Reviews for பொய்த்தேவு

28 reviews total

user_7504

★ 4/5 Feb 02, 2026

மளிகை மெர்ச்சண்ட் சோமு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வீழ்ந்த கதைதான் பொய்த்தேவு. ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கதையின் நாயகன் வாழ்வில் முன்னேறி பல வெற்றிகளை அடைவதை விறுவிறுப்பாக சொல்கிறது இந்த நாவல்.

சோமுவின் ஏழ்மை பின்புலத்தை விரிவாகப் பேசிய பின் அவனுடைய முன்னேற்றத்தையும், அந்த முன்னேற்றத்தினால் அவன் பாதை மாறியதையும், வயோதிகத்தில் புறவாழ்விலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதையுமே இந்த நாவல் சொல்கிறது.

சமூக பின்னணியுடன் சோமுவின் வளர்ச்சியையும் வாழ்க்கையையும் விளக்கிய விதத்தில் ஆசிரியர் தன் சரிதை தனித்துவமானது என்பதை நிரூபிக்கிறார். நாவலின் முடிவு மட்டும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதை விடுத்துப் பார்த்தால் நாயகனின் வாழ்க்கையை பூதக்கண்ணாடி போட்டு பார்த்த திருப்தியைத் தரும் நாவல் இது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்.

user_7503

★ 4/5 Feb 02, 2026

சாத்தனூரில் மேட்டுத்தெருவில் வசிக்கும் கறுப்ப முதலியைப் பார்த்தால் அந்த ஊரே பயப்படுகிறது. அவர்களுக்கு சோமசுந்தரம் என மகன் பிறக்கிறான்.

சிறு வயது முதலே பெற்றோரின் சண்டைகளைப் பார்த்து வளரும் சோமு, ரங்காராவ் வீட்டில் வேலைக்குச் சேர்கிறான். கண் நிறையக் கனவோடு படித்துப் பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசையோடு திரிகிறான். அங்கு நடக்கும் கொள்ளையில் அவர் வீட்டினரைக் காப்பாற்றி நல்ல பெயர் எடுக்கிறான்.

சாம்பமூர்த்தியின் உதவியுடன் மளிகைக் கடை வைக்கிறான். பணம் ஒன்றே தெய்வம் என வாழ்கிறான். நேர்மையாக உழைத்து பணம் சேர்க்கிறான்.

ஒருவகையில் பார்த்தால் இது அந்தக்கால Rocky Bhai கதை. உழைத்தால் நிச்சயம் முன்னேறலாம் எனும் நம்பிக்கை ஊட்டுவது. நல்ல மனிதர்களும் சமுதாயத்தில் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கையை இந்தக் கதை ஊட்டுகிறது.

எனினும் பணம் மட்டுமே தெய்வம் எனும் பொய்த்தெய்வ வழிபாடு என்றும் மன நிம்மதி எனும் மெய்த்தெய்வத்திடம் சேர்வதில்லை என்பதே நாவலின் தாத்பர்யம்.

user_7502

★ 4/5 Feb 02, 2026

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர் க.நா.சு. புதுமைப்பித்தன் காலத்தில் வாழ்ந்தவர். இவரது எழுத்தைப் படிக்க வேண்டும் என நீண்ட நாள் நினைத்துக்கொண்டிருந்தேன். கிண்டில் அன்லிமிட்டெடில் அவரது எழுத்துக்கள் கிடைத்தன.

இவரது படைப்புகளில் பொய்த்தேவு மிக முக்கியமானது. பல்வேறு எழுத்தாளர்களால் பாராட்டுப் பெற்ற நாவல். 1940களில் எழுதப்பட்ட இது ஒரே நேர்க்கோட்டில் செல்லக்கூடிய எளிய கதை வடிவம். ஆனால் கதை உண்டாக்கக்கூடிய பாதிப்பு அதிகம்.

