Reviews for பொய்த்தேவு
28 reviews total
user_7494
★ 5/5 Feb 02, 20261946ல் இலக்கியத்தரத்தில் எழுதப்பட்ட க.நா.சு வின் இப்புதினம் சோமு என்கிற மனிதனின் பிறப்பு, சோமு முதலியாராக வாழ்வது மற்றும் சோமுப் பண்டாரமாக இறப்பது என அத்தியாயங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
க.நா.சு வின் மொழிபெயர்ப்புகளைப் படித்தபோது அவரின் எழுத்துக்களை வாசிக்க விருப்பம் ஏற்பட்டது. பொய்த்தேவு அதை 100 சதவீதம் பூர்த்திச்செய்துள்ளது. இலக்கிய விரும்பிகள் வாசிக்க வேண்டிய தமிழின் முக்கியப் படைப்பு இது.
குறிப்பு: சி.சு.செல்லப்பாவின் விமர்சன ஆய்வும் மிக அருமை. நான் நினைத்ததையும் நினைக்காததையும் அருமையான விமர்சனம் எழுதியுள்ளார்.
user_7493
★ 3/5 Feb 02, 2026தேவுகள் எல்லாமே பொய்தானே என்ற எண்ணத்தை எழுப்பும் நாவல் :) வாழ்வில் நாம் தெய்வமாக நம்பும் அனைத்தும் இறுதியில் பொய்யாகிவிடுகின்றன என்ற தத்துவத்தை எளிமையாக உணர்த்துகிறது.
user_7492
★ 5/5 Feb 02, 2026சோமுப்பயல் சோமுபண்டாரமாகும் வரையான பயணம். உண்மையிலேயே ஒரு மனிதனின் முழு வாழ்நாளோடு நாம் பயணித்த அனுபவம். கீழிருப்பவன் குட்டப்படுவதும், அவன் வளர்ச்சியின் முடிவில் மேல்தட்டுக்கு ஏற்படும் பயமும் சமூகத்தின் அத்தனை அடுக்குகளையும் வரையறுத்து தோலுரித்து காட்டுகிறது.
வளர்ச்சி என்பது சுற்றுப்புறம் சார்ந்ததல்ல, அது உன் மேல் நீ காட்டும் அக்கறை மற்றும் உன் அனுபவத்தை நீ எவ்வளவு தூரம் உணர்ந்திருக்கிறாய் என்பதாகும். இதை நான் ஒரு பாடமாகவே படித்தேன். புத்தகத்தின் வரையறைகளை அத்தனை ஆண்டுகளுக்கு முன்பே முறியடித்திருக்கிறார் க.நா.சு.
user_7491
★ 5/5 Feb 02, 2026மிகச்சிறந்த நாவல். வாசித்து முடித்த அடுத்த ஒரு மணி நேரம் வேறு ஏதும் செய்யவிடாமல் ஒரு நிறைவைத் தந்த நாவல்.
பொய்த் தேவு - பொய் கடவுள் அல்லது பொய்ப் பற்று / உலகப் பற்று.
சோமுவிலிருந்து சோமசுந்தர முதலி என்றாகி பின்னர் பண்டாரம் ஆகும் ஒருவரின் முழு வாழ்க்கைச் சித்திரத்தைத் தரக்கூடிய நாவல். தேடலும் சுவாரஸ்யமும் நிரம்பிய நாவல், வாசிப்பு இன்பம் குறையாமல் வாசித்து முடித்த நிறைவையும் திருப்தியையும் தரக்கூடியதாக இருக்கிறது.
தந்தையைப் போல வரக்கூடாது என்றிருக்கும் மகன், தாயின் வழிநடத்துதலில் வளர்ந்தும், இறுதியில் தந்தையைப் போலவே கீழ் குணங்களில் மாறுதல்.
சில பரிணாமங்கள்: தந்தை போல் இல்லாதிருத்தல் vs தந்தையாகவே மாறுதல்; இளமையில் வறுமையும் தேடலும்; சேர்ப்பதில் உள்ள நிறைவின்மையும் விடுவதில் இருக்கும் நிறைவும்.
எல்லாம் ஒன்றென இருக்கும் வேதாந்த தத்துவம் - ஒவ்வொரு நொடிக்கும் ஒரு கடவுள் என்று இருக்கும் சோமசுந்தர முதலி கும்பகோணத்திற்கு மேற்காக இருந்த சாத்தனூரில் பிறந்து கிழக்காக இருக்கும் சாத்தனூரில் இறப்பது கவித்துவம்.
ஓடிக்கொண்டே இருக்கும் ஒருவன் எதோ ஒரு தருணத்தில் இளைப்பாற ஒரு சிறு பொழுது நிற்க, அந்தப் பொழுதே தான் சேர்த்துவைத்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு திசையில் நடக்கத் தொடங்கிய கதை.
user_7490
★ 4/5 Feb 02, 2026இந்த அற்புதமான, நகைச்சுவையான, தத்துவார்த்தமான, சுவாரஸ்யமான, புத்திசாலித்தனமான, திருப்திகரமான மற்றும் புதுமையான கதைக்கு நான்கு நட்சத்திரங்கள்! 1946ல் வெளியிடப்பட்ட இது, தமிழில் எழுதப்பட்ட முதல் முறையான நவீன நாவல் என்றும் சொல்லப்படுகிறது. நாவல் வடிவத்திற்கு இதைவிட சிறந்த தொடக்கம் இருக்க முடியாது!
user_7489
★ 4/5 Feb 02, 2026ஆசிரியரின் எழுத்து நடை மிகவும் தனித்துவமானது! ஒவ்வொரு இடத்தையும், மனிதர்களையும் மிக விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் விவரித்திருக்கிறார். ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும், சில இடங்களில் விவரணைகள் கதையின் ஓட்டத்தில் குறுக்கிடுவது சற்று எரிச்சலூட்டுகிறது.
