Reviews for குருதிப்புனல் [Kuruthi Punal]
30 reviews total
user_6586
★ 4/5 Feb 02, 2026எனக்கு இ.பா.வின் முதல் அறிமுகம் இந்நூலின் வழி. சாகித்ய அகாடமி மற்றும் சங்கீத் நாடக் அகாடமி விருதுகள் வாங்கிய ஒரே தமிழ் எழுத்தாளர். இவரது எழுத்து நடை வெளிப்படையானது — எதார்த்த மனிதர்களின் கலந்துரையாடல் அப்படியே எழுத்து வடிவில் இருக்கும்.
கீழ்வெண்மணி உண்மைச் சம்பவமும் அதன்பின் இருந்த சாதிய அரசியலும் இந்த நாவலின் கரு. கூலித்தொழிலாளிகளின் போராட்டமும், ஆதிக்கச் சாதியினர் குடிக்கத் துடித்த ஏழைகளின் குருதியும் — 1968ல் திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த கொடூரம்.
கண்ணையா நாயுடுவின் சாதிய வசையாடல், சமத்துவமின்மையை தாண்டிய குரூர மனப்பான்மையின் வெளிப்பாடு. இன்றும் சில கண்ணையா நாயுடுக்களை கடந்து போகிறோம் — ஏன், சில சமயம் நாமும் அவராய் வாழ்ந்து போகிறோம்.
மனிதம் மரிக்கும் வேளைகளில் அனைவரும் உணர்ச்சியின் பின்னால் செல்வோம். ஆனால் உணர்வு சமன்பாடின்மையே வன்முறையின் திறவுகோல் என்பது நிதர்சன உண்மை. 44 பேரின் குருதி கலந்த புனல் — அரசியல் பகடைக்கும் அதிகார ஆசைக்கும் கிடைத்த கேவலமான வெற்றி.
உங்கள் ஆழ்மனதில் ஒருதுளி அளவேனும் சாதிய சிந்தனை இல்லாமல் வாழும் உத்தமரா, அதெல்லாம் இல்லை என்று நடிக்கும் பச்சோந்தியா என்ற சுயபரிசோதனைக்கு இந்த நாவலைப் படியுங்கள்.
user_6585
Feb 02, 2026எக்காலத்துக்கும் ஒத்துப்போகும் அரசியல் கருத்து கதைசொல்லும் களத்தில் சிறப்பாக பிணைந்துள்ளது. இ.பா.வின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று.
user_6584
★ 5/5 Feb 02, 20261980களில் பிறந்த எனக்கு தமிழக அரசியல் பற்றிய புரிதல் திராவிட இயக்கத்திலிருந்துதான் தொடங்குகிறது. 1960களில் தமிழகத்தின் ஒரு பகுதி எப்படி இருந்தது என்பதைக் காட்டும் ஜன்னலாக இந்த நாவல் செயல்படுகிறது. கீழ்வெண்மணி படுகொலை என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
1960களில் தமிழ் கிராமத்தில் சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இனிமையான சிறிய நாவல். அனைவரும் படிக்க பரிந்துரைக்கிறேன்.
user_6583
★ 5/5 Feb 02, 2026உரிமையை கூட சலுகையாகப் பெற வேண்டிய நிலையில் நம் மக்கள் சிலர் இருப்பதன் வலி சொல்லில் அடங்காதது. "இப்பெல்லாம் யாருங்க?" எனும் ஒற்றை முகமூடியில் இன்னும் ஒளிந்துகொண்டிருக்கிறது கீழ்மை.
கீழ்வெண்மணிப் படுகொலைகளை நீதியும் அரசியலும் அதிகாரமும் மறைக்கலாம், மறக்கலாம். வரலாற்றில் அதை இலக்கியம் மூலம் பதிவு செய்திருக்கிறார் இ.பா.
user_6582
★ 4/5 Feb 02, 2026ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்தேன். பதிப்பாசிரியர் வேலை சரியில்லை என்றாலும், உள்ளே இருக்கும் சந்தேகக்கார வாசகனை தொட்டுவிட்டது. அற்புதமான படைப்பு — பரபரப்பான கதையோட்டம், அறிவுப்பூர்வமாக எழுதப்பட்ட வலிமையான கதை. 1967ல் 42 தலித் மக்களை உயிரோடு எரித்த நிலவுடமையாளர்-விவசாயி மோதலை அடிப்படையாகக் கொண்டது.
இந்த நாவல் புரட்சிகளின் முக்கியத்துவத்தையும், போராட்டங்களின் தவிர்க்க முடியாத தன்மையையும் கேள்வி எழுப்பும். சமூக இயக்கங்களோடு இணைந்த தனிமனித சுயநலத்தையும் அலசுகிறது.
கடைசி சில பக்கங்களில் ஆசிரியரின் கதைசொல்லும் திறன் உச்சத்தை அடைகிறது. சாகித்திய அகாடமி விருதுக்கு முற்றிலும் தகுதியான படைப்பு.
user_6581
★ 4/5 Feb 02, 2026கதை எழுதப்பட்ட காலத்திலான எதார்த்தமான அரசியல் நிலையை எந்தவித சார்பும் இன்றி நேர்மையாக படம் பிடித்துக் காட்டுகிறது இந்த புத்தகம்.
இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான் என் சொந்த ஊரான தஞ்சையில் இப்படி ஒரு கோரச் சம்பவம் நடந்திருப்பதை பற்றி அறிந்துகொண்டேன்.