தஞ்சை அருகில் சாத்தனூர் எனும் சிற்றூரில் ஒரு ரவுடி அப்பாவிற்கு பிறக்கும் பையன் சோமுதான் கதையின் நாயகன். சிறு வயதிலேயே அப்பாவை ஊர்ப்பகையால் இழக்கிறான். படிப்படியாக உழைத்து ஊரிலேயே பெரும் பணக்காரனாகிறான். 60-70 வயதுகளில் ஆடி ஓய்ந்தபோது தனது வாழ்வைத் திரும்பிப் பார்த்து ஒரு முடிவு எடுக்கிறார்.

க.நா.சு சோமுவின் இளமைப் பருவத்தை விரித்து நல்ல விவரணைகளோடு எழுதியிருந்தார். மொத்த சாத்தனூரும் நமது மனக்கண்ணில் விரிகிறது. அதன் பிறகு கதை வேகமெடுத்து சோமு சோமசுந்தர முதலி ஆவதும், வயதாவதும் வெகு வேகமாக நகர்கிறது. சோமுவின் சிறு வயது பருவத்தைப் போலவே மொத்த கதையும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் இது மிக மிக அருமையான நாவல்.

user_7501

★ 4/5 Feb 02, 2026

சாத்தனூரில் உள்ள மேட்டுத்தெருவில் பிறந்தவன் சோமு. சிறுவயதிலேயே ரங்க ராவிடம் வேலைக்குச் சேர்கிறான். கல்வியும் கிடைக்கிறது. பணத்தையே லட்சியமாகக் கொண்டு உழைக்க ஆரம்பிக்கிறான். வெற்றியும் கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் பணத்தை பொய்த்தேவு (பொய்த்தெய்வமாக) நினைத்து அவற்றைத் துறக்கிறான். இறுதியில் அலைந்து திரிந்து இறந்தும் போகிறான். இதுவே இப்புத்தகத்தின் மேலோட்டமான கதை.

பெரும்பாலும் அதிகப்படியான விவரிப்புகள் என்னைக் கவர்வது இல்லை. ஆனால் இப்புத்தகத்தில் அதற்கு நேர்மாறாக சில அத்தியாயங்கள் என்னை நாஸ்டால்ஜிக்காக உணர வைத்தன.

கோயிலை மையமாக வைத்து வெவ்வேறு ஆரங்களில் பல வட்டங்கள் வரையப்படுகின்றன. உள் வட்டங்களில் உயர்ந்த சாதி, கடைசி வட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் என ஊரின் அமைப்பை விளக்கியுள்ளார் ஒரு அத்தியாயத்தில்.

பணத்தைக் குறிக்கோளாக கொண்டு செயல்படுவது கூடாது என்பது போல கதையின் முடிவு இருக்கும். ஆனால் சாதிகளை வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளதால் தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள ஒருவன் அதிகப்படியான பணம் சம்பாதிப்பதில் என்ன பிரச்சனை என்று சில நேரங்களில் தோன்றுகிறது.

என்னைப் பொறுத்தவரை இடம்பெயர்தல்கள் இறுக்கமான சாதியப் படிநிலையினைக் கொஞ்சமாவது தளர்த்துகின்றன என்றே எண்ணுகிறேன்.

எளிய நடை. ஆங்காங்கே நகைச்சுவையான வரிகளும் தத்துவார்த்தமான கருத்துக்களும் இருந்தன. சாதிகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் இது ஒரு சிறந்த கதை.

user_7500

★ 5/5 Feb 02, 2026

ஒரு புத்தகம் எழுதிவிட்டு அந்த எழுத்தாளன் இறந்துபோகலாம், ஆனால் அந்த புத்தகம் திறக்கப்படும் ஒவ்வொரு முறையும் அவன் வாசகன் வழி உயிர்த்துவருகிறான். அப்படி 1947ல் வெளிவந்த பொய்த்தேவு மூலம் கா.நா.சு என் கண்முன் உயிர்தெழுந்தார்.

