் கரிசல் மண் மக்களின் வாழ்வையும் அறத்தையும் நூறாண்டுகளுக்கு முன் தொடங்கி சுதந்திரத்திற்குப் பின் வரையிலான ஆவணம்தான் சூல்.

தூக்கணாங்குருவி கூடு கட்டும் உயரத்தை வைத்து மழை அளவைக் கணிப்பது, நாட்டார் தெய்வங்களின் உருவாக்கம், கொப்புளாயி-நீர்ப்பாய்ச்சி-குப்பாண்டி சாமி என மறக்க முடியாத மனிதர்கள் — 400 பக்கங்கள் சுவாரஸ்யமாக நகர்கின்றன.

ஆனால் கடைசி 100 பக்கங்கள் ஏமாற்றம். ஆசிரியர் தன் சுய அரசியல் விருப்பு வெறுப்புகளையும், பிற்போக்கான கருத்துகளையும் திணித்திருப்பது நெருடலாக இருக்கிறது. குலத்தொழிலை ஆதரிப்பதும், மக்களாட்சியை விமர்சிப்பதும், மதமாற்றத்தை தீவிரமாக எதிர்ப்பதும் சர்ச்சைக்குரியவை.

இருப்பினும் சோ.தர்மனின் எழுத்துநடைக்காகவும், கரிசல் மண் சார்ந்த நாட்டார் கதைகளுக்காகவும் அவரது படைப்புகளைக் கட்டாயம் படிக்க வேண்டும் என ஆவலைத் தூண்டிய நாவல் சூல்.

user_10648

★ 1/5 Feb 02, 2026

அரசியல் சாயல் கொண்ட ஓர் குப்பைக் கதை. ஆசிரியரின் சொந்த அரசியல் சார்புகள் கதையில் வெளிப்படையாகத் தெரிகின்றன, இது நாவலின் தரத்தைக் குறைக்கிறது.

user_10647

★ 4/5 Feb 02, 2026

சுதந்திரம் அடைந்த பின்னர், சில அரசியல் தலைவர்களின் தன்னலத்தால் நாம் இழந்த பெரும் வரங்கள் எவ்வளவு என்பதை சூல் வாசித்த பிறகுதான் தெரிந்து உணர்ந்தேன். கண்மாய், இயற்கை வளங்கள், பாரம்பரிய விவசாய முறைகள் எல்லாம் எப்படி அழிக்கப்பட்டன என்பதை நெஞ்சை உலுக்கும் வகையில் சோ.தர்மன் பதிவு செய்திருக்கிறார்.

user_10646

★ 5/5 Feb 02, 2026

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வரிகளை நினைவூட்டும் நாவல் இது. சூல் புதினம் கண்மாயின் முக்கியத்துவத்தையும், நீர் மேலாண்மையில் நம் முன்னோர்களின் ஆழமான அறிவையும் அழகாக எடுத்துரைக்கிறது. படித்து முடித்தபின் இயற்கையை நாம் எவ்வளவு புறக்கணித்துள்ளோம் என்ற உணர்வு மேலிடுகிறது.

user_10645

★ 5/5 Feb 02, 2026

சோ.தர்மன் எழுதிய சூல், என் சந்ததியினருக்கு வழங்கப்பட்ட மகத்துவமான சரித்திரப் படைப்பு. புனைவு இலக்கியமாக இருந்தாலும், இயற்கைத்தாயை மட்டுமே சார்ந்து வாழும் உருளைக்குடி மக்களின் வாழ்க்கை கதை.

நாவலில் 297 கதாபாத்திரங்கள், 53 பெண் கதாநாயகிகள். குறிப்பாக கொப்புளாயி மனதைக் கவர்ந்தவள். கரிசல் காட்டுப் பேச்சு வழக்கில் எழுதப்பட்ட இந்நாவல் பல்வகை உணர்ச்சிகளை எழுப்புகிறது.

சூலி என்றால் உயிர்க்கொடுக்கும் தாய். கண்மாயின் நீர் ஏற்றத்தாழ்வுகளை நன்கு புரிந்து, விவசாயத்தையும் வாழ்வையும் சாமர்த்தியமாகப் பராமரித்த முன்னோர்களின் அறிவு வியப்புக்குரியது. தூக்கணாங்குருவி கூடு கட்டும் திசையால் பருவமழையைக் கணிக்கும் நுட்பம் அற்புதம்.

பழங்குடி மக்கள் இயற்கையைப் பேணிக் காத்தனர். நாம் செய்த அட்டகாசங்கள் மீட்க முடியாத நீர்ப்பிரச்சினையை உருவாக்கியுள்ளன. சோ.தர்மன் அனுபவப்பூர்வமாக எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.

user_10644

★ 5/5 Feb 02, 2026

சூல் — உருளைக்குடி என்ற கிராமத்தின் கதை. கண்மாயைச் சார்ந்து வாழும் மக்களின் அன்றாட வாழ்வைப் பேசிக்கொண்டே நம் நாட்டின் கலாச்சாரங்களை விவரிக்கிறது.

18-ம் நூற்றாண்டிலிருந்து 1960 வரையிலான கிராமிய மாற்றங்களை புனைவு வடிவில் காட்டுகிறது. கிராமங்களில் காணப்படும் தனித்துவமான தெய்வங்கள் எவ்வாறு உருவானவை என்பதை விளக்குகிறது.

கிராமத்தின் பொருளாதாரத்தை ஆங்கிலேயர்கள் எவ்வாறு அழித்தார்கள் என்பதோடு நாவல் முடிகிறது. படித்த பிறகு நீண்ட நேரம் சிந்திக்க வைக்கும் புத்தகம். சாகித்ய அகாடமி விருது பெற்றதில் ஆச்சரியமில்லை.