இந்தக் கதையில் ஏற்படும் நிகழ்வுகளும் தடைகளும் புரட்சியை உருவாக்க முனையும் எந்த ஒரு சமூகமும் சந்திக்கும் இன்னல்கள் எனும் உண்மையை மறுக்க முடியாத கனத்த நெஞ்சோடு முடிகிறது இந்த புத்தகம்.
user_6580
★ 1/5 Feb 02, 2026இவ்வளவு செயற்கையான ஒரு நாவலை நான் இதுவரை படித்தது இல்லை. சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவல் என்பதால் எடுத்தேன், பெரும் ஏமாற்றம். கதாபாத்திரங்கள் ஆங்கிலத்தில் உரையாடும் இடங்கள் வாசிப்பிற்கு முட்டுக்கட்டையாகவும் எரிச்சலையும் தருகிறது.
கம்யூனிசம் எத்தனை மகத்தான சித்தாந்தங்களை முன் வைத்தாலும் இறுதியில் அழிவின் புதைமேட்டில் தான் நிற்கும். கடந்த நூற்றாண்டின் தோற்றுப்போன ஒரு சித்தாந்தம் — அதையே ரஷ்யாவில் பார்த்தோம்.
user_6579
★ 5/5 Feb 02, 2026கீழ்வெண்மணி படுகொலையின் வலியை உணர்த்தும் நாவல். அதிகாரத்தில் இருப்பவர்கள் வீசுகிற ரொட்டித்துண்டுக்காக புத்தியை விபச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவன் என்றும் தாழ்த்தப்பட்டவனாகவே இருக்கிறான் என்ற கசப்பான உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் படைப்பு.
user_6578
★ 3/5 Feb 02, 20261968ல் நடந்த கீழ்வெண்மணி படுகொலையை பின்புலமாக கொண்டு புனையப்பட்ட புதினம். இந்த புதினத்தை தழுவி "கண் சிவந்தால் மண் சிவக்கும்" என்ற திரைப்படம் வந்ததை பலரும் அறியலாம். தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள நிலக்கிழார்களின் ஆண்டான் அடிமை முறையையும், சாதிய அடக்குமுறைகளையும், அதனை எதிர்ப்போர்களின் மீது பிரயோகிக்கப்பட்ட கொடுமையான வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டி விமர்சித்ததில் இந்நூலுக்கு ஒரு பங்கு உண்டு.
நீங்காத வடுவை ஏற்படுத்திய இக்கொடிய சம்பவத்தின் தீவிரத்தன்மையை, இந்நூல் கலை உரிமம் என்கின்ற பேரில் நீர்த்துப்போக வைத்துவிட்டதோ என்கின்ற ஐயமே இந்நூலை படித்துமுடித்த எனக்கு ஏற்பட்டது.
நிகழ்வின் பின்புலனை பற்றிய விரிவான பகுப்பாய்வாக இந்நூல் இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். மாறாக, கதாபாத்திரங்களின் மனோ பகுப்பாய்வாகவே இருந்தது. கதாபாத்திரங்களின் அரசியல், உளவியல் மற்றும் புரட்சி பற்றிய உரையாடல்கள் சிந்திக்க வைத்தாலும், ஒரு கோர்வையாக இல்லாததும், ஆங்கில மொழிபெயர்ப்பு போன்ற உரையாடல்களாக இருப்பதும் எரிச்சல் தருகிறது. யதார்த்தவாதத்துக்காக சேர்க்கப்பட்ட இழிச்சொற்களையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
குருதிப்புனலில் சில குறை நிறைகள் இருந்தாலும், பலராலும் அறியப்படாத நம் வரலாற்றின் இருண்ட அத்தியாயத்தினை மக்களின் பிரக்ஞைக்கு கொணர்ந்த ஒரு முக்கிய படைப்பே.
user_6577
★ 5/5 Feb 02, 2026தமிழ்நாட்டில் கம்யுனிசம் என்கிற கடல் அளவு கான்செப்ட் இரண்டு இட்லியோடு முடிந்துவிடுகிறது.
மிக நேர்த்தியான நுட்பத்தோடு ஒரு கிராமத்தின் வாழ்வியலையும், டெல்லி போன்ற பெருநகரத்தில் இருந்து இங்கு வந்து கம்யுனிசத்தின் பிடியில் அகப்பட்ட இரண்டு இளைஞர்களின் வாழ்க்கை சூழலையும் விவரிக்கின்றது குருதிப்புனல்.
மேல்தட்டு எஜமானின் சிரம் உயருமே ஆனால், அவனிடத்தில் கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளியின் சிரம் தாழும். அன்றாட உணவுக்கு அல்லாடும் விவசாயிகளின் போராட்டத்தை தட்டி கேட்க ஒவ்வொருமுறையும் சே-குவாராவை எதிர்பார்த்திருப்பது இயலாத ஒன்று. நம்மில் ஒருவர் சத்ரியகுலத்தை வேரறுத்து ரத்தக்குளத்தில் குளித்த அந்தணன் பரசுராமனாய் மாறினாலே போதும். இந்த கருத்தோடு கம்யுனிசம் படைக்கப்பட்டுள்ளது.
சாஹித்ய அகாடமி விருது பெற்று, அன்றைய கம்யுனிஸ்டுகள் எதிரில் சவாலாய் நின்ற இந்த படைப்பு முற்றுபுள்ளியின்றி தொடரும் விதத்தில் நின்றிருப்பது கம்யுனிசத்தின் எதார்த்தத்தின் உச்சகட்டம்.