நம் அனைவரின் மனதிற்கும் ஒவ்வொரு கடவுள் உண்டு - உருவமற்ற கடவுள், அது மாறிக்கொண்டே இருக்கும். பணம், பதவி, புகழ், வெற்றி, போட்டி போன்ற எண்ணற்ற மனக்கடவுள்கள். ஆனால் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அது எந்த கடவுள் ஆனாலும் பொய்த்துப்போகும் - அதுதான் வாழ்க்கை.

தஞ்சாவூர் ஜில்லா சாத்தனூர் கிராமத்தில் மேட்டுத்தெருவில் ஊர் ரவுடியாக திரியும் கறுப்ப முதலியாருக்கும் வள்ளியம்மைக்கும் மகனாக பிறந்த சோமு, வளர்ந்து மளிகை மெர்ச்சண்ட் சோமசுந்தர முதலியாராக உயர்ந்து, இறுதியில் சோமு பண்டாரமாக வீழ்வதே இந்த கதை.

இந்த கதை சோமசுந்தரம் என்ற தனி மனிதனின் வாழ்க்கை பயணம் தாண்டி, அவரின் எண்ண ஓட்டங்கள், உள்ளுணர்வுகள், சிந்தனைகள் என உணர்வு ரீதியாக பயணப்பட்டதே இந்த நாவலை வேறு தளத்திற்கும் தரத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.

சோமசுந்தரம் சிந்திப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் தன் வியாபாரத்தில் வளர்ந்துகொண்டே இருக்கிறார். ஆனால் ஆசிரியர் நம்மை சிந்திக்க வைக்கிறார். இறுதியில் சோமசுந்தரம் சற்று நிதானித்து சிந்திக்கும் தருணம், அவர் தன் வாழ்க்கையின் விளிம்பில் நிற்கிறார்.

நான் இந்த நாவலை ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தா என்ற புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். இரண்டுமே ஒரே விதமான வாழ்க்கை பயணம் சென்று ஒரே இடத்தில் முற்றுபெறுகிறது. ஆனால் சித்தார்த்தாவில் தத்துவார்த்த ரீதியாக சொல்லப்பட்டதை இந்த நாவலில் கா.நா.சு எதார்த்தமாக, மனதுக்கு நெருக்கமாக எடுத்துரைக்கிறார்.

- இர. மௌலிதரன்.

user_7499

★ 3/5 Feb 02, 2026

1900களில் படைக்கப்பட்ட ஒரு KGF மாதிரியான கதைதான் பொய்த்தேவு. ரவுடி அப்பாவுக்கு பிறந்த சோமு, பணம்தான் எல்லாம் என்று நம்பி உழைத்து, மளிகை கடை, பேருந்து, இன்சூரன்ஸ் என்று ஒவ்வொரு தொழிலிலும் வெற்றி கண்டு, சோமசுந்தர முதலியார் என்று பெயர் வாங்குகிறார்.

பொய்த்தேவு = பொய்யான தெய்வம். பணம்தான் எல்லாம் என்று சுற்றிக்கொண்டிருக்கும் சோமு, பணம் ஒரு போலி தெய்வம் என்று உணர்ந்து, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம் கோயிலுக்கு எழுதிவைத்துவிட்டு இறக்கிறார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த சிறுவன், அப்பா அம்மா இருவரும் ஊர் ரவுடிகள் மாதிரி இருப்பவர்கள். சோமுவுக்கு 5 வயது இருக்கும்போதே அப்பா இறந்துவிடுகிறார். அம்மா அவனை ஊர் பெரியவரிடம் வேலைக்கு சேர்க்கிறாள். அங்குதான் பணத்தின் மதிப்பு புரிகிறது.

பல வருடங்கள் வேலை செய்த சோமுவுக்கு ஒரு மளிகை கடை வைத்துக் கொடுக்கிறார்கள். சோமு உழைத்து உழைத்து வளர்கிறார். மளிகைக் கடையில் நல்ல வருமானம், ஒரு கடை இரண்டு கடை ஆகிறது, பேருந்து வாங்குகிறார், இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஆகி மாவட்டத்துக்கே இன்சார்ஜ் ஆக உருவாகிறார்.

