Reviews for ராஜமுத்திரை

28 reviews total

user_7464

Feb 02, 2026

முத்துக்கள் பற்றி அறிய விரும்பினால் இந்த நாவலைப் படியுங்கள்! அருமையான நடை. முதல் பாகத்தின் இறுதியில் மூச்சடக்கிப் படிக்க வேண்டியிருக்கும். இரண்டாம் பாகம் முதல் பாகத்தில் எழும் எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கிறது. ஒட்டுமொத்தமாக படிக்க வேண்டிய சிறந்த புத்தகம்.

user_7463

★ 5/5 Feb 02, 2026

பாண்டிய இளவரசியை சேரமன்னன் வீரரவி தன் நாட்டிற்குக் கடத்தி வந்ததில் இருந்து தொடங்குகிறது இரண்டாம் பாகம்.

வீரத்துடன் இணைந்த சாதூரியமே வெற்றியைப் பறிக்க வழிவகுக்கும். பாண்டிய இளவரசியைக் கடத்திப் போவதை அறிந்து அவர்களைத் தொடர்ந்து வந்த பாண்டிய உபசேனாதிபதி இந்திரபானு தன் அழகிய முகத்தை விகாரமாக்கி அடையாளத்தையே துறந்து சிறைபட்டிருக்கும் இளவரசியைத் தந்திரமாக நெருங்கினாலும் சேரமன்னனின் கண்ணில் இருந்து தப்ப முடியாமல் போகிறது.

இந்தப் பாகம் முழுவதும் சேர மன்னன் வீரரவியே ஆக்கிரமித்திருக்கிறார். மன்னனின் வீரங்கள் சிலவற்றை மட்டும் கோடிட்டுக் காட்டி அவரின் கயமை சூழ்ச்சிகளும் அதீத கோபத்தில் நிலை தடுமாறி எடுக்கும் முடிவுகளால் எதிர்கொள்ளும் அவதிகளுமே அதிகம் காட்டப்பட்டிருக்கிறது.

இந்திரபானுவுக்கு உதவிய சேரக் குருநாதர் பரதபட்டரைத் தன் கண் பார்வையில் வைத்துக் கொண்டு மக்களிடம் அவருக்கிருக்கும் செல்வாக்கை தேசதுரோகப் பட்டத்தின் மூலம் மன்னன் முறியடிக்க முயன்றாலும் அதில் தோல்வியே தழுவுகிறார்.

கோட்டாற்றுக் கோட்டை வீரபாண்டியனின் வசம் போனதை அறியாத சேரமன்னன் தன் பெரும் படை வென்றுவிடும் என்று காத்திருக்க, காலம் கடந்து வந்து சேர்ந்த செய்தி ஏமாற்றத்தையே அளிக்கிறது.

சேரநாட்டைக் காப்பாற்ற குருநாதர் பரதபட்டர் போட்ட திட்டங்களை ஏற்றுக் கொண்டு அவரைச் சிறையிலடைத்துக் காரியங்களை நிறைவேற்றும் வீரரவியால் வீரபாண்டியனின் திட்டங்களை அசைக்கக் கூட முடியவில்லை.

கோட்டாற்றுக் கோட்டையில் இருந்து தன் படைகளுடன் சேரத் தலைநகர் பரலியை நோக்கி முன்னேறும் வீரபாண்டியன் போடும் திட்டங்கள் அனைத்தும் சேரமன்னனின் திட்டங்களுக்கு பதிலடியாக அமைந்ததே சேரமன்னன் வீரரவி மரணத்தைத் தழுவக் காரணமாகிறது.

இப்பாகம் முழுவதும் போர் நுணுக்கங்களும் அதற்கான சம்பவங்களும் சேர மண்ணிலே நிகழ்கின்றன. அதர்மத்தின் பாதையில் மன்னன் பயணிப்பது அவர்களின் குருநாதரையே எதிராகத் திரும்பச் செய்கிறது.

கோட்டாற்றுக் கோட்டைக் காவலரின் மகளான குறிஞ்சி வீரபாண்டியனுக்கு முழுநேர ஒற்றனாகவே மாறிவிடுகிறாள். வீரரவியின் வீரமரணத்திற்குப் பிறகு பரலியை இந்திரபானுவிடம் ஒப்படைத்து பாண்டிய இளவரசியையும் அவனுக்கு மணமுடித்து வைத்துவிட்டு கொற்கைக்கே திரும்புகிறார் பாண்டிய இளவரசன் வீரபாண்டியன்.

user_7462

★ 5/5 Feb 02, 2026

ராஜமுத்திரை என்ற இப்புத்தகப் பெயர் எத்தனைப் பொருத்தம் மிக்கது என்று வாசிக்கும் போது தெளிவாகப் புரிகிறது. மிக அழகான தலைப்பு.

user_7461

★ 5/5 Feb 02, 2026

சாண்டில்யனின் ராஜமுத்திரை என் மனதிலும் தனி முத்திரை பதித்துவிட்டது. அருமை!

user_7460

★ 5/5 Feb 02, 2026

சாண்டில்யனின் சிறந்த படைப்புகளில் ஒன்று. வீரரவி கூட ஒரு பெண்ணுக்காக அல்ல, தன் நாட்டுக்காகவே போரிட்டான் என்று காட்டும் முடிவு மிகச் சிறப்பு.

user_7459

★ 4/5 Feb 02, 2026

பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் இடையிலான பண்டைய தமிழகத்தின் வரலாற்றை அழகாகச் சொல்லும் சிறந்த வரலாற்று நாவல்.

user_7458

★ 4/5 Feb 02, 2026

"தம்பியுடையான் படைக்கு அஞ்சான்" என்ற வார்த்தைகளை மெய்பிக்கிறது இந்த ராஜமுத்திரை வரலாற்று நாவல்.