இந்த நாவல் சமூகத்தின் கீழ்நிலையில் பிறந்த சோமசுந்தரம் என்ற மனிதன் தன் கிராமத்தில் முக்கிய பிரமுகராக உயர்வதைப் பற்றிய கதை. பெரும்பாலான கதை சோமசுந்தரத்தின் பார்வையிலும் அவனது ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதத்திலும் நகர்கிறது.
மொத்தத்தில் திருப்திகரமான வாசிப்பு அனுபவம். தமிழ் புத்தகங்கள் படிக்கும் நண்பர்களுக்கு இந்த ஆசிரியரின் எழுத்தை ஒரு முறையாவது படிக்க பரிந்துரைக்கிறேன்.
user_7488
★ 4/5 Feb 02, 2026சோமு என்கிற சிறுவன் சோமு முதலியார் என்கிற மிகப் பெரிய தொழிலதிபராக உருவாகி பின் சோமு பண்டாரமாக இறக்கும் கதைதான் பொய்த்தேவு.
பொய்த்தேவு அதாவது பொய் தெய்வம். ரவுடியின் மகனாக அனைவராலும் வெறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட சோமு பணத்தை தெய்வமாக கருதுகிறான். ஆனால் உண்மையில் பணம் ஒரு தெய்வமில்லை, அது ஒரு பொய் தெய்வம் என்று இறுதியில் உணர்கிறான்.
தன் உழைப்பின் மூலமும் ஒருமித்த கவனத்தை தொழிலில் செலுத்தியும் இரு மளிகை கடைகள், பேருந்து, பெட்ரோல் பங்க், இன்சுரன்ஸ் ஏஜெண்டு, மாவட்ட நிர்வாகி, வியாபாரிகள் சங்க தலைமை பொறுப்பு என முக்கிய பிரமுகராக மாறி சோமு முதலியார் என மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்.
பின் தனது கீழ்மையான நடத்தையால் தடுமாறி, தன் ஒரே மகனை சரியாக வளர்க்காமல், சிறுவனாக இருக்கும்போது தனது தந்தையால் பெற்ற அவப்பெயரை மீண்டும் தனது மகனால் பெற்று, சிறை சென்று திரும்பி, சொத்துக்களை தர்மத்திற்கு எழுதிவைத்துவிட்டு ஏதுமற்ற பண்டாரமாக இறக்கிறார்.
நல்ல எண்ணங்கள் ஒருவரை எவ்வாறு உயர்த்தும், தீமையான எண்ணங்கள் எவ்வாறு வீழ்த்தும், தெய்வம் என்பது ஒன்றல்ல ஒவ்வொரு வினாடியும் நமக்கு தோன்றும் எண்ணங்களும் தெய்வங்கள்தான் என்பதை உணர்த்துகிறது இந்த பொய்த்தேவு.
user_7487
★ 5/5 Feb 02, 2026நீண்ட நாட்களுக்குப்பிறகு 250 பக்கத்தை ஒரே மூச்சில் படித்தேன். எளிமையான நாவல். எளிமை என்பது கதை ஒரே நேர்க்கோட்டில் நகர்வதாலும், படிப்பதற்கு எளிமையாதலாலும் சொல்கிறேன். இதற்கு முன்பு கதையோடு ஒரு தொடர்பு ஏற்பட்டு விறுவிறுவென்று படித்தது ஜெயகாந்தனின் "ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்" புத்தகம்தான். அதற்குபின் க.நா.சுப்பிரமணியம் அவர்களின் இந்தப் புத்தகம். இது 1946ல் எழுதப்பட்ட ஒரு நாவல், காலச்சுவடு க்ளாசிக் வெளியீடாக வெளியிட்டிருக்கிறது.
கதைக்களம் மிகவும் எளிமையானது. ஊரை மிரட்டி ரவுடித்தனம் செய்து பணம் சம்பாதிக்கும் கருப்பு, ஊர் வம்புக்காரி வள்ளியம்மை. சோமு என்கிற குழந்தை. சோமு தன் தந்தையின் போக்கால் ஏற்பட்ட கலங்கத்தை தன் கனவுகளாலும் செயல்களாலும் விலக்கி, சோமசுந்தர முதலியாராகி, ஊரில் முக்கியப் பிரமுகராகி, பின்னர் சோமுப்பண்டாரமாய் இறந்ததைப் பற்றிய ஒரு நேர்த்தியான வரலாறு.
மனிதனுக்கு கடவுள் என்பவன் ஒன்றல்ல, உலகம் தோன்றியதில் இருந்து இப்போது வரைக்கும் ஒவ்வொரு நொடிக்கும் ஒரு கடவுள் உண்டு என்ற தத்துவார்த்த மனநிலையை அடையும் சோமுப்பண்டாரம், தன் வாழ்நாளில் பணம், புகழ், துரோகம், நன்றி, துறவு என்று வாழ்வின் எல்லா நிலையையும் அடையும் எதார்த்த வாழ்வைக் காட்டும் நாவல்.
கதையை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே உலகத்தோடு தொடர்பு அறுந்து சோமுவின் கதைக்குள் மூழ்கிவிடுவோம். கண்டிப்பாக படிக்கவேண்டிய நாவல். ❤