ஆனால் 50களில் மீண்டும் வாழ்க்கை தடம் மாறுகிறது. வியாபாரத்தில் தவறு செய்ததாக கேஸ் விழுந்து சிறைத் தண்டனை கிடைக்கிறது. அதற்கு முன்னால் சொத்தை எல்லாம் கோயிலுக்கும் வேண்டியவர்களுக்கும் கொடுத்துவிட்டு, வெளியே வந்து ஒன்றும் இல்லாத பண்டாரமாக இறக்கிறார்.

ஆரம்பத்தில் 40 பக்கம் வரை கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. ஆனால் சோமு வேலைக்கு சேர்ந்ததும் கதை நன்றாக போகிறது. நன்றி வணக்கம்.

user_7498

★ 5/5 Feb 02, 2026

கருப்ப முதலி அவர் மகன் சோமு பணம்தான் கடவுள் என்று வாழ்ந்து சோமசுந்தர முதலியார் ஆகி இறுதியில் என்ன ஆனார் என்றும், சோமுவின் எசமான் ரங்கா ராவ் அவர் மருமகன் சாம்பமூர்த்தி ராவ் கடவுளே கதி என்றும் உதவி என்று வருபவர்களுக்கு கொடுத்து கொடுத்து எல்லாம் இழந்து வீழ்ச்சி அடைவதும், அவர்கள் வாழும் சாத்தனூர் கிராமத்தைப் பற்றிய முழுமையான சித்திரம் என்று சுவாரஸ்யமாக போகிறது.

இந்த நாவல் எழுதி 75 வருடங்கள் கடந்த பிறகும் தமிழில் முதல் பத்து நாவலின் வரிசையில் இருப்பதற்கு இதன் வலுவான கதை, கதை சொல்லும் முறை, நாவலின் கட்டமைப்பு என்று பல காரணங்கள் சொல்லலாம். கட்டாயம் வாசிக்க வேண்டும்.

user_7497

★ 4/5 Feb 02, 2026

நமது மரபுக்கு வளம் ஏற்றுகிற நாவல். மேல்நாட்டுச் செல்வாக்கால் நமது சிந்தனைகள் பாதிக்கப்பட்டு மதிப்புகள் கலங்கிவிட்ட இந்த நாட்களில் பொய்த்தேவு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.

சோமு முதலியார் பழைய மதிப்புகளை மறுத்து பொய் மதிப்புகளை ஏற்றுக்கொண்டாரே தவிர, நேரான வாழ்வுக்கான வழி என்று தீர்க்கமாக சிந்திக்கவில்லை. சத்தான மதிப்புகளையும் கொள்ளவில்லை, தன் செயல்கள் மூலம் காட்டிக்கொள்ளவும் இல்லை.

அவர் வாழ்வில் இடைப்பட்ட அரை நூற்றாண்டு காலத்தில் பல முகங்கள் உடையவனாக - உதை வாங்கி ஓடி வரும்போது ஒரு முகம், முதலாளியின் பணப் பையைத் தூக்கிக்கொண்டு கடை கடையாக ஏறி இறங்குவது ஒரு முகம், கொள்ளைக்காரர்களை பிடிக்க சாகசம் புரிவது மற்றொரு முகம், கடின உழைப்பால் வியாபாரத்தை பெருக்குவது இன்னொரு முகம் என்று பல விதமான முகங்களுடன் உலா வருகிறார் சோமு.

\"தான் இன்னும் பூரண மனிதனாக ஆக முடியவில்லையே\" என்று மற்றவருடன் தன்னை ஒப்பிட்டுக் குறைபட்டுக்கொள்ளும் சோமு முதலியார் பாத்திரத்தை ஒரு பூரண மனிதனாகவே காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

user_7496

★ 5/5 Feb 02, 2026

\"பொய்த்தேவு\" - க.நா.சுப்ரமணியம். அட்டகாசமான நாவல். 1946ல் முதற்பதிப்பு கண்டது.