பாண்டிய இளவரசன் வீரபாண்டியனின் புத்திசாதூரியத்தைப் போற்றிக் கொண்டாடும் கதையாகத் திகழ்கிறது இப்புதினம். பாண்டிய நாட்டின் பொக்கிஷமாகவும் பெரும் செல்வத்தை சேர்க்க காரணியாகவும் இருக்கும் முத்துக்கள் களவாடப்படுகின்றன. அக்களவை கண்டறிய தன் தம்பியான வீரபாண்டியனை கொற்கைக்கு அனுப்பி வைக்கிறார் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவர்.

பாண்டிய நாட்டின் இரண்டாம் தலைநகரமாக இளவரசர்களின் ஆட்சியில் இருந்த கொற்கை மண்மூடிய பிறகு வெறும் வியாபாரத் தளமாக மாறிவிடுகிறது. நாட்டின் சிறந்த முத்துக்கள் எல்லாம் அரசாங்க கஜானாவிற்கு வர வேண்டும் என்ற உத்தரவு நிறைவேறாமல் முத்துக்கள் காணாமல் போவதற்குப் பின்னே ஒரு சதி நடப்பதை உணர்ந்த மன்னன் தன் மகளையும் தம்பியையும் வணிகர்கள் போல் கொற்கைக்கு அனுப்பி வைக்கிறார்.

பெருமுத்துக்களை எல்லாம் களவாடிய சேரமன்னன் வீரரவி அதனோடு நிற்காமல் கொற்கையின் கோட்டையையும் தன் வசமாக்க முயல்கிறான். கொற்கையில் இருப்பதை அறிந்து கொண்ட வீரபாண்டியன் அவர்களை வளைத்துப் பிடிக்க முயன்றாலும் தப்பித்துப் போனவர்கள் பாண்டிய மன்னன் மகளான முத்துக்குமரியையும் கடத்திச் சென்றுவிடுகின்றனர்.

கொற்கை கோட்டை அதிகாரியின் மகளான இளநங்கையிடம் காதலில் வீழ்ந்த வீரபாண்டியன் அவளையே தனக்கு உபதளபதியாக நியமித்து சேரனுடன் போர் தொடுக்கும் முடிவை எடுக்கிறான். சேரனிடம் இருக்கும் ஆட்பலத்தை விடத் தங்களிடம் குறைவே என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல் திட்டங்களை வகுக்கும் வீரபாண்டியன் முதலில் கோட்டாற்றுக் கரைக் கோட்டையை சேரர்களிடமிருந்து கைப்பற்றுகிறான்.

பாண்டிய வீரர்களுடன் புகுந்து ஒற்று வேலையைப் பார்த்து பாண்டிய மகளைக் கடத்திய போசளர் படைத்தலைவன் சிங்கணனைப் பிடித்த வீரபாண்டியன், அவனைக் கொண்டே சேர மன்னன் வீரரவியுடன் போர் புரிய ஆயத்தம் செய்கிறான்.

கோட்டாற்றுக் கரைக் கோட்டையைப் பிடிக்கும் திட்டங்கள் நுணுக்கமாகவும், அதில் ஏற்பட்ட சறுக்குகளை வீரபாண்டியன் சாமர்த்தியமாகச் சரிசெய்வதும், தன் மனம் விரும்பிய இளநங்கையை அக்கோட்டையிலே காந்தர்வ மணம் புரிந்து இரண்டு நாள் வாழ்ந்த பிறகு சாவின் வாசலைத் தொட்டவனை அம்மனைவி மீட்டெடுப்பதும் இம்முதல் பாகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

சிங்கணனைக் கொண்டு சேரனைப் பிடிக்க வீரபாண்டியன் போட்ட திட்டத்தின் சிறு ஓட்டைகளைக் கொண்டு சிங்கணன் வீரபாண்டியனையே அழிக்கத் திட்டமிடுகிறான். ஆனால் அனைத்தையும் புரிந்து கொண்ட வீரபாண்டியன் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, எவரும் அறியாமல் பெரும் சேரப் படையை வெற்றி கொள்கிறான்.

user_7457

★ 4/5 Feb 02, 2026

இரண்டு ராஜதந்திரிகள், இரண்டு மன்னர்கள், இரண்டு இளவரசர்கள், இரண்டு பருவப் பெண்கள், இரண்டு செல்வங்கள், இரண்டு காதல், இரண்டு போர்க்களம் — இவையனைத்தும் சேர்ந்து இரண்டு பாகத்தில் இரண்டு மாறுபட்ட உணர்ச்சிகளைத் தரக்கூடிய போருக்கும் காதலுக்குமாக என்னை மாற்றி மாற்றி அலையவிட்டுவிட்டது.