உரையாடல்களாக இல்லாமல் வர்ணனைகளாலும் விவரணைகளாலும், அக்கால வாழ்வியலை, எக்காலத்திற்கும் பொருந்தும் தத்துவார்த்தங்களை பொதிந்துவைத்து புனையப்பட்ட நாவல்.

பொதுவாக இப்படியான நாவல்கள் வாசிக்கையில் நல்ல எழுத்துநடை மூலம் காட்சிகள் கண்முன் விரியும். ஆனால் நல்லவொரு கதைசொல்லியான க.நா.சு, நன்கு விவரித்து உரையாடல்களல்லாத கதையை எழுதியிருப்பதால், நமது கற்பனையா அல்லது நாமே கதைக்களத்திற்குள் வாழ்கிறோமா எனும் மாயாவிநோத உணர்வை தருகிறது.

இக்கதை பிறந்த குழந்தைப் பருவம் முதல் சோமு பயலாக வளர்ந்து, சோமசுந்தர முதலியாராக வாழ்க்கை தரம் உயர்ந்து, பின் சோமு பண்டாரமாக முடியும்படி எழுதப்பட்டிருக்கிறது.

சாத்தனூர் எனும் காவிரியாற்றை ஒட்டியுள்ள கிராமப்புறத்தின் மேட்டுத்தெரு தான் சோமுவின் பிறப்பிடம். இக்கதையில் திருப்பங்கள் உண்டு, வர்த்தக வியாபார நுணுக்கங்கள் உண்டு, தத்துவார்த்தங்கள் உண்டு.

மனிதனுக்கு ஒரு தெய்வம் போதவில்லை, ஒவ்வொரு நொடிக்கும் ஒரு தெய்வம் தேவைப்படுகிறது. அதில் பணமே பிரதானம்! பணமே தெய்வம்! மற்றவை எல்லாம் பொய் தெய்வங்கள்! பொய்த்தேவு!

திருவாசகத்தில் இருந்து: \"அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்கன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே\"

1946ல் வெளிவந்து இப்போது படித்தாலும் அடிபொலியாக உள்ள நாவல். ஹாஸ்யமாக ஆரம்பித்து வாசிப்பவரின் தன்னிலை உணர்த்துவதாய் முடிகிறது. மறுபடியும் படிக்கத் தூண்டும் நாவல். நன்கு பரிந்துரைக்கிறோம்!

(பின்னிணைப்பாக சி.சு.செல்லப்பா அவர்களின் விமர்சன ஆய்வு இருபது பக்கங்களில் கதைச்சுருக்கத்தையும் புரிதல்களையும் எழுதியுள்ளார். அதுவும் தரமான விமர்சனமாக உள்ளது.)

user_7495

★ 5/5 Feb 02, 2026

க.நா.சுப்ரமண்யம் எழுதிய பொய்த்தேவு (அதாவது பொய்த் தெய்வம்) என்னும் இந்நாவலை நான் இரு நாட்களில் (மொத்தமாக 8 மணி நேரத்தில்) வாசித்தேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், இது எளிமையான சரளமான நாவல். ஆனால் மிக நல்ல நாவல்.

சோமு என்ற பொடிப் பயல் எப்படி சோமு முதலி ஆகி சோமு பண்டாரமாக இறக்கிறான் - இந்நாவலில் சோமுவின் வாழ்க்கைப் பயணத்தின் சில பக்கங்களின் மூலமாக வாழ்வின் பல தளங்களையும் பல மனிதர்களின் குணாதிசயங்களையும் தொட்டுச் செல்கிறார் க.நா.சு.

முதல் அத்தியாயமே சோமு பிறக்கும் மேட்டுத் தெருவைப் பற்றியது. இம்மேட்டுத் தெருவில் உள்ளோர் பெரும்பாலும் நாணயமான வேலையில் நம்பிக்கை இல்லாதவர்கள். சிலர் எதுவும் செய்யாமல் பிறர் காரியங்களில் தலையிட்டு தரகு அடித்துப் பிழைப்பார்கள்.

அத்தகைய மேட்டுத் தெருவிலே தான் சோமு பிறக்கிறான். அவன் வளர்ந்து பெரியாளாகி பணக்காரனாகியும் இறுதிவரையில் அத்தெருவை விட்டு வெளியே வரவே இல்லை. அது அவனது மனதைக் காண்பிக்கிறது.

பிறரை உடல் வலிமையால் அதட்டி பிழைத்து வாழும் கறுப்புக்கும் வள்ளியம்மைக்கும் பிறந்தவன் சோமு. சோமுவின் இளம் வயதிலேயே தந்தை கறுப்பு இறக்கிறான். பின்பு சோமு \"கறுப்பு மகன்\" என்னும் சமூக அடையாளத்துடன் வளர்கிறான். \"அப்பனைப் போல் இல்லாமல் நீயாவது யோக்கியமாகப் பிழையடா பயலே!\" என்ற வார்த்தைகள் அவன் ஆயுள் பூராவும் ரீங்காரமிட்டன.

சோமு முதலியின் குழந்தைப் பருவ ஞாபகங்களில் இருப்பது கோயில் மணி ஓசை, ஒளி, புயல். ஆனால் அக்கோயில் மணியின் ஓசையை அவன் இறுதியில் மட்டுமே கேட்கிறான் - இடையில் எத்தனை முறை கோயில் மணி அடித்தாலும் அவன் ஆழ்மனதில் அது கேட்கவே இல்லை.

சோமுவை அவ்வூர் மிராசுதாரர் ரங்கா ராயரிடம் சேர்த்துவிடுகிறாள் அவன் அம்மா. ரங்காவிடம் சோமு காண்பது பணத்தின் மதிப்பை மட்டுமே. பத்து ரூபாய் வைத்துக்கொண்டு ஊரையே வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை.

சோமு வளரும் பொழுது ரங்கா சிதம்பரம் என்னும் உதவாக்கரையிடம் சகவாசம் வைக்காதே என்கிறார். ஆனால் சோமு ரகசியமாக சிநேகம் வைத்துக்கொள்கிறான். சிறு வயதில் ஆரம்பித்த இந்த ரகசிய வாக்கு மீறல் இறுதிவரை வெவ்வேறு வடிவில் தொடர்கிறது.

\"மனிதனுடைய ஞாபகம், மனசு ஏதோ ஒன்றைக் கவ்விப் பிடித்துக்கொள்கிறது. இப்படிப் பிடித்துக்கொள்ளும் ஒரு விஷயத்திற்கு ஒன்பது விஷயங்களை நழுவ விட்டுவிடுகிறது\" என்று க.நா.சு சொல்கிறார். அதனால் தான் சோமு பணத்தைப் பெற்று வாழ்வில் மற்றவற்றைக் கோட்டைவிட்டான்.

உழைப்பை நம்பிய சோமு எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு பிடி நிலத்தைக் கூட வாங்கியது இல்லை. பணம் சம்பந்தமான எதுவாக இருந்தாலும் சூரப்புலியாக செயல்பட்டான்.

ஆனால் சோமுவிடம் ஆத்ம பலம் இல்லை. சாம்பமூர்த்தியின் ஆத்மபலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சோமுவிடம் இல்லை என்பதை சோமுவே உணர்ந்திருந்தான்.

\"உலகம் பொறந்த நாள் முதல் இன்னிவரையில் எவ்வளவு விநாடி உண்டோ அவ்வளவு தெய்வமும் உண்டு\" என்று சோமு பண்டாரம் சொல்கிறார். பணம் மட்டுமே தெய்வம் அல்ல - வாழ்வில் மற்ற முக்கியமான தெய்வங்களும் உண்டு என்பதே நாவலின் மையக்கரு.